தமிழ்நதி's Blog, page 2

May 10, 2013

விலகல்



சிலுவைக் குறியால் அடையாளப்படுத்தப்பட்ட
பென்னாம் பெரிய வீட்டின் அறைகளுள்
என்னோடும் புத்தகங்களோடும்…
எப்போதாவது வந்து போகின்றன கீழ்வீட்டுப் பூனைகள்
எப்போதுமிருக்கிறது மேசை மீதில்
நீலப் பளிங்கு விழிகள் இமைக்காமல் பஞ்சுப் பூனையொன்று.
பெருமழைக்காட்டில் இறங்கும் வெயில் கதிர்களாய்
வடிகட்டப்பட்டிருக்கின்றன உரையாடல்கள்.
தொடர்மாடிக் குடியிருப்புகளுக்காக
இன்னமும் விற்கப்படாத நிலங்களின் வெட்டப்படாத மரங்களிலிருந்து
இழைந்து குழைந்து கூவும் பறவைகள்
வகிர்ந்து செல்கின்றன நிசப்தத்தை.
எனதேயான பொழுதுகளில் எனதேயான தேநீரை அருந்துகிறேன்

இங்கு நான்
மகளில்லை
தாயில்லை
மனைவியோ காதலியோ
தியாகியோ துரோகியோ
பரத்தையோ பத்தினியோ இல்லை
நீண்ட காலத்திற்குப் பிறகு மனுசியாயிருக்கிறேன்.
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 10, 2013 07:58

June 15, 2012

மாயக்குதிரை


அது சிவப்பு நிற ஏழு… அதற்கு கண்களும் உதடுகளும் இருந்தன. பனியில் சறுக்கிக்கொண்டே வந்து இவளைக் கடந்துபோயிற்று. வெள்ளைவெளேரென்ற பனியில் கருஞ்சிவப்பாய் அது போவதைப் பார்க்கப் பரவசமாக இருந்தது. சற்று தொலைவு போய் அது திரும்பி வந்தது. எங்கிருந்தோ மேலும் இரண்டு ஏழுகள் வந்தன. கிர்ரென ஒரு வட்டமடித்து மூன்றும் ஒரே வரிசையில் நின்றன. இவள் கைகளை உயர்த்தி மகிழ்ச்சியில் கத்தினாள்.
கனவுக்கும் நனவுக்கும் இடையிலான அந்தரநிலையில் கொஞ்ச நேரம் படுத்துக்கிடந்தாள். ஏழின் பிசிறற்ற நேர்த்தியான வரிசை அவளை ஆட்கொண்டிருந்தது. தன்னைக் குறித்த அயர்ச்சியும் சூதாட்டத்தின் மீதான கிளர்ச்சியும் ஒருசேர வந்து அவளைச் சூழ்ந்தன. ‘கடவுள்தான் என்னைக் காப்பாற்றவேண்டும்’என்று சொல்லிக்கொண்டாள்.
எப்போதாவதுதான் அவளுக்கு கடவுளின் ஞாபகம் வரும். சூதாட்ட விடுதிக்குள் நுழையும்போது, வெல்லவேண்டும் என்று வேண்டிக்கொண்டு உள்நுழைவாள். தோற்றுக்கொண்டிருக்கிறோம் என்ற உணர்வு அமிலமாய் சுரக்க ஆரம்பிக்கும்போது, முழுவதுமாக இழப்பதன் முன் அங்கிருந்து தன்னை எப்படியாவது வெளியேற்றிவிடுமாறு பிரார்த்தனை செய்வாள். மேற்படி சந்தர்ப்பங்கள் தவிர்த்து அவளுக்கு கடவுளின் ஞாபகம் வருவது குறைவு. அவளுக்கும் சேர்த்து வேண்டிக்கொள்ள அம்மா இருந்தார். அவளுடைய ஊதாரித்தனத்தைப் போக்கவேண்டும் என்பதும் அம்மாவின் பிரார்த்தனைகளுள் ஒன்று.
“காசிருந்தாத் தாங்கோ…”என்றவளை நிமிர்ந்து பார்த்தார் அம்மா.
“ஏன்…?”
இந்தக் கேள்விக்குப் பதில் சொல்வதற்கு முன் முகத்தை இறுக்கமாக்கிக் கொண்டாள். அப்படிச் செய்வதன் மூலம் ஒன்றிரண்டு கேள்விகளோடு காசு கிடைத்துவிடும் என்பதை அவளறிவாள். “உன் அம்மா உலக வங்கி போன்றவள்”என்று அப்பா அடிக்கடி சொல்வதுண்டு. வெளி,உள்,இரகசிய அடுக்குகள் என்றவாறான அம்மாவின் சேமிப்பானது பல தடவை கடன் வாங்குவதைத் தவிர்த்து குடும்ப மானத்தைக் காப்பாற்றியிருக்கிறது. அம்மா ஐந்து, பத்தாகச் சேமிப்பதை உருவிக்கொண்டு போய் ‘காசினோ’வின் இயந்திரத்துள் விடுவது குறித்து அவளுக்கும் வருத்தந்தான். அதுவொரு காசு விழுங்கிப் பூதம். இலக்கங்களையும் எழுத்துக்களையும் பூக்களையும் பன்றிகளையும் கடற்கன்னிகளையும் தன் வயிற்றுக்குள் வைத்திருக்கும் பூதம்.

“பெரிய தொகையாக விழுந்தால் அம்மாவுக்குக் கொடுப்பேன்தானே…”என்று சமாதானம் செய்துகொள்வாள். விழுந்திருக்கிறது. கொடுத்ததில்லை.

“சிநேகிதப் பிள்ளைகளோடு நயாகராவுக்குப் போறன்…”என்றாள்.

“அதை எத்தினை தரந்தான் பாக்கிறது?”

அவள் பேசாமல் நின்றாள். அம்மாவுக்கு அவள் ஒற்றைப் பிள்ளை. எனவே, அவளது மௌனம் பரிச்சயமாயிருந்தது.

முன்னரெல்லாம் நேரம் காலம் மறந்து நயாகராவை கண்ணெடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்திருக்கிறாள். நீராலான கனவுலகில் நின்றுகொண்டிருப்பதைப் போல. கூட வந்தவர்கள் அந்த நீர்ப்புகையில் மறைந்தே போனார்கள். அந்த அமானுஷ்யம் ஒருவகையில் அவளைப் பயமூட்டியிருந்தது. பேரிரைச்சலோடு மனித ஆற்றலுக்கு எட்டாத ஆவேசத்தோடும் தூய்மையோடும் அதில் விழுந்து செத்துப்போய்விடத் தூண்டும் அழகோடும் நயாகரா கொட்டிக் கொண்டிருந்தது. காசினோவுக்குப் போகிற பழக்கம் பேய்போலத் தொற்றிக்கொண்ட பிறகு நீர்வீழ்ச்சியின் பக்கம் திரும்புவதில்லை. தோற்றுப் போய் மனதுக்குள் அழுதபடி விடுதியறைக்குத் திரும்பியதோர் நாளில் கண்ணருகில் நயாகரா கொட்டியது. கலக்கத்தோடு விழித்துப் பார்க்க யன்னல் வழியாக வெள்ளை வெளேரென நீர் பாய்ந்து இறங்கிக்கொண்டிருப்பது தெரிந்தது. ஓசையற்ற பொழிவு. 

அம்மா நூறு டாலர்களை எடுத்து வந்து தந்தார். அவள் தனது அடுத்த அஸ்திரத்தைப் பிரயோகித்தாள்.

“தெரியாத இடத்திலை போய் காசில்லாமல் நிக்கிறதே…தற்சமயம் தங்கவேண்டி வந்தால்…?”

மேலும் ஒரு ஐம்பது வந்தது. அத்துடன் அவள் அன்றிரவு வருவது நிச்சயமில்லை என்பதையும் சந்தடிசாக்கில் சொல்லியாயிற்று.பனியில் சறுக்கிவந்த ‘ஏழு’ பென்குவினை ஞாபகப்படுத்தியது. உயிர்காப்பு வண்டியின் ஓசைபோல இடைவிடாமல் ஒலித்து எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைக்கும் அந்த மணியோசை இப்போது மண்டைக்குள் ஒலிக்கத்தொடங்கிவிட்டது. உள்ளுக்குள் அனல் அலை அடித்துக்கொண்டிருந்தது. கன்னங்களைத் தொட்டுப் பார்த்தாள். உண்மையாகவே உடல் தகித்தது.

உறவினர்களுடைய ஒழுக்க வரையறைகளான வீடு, வேலை,புத்தகங்கள், இசை, மாலை நடை, சில நண்பர்கள்… ஒரேயொரு காதலன் இன்னபிறவற்றுள் அவள் சுலபமாக அடங்கினாள். அவளது காதலனாகிய சுதன் அவளை கேலி செய்ததுண்டு.

“அப்பாவி மாதிரி முகத்தை வைச்சுக்கொண்டு எல்லாரையும் ஏமாத்திறாய்”

அவன் மட்டுமே அவளது பலவீனத்தை அறிந்தவன். காசினோ ஞாபகம் வந்ததும் மேற்குறித்த யாவும் பின்னொதுங்கிவிட வேறொரு பெண்ணாக மாறிவிடுவாள் அவள். அந்த நினைவு ஒரு மாயச்செடி போல காலுக்குள் முளைத்து மளமளவென்று வளர்ந்து கிளைகள் மண்டையோட்டைப் பிய்த்துக்கொண்டு வெளியேற எத்தனிப்பதை பயத்தோடு கவனிப்பாள். பன்னிறங்களில் ஒளிரும் ‘நியான்’ விளக்குகள், கண்சிமிட்டும் இலக்கங்கள் அவளைப் பதட்டப்படுத்துவன. அதிலும் குறிப்பாக ஏழு என்ற இலக்கம் எங்காவது ஒளிரக் கண்டால்… அவ்வளவுதான்! நாணயங்கள் எண்ணப்படுவதற்காகக் கொட்டும் ஓசையும் அவளைக் கலவரப்படுத்துவதே. மணியோசைகள் இன்பமும் துன்பமும் கலந்த வாதையொன்றினைக் கொணர்ந்தன. அந்தக் காந்தக் குரலை நோக்கி இரும்புத்துகளென நகர்ந்து செல்வாள். உறவுகள், பொருட்கள், கடமைகள், ஒழுங்கான பிள்ளை என்ற பெயர் அனைத்தும் பனிக்காலத் தெருக்கள் போல மங்கத் தொடங்கிவிடும். எதையெதையெல்லாமோ ஞாபகப்படுத்தி தன்னிடம் கெஞ்சுவாள். அந்தக் கெஞ்சலை மயிரளவும் பொருட்படுத்தாத சூதாடியொருத்தியோ மாயக் குழலோசையைப் பின்தொடரும் எலிகளில் ஒன்றாகிவிடுவாள். புறப்படுவதற்கான ஆயத்தங்கள் மளமளவென்று நடந்தேறும்.


அவள் மனம் கணக்குப் போடத் தொடங்கியது. வங்கிக் கணக்கில் முந்நூற்று இருபது டாலர்கள் இருந்தன. கடனட்டையில் இருநூற்றுச் சொச்சம் தேறும். அம்மாவிடம் வாங்கிய நூற்றைம்பதைச் சேர்த்தால் அறுநூற்றைம்பதைத் தாண்டிவிடும். வழிச்செலவுக்கும் விடுதிக்கும் போக ஐந்நூற்றைம்பது டாலர்கள் மிஞ்சும். போதும்! மேலும், இம்முறை தோற்கப் போவதில்லை என மனக்குறளி சொல்லிக் கொண்டேயிருந்தது. ஆயிரத்து எண்ணூறு டாலர்களோடு வீடு திரும்பிய அந்தக் குளிர்கால இரவை நினைத்தாள். ஸ்லொட் இயந்திரத்தில் விளையாடுவது எப்படி என்று முதலில் சுதன்தான் அவளுக்குக் கற்றுக்கொடுத்தான். பின்னாளில் அவன் அதற்காக வருந்தியிருக்கிறான்.

“உண்மையிலை இது ஒரு முட்டாளும் செய்யக்கூடிய வேலைதான். இந்த வட்டத்திலை கையை வைச்சு ஒரு அமத்து அமத்தவேணும். மிசினுக்குள்ள இருக்கிற இலக்கங்களும் எழுத்துக்களும் ஒரு சுத்துச் சுத்திக்கொண்டு வந்து நிக்கும். ஒரே இலக்கமோ பழ அடையாளமோ வேற என்னமோ நேர்வரிசையில வந்து நின்றால் வெற்றி. சறுக்கி மேல கீழ போனால் தோல்வி. சாதாரண தொகையும் விழும். ஜாக்பொட்டும் விழும். அவ்வளவுதான்!”

புதிதாக ஒன்றைத் தனது காதலிக்குக் கற்றுக்கொடுக்கும் குதூகலத்துடனும் உற்சாகத்துடனும் அவளுக்குச் சொல்லிக் கொடுத்தான். முதலில் அதை அவள் ‘விசர் விளையாட்டு’என்றாள். பிறகு அந்த விசர் விளையாட்டுக்குத் தன்னைக் கூட்டிப் போகும்படி சுதனை நச்சரிக்க ஆரம்பித்தாள். அவன் பொறுப்புணர்வு பற்றிப் போதிக்க ஆரம்பித்ததும் அவனுக்குத் தெரியாமல் தனியாகப் போகத் தொடங்கினாள். எப்போதுமில்லை. இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை திடும்மென மண்டைக்குள் விளக்கு எரியும். மணியடிக்கும். அவ்வளவுதான்! அதன்பிறகு, குண்டியில் நெருப்புப் பற்ற வைத்த ஏவுகணை போல விசுக்கென்று கிளம்பிவிடுவாள்.

பயணப்பைக்குள் ஒருநாளுக்குத் தேவையான உடைகளோடு சில புத்தகங்களையும் ஒலி, ஒளியிழைத் தகடுகளையும் எடுத்துவைத்தாள். “இந்தமுறை ஜாக்பொட் விழுந்தால் இரண்டு நாட்கள் தங்கி ஓய்வெடுத்துவிட்டு வருவேன்.”என நினைத்தாள். அப்படி நினைத்த மறுகணமே அது சாத்தியமாகாது என்ற எண்ணம் மின்னி மறைந்தது. ‘சனியன்’என்று தன்னையே திட்டிக்கொண்டாள்.

 “சாப்பிட்டிட்டுப் போ…”என்றார் அம்மா.

சாப்பிடும் மனநிலையில் இல்லை. ஆனாலும், சாப்பிட்டுவிட்டுச் செல்வதன் மூலம் காசினோவுக்குள் நேரடியாகச் சென்றுவிடலாம் என்ற எண்ணம் அவளை இயக்கியது.

அன்று அவளது முகம் அருளிழந்து போயிருப்பதாக அம்மா சொன்னாள். சிலசமயம் அம்மா ஊகித்திருக்கக் கூடும் என்று நினைத்தாள். இல்லை… அவள்தான் எவ்வளவு பொறுப்பான மகள்…தனக்குள் சிரித்துக்கொண்டாள். அம்மாவை ஏமாற்றுகிறோமே என்று வேதனையாக இருந்தது. பேசாமல் எல்லாவற்றையும் தூக்கிப் போட்டுவிட்டு வீட்டிலேயே அமர்ந்து புத்தகம் வாசிக்கலாம் என்று எண்ணினாள். கடற்கன்னியோ வாலில் செதில்கள் மினுங்க சிணுங்கி அழைத்தாள். ஏழு என்ற குதிரை, பிடரி மயிர்கள் அலைய தலையசைத்துக் கனைத்தது.

பேருந்துக்காகக் காத்திருக்கும்போது ஒரு குடும்பம் - தமிழர்கள் - காரில் தங்களுக்குள் பேசிச் சிரித்தபடி போவதைப் பார்த்தாள். சனிக்கிழமை, எங்காவது உணவகத்துக்குப் போகிறார்களாயிருக்கும். உணவுச் செலவு நாற்பது டாலருக்குள் முடிந்துவிடும். தான் காசினோவுக்குச் செல்வது தெரிந்தால் இவர்கள் என்ன சொல்வார்கள் என்று நினைத்துப் பார்த்தாள். ‘கொழுப்பு’ என்பார்கள். அநேகமானவர்கள் அவளை ஒரு விசித்திரப் பிராணியாக, கேவலமாக நோக்கவும் கூடும். “அந்தப் பெட்டையோ…”எனத் தொடங்கி ஆயிரம் கதை சொல்வார்கள். நடைப்பயிற்சிக்குத் தோதாக உடையணிந்த ஒருவன் பயணப்பெட்டியோடு நிற்கும் இவளைத் திரும்பித் திரும்பிப் பார்த்துவிட்டுப் போனான். அவள் எங்கு செல்கிறாள் என்பதை அவன் ஊகித்திருப்பான் என்று தோன்றியது. ஒருவேளை அவனுக்கும்கூட காசினோவுக்குச் செல்லும் பழக்கம் இருக்கலாம். அவளையறியாமலே தன்னைக் கடந்துசெல்லும் எல்லோரது கண்களையும் உற்றுப் பார்க்கத் தொடங்கியிருப்பதை சற்று நேரத்திற்குப் பின் உணர்ந்தாள். இந்த மனிதர்கள்தான் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று எண்ணினாள். தன்னிரக்கம் பெருகியது. இளமையின் வறுமையையும், அகதியாக அலைந்ததையும், புலம்பெயர்ந்து பட்ட சிரமங்களையும் நினைத்துத் தன்னிரக்கம் கொள்வதனூடாக தனது செயலுக்கு நியாயம் கற்பிக்க விளைந்தாள்.

