Ezhuthaalumai igris's Blog, page 2
August 31, 2025
இணையத்தில் பெண்கள்
கடந்த வாரத்தில் இன்ஸ்ட்டாகிராமில் பெண்களிடம் மீம் பக்கங்கள் அவர்களுடைய உடல் பாகங்களை புகைப்படமாக அனுப்ப சொல்லுதல் போலவே தவறான முறையில் பேசுதல் மற்றுமின்றி பணம் வாங்குதல் போன்றவற்றை செய்திருக்கிறார்கள் என்ற குற்றசாட்டுகளில் பலர் சிக்கி இருக்கிறார்கள். மாட்டிக்கொண்டதால் பலர் அக்கவுன்டை டீஆக்டிவேட் செய்துவிட்டனர். நீ எப்பொழுது மாட்டுவாய்? நீ எப்பொழுது டீஆக்டிவேட் செய்வாய்? என நீங்கள் நினைப்பது புரிகிறது. வருகிறேன்.
அவர்களை என்ன செய்ய வேண்டும் எப்படி செய்ய வேண்டும் என்ற இடத்திற்கு நான் வரவில்லை. நான் ஆணாக இருப்பதாலும், போலவே முகத்தை மறைத்து பதிவுகள் இடுவதாலும் இது எப்படி நடக்கிறது என்பது எனக்கு குத்துமதிப்பாக தெரியும். அதை உங்களிடம் பகிர நினைக்கிறேன். என்னையும் நானே அசிங்கப்படுத்திக்கொள்ள வேண்டி வரும். பரவாயில்லை. பல பெண்கள் சம்மந்தப்பட்ட விசயம் எனும்பொழுது, ஊர் பேர் தெரியாத நான் என்னை தாழ்த்திக்கொள்வதில், தாழ்ந்துபோய் விட மாட்டேன்.
முதலில், ஃபாலோவர்கள் அதிகம் இருப்பதனால் அது ஒரு க்ரேஸை தருகிறது. இது ஆண் பெண் இருவருக்கும் உள்ள விசயம். அதனால் இவர்கள் சுலபமாக யாரிடம் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் பேசிவிட முடிகிறது. ஆனால் இவர்கள் ஆண்களின் பக்கம் செல்வதில்லை. பெண்களின் பக்கம்தான் செல்கிறார்கள். போலவே பெண்களும் ஃபாலோவர்கள் இருப்பதாலும், இவர்கள் பகிரும் பதிவுகள் அவர்களுக்கு பிடித்திருப்பதனாலும் பேசுகிறார்கள். எந்த ஒரு பெண்ணும் பேசும் அனைவரிடமும் படுக்க நினைப்பதில்லை. ஆனால் ஒரு பெண் பேசிவிட்டால் அது அதற்கான அழைப்பு என ஆணின் புத்தியில் உதிக்காமலும் இருப்பதில்லை. இது பலருக்கு புரிவதில்லை. பேச துவங்கி கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கையை சம்பாதித்து அதற்குபின் இவர்கள் வேலையை காண்பிக்கின்றனர்.
இது ஏன் இப்படி? எனக்கேட்டால், ஃபாலோவர்கள் வந்துவிட்டால், தன்னுடைய பதிவுகளுக்கு லைக்குகள் வந்துவிட்டால் தான் ஒரு பெரும் பிரபலம் என்ற நினைப்பு வந்துவிடுவது மனித இயல்பு. தான் என்ற அகந்தையில் செய்யும் தவறுகள்தான் இவை. இதை நியாயப்படுத்தவில்லை. இதை பலரால் கையாள முடிவதில்லை.
