சக்கரம் அதுவே வளர்வதுபோல விரிந்து சென்றபடியே இருந்தது. பதினெட்டு இதழ்களுடன் ஸ்வாதிஷ்டானத் தாமரை விரிந்தது. பின்பு இருபத்து நான்கு இதழ்களுடன் மணிபூரத் தாமரை. முப்பது இதழ்களுடன் அனாகதத் தாமரை. தரையில் ஊர்ந்தும் தவழ்ந்தும் வரைந்து கொண்டிருந்தான். அவன் பின்னால் நான் நகர்ந்தேன். சக்கரத்தின் கணிதம் வளர்ந்து வளர்ந்து மெதுவாக அறிவால் பின்தொடர முடியாதபடி போவது தெரிந்தது. ஒரு கட்டத்தில் அடுத்து பிந்து எது, ரேகை எது என்றுகூடத் தெரியாமலாயிற்று. பலநூறு கிரந்திகளினாலான அதிபிரம்மாண்டமான தாமரை ஒன்று மலர்ந்தபடியே இருந்தது. அதன் வண்ணங்களையும் ஒளியையும் அசைவையும்கூட என்னால் பார்க்க முடிந்தது!