யாருடைய கண்களிலும் படாமல் போய்விட முடிந்தால்… இவ்வளவு தூரமாக இல்லாமல் ஒரே நொடியில் அங்கு சென்றுவிட முடிந்தால்…. அவளுக்கு மட்டும் வசதி இருக்குமானால் நயாகராவுக்குக் குடிபெயர்ந்துவிடுவாள். வேலை… வீடு என்று உழலும் மத்தியதர வர்க்க வாழ்வை நினைத்து எரிச்சலுற்றாள்.

அந்தக் கட்டிடந்தான் எத்தனை பிரமாண்டமும் அழகும் பொலிவதாயிருக்கிறது…! அரைக் கோளத்தைக் கவிழ்த்துவைத்தாற்போன்ற நுழைவாயில் இருபத்துநான்கு மணிநேரமும் ஒளியால் வேயப்பட்டிருக்கும். பின்னால் நெடிதுயர்ந்த விடுதியின் மீது ‘காசினோ’வைக் குறிக்கும் ஆங்கில எழுத்துக்கள் சிவப்பு நிறத்தில் மினுங்கிக்கொண்டிருக்கும். தோற்றுப் போய் கண்ணீரை ஒளித்துக்கொண்டு வெளியேறிய ஒரு நாளில், அந்தச் செந்நிற எழுத்துக்களின் அழைப்பும் பசப்பும் மினுக்கும் குவீன் வீதியில் பளபளக்கும் கைப்பைகளோடும் குதியுயர்ந்த காலணிகளோடும் அலையும் பெண்களை ஞாபகப்படுத்தியிருந்தது. கொடிய மிருகங்கள் நிறைந்த குகையொன்றினுள் செல்வதான பதைபதைப்பை அவள் பல தடவைகள் உணர்ந்திருக்கிறாள். ஆனால், சூதாட்டம் தரக்கூடிய கிளர்ச்சி அந்தப் பதைப்பை மேவியதாக இருந்தது.


பிரதான நுழைவாயில் ஊடாக உள்ளே நுழைந்ததும் வட்டமான பளிங்கு அலங்கார மையம். அதனுள் எழுந்தெழுந்து அடங்கும் குட்டி நீர்வீழ்ச்சிகள். அலங்கார மையத்தின் விளிம்புகளில் எப்போதும் ஆட்கள் இருந்துகொண்டேயிருக்க, அவர்களோடு வந்தவர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தார்கள்.  'சூதின் பேரின்பம் அறியாத மூடர்கள்' என்று, ஆரம்பத்தில் அவர்களைப் பற்றி அவள் நினைத்ததுண்டு.

ஏறத்தாழ இரண்டு மணிநேரப் பயணம். வழிநெடுக மொட்டை மரங்கள் கூதிரை அறிவித்தபடி நின்றிருந்தன. அடர்நீலத்தில் ஏரி சாதுவாகப் படுத்திருந்தது. அதன் கரையில் படகுகள் காற்றுக்குத் தளம்பியபடி நின்றன. துருவேறிய, ஒன்றோடொன்று சேர்த்துக் கட்டப்பட்டிருந்த இரும்பினாலான இரண்டு ஓடங்கள் புராதன நாவாய்களை ஞாபகப்படுத்தின. அவை நூற்றாண்டுக்கு முந்தியதாக இருக்கலாம் என்று நினைத்தாள். படகுகள், கார் போன்ற உருவரைகளை ஏன் ஸ்லொட் இயந்திரங்களில் பயன்படுத்துவதில்லை என்று யோசித்தாள்.

அவளுக்கு மேசையில் ஆடும் சூதாட்டம் தெரியாது. அதை அவள் விரும்பியதோ முயற்சித்ததோ இல்லை. நாணயப் பெறுமதிக்கேற்ப காசினோவில் வழங்கப்படும் வட்டவட்டமான நாணயங்களின் விளிம்புகளைக் கையால் வருடியபடி ஆழ்ந்த சிந்தனையில் இறுகிய முகங்களோடு அவர்கள் இருப்பதை அவதானித்திருக்கிறாள். மேசையில் சூதாடுபவர்களில் தமிழ் முகங்களும் உண்டு. பெரும்பாலும் ஆண்கள். மிக அரிதாக பெண்கள். ‘ஒரு தமிழ்ப் பெண்… குடும்பத்தில் பொறுப்பாக இருக்க வேண்டியவள்… இங்கு என்ன செய்கிறாய்?’என்றொரு பார்வையை உரிமையோடும் கண்டிப்போடும் அவளை நோக்கி எறிந்த ஆண்கள் உண்டு. தமிழ்ப் பெண்கள் குடிக்கக்கூடாது என்பது போன்ற விதி சூதிற்கும் பொருந்தும் என்பதை அவள் அறிவாள். ஆரம்பத்தில் அத்தகைய பார்வைகளுக்கு அஞ்சி அவசரமாக அவ்விடத்தைக் கடந்து சென்றாள். பிறகோ, ‘நீ மட்டும் இஞ்சை என்ன பிடுங்கிக்கொண்டிருக்கிறாய்?’என்ற பார்வையை அலட்சியமாக திருப்பி எறியப் பழகினாள்.

இம்முறையும் அந்தக் குறிப்பிட்ட ஸ்லொட் இயந்திரத்தில் முயற்சித்துப் பார்க்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டாள். அந்த நாளை பல தடவை மீள்ஞாபகித்துப் பார்த்திருக்கிறாள்.

அதுவொரு இனிய பரவசம்!

அந்த ஸ்லொட் இயந்திரம் ஒரு தொலைபேசி கோபுரத்தின் வடிவத்தை ஒத்தது. அவள் வென்ற நாணயங்களின் எண்ணிக்கையைக் காட்டும் விளக்கு முதலில் இருபதில் ஏறிநின்றது. பிறகு நாற்பதுக்கு ஏறியது. அதன்பிறகு அறுபது, எண்பது, நூறு, ஆயிரம், பத்தாயிரம் என்று ஏறி உச்சிக்குப் போய்விட்டது.

ஆறாயிரத்து இருநூற்று முப்பத்தைந்து டாலர்கள்!
‘ஜாக்பொட்’!!!

‘ஜாக்பொட்’விழுந்துவிட்டது என்பதை அறிவிப்பதற்கான மணி அடிக்கத் தொடங்கியது. போதாக்குறைக்கு இயந்திரத்தின் தலையில் இருந்த விளக்கு வேறு ‘வெற்றி… வெற்றி’என்று சுழலவாரம்பித்துவிட்டது. மகிழ்ச்சியில் உரக்கக் கூவவேண்டும் போலிருந்தது. வயிற்றுக்குள் என்னவோ செய்தது. ஆனால், ஒரு தேர்ந்த சூதாடிக்குரிய பக்குவத்தோடு புன்னகை புரிந்தபடி அவள் அமைதியாக அமர்ந்திருந்தாள். சுற்றி ஆட்கள் கூடிவிட்டார்கள். வேறு இயந்திரங்களில் விளையாடிக்கொண்டிருந்தவர்கள் தங்கள் பொறாமை கலந்த விழிகளால் எட்டிப் பார்த்தார்கள். முகங்களில் இருள் கவிந்துவிட்டபோதிலும், அதை நாகரிகப் புன்னகையால் போர்த்தியபடி உதடுகளால் வாழ்த்துத் தெரிவித்தனர். அவள் அவர்களுக்காக உண்மையிலேயே வருந்தினாள். அவர்களது விழிகளில் முந்தைய கணம்வரை தோற்றுப் போயிருந்த தன்னைக் கண்டாள். ஆனால், வெற்றியின் எக்களிப்பு அந்த வருத்தத்தை விஞ்சிநின்றது. அந்நேரம் உடலை பஞ்சுப்பொதி போலவோ பறவையின் இறகு போலவோ எடையற்று உணர்ந்தது நினைவிருக்கிறது. இருபத்தைந்து சதத்துக்குப் பந்தயம் கட்டக்கூடிய அந்த இயந்திரத்தில் அவ்வளவு பெரிய தொகையை வெல்வதென்பது அதிசயந்தான்.


அறுபத்து இரண்டு நூறு டாலர் நோட்டுக்களை ஒன்று… இரண்டு… என்று பணியாளர் நிதானமாக எண்ணி, விரிக்கப்பட்டிருந்த அவளது உள்ளங்கைகளுள் வைத்தார். மீதம் முப்பத்தைந்து டாலர்களைத் தனியாகக் கொடுத்தார். அந்த முப்பத்தைந்து டாலர்களையும் பணியாளருக்கு அவள் அன்பளிப்பாகக் கொடுத்தாள். அப்போது அவள், தான் விளையாடிய இயந்திரத்தின் உச்சத்தில் இருந்தாள். ‘நன்றி… நன்றி’என்று பல தடவை சொல்லியபடி அதை வாங்கிச் செல்லும்போது கண்களில் வியப்பு இருக்கிறதா என்று கவனித்துப் பார்த்தாள். பணியாளர்களுக்கும் அவளுக்குமான இரகசிய விளையாட்டு அது. அப்படியொன்றும் பகட்டாகத் தோன்றாத ஆசியப்பெண்ணொருத்தி எதிர்பாராத ‘டிப்ஸ்’ஐ வழங்கும்போது மேசைப் பணியாளர்களின் தோரணை மாறிவிடுவதை அவள் அவதானித்திருக்கிறாள். சில சமயங்களில் அவர்களை மகிழ்ச்சியூட்டவும் சில சமயங்களில் தோல் நிறத்தின் காரணமாக அலட்சியப்படுத்தும் பணியாளர்களை தற்காலிகமாக வீழ்த்தவும் அவள் அதைச் செய்வதுண்டு. ஆம்…ஆசியர்களின் கௌரவத்திற்காக!

இனி ஜாக்பொட்டில் பெரிய தொகை விழுந்தால் யார் யாருக்கெல்லாம் காசு கொடுக்கவேண்டும் என்று அவளுக்குள் ஒரு கணக்கு உண்டு. அவளளவில் அது சூது என்ற பாவத்தைப் புரிந்தமைக்கான குற்றப்பணமே. அங்கு வந்து விளையாடும் வெள்ளைக்காரப் பெண்களோ மஞ்சள் முகப் பெண்களோ அப்படி நினைக்கமாட்டார்கள் என்று தோன்றியது.

ஒருவழியாக விடுதியை வந்தடைந்து பயணப்பையைத் தூக்கிக் கட்டிலில் போட்டாள். இலேசாக ஒப்பனை செய்துகொண்டு காசினோவை நோக்கி விரைந்துபோனாள். சிக்னல் பச்சையாக மாறக் காத்திருந்தபோது, அறைக்குத் திரும்பிப் போய் ஏதாவது வாசித்துக்கொண்டிருக்கலாம் அல்லது மடிக்கணனியில் படம் பார்க்கலாம் என்று நினைத்தாள். வரிசையாக நிற்கும் செர்ரி பழங்கள் அவளை அழைத்தன. பன்றிகள் குர்குர்ரென்றன. அவள் விரைந்து நடந்தாள். அன்று காற்றில் குளிர் அதிகமாக இருந்ததாகத் தோன்றியது. நீர்வீழ்ச்சி அருகிலிருப்பது காரணமாய் இருக்கலாம். காற்று பேயாட்டம் ஆடித் தலையைக் கலைத்துப் போட்டது.

தொலைபேசி கோபுர வடிவத்தினையொத்த ஸ்லொட் இயந்திரங்கள் ஒன்றிலும் இடமில்லை. காத்திருந்தாள்.

ஆரம்ப நாட்களில் அவள் விசித்திரமான விளையாட்டொன்று ஆடிப் பார்த்திருக்கிறாள். வெளியில் நின்று, தான் வெல்லாமலும் தோற்காமலும் இருப்பதான மானசீக விளையாட்டொன்றை ஆடுவாள். பின்னாட்களில் அதன் பொய்மையில் அயர்ச்சியுற்று நிறுத்திவிட்டாள். வீட்டிலிருந்து புறப்பட்டு பேருந்தில் பயணித்து காசினோவுக்குள் நுழைந்து ஸ்லொட் இயந்திரத்தின் முன் அமர்ந்தபின்னரே மூச்சுவிடுகிறவளாக மாறிப்போன பிற்பாடு, காத்திருப்புகள் கசந்துபோயின.

அந்தக் குறிப்பிட்ட ‘ஸ்லொட் மெசின்’களிலிருந்து யாரும் எழுந்திருப்பதாகத் தெரியவில்லை. வேறொன்றைத் தேடிப் போனாள்.

இன்று நான் தோற்றுப் போகமாட்டேன் என்று சங்கற்பம் செய்துகொண்டதற்கேற்றபடி, ஒரு சத இயந்திரத்தின் முன் போயமர்ந்தாள். ஒரு சத, இரண்டு சத விளையாட்டுக்களை வழங்கும் இயந்திரங்கள் புதிதாகப் போடப்பட்டிருந்தன. அதுவொரு ஏமாற்று வேலை என்பதை அவள் சற்று நேரத்திற்கெல்லாம் கண்டுபிடித்தாள். ஒரு சத விளையாட்டை வழங்கும் இயந்திரத்தில் ஒரு சதத்திற்கான ஆட்டமே இல்லை. குறைந்தபட்சம் தொண்ணூறு சதங்களைப் பந்தயம் வைத்து ஆளியை அழுத்தினால் மட்டுமே வெல்வதற்கான சாத்தியங்கள் அதிகம் என்பதை அவள் உணர்ந்தபோது நூற்றி அறுபது டாலர்களை இழந்துவிட்டிருந்தாள். அந்த இயந்திரம் ‘இதோ… இதோ… வெல்லப்போகிறாய்’என்று பேரிரைச்சல் போட்டுக் கொண்டு சுழன்றது. ஏதேதோ வார்த்தைகளை உச்சாடனம் செய்து உருவேற்றியது. அவளுக்குள் பதட்டம் பரவத் தொடங்கியது.

எழுந்து மற்றொரு இயந்திரத்தைத் தேடிப் போனாள். வழியில் இரண்டு இருபது டாலர்களை இழந்தாள். அன்று சனிக்கிழமையாதலால் கூட்டம் நெரிபட்டது. விளையாடுபவர்கள் தவிர, பொழுதுபோக்கவும் விளையாடுவதை வேடிக்கை பார்க்கவும் என்று வந்த கூட்டம். மதுபானச்சாலையில் ஆண்களும் பெண்களும் சோடி சோடியாகவும் தனியாகவும் அமர்ந்து குடித்துக் கொண்டிருந்தார்கள். தனியாக இருந்தவர்கள் தலையைக் குனிந்தபடி அமர்ந்திருப்பதை அவள் பார்த்தாள். தோற்றுப்போனவர்களாயிருக்கலாம் என்று நினைத்தாள். வழியில், அகன்ற மஞ்சள் முகத்தில் தோல்வியின் கண்ணீர்க் கோடுகள் தெரிய ஒரு பெண் தனியாக அமர்ந்திருந்தாள். சீனா அல்லது கொரியாவைச் சேர்ந்தவளாயிருக்கலாம்.


மார்பில் பாதி தெரிய உடையணிந்த பெண்கள் உரக்கச் சிரித்தபடி ஆண்களின் தோள்களில் தொற்றிக்கொண்டு போனார்கள். சிலர் கோப்பி குடிப்பதற்கென்றே அங்கு வந்தவர்கள் போல இலவசமாக வழங்கப்பட்ட கோப்பியை வாங்கிக் குடித்துக்கொண்டிருப்பதை அவள் பார்த்தாள். மனதுள் காரணமற்ற எரிச்சல் மூண்டது.

சற்றுநேரத்தில் மனிதர்கள் மறைந்துபோனார்கள். அந்த இயந்திரங்கள் நடுவில் அவள் மட்டும் முடிவில்லாத தெருவொன்றில் நடந்துகொண்டிருப்பதான களைப்பை உணர்ந்தாள். பல தடவை ஆட்களில் மோதிக்கொள்ளத் தெரிந்தாள். அந்தப் பிரமாண்டமான கூடம் அவள்மீது கவிழ்ந்து மூடியது. மூச்சுத் திணறியது.