என்னை எடுத்துக்கொள்ளுங்கள். என்னிடம் பல பெண்கள் பேசி இருக்கிறார்கள். ஆனால் அதற்காக நான் அனைவரிடமும் அவர்களுடைய அந்தரங்க புகைப்படங்களை கேட்டுக்கொண்டிருக்கவில்லை. அவர்கள் என்னிடம் எதற்காக பேச நினைக்கிறார்கள் என்பதை முதலில் புரிந்துகொள்ள நினைப்பேன். அதிகபட்ச காரணமாக இருப்பது அவர்களின் சோகத்தை புலம்பிட, அதை கேட்க ஒருவர் வேண்டும் என்பதுதான். அதற்காக அவர்கள் அவர்களுடைய வாழ்க்கையில் நடந்த அத்தனையையும் நம்மிடம் சொல்லிவிட்டார்கள் என்பதற்காக நான் அட்வான்டேஜ் எடுக்கலாம் என்ற எந்த கட்டாயமும் இல்லை. இன்னும் சரியாக சொல்ல வேண்டுமெனில் அவர்கள் சாவு கடின விசிறியாக இருந்தாலும் என்னுடைய எழுத்துக்களுக்குதானே ஒழிய எனக்கு இல்லை என்ற ஒரு சுவர் எப்பொழுதும் என்னிடம் இருக்கும். அது பலரிடம் இல்லை. இதைத்தான் நான் கண்ணியம் என ப்ராட்காஸ்ட் பதிவில் குறிப்பிட்டு இருந்தேன்.
நீ யோக்கியமா? ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை காதலித்தாயே? என நீங்கள் கேட்பீர்கள். நான் நிச்சயமாக யோக்கியம்தான். நான் செய்தது தவறு என்பதை புரிந்து அதை பொதுவெளியில் ஒப்புக்கொண்டு உங்களுக்கெல்லாம் தெரியப்படுத்திய வகையில் நான் யோக்கியம்தான். போலவே அந்த இரண்டு பேரிடமும் என்னுடைய புகைப்படமும், தொலைபேசி எண்ணும் இருந்தது. என்மேல் நீங்க வழக்கு தொடுத்தாலும் நான் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன் என்ற இடத்தில் நான் இருந்தேன். போலவே இந்த இரண்டு பேரைத்தவிர வேறு யாரிடமும் நான் பேசியதாக கூட நினைவில் இல்லை. கடைசியாக நான் காதலித்தபொழுது என்னுடை மெசேஜ் செக்சன் எம்டியாக இருந்தது. நான் யாரிடமும் பேசவில்லை, என்னிடம் பேசியவர்களுக்கு நான் பதிலளிக்கவும் இல்லை. இந்த வகையில் நான் யோக்கியம்தான்.
போலவே, காதலிப்பது ஒன்றும் தவறு இல்லையே. நான் காதலிக்கிறேன் என சொல்லி அவர்களை ஏமாற்றிவிடவில்லை. பணமோ பொருளோ அவர்களிடம் இருந்து பறித்துக்கொள்ளவில்லை. மட்டுமின்றி நான் யார் என்பதை அவர்களுக்கு தெரியப்படுத்தி நேரிலோ வீடியோ காலிலோ அவர்களுக்கு அறிமுகப்படுத்தி அதற்குப்பின்தான் காதல் என்ற இடத்திற்கு சென்றேன். திருமணம் செய்து கொள்ள தயாராக இருந்தேன். அது நடக்காமல் போனதில் எனக்கும் வருத்தம்தான். அதையும் இதையும் நீங்கள் ஒப்பிட்டு பார்க்க முடியாது. ஒப்பிட்டு பார்ப்பீர்கள் எனில், அது உங்கள் தவறு.