கூட்டமற்ற இடத்தில், அநாதரவாகக் கிடந்த இயந்திரமொன்றின் முன் போயமர்ந்தாள். அதன் வயிற்றுக்குள் பன்னிற ஏழுகள் இருந்தன. – கடுஞ்சிவப்பு ஏழும் அதிலொன்று. ஏழின் விளிம்புகளில் கறுப்பு நிறத் தீற்றல் அதையொரு பந்தயக் குதிரையென உருமாற்றியிருந்தது. காரணமின்றி கனவுகள் வருவதில்லை என்று அம்மா சொல்வதை நினைத்தாள். ‘கடவுளே… கடவுளே…’என்று மனம் அரற்றத் தொடங்கியிருந்தது. ஒவ்வொரு தடவையும் ஆளியை அழுத்திவிட்டு ‘விழப் போகிறது… விழப் போகிறது…’என்ற படபடப்போடு காத்திருந்தாள். அதுவொன்றும் மோசமான இயந்திரமல்ல. விழுத்தியது. பிறகு விழுங்கியது. விழுத்தியது. பிறகு விழுங்கியது. ஒரு தடவை கறுப்புக் குதிரைகள் நேரே அணிவகுத்தன. நூறு டாலர்களை அவள் வென்றாள். சுழலவாரம்பிக்கும்போது இதயம் துடிதுடிக்கும். நேர்வரிசையில் வந்து நிற்பதுபோல பாசாங்கு காட்டிவிட்டு நழுவிச் செல்லும். என்னவொரு மயக்குப் புன்னகை! ‘உனக்கில்லாமலா…’என்ற சாகசம்…! ஏழு… ஏழு… மூன்றாவது பட்டையிலும் ஏழு வந்து நின்றுவிட்டால்… ஏழு வழுக்கிச் சுற்றி எங்கோ உள்ளொளிந்துகொண்டுவிட்டது. வென்ற நூறு டாலர்களையும் இயந்திரம் பிடுங்கிக்கொண்டுவிட்டது. குறைந்தபட்சம் அந்த இயந்திரம் அவளை சற்று நேரம் விளையாட அனுமதித்தது என்பதில் திருப்தி. அவள் அறுபது டாலர்களை கபளீகரம் செய்த அந்த இயந்திரத்திலிருந்து எழுந்திருந்தாள். ‘நாசமாய் போனவள்’என்று தன்னையே வைதுகொண்டாள். அவளையறியாமல் அதை உரக்கச் சொல்லியிருப்பாள் போலும். வெள்ளையினப் பெண்ணொருத்தி வினோதமான பார்வையை அவள்மீது விட்டெறிந்துவிட்டுப் போனாள். அவமானமாக இருந்தது.

கைப்பையைத் திறந்து மீதமிருந்த காசை எண்ணிப் பார்த்தாள். சரியாக பத்து இருபது டாலர் நோட்டுகளும் சில நாணயங்களும் இருந்தன. இருநூறு டாலர்கள். அவளுக்கு தலை சுற்றுவது போலிருந்தது. அம்மாவின் முகத்தை நினைத்தாள். அவள் முகம் அருளிழந்து போயிருப்பதாகச் சொன்னதை நினைத்தாள். குற்றவுணர்வாக இருந்தது.

இதோ ஒரு நொடியில் எல்லாம் மாறிவிடப் போகிறது என்று அவள் அப்போதும் நம்பினாள். அப்படி நடந்திருக்கிறது. எல்லாம் சரியாகிவிடும். அந்த மாய நொடி… பிறகு இங்கு நடந்து திரியும் மனிதர்கள் எல்லோரும் தேவன்களும் தேவதைகளும் ஆகிவிடுவார்கள். வென்ற பணத்தை எடுத்துக்கொண்டு திரும்பிப் பாராமல் வெளியேறும் வாயிலை நோக்கி விரைந்துசெல்வாள். வாயிற்புறத்திலுள்ள குட்டி நீர்வீழ்ச்சிகளை இன்றைக்கு நின்று கவனிப்பாள். மகிழ்ச்சி ததும்பி வழியும் மனதோடு விடுதியறைக்குச் செல்வாள். முடிந்தால் நீர்வீழ்ச்சி வரை நடந்து செல்வாள். வீதியெல்லாம் இரவின் பிரகாசம் பொன்துகள்களென இறைந்துகிடக்கும். அறைக்குப் போய் 'பிட்சா'வோ 'கென்ரேக்கி'யோ வரவழைத்துச் சாப்பிடுவாள். செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான். சரியான இயந்திரத்தை தேர்ந்து விளையாடுவது.

 “உன்னிட்ட இருக்கிற காசைத்தான் மெசினுக்குள்ள குடுக்கிறாய். பிறகு அது விழுங்கின காசை எப்பிடியெண்டாலும் திருப்பித் தரச் சொல்லி அதின்ரை காலிலை விழுந்து கெஞ்சிறாய். காசினோ நடத்துறவங்கள் பைத்தியக்காரங்கள் எண்டு நினைக்கிறியா… விளையாடுற எல்லாருக்கும் ஜாக்பொட் விழுத்தினால் இழுத்து மூடிப் போட்டு அவங்கள் வீட்டை போக வேண்டியதுதான். இங்கை விளையாட வாற ஒவ்வொருத்தரும் தங்களுக்கு ஜாக்பொட் விழும் எண்டுதான் நினைச்சுக்கொண்டு வருகினம். ஆனா… எப்பவும் வெல்லுறது இல்லை… எப்பவாவது வெல்லுறதுதான் சூதாட்டத்தின்ரை பொதுவிதி”என்ற சுதனின் வார்த்தைகள் ஞாபகத்தில் வந்தன.

பசித்தது. கைத்தொலைபேசியை எடுத்து நேரத்தைப் பார்த்தாள். இரவு பதினொன்றரையாகிவிட்டிருந்தது. இரைச்சலில் அம்மாவின் அழைப்பைத் தவறவிட்டிருந்தாள். யார் மீதென்று தெரியாத கோபம் தலைக்கேற ‘சைலன்ட் மோட்’ஐ அழுத்தினாள். இன்னும் அரை மணி நேரத்தில் காசினோவின் உள்ளிருக்கும் உணவு விடுதியைப் பூட்டிவிடுவார்கள்.


அந்த இடமே புகையடர்ந்ததுபோல மாறியிருந்தது. சூதாட்ட விடுதிகள் உள்ளடங்கலான பொது இடங்களில் புகைப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது என்பதனால், அது சிகரெட் புகையல்ல என்பதை உணர்ந்தாள். ஒரே இடத்தில் கண்களைப் பதித்து உற்று நோக்கிக்கொண்டிருந்த காரணத்தால் பார்வை மங்கலாகியிருக்கக்கூடும். இலேசாகத் தலைசுற்றியது. போதும்… திரும்பிப் போய்விடலாம் என்று நினைத்தாள். வெளியேறும் வாயிலைச் சுட்டும் எழுத்துக்கள் செந்நிறத்தில் ஒளிர்ந்துகொண்டிருந்தன. ‘போ… போ…’என்றாள் தேவதை. ‘போறியாக்கும்…’என்றது என்று செல்லமாகக் கொஞ்சினாள் கடற்கன்னி. அவள் அருகிலிருந்த வாயிலை நோக்கி நடந்தாள். அதனருகிலேயே உணவகம் அமைந்திருந்தது. வழியில் ஒரு இயந்திரத்தின் முன் ஏழெட்டுப் பேர் கூடி நின்றிருந்தார்கள். எட்டிப் பார்த்தாள். ஜாக்பொட் விழுந்திருந்தது.


இரண்டாயிரத்து ஐந்நூறு டாலர்கள்!


அந்த  மனிதர் - வயதானவர் நடுங்கும் கைகளோடு அகலமாகச் சிரித்துக்கொண்டிருந்தார். ஒருபோதும் வென்றிராதவர் போல தோன்றினார். ஏழ்மையைப் பறைசாற்றும் முகம்… உடைகள். கடந்த வாரம் ஒருவருக்கு பதினைந்தாயிரம் டாலர்கள் விழுந்ததைப் பற்றி ஒரு பெண் உரக்க விபரித்துக்கொண்டிருந்தாள். உண்மையில் அதில் விபரிக்க ஒன்றுமேயில்லை. ஒரு அழுத்து… நேர்கோட்டில் உருக்கள்… அவ்வளவுதான்!ஜக்பொட்’விழுந்திருக்கும்போது நேராக வந்து நிற்கும் அந்த உருக்களைக் காணக் கண் கோடி வேண்டும். ஒரு தடவை பன்றிக்குட்டிகள் அவளுக்கு ஆயிரத்து ஐநூறு டாலர்களை ஈட்டித் தந்தன. அந்த வெற்றி, அவள் துயரம் ஊறிய முகத்தோடு வெளியேறிச் செல்வதற்கு முன்பாக கையிலிருந்த கடைசி இருபது டாலர்களால் கிட்டியிருந்தது. அன்றிலிருந்து பன்றிகள் மீது அவளுக்கு பிரியம் அதிகமாகிவிட்டது. பிறகொரு தடவை கடற்கன்னிகள் நேர்வரிசையில் வந்து நின்றார்கள். செதில்நிறைந்த வால்களை அவள் வாஞ்சையோடு தடவிக் கொடுத்தாள். கைகளில் தூசி ஒட்டிக்கொண்டது. தீக்கொழுந்துகள் சுற்றிப்படர்ந்த செந்நிற ஏழுகள், ஐந்நூறு டாலர்களை வென்றெடுத்துத் தந்த நாட்கள் அநேகம்.

இன்னும் ஒரு தடவை முயற்சித்துப் பார்க்கலாம் என்று தோன்றிற்று. வயிறோ பசியில் அழுது அடம்பிடித்தது. தலை தொடர்ந்து சுற்றிக்கொண்டே இருந்தது. பொருட்கள் இடம்மாறித் தெரிந்தன. மயங்கி விழுந்து விடுவேனோ என அஞ்சினாள். இம்முறை தேர்ந்த இயந்திரம் கபகபவென விழுங்கியது. திருப்பித் தரமாட்டேனெனக் கங்கணம் கட்டிக்கொண்டாற்போல… ஏறுக்கு மாறாகவே சுற்றியது. தோற்கிறோம் என்று அறிந்தும் யாரையோ பழிவாங்குவதுபோல நோட்டுக்களைத் திணித்துக்கொண்டே இருந்தாள்.


வயிறு ஒட்டி இடுப்பிலிருந்து ஜீன்ஸ் வழுகிக்கொண்டே இருந்தது. கண்களைச் சுற்றி கருவளையம் படர்ந்திருக்கும் என்பதை கண்ணாடியைப் பார்க்காமலே அவள் ஊகித்தாள். முகம் காய்ந்து தலை கலைந்து ஒரு பிச்சைக்காரியைப் போல இரக்கமற்ற அந்த இயந்திரங்களிடம் கெஞ்சிக்கொண்டிருப்பதை நினைக்க அழுகை வந்தது. சுயவெறுப்பு மிகுந்தது. இந்த நாகரிக உலகம் மட்டும் இல்லையென்றால்…. உண்மையில் அவள் அங்கிருந்து பெருங்குரலெடுத்துக் கத்தியபடி வெளியே ஓட விரும்பினாள். ஆனால், அவள் நினைத்தபடியெல்லாம் அங்கு அவளால் நடந்துகொள்ள முடியாது.‘ஷிட்’என்று வாய்க்குள் நொடிக்கொரு தரம் சொல்லிக் கொண்டாள். கடுமையான வார்த்தைகளைப் பிரயோகித்தால், வன்முறையாக நடந்துகொண்டால் விரட்டிவிடுவார்கள் என்ற அச்சம் அவளைத் தடுத்தது. 

சூதாடும் பழக்கத்திலிருந்து தம்மை விடுவித்துக்கொள்ள விரும்புபவர்களுக்கென்றே ‘புனர்வாழ்வு’நிலையங்கள் இருக்கின்றன. தோற்றுப் போய் வாய்விட்டு அழுத, கண்களில் உலகத்தின் துயரமெல்லாம் தேக்கப்பட்டிருக்க தளர்ந்து வெளியேறும் பலரை அவள் பார்த்திருக்கிறாள். விரல்களைக் கோர்த்துக்கொண்டு உள்ளே வந்து, பணத்தை இழந்தபின் வாக்குவாதப்பட்டபடி எதிரிகளைப் போல வெளியேறிச் சென்ற இணைகளையும் பார்த்திருக்கிறாள்.

அவள் எத்தனை நாட்கள் அப்படித் திரும்பிப் பாராமல் சூறைக்காற்றென தன்னைத் தானே இழுத்துக்கொண்டு ஓடிப்போயிருக்கிறாள்! நரகத்தினுள் தள்ளப்பட்டவளைப் போல ‘கடவுளே… கடவுளே…’என்று மனம் அரற்ற அந்தக் கூடமெங்கும் பரிதபித்து அலைந்திருக்கிறாள்! நள்ளிரவு கடந்து மயங்கி விழும் நிலை வந்த பிற்பாடு சாப்பிடுவதற்காக உணவகத்தினுள் நுழையும் அந்த ஆசியப் பெண்ணை உணவகத்தினருக்குக் கூட நினைவிருக்கலாம்.முற்றிலும் மூழ்கிப் போவதன் முன்பான சுயவிசாரணை ஆரம்பித்துவிட்டது.

“நான் ஏன் இப்படி இருக்கிறேன்?”

‘நான் தனிமையாக இருக்கிறேன்’என்று சொல்லிக்கொண்டாள். 

மானசீகமாக கண்ணாடியைப் பார்த்துக் காறியுமிழ்ந்தாள். “இனிமேல் இல்லை… இனிமேல் இல்லை”என்று பிதற்றியபோது ஏறத்தாழ அவள் தோற்றுவிட்டிருந்தாள். ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத பொருளற்ற சொற்கள் அவளது மனப்பரப்பில் மிதக்கவாரம்பித்தன. கையில் இருபது டாலர் மீந
1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 15, 2012 19:26

June 11, 2012

என் சகோதரியை நான் மெச்சுகிறேன்... -பரீட்சார்த்தப் பதிவு


 என் சகோதரி கவிதைகள் எழுதுவதில்லைஅவள் திடீரென்று கவிதைகள் எழுதத் தொடங்குவாள் என்றும்நான் நினைக்கவில்லைஅவள் கவிதைகள் எழுதாததென்பது அம்மா போலத்தான்அப்பாவையும் போலத்தான்அவரும் கவிதைகள் ஏதும் எழுதவதில்லைஎன் சகோதரியின் வீட்டுக் கூரையின் கீழ் நான்மிகப் பாதுகாப்பாக உணர்கிறேன்எனது சகோதரியின் கணவரும் கவிதை எழுதுவதை விடசெத்துப் போவதையே விரும்புவார்இது - ஏற்கெனவே நிலவும் ஒரு கவிதையைப் போலஎனக்குத் தோன்றுகிறது - எனது சொந்தக்காரர்கள்எவரும் கவிதை எழுதுவது இல்லை என்பது..
எனது சகோதரியின் காகிதக் கட்டுக்களினிடையில்ஏதும் பழைய கவிதைகள் காணப்படவில்லைஅவளது கைப்பையிலும் கூடபுதிதாக எழுதப்பட்ட கவிதைகள் ஏதும் இல்லைஎனது சகோதரி என்னை மதிய உணவுக்குக் கூப்பிட்டபோதுஅவள் கவிதைகளை எனக்கு வாசித்துக் காண்பிக்கிறதிட்டமேதுமில்லை என்பதையும் நான் அறிவேன்அவளது சு+ப்புகளில் அற்புதமாக ருசி கூடியிருக்கிறதுஅவளது கையெழுத்துப் பிரதிகளில்காபியின் சிதறின சொட்டுகள் ஏதுமில்லை
நிறைய குடும்பங்கள் இருக்கின்றன எவருமே கவிதைகள் எழுதாமல்அப்படியே எங்கேயேனும் எழுதுபவரிருப்பாரானால்அநேகமாக ஒரே ஒருவராகத்தான் இருப்பார்சிலவேளை கவிதை தலைமுறைகளினிடையே அருவியாகத் தெளித்துக் கொண்டிருக்கும்பரஸ்பர அனுபவத்தில் பெருநீர்ச்சுழிப்பாய்த் தங்கியிருக்கும்
எனது சகோதரி அற்புதமான பேச்சுநடை கொண்டவள்அவளது கருத்துகள் விடுமுறை காலத் தபால் கார்டுஎழுதுவதற்கு அப்பால் போனதில்லைஒவ்வொரு வருடமும் மாறாமல் அதே வாசகங்கள்தான்இருக்கும்ஆனால், அவள் திரும்பவும் என்னிடம் வரும்போதுஅவள் சொல்வாள்அனைத்தும் பற்றிஅனைத்தும் பற்றிஅந்த எழுத்துக்களிலிருக்கும் அனைத்தும் பற்றி.
-விஸ்லாவா சிம்போர்ஸ்க்கா
'ஹிட்லரின் முதல் புகைப்படம்' தொகுப்பிலிருந்து....தமிழில்: ஆர்.பாலகிருஷ்ணன், யமுனா ராஜேந்திரன்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 11, 2012 20:03

May 17, 2012

அமைதிப் படை: அழிவின் நாட்களும்… அழியா ஞாபகமும்….



ஜெயமோகனுக்குச் சமர்ப்பணம்

இருபத்து நான்கு ஆண்டுகளுக்கு முன் அது நிகழ்ந்தது. இன்றுபோல உலகம் இவ்வளவு கிராமமாகச் சுருங்கியிருக்கவில்லை. இத்தனை நாடுகள் மூளைக்குள் குந்தியிருக்கவுமில்லை. அவற்றின் அரசியல் முகமோ நிறமோ அறியாதவளாக நானிருந்தேன். யாழ்.பல்கலைக்கழக விளையாட்டு மைதானத் திடலில் அந்த வானூர்தி ஒரு மாயப்பறவையின் வசீகரத்தோடு தரையிறங்கியது. அதன் விசிறி சடசடவென்று பேரோசை எழுப்பியபடி சுற்றித் தணிய, புற்கள் நளினமாக மடங்கித் தலைசாய்த்திருக்க, ‘நியாயத்தின் திருவுரு’க்களாக அவர்கள் இறங்கிவந்த அந்தக் காட்சியை மாணவர்களாகிய நாங்கள் முண்டியடித்துக்கொண்டு பார்த்தோம். ‘இதோ எமது பாதுகாவலர்கள்’என்று மனம் குதியிட்டது. அந்தப் பாதுகாவலர்களின் துப்பாக்கிகள், சில மாதங்களிலேயே எங்களுக்கு எதிராகத் திரும்பவிருக்கின்றன என்று, அப்போது யாராவது எதிர்வு கூறியிருந்தால் எள்ளி நகையாடியிருப்போம்.

இலங்கை-இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தானதைத் தொடர்ந்து, இந்திய இராணுவம் ஈழமண்ணில் கால்பதித்தது. ‘இனி இந்த மண்ணில் போர் இல்லை’என்ற நினைவு எத்தகைய ஆசுவாசம் தரக்கூடியது! ‘இனி எங்கள் தெருக்களில் விடுதலையடைந்தவர்களாக நாங்கள் உலவமுடியும்’என்ற நம்பிக்கை எத்தகைய புளகாங்கிதத்தைப் பரத்தக்கூடியது!  தொடர்ந்து வந்த நாட்களில், ஒளிரும் விழிகளுடன் திருநெல்வேலியின் பரமேஸ்வராச் சந்தியிலும் அதனையொட்டிய வீதிகளிலும் நாங்கள் கூட்டம் கூட்டமாக நின்று கதைபேசினோம்.  பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வந்திருந்த போராளிகள் சாதாரண உடைகளில் இராணுவ பயமற்று உலவித் திரிந்தார்கள். துப்பாக்கி தாங்கிய இராணுவத்தினரும் (அது எந்த நாட்டு இராணுவமாக இருந்தபோதிலும்) போராளிகளும் ஒரே இடத்தில் உலவியதானது காட்சிப்பிழையாகவே எங்கள் கண்களுக்குத் தோன்றியது.

அவர்கள்தாம் (அமைதிப்படையினர்) எவ்வளவு அழகாகப் புன்னகைக்கவும், குழந்தைகளைப் பார்த்துக் கையசைக்கவும் செய்தார்கள்! இந்தியாவைப் பற்றி எங்கள் மூதாதையர்களால் அதுநாள்வரை கட்டியெழுப்பப்பட்டிருந்த புனித பிம்பங்கள் மேலும் கொஞ்சம் ஊதிப் பெருத்தன. ‘காந்தி தேசம்’, ‘கலாச்சாரத் திருநிலம்’, ‘புத்தரின் பூமி’, ‘இரண்டாவது தாய்நாடு’, ‘தொப்பூள் கொடி உறவு’ இன்னபிற அடைமொழிகள் உருவேற்ற உணர்ச்சிப் பெருக்கில் (நன்றி ஒரு துளி தூக்கலாக) மிதந்து திரிந்தோம்.

ஆகஸ்ட் 4ஆம் திகதியன்று (ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு ஆறு நாட்களின் பின்) சுதுமலையை நோக்கி பெருந் திரளாய் சனங்கள் போய்க்கொண்டிருந்தார்கள். அவ்வளவு சனத்திரளை என் வாழ்நாளில் கண்டதில்லை. (நான்கு இலட்சம் பேர் என்று பிறகு தெரிந்துகொண்டேன்.) எங்கெங்கோவிருந்தெல்லாம் மக்கள் வந்து குவிந்துகொண்டிருந்தனர். கூட்டம் நடக்கும் இடம்வரை செல்ல வாகனங்கள் அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை. நாங்கள் வெகு தொலைவில் இறக்கிவிடப்பட்டு சுதுமலை அம்மன் கோயிலை நோக்கி நடந்து போனோம். கூட்டம் நடைபெறும் இடத்தை நெருங்க நெருங்க ஒருவரோடொருவர் தட்டுப்படாமல் நடக்கமுடியாத அளவிற்கு அடர்த்தியாயிற்று சனத்திரள். அவ்வளவு கூட்டத்தில் மேடையைச் சரிவரப் பார்க்க முடியாதென்பதனால் அருகிருந்த மரங்களிலும் வீடுகளின் கூரைகளிலும்கூட இளைஞர்கள் ஏறியிருக்கக் கண்டோம். அன்றுஇ இந்தியாவிடம் ஆயுதங்களை ஒப்படைத்து (முழுமையாக அல்ல) ‘நாங்கள் இந்தியாவை நேசிக்கிறோம்’என்ற தலைப்பில் தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்கள் உரையொன்றை ஆற்றினார். அந்த உரையில், “எமது மக்களைப் பாதுகாக்கும் பாரிய பொறுப்பை எங்களிடமிருந்து (விடுதலைப் புலிகள்) இந்திய அரசு கையேற்றுக்கொள்கிறது”என்ற வாசகம் இடம்பெற்றது. மேலும், “மிகப் பெரிய வல்லரசொன்று எங்கள் மக்களின் அரசியல் விதியை முடிவுசெய்யத் தீர்மானித்துவிட்டிருக்கும்போது, அதை மீறி எதையும் செய்வதென்பது எமது இயலுமைக்கு அப்பாற்பட்டது.”எனவும் கூறியிருந்தார் (ஆனால், மிகப் பெரிய வல்லரசை அவர்களால் தோற்கடிக்க முடிந்தது என்பது வரலாறு.)

போர் அல்லது போராட்டம் நடைபெறும் நாடுகளில் வாழும் எவரும் அரசியல் கலவாத தன்வரலாறுகளையோ சம்பவங்களையோ எழுதுவதென்பது சாத்தியமேயில்லை. அமைதிப் படையின் அநீதிக் காலத்தில் நான் அங்கே இருந்தேன் என்பதனால் ‘என்’, ‘நான்’என்று பிரயோகிக்க வேண்டியுள்ளது. அரசியலில் நேரடியாகப் பங்கேற்காத ஒருவரது கண்களில் அமைதிப் படையினர் எங்ஙனம் தோன்றினார்கள் என்பதைப் பதியவேண்டிய அவசியம் உள்ளது.

ஈழத்தமிழர்கள்பால் ‘கருணை’கூர்ந்து இலங்கை சனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவும் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும்
1987ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29ஆம் திகதி, இலங்கை-இந்திய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார்கள். இதில் நகைமுரண் என்னவென்றால், எந்த இனம் துடிக்கப் பதைக்க படுகொலை செய்யப்பட்டதோ, தமது வாழ்விடங்களிலிருந்து அகதிகளாக விரட்டியடிக்கப்பட்டதோ, பெரும்பான்மையாளர்கள் ஆட்சியாளர்களாக இருந்த காரணத்தால் கல்வி உள்ளடங்கலான உரிமைகளில் எவருக்குப் பாரபட்சம் காட்டப்பட்டதோ, அவர்களைக் கலந்தாராயாமல், ஒருதலைப்பட்சமாக அந்த ஒப்பந்தம் எழுதப்பட்டு, தமிழர்களது விருப்பத்திற்கு முரணாக அவர்கள்மீது திணிக்கப்பட்டது என்பதுதான்.

‘ஈழமுரசு’பத்திரிகைக் காரியாலயத்தின் அச்சகப் பகுதியும் அச்சியந்திரமும் குண்டுவைத்துத் தகர்க்கப்பட்டதாக ஒரு நாள் (ஒக்டோபர் 10, 1987) காலையில் நாங்கள் அறிந்தோம். அன்றே ‘முரசொலி’பத்திரிகையின் அச்சியந்திரமும் சிதைக்கப்பட்டதாகச் செய்திகள் வந்தன. இதனிடையில்- குமரப்பா, புலேந்திரன் ஆகிய தளபதிகள் உட்பட பதினேழு பேரை இலங்கைக் கடற்படை கைதுசெய்து, இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் விதிகளை அடாவடித்தனமாக மீறினார்கள். இலங்கையின் அதிகாரத் தரப்பினைத் தட்டிக் கேட்க இந்தியத் தரப்பு தயங்கியது. விளைவு, சிறைப்பிடிக்கப்பட்ட பதினேழு பேரும் ‘சயனைட்’அருந்தினார்கள். பன்னிரு விடுதலைப் புலிகள் இந்திய-இலங்கை கூட்டுச்சதிக்குப் பலியாகப்பட்டார்கள். ஐவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிர்தப்பினார்கள். நிலைமை வரவர பதட்டமடைந்துகொண்டே சென்றது.

ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து, நீரும் அருந்தாமல் திலீபன் உண்ணாவிரதமிருந்த நல்லூர்க் கோயிலுக்கு அண்மையிலேதான் நாங்கள் வாடகைக்குக் குடியிருந்தோம். ஆகவே ஒவ்வொரு நாட்களும் அங்கே போகக் கிடைத்தது. அந்த மெல்லிய உருவம் மேலும் உருக்குலைந்து ஈற்றில் சருகாக உதிர்ந்தபோது (செப்டெம்பர் 26, 1987) அங்கிருந்து பெரும் அழுகைச் சத்தம் கேட்டது. வீட்டிலிருந்து ஒரே பாய்ச்சலாக ஓடிச்சென்றேன். ‘காந்தி தேசம்’ எங்களைக் கைவிட்டுவிட்டது. ‘அஹிம்சைநெறியால் ஈழத்தை வென்றிருக்க முடியும்; ஆயுதப் போராட்டத்தால் மக்களைக் கொன்றுவிட்டார்கள்’என்று சொல்பவர்களின் மனச்சாட்சியை ‘திலீபன்’என்ற பெயரும் தொந்தரவு செய்வதில்லை என்பது வியப்பிற்குரியதே.

நல்லூர்க் கோயில் முன்றல் உணர்ச்சிக் கொந்தளிப்பில் கனன்றுகொண்டிருந்தது. கோபமும் கண்ணீரும் ஆற்றாமையும் ஆயாசப்பொருமலுமாய் மக்கள் அலைமோதிக்கொண்டிருந்தார்கள். ‘கண்கெட்டுப் போவார்’என்று, மண்ணை வாரியிறைத்து இந்திய அமைதிப் படையினரை பெண்கள் சபித்துக்கொண்டிருந்தார்கள். எல்லோரும் ஒரே நேரத்தில் மேடையிலிருந்த திலீபனின் உயிரற்ற உடலை நோக்கிச் செல்ல முயன்றார்கள். தொண்டர்கள் சிலர் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முயன்று தோற்றார்கள்.

மீண்டும் மீண்டும் நாங்கள் ஏன் கைவிடப்படுகிறோம்? மீண்டும் மீண்டும் நாங்கள் ஏன் ஏமாற்றப்படுகிறோம்? என்ற கேள்விகள் எங்கள் மனங்களைக் குதறிக்கொண்டிருந்தன. இலங்கை இராணுவத்தின் இனவெறியாட்டத்திலிருந்து ஈழத்தமிழர்களைக் காப்பாற்றுவதாகச் சொல்லிக்கொண்டு உள்ளே வந்தவர்கள், இந்தியாவின் பிராந்திய நலனைப் பாதுகாக்க முற்பட்டனரேயன்றி, எளிய மக்களது உயிர்களையோ உரிமைகளையோ ஒரு பொருட்டாகக் கருதினார்களில்லை.

ஒக்டோபர் 21இ 1987 தீபாவளியன்று இந்தியப் படைகளால் யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரியில் நடத்தப்பட்ட நரவேட்டை இந்திய சரித்திரத்தில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது! ‘இறுதிப் போர்’என்று சொல்லப்படுகிற முள்ளிவாய்க்கால் சண்டையின்போது இலங்கை இராணுவத்தினரும் வான்படையும் வைத்தியசாலைகளைக் குறிவைத்துத் தாக்குதல்களைத் தொடுத்தன. அந்தத் தாக்குதல்களுக்கெல்லாம் அடியெடுத்துக் கொடுத்ததாக, முன்னுதாரணமாக யாழ்ப்பாணப் பெரியாஸ்பத்திரி மீது இந்தியப் படைகளால் தொடுக்கப்பட்ட தாக்குதலைச் சொல்லலாம். வைத்தியசாலை வளவினுள் விடுதலைப் புலிகள் ஒளிந்திருப்பதாகக் கூறிக்கொண்டு உள்நுழைந்த ‘அமைதி’ப் படையினர்‘ வைத்தியர்கள், தாதிகள், ஊழியர்கள், நோயாளிகள் உள்ளடங்கலாக 70 பேரைச் சுட்டுக்கொன்றனர். பிணங்களோடு பிணங்கள் போலவே கிடந்து உயிர்தப்பிய சிலரது வாக்குமூலங்கள் நெஞ்சை அதிரவைத்தன.

‘இப்படியெல்லாம் நடக்கக்கூடுமா?’என்ற அதிர்ச்சியிலிருந்து எங்களால் மீள முடியவில்லை. ‘ஒரு தாய் தன் குழந்தைக்கு நஞ்சூட்டிக் கொன்றாள்’ என்ற செய்தி எவ்வளவுக்கெவ்வளவு அதிர்ச்சியூட்டுமோ அதனிலும் அதிகமதிகமான அதிர்ச்சியில் திகைத்துப்போனோம்.

விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அமைதி காக்கும் படையினருக்கும் சண்டை தொடங்கிய பிற்பாடு, பொதுசனங்களெல்லாம் புலிகளானார்கள். பெரும்பான்மைச் சிங்களச் சிப்பாய்களுக்குப் பதிலாக, ‘இறையாண்மை’மிக்க இந்தியாவின் பன்மொழி பேசும் சிப்பாய்கள் இனவழிப்பைச் சிரமேற்கொண்டார்கள்.

நல்லூர்க் கோயில் ஞாபகத்திற்கு வரும்போதெல்லாம், பசியின் ஞாபகமும் கூடவே வந்துவிடுகிறது. இந்திய அமைதிப்படையின் அட்டூழியத்திற்கு அஞ்சி கோயிலுக்குள் அகதிகளாகத் தஞ்சம் புகுந்த பல்லாயிரக்கணக்கானோரில் நாங்களும் இருந்தோம். ஒரு துண்டு பாணுக்காக (தமிழகத்தில் ரொட்டி) ஏங்கிப் பசித்திருந்த அந்த நாட்கள் மறக்கப்படக்கூடியனவல்ல. ஓயாத பேச்சொலிகள், கைது செய்யப்படுவோம் என்ற பதட்டம், உயிர்ப்பயம், குழந்தைகளின் அழுகுரல், இரவுகளில் எப்போதாவது வெடித்தெழும் விசும்பல்கள், மூத்திர-மல நாற்றம் என்று கோயிலின் முகமே மாறிவிட்டது.