நான் மேலே குறிப்பிட்டவைகள் நான் செய்பவைகள். நான் கடைபிடிப்பவைகள். ஆண் என்பது வெறும் திமிரும் அகந்தையும் எதையும் செய்யலாம் என்ற தறுதலைத்தனமும் இல்லை. கண்ணியமாக இருக்க வேண்டும். நான் இப்பொழுதும் அப்படித்தான் இருக்கிறேன். நான் நானாக சென்று மெசேஜ் அனுப்பாததற்கு பலர் என்னிடம் கோவித்துக் கொண்டிருக்கிறார்கள். பேசாமல் சென்றிருக்கிறார்கள். பல டோலிகளை இழந்திருக்கிறேன். ஆனால் நான் போய் மெசேஜ் அனுப்பாததற்கு காரணம், அவர்களை ஹராஸ் செய்வதாகவோ அல்லது என்னிடம் நீ பேசி ஆக வேண்டும் என கட்டாயப்படுத்தும் விதமாகவோ அல்லது இவ்வளவு ஃபாலோவர்கள் வைத்திருப்பவன் நம்மிடம் பேசுகிறான் நாம் எப்படி பேசாமல் இருப்பது? என்ற இடத்திற்கோ அவர்களை கொண்டு வந்துவிடக்கூடாது என்ற எண்ணம்தான். அதுவும் தவறுதான். விருப்பம் இருந்தால் பேச போகிறார்கள் அல்லது பேசாமல் செல்ல போகிறார்கள். அவர்கள் பேசியே ஆக வேண்டும் என்ற கட்டாயம் என்ன இருக்கிறது? போலவே என்னிடம் அவர்களின் வாழ்க்கையில் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை சொல்லிவிடுவதோடு அவர்களுக்கு என்னிடம் பேசுவதற்கான தேவை முடிந்து போய் இருக்கலாம் அல்லவா? இதை இந்த கோணத்தில் சிந்திக்காதவர்கள்தான் சென்ற வாரம் மிதி வாங்கிக் கொண்டிருந்தனர். நீ எப்போது மாட்டுவாய்? நீ எப்போது டீஆக்டிவேட் செய்வாய் என்ற கேள்விக்கு இதுதான் பதில். நான் எப்பொழுதும் மாட்ட மாட்டேன். தவறுகள் செய்தவன்தானே மாட்டுவான்?
பெண்களிடம் வருகிறேன். இதை எழுத கை கூசுகிறது. இருப்பினும், வேறு வழி இல்லை. இந்த இணையத்தில் ஒருவன் உங்களிடம் வந்து பேசிகிறான் பழகுகிறான் என்றால் அதற்கு இருக்கும் ஒரே காரணம் உங்கள் உடல் மட்டும்தான் என்பதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அதை உடனே கேட்கிறான் அல்லது கொஞ்ச நாள் கழித்து கேட்கிறான் என்பதெல்லாம் வேறு கதை. ஆனால் அவனுடைய ஒட்டுமொத்த இலக்கும் உங்கள் உடல் மட்டும்தான். இதை நான் ஒரு ரீலாகவே பதிந்து இருந்தேன். இணையத்தில் அண்ணனோ தம்பியோ நண்பனோ எவனும் கிடையாது. ஆரம்பத்தில் என்னவாக வேண்டுமானாலும் பேசலாம் ஆனால் அவன் இலக்கு ஒன்றுதான். அதற்காக இணையத்திற்கே வராதீர்கள், சமலறையிலேயே இருங்கள் என்றெல்லாம் சொல்ல மாட்டேன். முடியாது என சொல்லி பழகுங்கள். என்னுடைய கதையில், என்னுடைய கடைசி காதலில், எவ்வளவு உருகி உருகி காதலித்த பொழுதும் என்னுடைய காதலி அவளுடைய புகைப்படத்தை அனுப்பவே அத்தனை முறை யோசிப்பாள். அந்தரங்க புகைப்படங்கள் இல்லை. வெறும் செல்ஃபீ! யாரையும் நம்பாதீர்கள். எதற்கும் தலையசைக்காதீர்கள்.
நிச்சயமாக உங்களுக்கு தெரியும் ஒரு ஆணின் பேசுவதன் நோக்கம் என்ன என்று. புரிந்தபின்னும் கேளிக்கைக்காக அவன் இருக்கட்டும் என வைத்திருக்காதீர்கள். அந்தரங்க புகைப்படங்களை அனுப்பித்தான் அந்த நட்பையோ காதலையோ இன்னும் 1008 உறவுமுறைகளையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமெனில் உங்களுக்கு அப்படி ஒரு உறவு இணையத்தில் தேவை இல்லை என்பதில் தெளிவாக இருங்கள்.
இவர்களின் வலைகளில் பல பள்ளி/கல்லூரி மாணவிகள் சிக்குவதாக கேள்விப்படுகிறேன். நீங்கள் மனிதர்களைப்பற்றி தெரியும்வரை இன்ஸ்டா மட்டுமில்லை எந்த சமூக வலைதளங்களுக்கும் வராமல் இருப்பது நல்லது. ஒருவேளை வந்தாலும் யாரையும் நம்பாதீர்கள். பெண்கள் பாம்புகள் என பலர் சொல்லி கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஆம் இது உண்மைதான். ஆனால் ஆண்கள் சிலந்திகள். காதலில் விழ வைக்க, உங்களின் உடலை அடைய எந்த மாதிரி வலையையும் பின்னுவான். ஜாக்கிரதை.