இது எங்கள் குடும்பத்தின் கதை மட்டுமன்று; அந்த மண்ணில் வாழ்ந்த ஒட்டுமொத்த சமூகத்தின் அவலம். அமைதிப்படை என்று வந்தவர்கள் சாதாரணர்களின் வாழ்வில் எத்தகைய கோரத்தாண்டவத்தை நிகழ்த்தினார்கள். அவர்களுடைய நம்பிக்கைகளின் மீது எப்படிக் காறியுமிழ்ந்தார்கள் என்பதைப் பேச விரும்புகிறேன். இந்தியா என்ற வல்லரசு எளிய மக்களின் வெறுப்புக்கு எவ்விதம் ஆளானது என்பதைப் பகிர விரும்புகிறேன். காரணமற்ற வெறுப்பை ஈழத்தமிழர்களோ தண்டகாரண்யவாசிகளோ நாகாலாந்து, அஸ்ஸாம், மணிப்பூர், காஷ்மீரைச் சேர்ந்தவர்களோ கொண்டிருக்கவில்லை என்பதை, இந்தியாவின் ‘தேசபக்தர்கள்’புரிந்துகொள்ள வேண்டும். முதலாளித்துவ சார்புடைய, மக்கள் விரோத அரசுகளன்று; மக்களே கரிசனைக்குரியவர்கள்.

பசி பொறுக்கமாட்டாத ஒருநாளில் எனது பெற்றோரும் நானும் நல்லூர்க் கோயிலை விட்டு வெளியேறி எங்கள் பெற்றோரின் கிராமத்துக்குப் போனோம். தெருவோரம் விழுந்து கிடந்த பிணமொன்றின் தலையை நாய் முகர்ந்து பார்த்துக்கொண்டிருந்தது. எங்கெங்கோ எறிகணைகள் விழுந்து வெடிக்கும் ஓசை. துப்பாக்கி வேட்டுகளின் விடாத சத்தம். இந்தியப் படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடுஞ்சமர் நடந்துகொண்டிருந்தது.

எனது பெற்றோரின் ஊரில் சில நாட்களே அமைதி நீடித்தது. ‘அமைதி’ப்படை நெருங்கி வந்த பிறகு அமைதி நிலவுதல் எங்ஙனம் சாத்தியம்? அவர்கள் ஊரை நோக்கி வருகிறார்கள் என்ற செய்தி அறிந்த அடுத்த நிமிடமே, புயலில் அலைக்கழியும் பறவைகள் போல தெருக்களில் அலைமோத ஆரம்பித்துவிட்டோம். உயிர்ப்பயம் எங்களை விரட்டியது. வீடுகளைப் பூட்டியும் பூட்டாமலும், ஓரிரு ஆடைகளுடனும் சொற்ப கையிருப்புகளோடும் வெளியேறி நடக்கத் தொடங்கினோம். எங்கே செல்வது என்ற சர்ச்சைகளின் பின் கோயில்களுக்குச் செல்வது என்று முடிவாயிற்று. சிலர் தேவாலயங்களை நோக்கிப் போனார்கள். வேறு சிலர் இந்துக் கோயில்களை நோக்கிப் போனார்கள். என் தாயார் ஒரு பானையில் அரிசியைப் போட்டுத் தலையில் சுமந்து வந்தார். அது எத்தகைய பெறுமதியானது என்பதை நாங்கள் அப்போது அறிந்திருக்கவில்லை.

வெளியில் குண்டுச் சத்தங்கள் தொடர்ந்துகொண்டேயிருந்தன. மூளாய் என்ற ஊர் வழியாக அமைதிப் படை உள்நுழைந்துகொண்டிருப்பதாகச் சிலர் சொன்னார்கள். நாங்கள் ‘கடவுளே… கடவுளே’என்று அரற்றியபடி தஞ்சம் புகுந்த இடங்களுள் தவித்தபடியிருந்தோம். ஈற்றில் இந்திய இராணுவம் பேராரவாரத்துடன் ஊர்மனைக்குள் நுழைந்தது.

கண்ணிமைத்து மூடும் நேரத்திற்குள் வானைக் கீறி மறையும் மிராஜ் விமானங்கள் பேரிடி போன்ற சத்தத்தோடு பறந்து அச்சுறுத்தின.  கோயில் அர்ச்சகரது கழிப்பறையை இளம்பெண்கள் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டது. மற்றவர்கள் கோயிலைச் சுற்றவர இருந்த வயல்களுக்குள் மலங்கழித்தார்கள். கழிப்பறைக்கு இருக்கும்போது அங்கேயே குண்டு வீழ்ந்து இறந்துவிடலாகாது என்பதே எங்களது பிரார்த்தனையாக இருந்தது. ஆரம்பத்தில் அவரவர் கொண்டு வந்திருந்த அரிசியில் உணவு சமைத்து உண்டோம். இராணுவத்தினரால் ‘ரேஷன்’கணக்கில் எப்போதாவது அரிசி வழங்கப்பட்டது. பெரும்பாலும் பீற்றூட் கறியும் பருப்பும்தான். நல்ல உணவு என்பதைக் கனவில் மட்டுமே காணக்கூடியதாக இருந்தது. வீடுகளில் தானியங்கள் இருந்தபோதிலும் அங்கு சென்று எடுத்துவர எங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. மேலும், அப்படிச் சென்றுவருவது ஆபத்து மிகுந்ததாக இருந்தது. ஆகவே,  நாங்கள் எப்போதாவது அல்லது கிடைக்கும்போது உணவு உண்ண எங்கள் வயிறுகளைப் பழக்கப்படுத்திக்கொண்டோம்.

இருந்திருந்துவிட்டு எங்களை வரிசையாக கோயிலிலிருந்து வெளியே வரச் சொல்வார்கள். கைகளை உயர்த்திக்கொண்டு வெளிவரவேண்டும். அடையாள அணிவகுப்பு போல ஒன்று நடத்தப்படும். குற்றவாளிகளைப் போல நடத்தப்படுவது தாங்கமுடியாத அவமானத்தை அளித்தது. அப்போது ஒருவர் கண்களை மற்றவர்கள் பார்ப்பதைத் தவிர்த்துவிடுவோம். குறிப்பாக வயதானவர்களின் கண்களை நாங்கள் பார்ப்பதேயில்லை. மரியாதைக்குரிய அவர்கள் இழிவாக நடத்தப்படுவதை எங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. உள்ளுக்குள் கோபநெருப்பு கனன்றுகொண்டேயிருந்தது. அந்தக் காலகட்டத்தில் பல இளைஞர்களும் இளம்பெண்களும் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தம்மை இணைத்துக்கொண்டார்கள். இந்திய இராணுவத்திடம் பிடிபடுவதைக் காட்டிலும் அது பாதுகாப்பானது என்று நினைத்தது மட்டும் போராட்டத்தில் தம்மை இணைந்துகொள்ளக் காரணமாக இருக்கவில்லை. ‘இழிவுசெய்யப்பட்டோம்’ என்ற சுடுநினைவும் அவர்களை போராட்டம் நோக்கி உந்தித் தள்ளியது.

அன்று மட்டுமென்றில்லை; காலகாலங்களாக ‘நீங்கள் மனிதர்களல்ல… மனிதர்களல்ல…’என்று இடைவிடாது ஒலித்த இனவெறி, பிராந்திய வல்லாதிக்கக் கூச்சல்களே  இளைஞர்களையும் பெண்களையும் களமாடத் தூண்டியது என்பதை இங்கு குறிப்பிட்டேயாக வேண்டும்.

அமைதிப் படை பலத்த தாக்குதலுக்கு ஆளாகும் நாட்களில் அந்தத் தாக்குதல் அகதி முகாம்களில் எதிரொலிக்கும். இரவுகளில் சப்பாத்துக் கால்கள் பேரோசையெழுப்ப அகதி முகாம்களுக்குள் நுழையும் படையினர், ஒவ்வொரு முகங்களாக ‘டார்ச்’வெளிச்சத்தில் பார்ப்பார்கள். துணியால் முகம் மறைத்து அவர்களோடு வந்திருக்கும் முகமூடி (காட்டிக் கொடுப்பவர்) விடுதலைப் புலிகளோடு தொடர்புடையவர்களை அடையாளங் காட்டுவார். (அந்தப் புண்ணிய கைங்கரியத்தை பெரும்பாலும் ஈ.பி.ஆர்.எல்.எப். இனரே செய்துவந்தனர்.) அடையாளங் காட்டப்பட்டவரை கூட்டத்திலிருந்து வெளியில் இழுத்தெடுப்பார்கள். அவரை அழைத்துச் செல்லவிடாமல் உறவினர்கள் காலைப் பிடித்து இழுப்பார்கள். அல்லது அமைதிப் படையின் கால்களில் விழுவார்கள். காலில் விழும் உறவினரை மிலேச்சத்தனமாகத் தாக்கிவிட்டு ‘சந்தேக நபர்’களை இழுத்துச் செல்வார்கள்.

இளம்பெண்களை வைத்திருக்கும் தாய்மார்கள் படையினரைக் கண்டு அஞ்சி நடுங்கினார்கள். ‘அமைதி’ப்படையினரின் தலையாய பணிகளுள் ஒன்றாக பாலியல் வல்லுறவும் அமைந்திருந்ததே அந்த அச்சத்திற்குக் காரணம்.
உரிமைகளுக்காகப் போராடும் சிறுபான்மை இனத்துப் பெண்களை வல்லுறவு செய்வதன் மூலமாக, அந்த நிலத்தையே வெற்றிகொண்டதாக இறையாண்மையுள்ள அதிகாரங்கள் மமதை கொள்ளும் ‘போர்நெறி’களை நாமறிவோம். இந்திய அமைதிப் படை ஈழத்தில் நிலைகொண்டிருந்த காலத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டார்கள். பயணங்களின்போதும் சுற்றிவளைத்துத் தேடுதல் போன்ற நடவடிக்கைகளின்போதும் பெண்கள் தங்கள் உடல்களையே தமக்கு எதிரிகளாகக் கருதவேண்டியிருந்தது. சோதனைச் சாவடிகளில் பேருந்துகளிலிருந்து ஆண்கள் இறக்கிவிடப்படுவர். அது பெண்கள் என்ற இரக்கத்தின்பாற்பட்டதன்று; இராணுவத்தின் பாலியல் தினவின்பாற்பட்டதே. மார்புகளை அழுத்தி, ‘குண்டு இருக்கிறதா?’என்று பற்களைக் காட்டும்போதும், பையைச் சோதனையிடும் சாக்கில் பெண்களது முழங்கால்களில் தங்களது ‘ஆண்மை’யை அழுத்திப் பரிசோதிக்கும்போதும் நாங்கள் கண்களில் நீர்முட்டச் சகித்துக்கொண்டோம். அருவருப்போடு அழுத்தி அழுத்தித் தேய்த்தாலும் போகாத அழுக்கைப் போல அந்த ஞாபகம் காலம் முழுவதும் இருக்கும். அமைதிப் படையினர் தமது உணவுத் தயாரிப்பின்போது கடலை எண்ணெயையே பயன்படுத்தினார்கள். பாம்புகளின் அருகாமையை உழுந்து வாசனை மூலம் அறிந்துகொள்வதுபோல, (பாம்புகளின் கொட்டாவி உழுந்து வாசனையுடையது என்பார்கள்) கடலை எண்ணெய் வாசனை இந்தியப் படையினரது பிரசன்னத்தை அறிவித்துவிடும்.

ஒருவழியாக, அகதி முகாம்களிலிருந்து வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டோம். ஊரின் முகமே மாறியிருந்தது. எறிகணை வீச்சினால் கட்டிடங்கள் சிதைந்திருந்தன. எங்களுக்குத் தெரிந்த பலர் கொல்லப்பட்டிருந்தார்கள். ஏராளமானோர் கைதுசெய்யப்பட்டிருந்தார்கள். எங்கெங்கு திரும்பினும் இந்திய இராணுவச் சிப்பாய்களே தென்பட்டார்கள். பல வீடுகள் அவர்களால் இராணுவ முகாம்களாக மாற்றப்பட்டிருந்தன. தற்காலிகமாகத் தங்கவந்த இடத்திலிருந்து யாழ்ப்பாண நகருக்குத் திரும்பிவிட நாங்கள் தீர்மானித்தோம். அங்குதான் எங்களது உடமைகள் இருந்தன. மேலும், அந்தக் கடின காலத்தில் உறவினர்களது வீடுகளில் அவர்களுக்குச் சுமையாக நீண்ட நாட்கள் தங்கியிருப்பது உவப்பானதாகவோ நியாயமானதாகவோ இருக்கவில்லை.

ஏறக்குறைய பத்து மைல் தூரத்தை கால்நடையாகவே நாங்கள் கடக்கவேண்டியிருந்தது. பேருந்துகள் ஓடவில்லை. பத்திரிகைகள் கிடைக்கப் பெறவில்லை. அஞ்சலகங்கள் உள்ளிட்ட எந்தவொரு அலுவலகமும் இயங்காத காரணத்தால் தனித் தனித் தீவுகளில் தொடர்பறுந்தவர்களாக நாங்கள் வாழவேண்டியிருந்தது. யாழ்நகருக்குத் திரும்பும் வழியெங்கும் நாட்பட்ட பிணங்களை நாங்கள் பார்த்தோம். அவற்றிலிருந்து எழுந்த துர்நாற்றம் தாங்கமுடியாததாக இருந்தது. கட்டிடங்கள் உருக்குலைந்து கிடந்தன. இடிபாடுகள் நிறைந்த நகரமொன்றினூடாக காலமற்ற காலமொன்றினுள் நடப்பதைப் போல நாங்கள் நடந்துபோனோம். எந்நேரமும் கொல்லப்படலாம் என்று தோன்றிக்கொண்டேயிருந்தது. துப்பாக்கிச் சன்னங்களை நினைத்து முதுகு கூசியது. வழிவழியே அமைக்கப்பட்டிருந்த சோதனைச் சாவடிகளில் நிறுத்தப்பட்டு சோதனையிடப்பட்டோம்.

யாழ் நகருக்கு அண்மையிலிருந்த (பெயர் மறந்துபோய்விட்டது) மயானத்திற்கு அருகிலிருந்த இராணுவ முகாமில் ஒரு சீக்கிய இராணுவத்தினன் முதுகைக் காட்டியபடி நின்றுகொண்டிருந்தான். அப்படியொரு உயரமும் பருமனுமான மனிதனை நான் இன்னமுந்தான் கண்டதில்லை. வேற்றுலகவாசியோவென்று ஐயுறும்படியான தோற்றம். திடீரெனத் திரும்பி கண்களைப் பார்த்தபோது உயிரே உறைந்துபோனாற்போலிருந்தது. கட்டளை இன்றியே நின்றுவிட்டிருந்த எங்களைப் பார்த்து அதிசயிக்கத்தக்க விதமாகச் சிரித்தபடி ‘போ’என்று கையசைத்தான். நாங்கள் ஏறத்தாழ ஓடி அவ்விடத்தை நீங்கினோம். அன்றைக்கு மட்டுமல்ல; வேறு சில சூழ்நிலைகளிலும் இந்திய அமைதிப்படையிலிருந்த சீக்கியப் படையினர் தமிழர்களிடம் ஒப்பீட்டளவில் கருணையோடு நடந்துகொண்டதை அவதானித்திருக்கிறேன்.

நாங்கள் வாழ்ந்திருந்த தெருவே வெறிச்சிட்டிருந்தது. அயலவர்களில் பலர் எங்கேயென்றே தெரியாதபடி காணாமல் போயிருந்தார்கள். பக்கத்து வீடு இந்திய அமைதிப் படையின் இருப்பிடமாகியிருந்தது. ஒரு இரவுகூட அங்கு நிம்மதியாக உறங்க முடியுமென்று தோன்றவில்லை. பாலைவனத்தில் தன்னந்தனியாக மாட்டிக்கொண்டதாக உணர்ந்தோம். இவை போதாதென்று பக்கத்து வீட்டிலிருந்து அடிக்கடி எழுந்த அழுகுரல்கள் எங்களை நிலைகுலைய வைத்தன. “ஐயோ… ஐயோ””என்று பெண்கள் அலறியழும் ஓசைகளைக் கேட்டோம். “என்னை ஒன்றும் செய்யாதையுங்கோ…”என்று மன்றாடும் குரல்களைச் செவியுற்றோம். பாலியல் வதைகூடமொன்றின் அருகில் நாங்கள் இருந்துகொண்டிருக்கிறோம் என்ற நினைவு பதைபதைக்கச் செய்தது. என் தாயின் முகம் பித்துப் பிடித்தாற்போல மாறியிருக்கக் கண்டேன். தந்தையோ இறுகிய முகத்தோடு அமர்ந்திருந்தார். அந்த இரவு முழுவதும் உறங்காமல் விழித்திருந்தோம். அதிகாலையில் பேருந்து நிலையத்தில் இருந்தோம். எங்கள் குடும்பம் வவுனியாவை நோக்கிப் பயணப்பட்டது. அங்கு எனது அண்ணா இருந்தார். யாழ்ப்பாணத்தோடு ஒப்பிடும்போது,வவுனியாவில் நிலைமை சகித்துக்கொள்ளத்தக்கதாக இருந்தது. அதன் பிறகு எங்கள் உடமைகளை எடுத்துக் கொள்வதற்காகக் கூட நாங்கள் யாழ்ப்பாண வீட்டிற்குத் திரும்பிச் செல்லவில்லை.

ஆனால், ஞாபகங்கள் தசாப்தங்களைத் தாண்டிப் பயணிக்கின்றன. ‘ஐயோ… ஐயோ’என்ற அலறல் இன்னமும் மனசுக்குள் ஒலித்துக்கொண்டிருக்கிறது. எங்காவது கடலை எண்ணெய் மணத்தை நுகர நேர்ந்தால், இரு தசாப்தங்களுக்கு முந்தைய அந்தக் கொடிய காலத்துள் சென்று விழுந்துவிடுகிறேன். தலை பிய்ந்து கிடந்த அந்தப் பெயரறியாப் பிணத்தையும், பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு கிணற்றில் வீசியெறியப்பட்டிருந்த பெண்ணின் நீரில் ஊறிச் சிதைந்த கண்களையும் எங்ஙனம் மறப்பது?

1990ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24ஆம் திகதி ஈழத்திலிருந்து இந்திய ‘அமைதி’ப் படை வெளியேறிவிட்டதாக (அல்லது வெளியேற்றப்பட்டதாக) எழுதிவைக்கப்பட்டிருக்கிறது. ஆனால்,அவர்கள் எப்போதும் வெளியேறவில்லை என்பதை நாமறிவோம்.

நன்றி: 'பறை' சஞ்சிகை, பொதியவெற்பன் ஐயா
25 நவம்பர், 2011

 
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 17, 2012 08:50

May 8, 2012

பேரினவாதத்தின் போராயுதம்


மூன்றாவது முறையாக
மூர்ச்சித்துத் தெளிந்திருக்கிறாள்.
ஒரு மார்பு சிதைக்கப்பட்டும்
குண்டுகளைக் கண்டுபிடிக்க இயலவில்லை


அவர்கள் தேடுகிறார்கள்
உதடுகளில் சயனைட்டையும்
இரண்டு நாட்களாக ஆகாரம் வழங்கப்படாத
வயிற்றுக்குள்
கைத்துப்பாக்கியையும்.


அவளது பிறப்புறுப்பினுள்
குறிகளாலும் குண்டாந்தடிகளாலும்
ஒருவர் மாற்றி ஒருவர்
துளாவிப் பார்க்கிறார்கள்
சிறு தடயமும் இல்லை.


எதிரிகளின் ஆயுதக்கிடங்கைக் கொழுத்தும்
எக்களிப்போடு
சிகரெட்டால்
மறைவிடத்து (இப்போது திறந்திருக்கிறது)
மயிரைப் பொசுக்குகிறார்கள்.

வன்மத்தோடு
வயிற்றில் இறங்குகிறது
துப்பாக்கியின் ‘பயனைற்’


விரிந்த கால்களுக்கிடையில்
வடிந்து ஓடிப் பதுங்குகிறது
குருதி.


இராணுவச் சீருடையையும் நட்சத்திரங்களையும்
நேர்த்தியாகச் சரிசெய்தபின்
குறிப்பெழுத வேண்டியிருக்கிறது
ஒரு பயங்கரவாதியைப் பற்றி.



“போர்த் தந்திரோபாயங்களில் ஒன்றாக பாலியல் வல்லுறவு பிரயோகிக்கப்படுவது கொங்கோ, சூடான் போன்ற சில இடங்களில் எங்காவது எப்போதாவது நடக்கும் ஒரு விடயம் என்று சிலர் நினைத்துக்கொண்டிருக்கலாம். ஆனால், உண்மை அதனைக் காட்டிலும் மிக மோசமானது. பொஸ்னியா, பர்மா, சிறிலங்கா என பெரும்பாலான இடங்களிலும் பாலியல் வல்லுறவு போர்த் தந்திரங்களில் ஒன்றாகப் பிரயோகிக்கப்பட்டு வருவதை நாம் காண்கிறோம். இத்தகைய கொடுமைகளை இழைப்பவர்கள் பல நாடுகளில், பல சம்பவங்களில் தண்டனையிலிருந்து தப்பித்துவிடுகிறார்கள். இவ்வாறு தொடர்ந்து அவர்களைத் தப்பிக்க விடுவதானது மேலும் வன்முறைக்கு இட்டுச் செல்கிறது.”

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனது மேற்கண்ட வாசகங்கள் இலங்கை அரச தரப்பைக் கொதித்தெழச் செய்தன. இலங்கை போன்ற, ஜனநாயகத்தை ‘கண்ணில் வைத்துப் போற்றும்’ ஒரு நாட்டை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் தனது கூற்றின் மூலம் இழிவுபடுத்திவிட்டதாக கடுஞ்சினத்தோடு குற்றஞ்சாட்டினார்கள். பின்னர் வழக்கம்போல, ‘இவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபடும் நாடுகளைப் பட்டியலிடும்போது தற்செயலாக இலங்கையின் பெயரும் இடம்பெற்றிருக்கலாம்’என்ற தற்சமாதானத்தின் மூலம் இலங்கை அரச தரப்பு தனது கொதிப்பை ஆற்ற முயன்றது. மேலும், அது தொடர்பான கடிதப் பரிமாற்றங்களின்போது, ‘2006-2009க்கும் இடைப்பட்ட காலத்தில் அவ்வாறான குற்றச்செயல்கள் இடம்பெற்றதாக அறியவில்லை’என்ற குளிர்ந்த வார்த்தைகளை அமெரிக்கத் தரப்பிடமிருந்து பெற்றதனோடு அடங்கினார்கள்.

ஆனால், ‘இலங்கை அரச படைகள் தமிழ்ப் பெண்கள் மீது பாலியல் வன்கொடுமைகள் எதையும் இழைக்கவில்லை; அமெரிக்காவும் ஐரோப்பாவின் சில ஊடகங்களும் மனிதவுரிமை அமைப்புகளும் தேவையற்ற குற்றச்சாட்டுகள் மூலம் இலங்கை போன்ற உன்னத தேசத்தின் மீது அவதூறுகளை அள்ளி வீசுகிறார்கள்’ என்ற வார்த்தைகளை, அதைச் சொல்லும் சிங்கள மேலாதிக்கமே நம்பவில்லை என்பதுதான் உண்மை.
விடுதலைப் புலிகளுடனான போர் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பாகவே இத்தகைய காடைத்தனத்தை இலங்கையின் அரச படைகள் கட்டவிழ்த்துவிட்டிருந்தன. 1958, 1971, 1983 எனத் தொடர்ந்த இனக்கலவரங்களின்போது தமிழ்ப் பெண்களிடம் தனது ‘ஆண்மை’யை நிரூபித்து வந்திருக்கிறது சிங்கள மேலாதிக்கம்.

‘பயங்கரவாதத்திற்கெதிரான போர்’ என்ற அனுமதிச்சீட்டின் மூலமாக எந்தவொரு அத்துமீறலுக்கும் அரசாங்கங்களால் துணிய முடிகிறது. ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும், காஷ்மீரிலும், பொஸ்னியாவிலும், ருவாண்டாவிலும் கெயிட்டியிலும் கிழக்குத் திமோரிலும் என எங்கெங்கும் இருக்கும் பெண்கள், அரச மற்றும் அமைதிப் படைகளின் வக்கிரங்களுக்குப் பலியானதும் தொடர்ந்து பலியாகி வருவதும் அந்த அனுமதிச் சீட்டின் மூலமாகவே. ருவாண்டாவில் ஏறத்தாழ ஐந்து இலட்சம் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக செஞ்சிலுவைச் சங்க அறிக்கை கூறுகிறது. 1990இல் 5000 குவைத் பெண்கள் ஈராக்கியத் துருப்புகளால் வல்லுறவுக்காளாக்கப்பட்டனர்.  ஈராக்கை ஆக்கிரமித்த அமெரிக்க இராணுவம் அதே சூறையாடலை ஈராக்கியப் பெண்கள் மீது நிகழ்த்தியது. பொஸ்னியப் பெண்களைச் சிறைப்பிடித்து அடைத்துவைத்து வல்லுறவுக்கு உட்படுத்தி கர்ப்பந்தரிக்கச் செய்தபிற்பாடு சேர்பிய இராணுவம் சொன்னது: ‘இனக்கலப்பு செய்தாயிற்று. பொஸ்னியர்களின் தூய்மையைக் கெடுத்துவிட்டோம்’. இலங்கை-இந்திய ஒப்பந்தத்தினையடுத்து, அமைதிப் படை என்ற பெயரில் ஈழத்தில் கால்பதித்த இந்திய இராணுவம் ஏறத்தாழ எட்டாயிரம் தமிழ்ப்பெண்களை தனது பாலியல் வெறிக்குப் பலியாக்கியிருக்கிறது. உலகெங்கிலும் பெண்ணுடல்களில் களமாடித் தங்கள் கொடியை ஊன்றியவர்கள் விருதுகளாலும் பதக்கங்களாலும் கௌரவிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

ஐக்கிய நாடுகள் சபையின், மனித உரிமைகளுக்கான- பாலியல் வதைகளுக்கெதிரான பெண்கள் அமைப்பு கீழ்க்கண்டவாறு கூறியிருக்கிறது.
“சராசரியாக, இரண்டு வாரங்களுக்கு ஒரு தமிழ்ப் பெண் இலங்கைப் பாதுகாப்புப் படையினரால் வல்லுறவுக்குட்படுத்தப்படுகிறாள். உண்மையான எண்ணிக்கை அதனிலும் அதிகமாக இருக்கலாம். ஆனால், பெரும்பாலான வல்லுறவுகள் அச்சம் காரணமாக வெளியிடப்படுவதில்லை. இரண்டு மாதங்களுக்கு ஒரு தமிழ்ப் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுக் கொலை செய்யப்படுகிறாள்.”

1996ஆம் ஆண்டு மட்டும் 150 தமிழ்ப் பெண்கள் இலங்கையின் பாதுகாப்புப் படையினரால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டதாக ‘சவுத் சைனா மோர்னிங் போஸ்ட்’என்ற பத்திரிகை ஜனவரி, 1997 இல் செய்தி வெளியிட்டிருந்தது.

‘இலங்கையில் வாழும் தமிழ் மக்களும் இந்நாட்டின் குடிமக்களே’என்று தொடர்ந்து அழுத்திச் சொல்லிவருகிறது இலங்கை அரசு. மேலும், தன்னுடைய இராணுவத்தின் கட்டுப்பாடு, கடமையுணர்வு, தேசாபிமானம் குறித்தெல்லாம் உலக அரங்கில் பெருந்தன்மை பொங்கிப் பிரவகிக்கப் பேசி வருகிறது. மனிதவுரிமை அமைப்புகளோ பாதிக்கப்பட்டவர்களுக்குத் தொடர்புடைய எவருமோ முறைப்பாடு செய்யும் வேளைகளில், ‘இது விடுதலைப் புலி ஆதரவாளர்களின் பொய்ப்பிரச்சாரம்’என்று ஒரேயடியாக மறுத்துவிடுகிறது. அல்லது, விசாரணை என்ற பெயரில் ஒரு கண்துடைப்பு நாடகத்தை நடத்த முயல்கிறது. மறுக்கவியலாத ஆதாரங்களோடு முன்வைத்தால், ‘நீ மட்டும் ஒழுங்கோ…?’என்ற அடாவடித்தனமான கேள்விகளோடு குற்றச்சாட்டுக்களைப் புறந்தள்ளுகிறது. இலங்கையில் நிகழ்ந்தேறிய பல்லாயிரக் கணக்கான பாலியல் வன்கொடுமைகள் வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்படாமல் அதிகாரங்களால் மறைக்கப்பட்டுவிட்டன. ஆனாலும், அத்தகைய எத்தனங்களையும் மீறி வெளிவந்த சில கொடூர சம்பவங்கள் நெஞ்சை அதிர வைப்பனவாக இருக்கின்றன.

ஆகஸ்ட் 7, 1996 - கிருஷாந்தி குமாரசாமி 18 வயதே ஆன, எதிர்காலம் பற்றிய கனவுகள் நிறைந்திருந்த பள்ளி மாணவி. கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் முதல் அமர்வை நிறைவுசெய்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த கிருஷாந்தியை யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலிலுள்ள கைதடி விசாரணைச் சாவடியில் இருந்த சிப்பாய்கள் விசாரணைக்கென்று கூறி உள்ளே அழைத்துச் சென்றார்கள். அந்தச் சம்பவத்தை வீதி வழியே சென்றுகொண்டிருந்த சிலர் அவதானித்திருக்கிறார்கள். நேரம் கடந்தும் வீடு திரும்பாத கிருஷாந்தியைத் தேடி அவரது தாயார் ராசம்மா, கிருஷாந்தியின் தம்பி பிரணவன், குடும்ப நண்பர் கிருபாமூர்த்தி மூவரும் போயிருக்கிறார்கள். அவர்களும் திரும்பி வரவில்லை. 45 நாட்களின் பின் கிருஷாந்தி உட்பட நால்வரது உடல்களும் இராணுவ முகாமின் எல்லைக்குட்பட்டிருந்த செம்மணியிலிருந்து சிதைந்த நிலையில் மீட்கப்பட்டன.
மனிதவுரிமை அமைப்புகளின் போராட்டங்கள், தமிழ் அரசியல்வாதிகள்-உறவினர்களின் (செல்வாக்கு உள்ளவர்கள்) பகீரதப் பிரயத்தனத்தின் பின் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்கள். குற்றஞ்சாட்டப்பட்டவர்களுள் ஒருவனான கோப்ரல் தேவகே சோமரட்ண ராஜபக்சே என்பவன் தனது வாக்குமூலத்தில் கீழ்வருமாறு சொல்கிறான்:

“எங்களில் ஆறாவது நபர் கிருஷாந்தியோடு வல்லுறவு கொள்ள முயன்றபோது தனக்கு ஐந்து நிமிடங்கள் இடைவெளி அளிக்குமாறு கெஞ்சினாள். மேலும், தண்ணீர் தருமாறு விடாமல் கெஞ்சிக்கொண்டிருந்தாள். நாங்கள் அவளுக்குத் தண்ணீர் கொடுக்கவில்லை.”

சோமரட்ண ராஜபக்சேயின் ஒப்புதல் வாக்குமூலம் ‘செம்மணி புதைகுழி’என பின்னர் அழைக்கப்பட்ட பாரிய புதைகுழிக்கு இட்டுச் சென்றது. அங்கே ஏறத்தாழ நானூறு தமிழர்களது உடல்கள் புதைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பல்வேறு காலகட்டங்களில் அரச படையினரால் கைது செய்யப்பட்டு காணாமல் போனதாகச் சொல்லப்பட்டவர்களே அவர்கள். அவர்களது உடல்கள் சித்திரவதைகளால் சிதைந்து போயிருந்தன. கிருஷாந்தியினதும் அவரது சகோதரனதும் உடல்கள் சிறு சிறு துண்டுகளாக வெட்டப்பட்டு கறுப்பு பிளாஸ்டிக் பைகளில் சுற்றப்பட்டிருந்தது. தாயினதும், குடும்ப நண்பரதும் கழுத்துகளிலும் உடலிலும் கயிறு இறுக்கப்பட்டிருந்தது. இறுதிக் கிரியைகளுக்காக கொழும்புக்குக் கொண்டு செல்லப்பட்ட உடல்கள், இரண்டு மணி நேரத்துக்குள் தகனம் செய்யப்பட்டுவிட வேண்டும் என அரச தரப்பினரால் உறவினர்கள் அச்சுறுத்தப்பட்டனர்.
கிருஷாந்தியின் வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட ஆறு பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. பின்னர் அது நிறைவேற்றப்படவில்லையாயினும், தன்னை உலக அரங்கில் நீதியின் பாதுகாவலனாக நிலைநிறுத்துவதற்கு அந்தத் தீர்ப்பை இன்றுவரை இலங்கை அரசு பயன்படுத்திவருகிறது.

“வீண் அவதூறை அள்ளிச் சொரிகிறார்கள்”என்று கண்கசக்கும் பேரினவாதிகளும் கிருஷாந்திக்கு இழைக்கப்பட்ட கொடுமையை அறிந்தே இருக்கிறார்கள். இந்த வழக்கு அதிர்ச்சி தரும் வகையில் மனிதப் புதைகுழிகளுக்கு இட்டுச் சென்றதானது, தடயங்களை துடைத்தழித்து குற்றங்களிலிருந்து தப்பிக்கும் பாடத்தை அவர்களுக்குக் கற்பித்தது.
இறந்தகாலம் கற்பித்த, தடயம் அழிக்கும் உத்தியை, காவற்துறையினர் கோணேஸ்வரி படுகொலையில் பிரயோகித்தார்கள். 