- எழுத்தாளுமை இக்ரிஸ் (31/08/2025)
August 17, 2025
என் காதலும் சுய உணர்தலும்.
வெகு நாட்களுக்கு முன், நான் என் பார்வையில் காதல் என எழுதி இருக்கிறேன் இதே ப்ளாகில். இன்று அதை எழுதுவது ஒரு ஓரமாக இருக்கட்டும், அதை படிக்க சொன்னாலே எனக்குள் ஆணாதிக்க திமிருடன் எழுதி இருக்கிறேன் என்ற குற்ற உணர்வு இருக்கத்தான் செய்கிறது. நிச்சயமாக என்னால் அந்த பதிவை மீண்டும் படிக்க இயலாது. சொல்கிறேன்.
என்னை இன்றுவரை ஃபாலோ செய்து கொண்டிருக்கும் நபர்களுக்கு எனக்கு சமீபத்தில் காதல் தோல்வியான விசயம் தெரிந்திருக்கும். தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள். எனக்கு மூன்றாவது முறையாக காதல் தோல்வி ஆகிவிட்டது. இது ஏன் எப்படி நடக்கிறது என்ற கேள்வி இருந்தாலும், என்மேல் என்ன தவறு என்ற கேள்வி எனக்குள் இல்லாமல் இல்லை.
இதற்கு முந்தைய இரண்டு காதலிலும் என்னுடைய தவறு என்பது பெரியதாக இல்லை என்றும் அவர்களின் மேல் தவறு இருப்பதாக, அவர்கள் செய்தது நிச்சயமாக தவறு எனவும் நினைத்துக் கொண்டும் நான் அங்கிருந்து விலக முற்பட்டேன். ஆனால் அவர்கள் தக்க வைக்க முயன்றதன் வெளிப்பாடு, வெடித்துக்கொண்டு நான் வெளியே வந்ததுதான். ஆனால் அது சரியா எனக்கேட்டால், அன்றைய தேதியில் அது சரியாக இருந்ததாக நானே நினைத்துக் கொண்டேன் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.
கடந்து வந்த பின், மூன்றாவதாக ஒரு காதல். இந்த காதல் எனக்கு கிடைத்த வாய்ப்பு என்பதை காட்டிலும் என்னை, என்மேல் இருக்கும் தவறுகளை, ஒரு ஆணின் தான் ஒரு ஆண் என்ற எண்ணத்தின் விளைவுகளை எனக்கு புரியவைத்தது. குறைந்தபட்சம் நான் புரிந்துகொள்ள தயாராக இருந்தேன் என்பதில் எனக்கு பெரிய மகிழ்ச்சி.
இந்த காதலில் நடந்த ஒரு சண்டையை, அதாவது பிரிவிற்கு மூலக்காரணமாக இருந்த ஒரு பெரும் காரணியை, என்னுடைய பெரிய தவறைப் பற்றி நான் அரசல் புரசலாக எழுதுவதால் என்னுடைய காதலி என்மேல் ஏற்கனவே இருக்கும் கோபத்தில் இருந்து ஒரு படி மேலே ஏறி உட்கார்ந்து கொள்ளமாட்டாள் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன்.
என்னவளுக்கும் எனக்கும் ஒரு சிறிய மனஸ்தாபத்தில் துவங்கியது என்னுடைய சுய உணர்தல் படலம். நான் அவளிடம் கோவப்பட்டேன், சண்டை செய்தேன், விட்டு சென்றுவிடுகிறேன் என சொன்னேன். அத்தனையும் நடந்தது. அவள் அது எதற்கும் எதிர்வினையாற்ற தயாராக இல்லை. சலனமற்ற நதியைப்போல இருந்தாள். அதற்கும் நான் கோவப்பட்டேன். ஏன்? எதற்காக? என்னிடம் சொல்லலாம் அல்லவா? எனக்கு புரிய வைக்கலாம் அல்லவா? நீ பேசாமலே இருப்பதன் அர்த்தம்தான் என்ன? இத்தனை கேள்விகளும் கோபமாக வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. வெறும் கோபமாக மட்டும். ஆனால் அவளிடம் இருந்து எதுவும் பதில் இல்லை. அவள் பதில் சொல்லவோ விளக்கம் கொடுக்கவோ தயாராக இல்லை.