கோணேஸ்வரி முருகேசப்பிள்ளை என்ற 35 வயதான, நான்கு குழந்தைகளுக்குத் தாயான பெண், 1997 மே 17ஆம் திகதியன்று அம்பாறை மாவட்டத்திலிருந்து ‘சென்றல் காம்ப் கொலனி’யிலிருந்த பொலிசாரால் இரவு பதினொரு மணியளவில் கொடூரமான முறையில் கூட்டுப் பலாத்காரத்திற்குட்படுத்தப்பட்டபின் கொல்லப்பட்டார். நான்கு வயதான மகள் மட்டுமே அந்தக் கொடூர நிகழ்வுக்குச் சாட்சியாக இருந்தாள். அவரது ஏனைய மூன்று பிள்ளைகளும் உறவினர் ஒருவரது வீட்டுக்குச் சென்றிருந்தார்கள். கோணேஸ்வரி கொலை செய்யப்பட்ட விதம் ‘கசாப்புக்கடைத்தனமானது’என்று மனிதவுரிமை அமைப்புகளால் பதிவுசெய்யப்பட்டது. கோணேஸ்வரியின் பிறப்புறுப்பினுள் கைக்குண்டு ஒன்றைத் திணித்து அதை வெடிக்கவைத்து வல்லுறவின் தடயங்களை அழித்திருந்தார்கள் இலங்கையின் காவற்துறையைச் சேர்ந்த அந்த நான்கு பேரும்.

28 டிசம்பர், 1999 இல் யாழ்ப்பாணம் புங்குடுதீவில் சாரதாம்பாள் சரவணபவானந்தக் குருக்கள் என்ற 29 வயதான பெண் (ஒரு பெண் குழந்தைக்குத் தாய்)அவரது வீட்டிலிருந்து கடத்திச் செல்லப்பட்டுக் கொல்லப்பட்டார். சாரதாம்பாளின் தந்தையையும் சகோதரரையும் கட்டிப் போட்டுவிட்டு அவரைத் தூக்கிச் சென்றவர்கள் புங்குடுதீவில் நிலைகொண்டிருந்த கடற்படையினரே. மறுநாட் காலை அந்தப் பெண்ணின் உயிரும் ஆடையுமற்ற உடல் புதர்களால் மூடியிருக்கக் கண்டுபிடிக்கப்பட்டது. அந்தக் கொடூர சம்பவத்தைக் கண்டித்து நாடளாவிய ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. விசாரணை நடத்த அழுத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அந்தச் சம்பவத்தோடு தொடர்புடைய குற்றவாளிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டு ‘நீதி’நிலைநாட்டப்பட்டது.

2001ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி சிவரஜனி, விமலாதேவி என்ற இரண்டு பெண்கள் அவர்கள் தங்கியிருந்த விடுதியில் வைத்து பொலிசாராலும் அந்த விடுதியின் ஊழியர்களாலும் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். முறைப்பாட்டைப் பதிவு செய்யச் சென்றபோது அவர்கள் வேசிகளெனத் தூற்றப்பட்டிருக்கிறார்கள்.
அதேபோலவே, குண்டு வைத்திருப்பதாகக் கூறி ஒரு பெண் நடுவீதியில் மக்கள் பார்த்திருக்கத் துகிலுரியப்பட்டார். (விசாரணையின் பிறகு அவர் ஒரு சிங்களப் பெண் என்பது தெரியவந்தது.) அவர் குண்டு வைத்திருக்கவில்லையென அறிந்தவுடன் அவரையும் வேசியாக்கிவிட்டனர். அதாவது, பாதுகாப்புப் படையினரை நிரபராதிகளாக்க வேண்டி சம்பந்தப்பட்ட பெண்களை வேசிகளாக்கினர். கவனிக்கவும்… அவர்கள் பாலியல் தொழிலாளர்களுமல்லர்; வேசிகள்! வேசிகள், பயங்கரவாதிகள் போன்றவர்கள் தண்டிக்கப்படவேண்டியவர்கள் என்ற  பொதுப்புத்தியை அவர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள். கோணேஸ்வரி, ஐடா கமாலிற்றா, சிவமணி, விஜிகலா கூட குற்றவாளிகளால் மறைமுகமாக அவ்வாறு பழிசுமத்தப்பட்டவர்களே.

இலங்கை போன்றதொரு நாட்டின் நீதிமன்றங்களும் அரசுசார்ந்த குற்றவாளிகளைக் காப்பாற்ற வேண்டிய கடப்பாடுடையனவாக இருக்கின்றன. காரணம், அவர்கள் அரச இயந்திரத்தின் சக்கரங்கள். அவர்கள் மீது முற்று முழுதான குற்றஞ்சாட்டுதல்களைச் சுமத்தும்போது அரசும் அந்தக் குற்றத்திற்குப் பொறுப்பேற்க வேண்டியிருக்கிறது. அதனால், குற்றவாளிகளை ஜாமீனில் விடுவித்துவிடுகிறார்கள். அல்லது, வழக்குகளை இழுத்தடிப்பதன் வழியாக சம்பந்தப்பட்டவர்களை சலிப்படையவும் பின்வாங்கவும் செய்துவிடுகிறார்கள். சாட்சிகள் மௌனமாக இருக்கும்படி மிரட்டப்படுகின்றனர். நாட்டை விட்டு வெளியேறும்படியாக அதிகாரங்களால் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். அல்லது குற்றவாளிகள் இடமாற்றம் செய்யப்பட்டுவிடுகிறார்கள். அதாவது, பாலியல் குற்றத்தில் ஈடுபடக்கூடிய ஒரு புதிய இடம் அவர்களுக்கு அருளப்பட்டுவிடுகிறது.

2005ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் திகதியன்று, தர்ஷினி இளையதம்பி என்ற 20 வயதான இளம்பெண், புங்குடுதீவில் நிலைகொண்டிருந்த கடற்படையினரால் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வல்லுறவுக்காளாக்கப்பட்டபின் கடற்படை முகாமுக்கு அருகிலிருந்த பாழடைந்த கிணறொன்றினுள் சடலமாகப் போடப்பட்டிருந்தார். கொல்லப்படுவதன் முன், அவர் பலரால் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டிருப்பதற்கான தடயங்களை அவரது உடல் கொண்டிருந்ததாக வைத்தியசாலைச் சான்றிதழ் கூறுகிறது. உடலின் பல இடங்களில் நகக்கீறல்கள், பற்கடிகளும் காணப்பட்டிருந்ததுடன், அவரது ஒரு மார்பு மிக மோசமாகச் சிதைக்கப்பட்டிருந்தது. தர்ஷினியின் கொலைக்குக் காரணமானவர்களைத் தண்டிக்கும்படி கடற்படை முகாமை முற்றுகையிட்டு மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். வழக்கம்போலவே விசாரணைகள் இழுத்தடிக்கப்பட்டன.

2006ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8ஆம் திகதி, மன்னார் மாவட்டத்தின் வங்காலை என்ற இடத்தில் நடந்தேறிய கொடூரம் மனிதநேயமுள்ள எவராலும் மறக்கப்படக் கூடியதன்று. அந்தக் குடும்பத்தின் நான்கு உறுப்பினர்களும் (மேரி மெற்றலின் - மூர்த்தி மார்ட்டின், அவர்களது 9 வயதான மகள் லக்ஷிகா, 7 வயதான மகன் டிலக்ஷன் ஆகியோர் கொடூரமான முறையில் உளியாலும் துப்பாக்கியின் பின்புறமுள்ள கூர்முனையாலும் குத்திக் கொலை செய்யப்பட்டிருந்தார்கள். தாயைத் தவிர ஏனைய மூவரும் வெட்டுக் காயங்களுடன் கழுத்தில் சுருக்கிட்டுத் தொங்கவிடப்பட்டிருந்தனர். மேரி மெற்றலின் பிறப்புறுப்பிலிருந்து இரத்தம் பெருகிய நிலையில் நிலத்தில் விழுந்து கிடந்தார். 9 வயதான லக்ஷிகாவும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருந்தார். அன்று காலையில் தேடுதல் சோதனை நடத்த வந்த இராணுவத்தினரே அந்தக் குரூரமான கொலைகளைச் செய்தவர்களென அந்தக் கிராமத்தினர் சாட்சியமளித்தனர்.

மேற்குறிப்பிடப்பட்டுள்ள சம்பவங்கள் சில உதாரணங்களே. வெளிவந்தவை சில ஆயிரம். வெளிவராதவை பல்லாயிரம்.
‘ஆயிரத்தில் ஒரு சம்பவம் மட்டுமே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதாக அல்லது கவனத்திற்குக்  கொண்டுவரப்படுவதாக’மனிதவுரிமை அமைப்புகள் கூறுகின்றன.
பாதுகாப்புப் (?) படைகளால் பாலியல் வதைக்கு ஆளாக்கப்பட்டு அதிர்ஷ்டவசமாக உயிருடன் விடப்படும் பெண்களுக்கு எச்சரிக்கைகள் விடுக்கப்படுகின்றன. ‘உனக்கு நேர்ந்ததை வெளியில் சொன்னால் உன்னையும் உன் குடும்பத்தையும் கொன்றுவிடுவோம்’என்று மிரட்டப்படுகிறார்கள். ஆகவே, தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை உள்ளுக்குள் வைத்து மறுகியபடி காலமெல்லாம் கொடுங்கனவுகளால் துரத்தப்படுபவர்களாகவே பெரும்பாலான பெண்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

புஷ்பமலர் (கச்சாய்), பாலேஸ்வரி (கெருடாவில்), வாசுகி (யாழ்ப்பாணம்), தனலட்சுமி (கிளிவெட்டி, மூதூர்), லெட்சுமிப்பிள்ளை (திருகோணமலை-மகன்களுக்கு முன்னால் வைத்து வதையும் வல்லுறவும்) சிறீறஞ்சனி, புவனேஸ்வரி, இராஜேஸ்வரி (சரசாலை, தாய்-மகள்-சிறிய தாய் உறவு), சந்திரகலா கிருஷ்ணபிள்ளை (அளவை),  கணபதிப்பிள்ளை சொர்ணம்மா (கல்குடா), தேனுகா (10 வயது, பத்தமேனி, அச்சுவேலி), சிவசோதி (மண்டூர்), வனிதா (மயிலம்பாவெளி), நவமணி, ஜெயந்தி, மேகலா (ஜெயந்தியும் மேகலாவும் நவமணியின் மகள்கள் - தியாவெட்டுவான்), நூர் லெப்பை சித்தி உம்மா (ஓட்டமாவடி), அலி முஹம்மத் அதாபியா(ஏறாவூர்), காளிக்குட்டி ராகினி (பனிச்சங்கேணி), கிருபாதேவி (மட்டுவில் வடக்கு), விஜயராணி (அராலி), புவனேஸ்வரி (மந்துவில்-உறவினர் மூவர் கொலை செய்யப்பட்டபின்பு வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டவர்), நாகலிங்கம் பவானி (திருநெல்வேலி), சின்னப்பு பாக்கியம் (மாவடிவேம்பு), ரஜனி (வாழைச்சேனை), பாலந்தி (6 வயது, அச்சுவேலி), பிறேமினி தனுஷ்கோடி, ரஜனி வேலாயுதப்பிள்ளை (உரும்பிராய்), தங்கநாயகி (அம்பாறை), சந்திரகலா (அல்வாய்), யோகலிங்கம் விஜிதா(நீர்கொழும்பு), சியாமளா (பளை), அமுதா (விடத்தல்தீவு, மன்னார்), சவரி மெடலின் (சொறிக்கல்முனை), ஐடா கமாலிற்றா (பள்ளிமுனை, மன்னார்), செல்வராணி (மீசாலை), அஜந்தனா (அரியாலை), ரஜனி (பனிச்சங்கேணி), பவானி (திருநெல்வேலி), விஜயலட்சுமி (கல்மடு, வாழைச்சேனை), ஆனந்தி (செட்டிப்பாளையம்).
மேற்குறிப்பிடப்பட்டுள்ளவை இலங்கை அரச படைகளால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட சிலரது பெயர்கள். அவர்களுள் கொல்லப்பட்டவர்களும் ‘கருணை கூர்ந்து’தப்ப விடப்பட்டவர்களும் உள்ளடங்குவர்.


கொலைபடு களத்தில் வீழ்ந்தவர்கள் இலக்கங்களாக்கப்பட்டு விடுதல் போல, பாலியல் வெறிக்குப் பலியானவர்கள் காலவோட்டத்தில் வெறும் பெயர்களும் சம்பவங்களும் ஆக்கப்பட்டுவிட்டனர்.

மெல்லிய சோகம் கலந்த நீண்ட கண்களும் அழகான தமிழ் உச்சரிப்பும் கொண்ட இசைப்பிரியாவை விடுதலைப் புலிகளின் ‘நிதர்சனம்’தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பல ஆண்டுகளுக்கு முன்பு பார்த்திருக்கிறேன். அவர் ஊடகம் மற்றும் தொடர்பாடல் பிரிவைச் சேர்ந்தவர் எனவும், இசை, நடனம், நடிப்புத்திறன் என பல்வகை படைப்பாளுமைகளும் கொண்ட பெண் எனவும் பின்னர் அறியக்கிடைத்தது. 2009 மே மாத பேரழிவிற்குப் பிறகு வெளியிடப்பட்ட காணொளி ஒன்றில், கைகள் பின்னுக்குக் கட்டப்பட்டு, முகம் சிதைக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்ட தடயங்களோடு உயிரற்றுக் கிடந்த இசைப்பிரியாவின் உடலை உலகம் பார்த்தது. இசைப்பிரியா பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு, கொல்லப்பட்டதாக செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.
“இலங்கை அரசு மீதான சுயாதீன போர்க்குற்ற விசாரணைக்கான கோரிக்கை வலுப்பெறும் வகையில் நாம் வெளியிட்டுள்ள காணொளிக் காட்சி அமைந்துள்ளது”என்று முதன்முறையாக அந்தக் காணொளியை வெளியிட்ட பிரித்தானிய தொலைக்காட்சி நிலையமாகிய ‘சானல் 4’அறிவித்தது.
ஆனால், வழக்கம்போல, தனது பழக்கப்பட்ட ‘கனவான்’ வார்த்தைகளால் இலங்கை அரசாங்கம் அந்தக் குற்றச்சாட்டையும் மறுத்திருக்கிறது. இசைப்பிரியா அரசுக்கெதிரான போர் நடவடிக்கையில் கொல்லப்பட்டதாக அது கூறுகிறது. ‘அவ்வாறெனில், கைகள் பின்புறம் கட்டப்பட்டிருப்பது எதனால்?’என்ற கேள்விக்கு அதனிடம் பதில் இல்லை.

2009ஆம் ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்காலில் நடந்து முடிந்த பேரனர்த்தத்தின் பிற்பாடு காயங்களோடு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்களில் பலர் பாலியல் வல்லுறவுக்காளாக்கப்பட்டிருந்த நிலையில் இருந்ததாக அங்கு அவ்வேளையில் கடமையாற்றிய வைத்தியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

 ‘விடுதலைப் புலிகளிடமிருந்து தமிழ் மக்களை மீட்டுவிட்டோம்’என்ற ஆரவாரத்தோடு, இலட்சக்கணக்கான மக்களை விலங்குகளைப் போன்று- சுகாதார, உணவு, குடிநீர், இடவசதி அற்ற தடுப்புமுகாம்களில் அடைத்துவைத்திருந்தது இலங்கை அரசாங்கம். அவை பெயருக்குத்தான் தடுப்புமுகாம்களாக இருந்தனவேயன்றி, உண்மையில் அவை எஞ்சிய விடுதலைப் புலிகளை வடிகட்டுவதற்கான வதைமுகாம்களாகவே அமைந்திருந்தன. இன்னமும்கூட பல்லாயிரக்கணக்கான மக்கள், மீள்குடியேற்றப்படாமல், அடிப்படை வசதிகள் ஏதுமற்ற தடுப்புமுகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருக்கிறார்கள்.

வவுனியாவின் தடுப்பு முகாமொன்றில் பணியாற்றிய ஒருவரின் வாக்குமூலம் இது:

“முகாமிலிருந்த பல பெண்கள் இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டார்கள். அவர்கள் திரும்பி வரவேயில்லை. நான் இருந்த முகாமில், குளிக்கும் இடத்திற்கு அருகில் நான்கு பேரின் சடலங்களை நாங்கள் பார்த்தோம். அவர்களில் மூவர் பெண்கள். அவர்கள் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம். அங்குள்ள அதிகாரிகளிடம் நாங்கள் கேள்விகள் எதையும் கேட்க அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை. நாங்கள் மௌனமாக அந்தச் சடலங்களைக் கடந்து சென்றோம்.”