காரணம், அவள் ஏற்கனவே இரண்டு முறை காதலில் இருந்து இருக்கிறாள். அந்த இரண்டு காதலிலும் என்ன பிரச்சனை நடந்ததோ அதே பிரச்சனைதான் நான் செய்ததும். அவளின் சுதந்திரம் பறிபோகிறது என்னும் இடம் அது. ஆனால் நிச்சயமாக எனக்கு தெரியும் நான் அவளின் சுதந்திரத்தை பறிக்கவோ அல்லது அவளை அவதூறு பேசவோ அல்லது அவள்மேல் பழிச்சொல் சொல்லவோ இல்லை. ஆனால் இதெல்லாம் அவள் வாழ்வில் ஏற்கனவே நடந்து இருக்கிறது.
ஏற்கனவே அவள் வாழ்வில் நடந்ததன் விளைவு என்னவாக இருந்தது என்றால், அவள் என்னுடனான காதலில் பெரியதாக மனதளவில் ஈடுபாட்டுடன் இல்லை. சராசரி காதலர்களிடம் இருக்கும் ஊடல் இங்கே இல்லை. சிறு சிறு சண்டைகள் இல்லை. புரிய வைக்கும் இடமோ என்னை புரிந்துகொள் என்ற நிலையோ இங்கு இல்லை. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமெனில் எனக்கு நீ இதை செய் அதை செய், இப்படி இரு அப்படி இரு, என்றுகூட அவள் ஒரு வார்த்தை என்னிடம் சொன்னதில்லை. இதெல்லாம் எனக்கு பின்னால்தான் புரிந்தது. உன்னுடைய சுதந்திரத்தில் நான் தலையிட்டால் என்னுடைய சுதந்திரத்தில் நீ தலையிடுவாய். ஆகையினால் நான் அதில் தலையிடவில்லை. நான் உன்னை காதலிக்கிறேன், அவ்வளவுதான் என்ற நிலை அது. அவள் என்னைவிட்டு பிரிந்து சென்றதும் அவ்வளவு சுலபமாக நடந்தேறிவிட்டது. அது அவளால் முடிந்தது. எமோஷினலி கனெக்டெட்டாக இருந்தாலும் அவளுடைய சுதந்திரத்திற்கு அவள் கொடுத்த முக்கியத்துவம் அபரிமிதமானது. மதிக்கிறேன்.
இதெல்லாம் எங்கே ஆரம்பித்தது என பார்ப்போம். ஆணாதிக்க எண்ணம். அவளது வாழ்வில் இருந்த இரண்டு ஆண்கள் செய்த தவறுகளினால் அவள், அவளது வாழ்வில் மனிதர்களின்மேல் பற்று இல்லாமல் மாறிப் போய்விட்டாள். எந்த ஒரு உறவின் மேலும் நம்பிக்கை இல்லாமல் இருக்க துவங்கிவிட்டாள். இது எல்லோராலும் முடியுமா எனக்கேட்டால், நிச்சயமாக இல்லை. அவள் பெண்ணிய போராளி என்றும் இல்லை. குறைந்தபட்சமாக என்னுடைய வாழ்வில் நான் எனக்கு பிடித்த விசயத்தை செய்ய என்னை அனுமதிக்க நீங்களெல்லாம் யார்? என்ற கேள்வி அவளுக்குள் ஆழமாக வேரூன்றியதன் பெரும் விளைவுதான் அது. தலை வணங்குகிறேன்.
இது இப்படி இருக்க, இத்தனை நாட்களாக அதே ஆணாதிக்க மனநிலையில் இருந்த ஒருவனான நான், பாதிக்கப்பட்டவனாக மாறுகிறேன்.
அவளுக்கு என்ன பிடிக்கும் என்ன பிடிக்காது? அவளாக சொல்ல மாட்டாள், நானாக தெரிந்துகொள்ள வேண்டும்.
அவள் என்ன நினைக்கிறாள்? மனதளவில் எது அவளை பாதிக்கிறது? அவள் சொல்ல மாட்டாள், நானாக தெரிந்து கொள்ள வேண்டும்.
நண்பர்களுடன் நேரம் செலவிடுவாள். அதைப்பற்றி எதாவது சொல்ல முடியுமா? எனக்கேட்டால் சொல்ல மாட்டாள். காரணம் உன் நண்பர்களுடன் நீ செலவு செய்த நேரத்தை என்னுடன் செலவு செய்திருக்கலாமே? என இதற்கு முன் அவள் வாழ்வில் இருந்தவர்கள் செய்து போன பிரச்சனையின் தாக்கம். இங்கே நான் புரிந்துகொள்ள வேண்டியது, அவள் சந்தோஷமாக இருந்தாள். அவ்வளவுதான்.
எங்கே செல்கிறாள்? எப்போது செல்கிறாள்? எப்பொழுது வருவாள்? சொல்ல மாட்டாள். வெளிப்படைத்தன்மை அவளை பாதிக்கும் என்பதால் எதையும் சொல்லிக்கொள்ளவே மாட்டாள்.
கடைசியாக பிரச்சனை வந்த பொழுதும் அவள் அதற்கான எந்த அடியும் எடுத்து வைக்கவில்லை. விலகிச் செல்ல தயாராக இருந்தாள்.
ஆனால் நாங்கள் காதலித்துக் கொண்டிருந்தோம் கடந்த மூன்று மாதங்களாக. இதைக் கேட்கும்பொழுது பாதிக்கப்பட்டவன் நான்தான் எனத்தோன்றலாம். ஒரு வகையில் உண்மை அதுதான் என்றாலும் இதில் பெரிய பாதிப்பு அவளுக்குத்தான் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
ஆண்களால், ஆண்களின் ஆணாதிக்க எண்ணத்தால், தான்தான் என்ற அகந்தையால், அவள் தனக்கானவள் - தனக்கு மட்டுமே உரியவள் என்ற அடிமைப்படுத்தும் பாசிச மனநிலையில் பாதிக்கப்பட்டவளின் மனத்தெளிவின்மையின் வெளிப்பாடாகத்தான் நான் இதை பார்க்கிறேன், பார்ப்பேன்.
சமூகத்தில் துவங்கி சமூக வளைதளங்கள் வரையில் பெண்களை அவளின் விருப்பத்திற்கு இயங்க அனுமதிக்காத ஒரு சூழல் நிலவுகிறது என்பதை மறுக்க இயலாது. பெண்ணியம் பேசுபவர்கள் பெரும்பாலும் எந்த ஒரு உறவுகளிலும் இருக்காமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். வெடித்துச் சிதறாமல் கொதித்துக் கொண்டிருக்கும் எரிமலைகள் எத்தனை எத்தனை?
சம உரிமை என்பதெல்லாம் வெறும் பேச்சாகவே இருக்கிறது என்பதுதான் இங்கே பெரும் வேதனையும்கூட. பாதிக்கப்பட்டவனாக இருக்கும் நான், ஒருவேளை நானாக இல்லாமல் இதை சிந்திக்காமலே சென்றிருந்தால் வெறும் ஆணாக, நான் செய்தது சரியாகவும் அவள் தவறானவளாகவும் நினைத்துக் கொண்டு என் காலத்தை கழித்திருப்பேன் அல்லது அது அவளாக இல்லாமல் இருந்திருந்தால் இதுதான் வாழ்க்கை இதுதான் காதல் போல என்ற எண்ணத்திற்கு வந்திருப்பாள்.
ஆண்கள் வேலைக்கு செல்கிறோம், குடும்பத்தை பார்க்கிறோம், உற்றார் உறவினர்களுடன் உறவோ பிரச்சனையோ அத்தனையும் சந்திக்கிறோம், குழந்தைகளின் கல்வி, பெற்றோர் நலன் என அத்தனையும் இருந்தாலும் காதலி மற்றும் மனைவி என வரும் இடத்தில் அவளுக்கான தனித்துவமும் முக்கியத்துவமும் கொடுக்கப்படுதில்லை. அதை அவர்களாக கேட்டு பெறும் இடம் வரும்பொழுது சண்டைகள் சச்சரவுகள் பிரிவுகள் அத்தனையும் நடக்கிறது. ஒரு கட்டத்தில் கேட்பதை அவர்கள் நிறுத்திவிடுவார்கள் அல்லது அவர்கள் கேட்பதை நாம் சகித்துக் கொண்டு வாழ ஆரம்பித்து விடுகிறோம். ஆனால் புரிதல்? அது கடைசிவரை இருப்பதே இல்லை. யாராவது ஒருவர் அத்தனை திருமணத்திலும் காதலிலும் தியாகி ஆகத்தான் வேண்டி இருக்கிறது. ஏன் அப்படி இருக்க வேண்டும் என்ற கேள்விக்கு காதலிக்கிறோம் திருமணம் செய்திருக்கிறோம் என்ற பதில் மட்டுமே கிடைக்கிறது. இது நியாயமானதா? இப்படி உறவுக்குள் இருந்தால், இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் நிச்சயம் இருக்க வேண்டுமா? அல்லது உறவுகள் கட்டாயத்திற்கு உட்பட்டதா? எந்தவொரு தெளிவும் இல்லா நிலைதான் காதலும் திருமணமும். ஆனால் இதை புரிதலின் மூலம் சரி செய்துவிட முடியும். ஆனால் சரி செய்ய நாம் தயாராக இருக்கிறோமா? இல்லை. காரணம் ஈகோ.
ஆனால் நான் சரி செய்ய முயன்றேன். அத்தனை சுய உணர்தலுக்குப் பின் அவளிடம் தவறு என்னுடையது. இருப்பினும் நீ கொஞ்சமாவது உன்னுடைய பக்கத்தில் இருந்து இந்த காதலை தக்க வைக்க நினைத்திருக்கலாம் என்ற என்னுடைய உரையாடலின் துவக்கத்திற்கு அவளின் பதில் முற்றுப்புள்ளியாக அமைந்துவிட்டது,"நான் சோர்வடைந்துவிட்டேன்."
எல்லா காதலிலும் அதன் முடிவில் அழகிய நினைவுகள் இருக்கும். எனக்கு அழகிய நினைவுகளைவிட அதிகமாக ஆழமான புரிதல் கிடைத்திருக்கிறது. இந்த நிலையை அடைய நிச்சயமாய் ஈகோவை தூக்கி எறிய வேண்டும். நான்தான் என்ற அகந்தை அறவே அழிய வேண்டும். இந்த நிலையில் உலகமே அதனதன் பார்வையில் அது சரியானது என புரியும்.
வண்ணத்துப்பூச்சி அழகாக இருக்கும் ஆனால் புழுவாக இருந்து வண்ணத்துப்பூச்சியாக மாறுவதற்குள் அது எத்தனை கஷ்டங்களை கடந்திருக்கும் என்பதைப்பற்றி யாருக்கும் கவலை இல்லை என்பதே நிதர்சன உண்மை. ஆனால் இந்த மாற்றம் மதிப்பானது. வைரத்தைப் போன்றது. புரிந்துகொள்ளுங்கள் அல்லது புரிந்து கொள்ள முயலுங்கள் எக்காரணத்தைக் கொண்டும் புரிந்து கொண்டதைப்போல நடிக்காதீர்கள். வெளிப்படைத்தன்மை இல்லா எந்த உறவும் நிச்சயமாக நிலைக்காது.
நான் என் வாழ்வில் இழந்த கடைசி காதல் இதுவாகவே இருக்க விரும்புகிறேன். அவள் என்னைவிட்டு போகட்டும். அவளுடைய வாழ்வை வாழட்டும். நான் சரியானவனாக, தகுதியானவனாக இருந்திருந்தால் அவள் நிச்சயமாக இருந்திருப்பாள். நான் அப்படி இல்லை என்பதை மறுக்க இயலாது. இப்பொழுது புரிந்துகொண்டேன் என்பதனால் வெட்டிய கழுத்தை ஒட்ட வைக்கலாம் ஆனால் என்ன செய்தாலும் தழும்பு மறையாது.
- எழுத்தாளுமை இக்ரிஸ் (18/08/2025)