முன்னாள் போராளிகள் மற்றும் விடுதலைப் புலி ஆதரவாளர்கள் என்று அடையாளம் காணப்பட்ட ஆயிரக்கணக்கான பெண்கள்  தனியாகப் பிரித்தெடுக்கப்பட்டு வாகனங்களில் ஏற்றி, தென்பகுதியிலுள்ள புனர்வாழ்வு முகாம்கள் என்று சொல்லப்பட்ட வதைமுகாம்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டார்கள். அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்த விபரங்கள் ஏதும் அறியப்படவில்லை. அவர்களுட் சிலர் அரசாங்கத்தின் கருணையால் ‘புனர்வாழ்வு’ அளிக்கப்பட்டு மீள்குடியேற்றப் பகுதிகளுக்குத் திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார்கள். அத்தகையோருக்கு எந்தவொரு வாழ்வாதாரமும் இல்லை. இறந்தகாலத்தின் கொடுங்கனவுகளோடும் வறுமையோடும் ஏதிலிகளாக வாழ விதிக்கப்பட்டவர்களாயினர்.

மீள்குடியேற்றத்திற்குப் பிறகும் பெண்கள் மீதான பாலியல் வன்முறை தொடர்கிறது. பெரும்பாலான ஆண்கள் போருக்குப் பலியாகிவிட்டார்கள். பெரும் எண்ணிக்கையானவர்கள் காணாமற் போய்விட்டார்கள். மேலும் பலர் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்நிலையில், தனியாக விடப்பட்ட பெண்கள் அரசபடைகளின் பாலியல் துன்புறுத்தல்களுக்கு தொடர்ந்து ஆளாகிவருகின்றனர்.
மீள்குடியேற்றம், புனர்வாழ்வு இன்னபிற சொற்கள் ஈழமண்ணைப் பொறுத்தமட்டில் தம்மளவில் பொருளுடையவை அன்று. அல்லது அபத்தமானவை. மேற்கண்டவர்களில் பலர் சித்தம் கலங்கிப் பேதலித்த நிலையில் வாழ்ந்து வருகின்றனர். 

பாலியல் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு உயிரோடு விடப்பட்டவர்களின் மனதில் மீண்டும் மீண்டும் அந்தக் கொடூர சம்பவம் நிகழ்த்திப் பார்க்கப்படுவதாக உளவியலாளர்கள் கூறுகின்றனர். பாதிக்கப்பட்டவர்களால் ஆழ்ந்த தூக்கத்திற்குச் செல்லவே முடிவதில்லை என்றும் அந்த மனவுளைச்சலையும் மீறி உறங்க நேர்கையில் தாம் துன்புறுத்தப்பட்ட, இழிவுசெய்யப்பட்ட, மரணத்திற்கு நெருக்கமாகக் கொண்டுசெல்லப்பட்ட சம்பவம் துர்க்கனவுகளாகத் தோன்றி நடு இரவுகளில் விழித்தெழத் தூண்டி விடுவதாகவும் சொல்கிறார்கள். பாலியல் வதையை எதிர்கொண்ட பலர் ஆழ்ந்த மௌனத்துக்குள் புதைந்து போய்விடுகிறார்கள். அவ்வாறு, சமூக மதிப்பில் தாழ்ந்துபோய்விடுவேனோ என்று அஞ்சி, தனக்கு நடந்ததை மற்றவர்களிடம் சொல்லாது மௌனத்துள் ஆழ்ந்திருந்த பெண்களில் பலர் தற்கொலையில், புத்தி சுவாதீனமிழப்பில் முடிந்திருக்கிறார்கள் என்பதற்கான உதாரணங்களை ஈழத்திலும் காணலாம்.

“நான் எனது கணவருடன் வாழும் தகுதியிலிருந்து இறங்கிவிட்டேனோ என்று அஞ்சுகிறேன்.”என்று, பாதிக்கப்பட்ட பல பெண்கள் உளவியலாளர்களிடம் தெரிவித்திருக்கின்றனர்.

முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின் பல பெண்களும் இளைஞர்களும் நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள். இந்நிலையில், பிரித்தானியாவில் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றும் ஒருவர் கீழ்க்கண்டவாறு தெரிவித்திருக்கிறார்.

“யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழ்ப் பெண்கள் இரவில் தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து அலறுகிறார்கள். சிலரது பிறப்புறுப்புகளில் சிகரெட்டால் சுடப்பட்ட காயங்கள் இருக்கின்றன. சிலர் எவரையும் (ஆண்களோ பெண்களோ) அருகில் நெருங்க விடுவதில்லை. அருகில் போனால் பயந்துபோய் உரத்த குரலில் கூச்சலிடுகிறார்கள். துர்நினைவுகள் அவர்களைத் துரத்துகின்றன. என்னிடம் பேசிய ஒரு பெண், 18 மாதங்களாகத் தொடர்ந்து தன்னை இராணுவத்தினர் பாலியல் வதைகளுக்குட்படுத்தி வந்துள்ளதாகச் சொன்னார். இந்த விடயத்தை வெளியில் சொன்னால் அவரைக் கொன்றுவிடுவதாக மிரட்டியிருக்கிறார்கள்.”

போரில் கடைப்பிடிக்கப்படவேண்டிய சில அறங்கள், விதிமுறைகள் உள்ளன. போர்க்கைதிகளாகச் சிறைப்பிடிக்கப்பட்டவர்களது மனிதாபிமான உரிமைகள் பற்றிய விளக்கப் பகுதியில், நான்காவது ஜெனிவா உடன்படிக்கையில் (27வது ஆவணம்) கீழ்க்கண்டவாறு கூறப்பட்டிருக்கிறது.

“போரில் சிறைப்பிடிக்கப்பட்ட பெண்கள், அவர்களது கௌரவத்திற்கு எதிரான நடவடிக்கைகள் குறிப்பாக பாலியல் வல்லுறவு, வலுக்கட்டாயமான விபச்சாரம் மற்றும் சுயமதிப்புக்குப் பங்கம் விளைவிக்கக்கூடிய எந்தவொரு தாக்குதல்களிலிருந்தும் பாதுகாக்கப்பட வேண்டும்.”

விடுதலைப் புலிகள் அமைப்பைச் சார்ந்த பெண் போராளி ஒருவர் சொல்வதைக் கேளுங்கள்:
“உயிரற்ற சக பெண்போராளியின் உடலை எதிரி கையகப்படுத்த விட்டுச் செல்வது மிகவும் அபாயகரமானது. முடிந்தவரையில், எனது உயிரைப் பணயம் வைத்தேனும் நான் களத்திலிருந்து அந்த உடலைத் தூக்கிச் செல்லவே முயல்வேன். காரணம், அந்த உடல் எவ்விதம் இழிவுசெய்யப்படும் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம்.”

மேற்குறிப்பிடப்படும் வார்த்தைகளை இணையத்தில் காணக் கிடைக்கிற காணொளிகளோடு நாம் பொருத்திப் பார்க்கலாம். கோணேஸ்வரி போன்ற பெண்களது பிறப்புறுப்புகளே கைக்குண்டுகளால் சிதறடிக்கப்படும்போது, பெண் போராளிகள் எத்தகைய சித்திரவதைகளுக்கு ஆளாகியிருப்பார்கள் என்பது கற்பனைக்கு அப்பாற்பட்டதும் கலங்கடிப்பதுமாகும். போரில் காயம்பட்ட காரணத்தால் அங்கிருந்து தப்பிச் செல்ல முடியாமல் போன பெண் போராளிகள் சிலரது தலைகள் மண்வெட்டிகளால் துண்டிக்கப்பட்டிருக்கின்றன. குற்றுயிராகக் கிடந்த அவர்களை இலங்கை இராணுவம் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கியும் பிறப்புறுப்புகளில் துப்பாக்கியால் சுட்டும் கொன்றிருக்கிறது. ஆடைகள் அகற்றப்பட்ட உடல்களில் மறைவிடங்கள் குதறப்பட்டிருக்கின்றன. உதடுகள் துண்டாடப்பட்டிருக்கின்றன. மார்புகள் கடிக்கப்பட்டும் அரியப்பட்டுமிருக்கின்றன. பாலுறுப்புகளுள் போத்தல்களும் கம்பிகளும் செலுத்தி குடையப்பட்டிருக்கின்றன. நிர்வாணமான உடல்களை இராணுவத்தினர் கால்களால் உதைத்துக் களிகூரும் காட்சிகளைக் காணும்போதில், போராளிகளின் அந்தரங்கப் பகுதிகளைப் பற்றி ஆபாசமான வார்த்தைகள் பரிமாறிக் கொள்ளப்படுவதைக் கேட்கும்போதில், இறந்துபோன மிருகங்களின் உடல்களுக்கு அளிக்கப்படும் மரியாதை கூட மறுக்கப்படும்போதில், ‘இக்கணமே இவ்வுலகம் வெடித்துச் சாம்பலாகி விடக்கூடாதா?’என்று சபிக்கவே தோன்றுகிறது.

சமூகத்தின் பாரபட்சமான கண்களில் பெண் என்பவள் ஏற்கெனவே இரண்டாவது பிரஜையாகவே பார்க்கப்பட்டு வருகிறாள். ஒப்பீட்டளவில் ஆணுக்குள்ள சமூக மதிப்பு அவளுக்குக் கிடைப்பதில்லை. பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட பெண் மேலும் ஒரு படி சமூகத்தின் கண்களில் இறங்கிவிடுகிறாள். சமூகத்தின் கண்களில் அவள் ‘களங்கப்பட்டவள்’. ஆகவே, பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்தப்பட்டதை வெளிப்படுத்துவதற்குத் தயங்குகிறாள். சில விதிவிலக்குகள் தவிர்த்து குடும்ப உறுப்பினர்களும் அவ்வாறான வெளிப்படுத்தலை அவமானமாகவே கருதுகிறார்கள். காலகாலமாகக் கட்டி வளர்க்கப்பட்ட கலாச்சார மதிப்பீடுகளிலிருந்து சரிந்துவிடுவோமோ என அவர்கள் அஞ்சுகிறார்கள்.

ஒரு இனத்தை இழிவுசெய்ய நினைக்கும் எதிரிகளுக்கு எளிய கருவியாக அமைந்துவிடுகிறது பெண்ணுடல். அதிலும், நிலத்தையும் பெண்ணையும் சொத்துடமையாகக் கருதும் சமூகத்தின் பெண்ணை வல்லுறவுக்குள்ளாக்குவதன் வழியாக அந்த இனத்தையும் அதன் ஆண்களையும் வெற்றிகொண்டுவிடுவதாக நினைக்கிறார்கள் ஆக்கிரமிப்பாளர்கள். பொஸ்னியப் பெண்களது உடல்களுள் தங்கள் வக்கிரத்தை ஊற்றியபின் சேர்பியப் படைகள் சொன்ன வார்த்தைகள் அந்த அடிப்படையிலிருந்து எழுந்தவையே. காஷ்மீர் போராளிகளது விடுதலை உணர்வை அவர்தம் பெண்ணுடல்களுள் நுழைந்ததன் வழியாக இந்திய இராணுவம் சிதைக்க முயன்றது. வியட்நாமிலும் ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் உள்ள பெண்கள் மீது களமாடிய அமெரிக்க இராணுவத்தை இயக்கியது பாலியல் வெறி மட்டுமன்று. ஒரு இனத்தின் உளவுறுதியைச் சிதைக்கும் ஆயுதமாகவும் வல்லுறவுகள் பயன்படுத்தப்படுகின்றன.

ஈழத்தமிழர்களின் ஆன்மா பேரினவாதத்தின் கொடுங்கரங்களால் நசுக்கப்பட்டுவிட்டது. அவர்கள் பேதலிப்பின் விளி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 08, 2012 09:17

April 22, 2012

நாடு கடத்தப்பட்ட சொற்கள்



உளவுக் கண்கள் பொருத்தப்பட்ட கணனிகளோடு
கண்ணிவைத்துக் காத்திருக்கிறது
விமான நிலையம்.

மழை நிறைத்த கிணற்றில்
முகம் பார்த்துக் களிக்கும் மார்கழி
இம்முறையும் எனக்கில்லை.
செவ்விளநீர் மரம் சொட்டும்
“இரண்டாம் மழை“யுமில்லை.
இங்கு இலையுதிர்காலம்
மேப்பிள் மரங்களிலிருந்து
உதிர்ந்துகொண்டிருக்கின்றன பூவரசமிலைகள்.

நிலம் குறித்த கனவுகளில் மணக்கிறது…
வல்லரக்கர்களின் சிறுநீர்
வல்லரசுகளின் எச்சில்
எனது சனங்களின் குருதி.

திரும்பவியலாத உன் தெருக்களில்எத்தனை காலந்தான்
சொற்களால் அலைந்துகொண்டிருப்பது
என்னருந் தாய்தேசமே…?


பொன்னெனச் சுடர்விடும் மணல்படர்ந்த கடற்கரைகள், கரையோரங்களில் சூரிய ஒளியில் மினுங்கும் உடல்களோடு சாய்ந்திருக்கும் உல்லாசப் பயணிகள், நட்சத்திர விடுதிகள், பணிவும் கனிவுமான புன்னகைகளுடன் விருந்தோம்பலை வாக்களிக்கும் அழகிய பெண்கள், தேயிலைத் தோட்டங்கள், பனிதுாங்கும் மலைச்சிகரங்கள், கண்சுருக்கிச் சிரிக்கும் கிராமத்துச் சிறுவர்-சிறுமியர், பளீரிடும் கீற்றுக்களை அசைத்து வா வாவென்றழைக்கும் தென்னைகள் என, இலங்கையை உல்லாசபுரியாகச் சித்தரிக்கும் புகைப்படங்கள் இணையத்தளங்களில் இறைந்துகிடக்கின்றன. வானத்தை வகிர்ந்து பறக்கும் விமானத்தின் படங்களோடு கூடிய விளம்பரங்கள் சலுகைக் கட்டணங்களை அறிவிக்கின்றன.

இலங்கை: இந்துமகா சமுத்திரத்தின் இரத்தினக் கல்!

ஈழத்தமிழர்களுக்கோ அது கடல் நடுவில் கெட்டித்துக் கிடக்கும் கண்ணீர்த்துளி! இலங்கை அரசால் உலகெங்கிலும் விளம்பரப்படுத்தப்படுவதைப்போல, அது ஒளிசிதறும் உப்பரிகையல்ல; கனவுகள் உதிர்ந்துபோனவர்களின் கல்லறை. ஒப்பனையில் பளபளக்கும் சருமத்தின் பின் ஒளிந்து கிடக்கிறது முதலைத்தோல். ‘வருக’என்றழைத்துக் குவிக்கும் கைகளின் உட்புறத்தில் படிந்திருக்கிறது குருதி.

வேற்றுநாட்டுச் சுற்றுலாப் பயணிகளைப் போல, புலம்பெயர்ந்த தமிழர்களால் அத்தனை எளிதாக அங்கு சென்றுவிட இயலாது. குறிப்பாக, இலங்கை அரசை விமர்சித்துப் பேசியவர்களால்(சிங்களவர்கள் உள்ளடங்கலாக) வெளிநாடுகளில் அதற்கெதிராக நடத்தப்பட்ட போராட்டங்களில் கலந்துகொண்டவர்களால், அதன் இருண்ட பக்கங்கள் மீது ஊடக வெளிச்சம் பாய்ச்சியவர்களால், இனப்படுகொலை குறித்து எழுதியவர்களால் அங்கு செல்லமுடியாது. சென்றால் திரும்புதல் அவரவர் அதிர்ஷ்டத்தைப் பொறுத்தது.

எவராலும் தமது வேர்களைப் பற்றிய ஞாபகத்தை அடியோடு அறுத்தெறிந்துவிட இயலாது. பிரிவு தற்காலிகமானதெனில், பொருளாதார நோக்கத்தின் பொருட்டெனில் அதைச் சகித்துக்கொள்ளவியலும். ஆனால், தாய்நிலத்திற்கு மீண்டும் திரும்பிச் செல்லவியலாதபடி புறஅழுத்தங்கள் இருக்குமாயின் அது மரணத்திற்கு நிகரானது. திரும்பிச் செல்லக்கூடிய நிலத்திற்குத் திரும்ப விரும்பாமல் இருப்பதும்- நாடு திரும்பினால் கொல்லப்படுவோம், சிறைப்பிடிக்கப்படுவோம், வந்த சுவடுமின்றிக் காணாமலடிக்கப்படுவோம் என்று பயங்கொள்ளத் துாண்டும் பேரினவாத-எதேச்சாதிகார அரசுகளால் ஆளப்படும் நாடுகளுக்குத் திரும்பிச் செல்ல முடியாமல் அந்நிய நிலங்களில் தாய்நாட்டின் நினைவுகளோடு அலைந்துழல்வதும் ஒன்றல்ல.

“எல்லோரும் போய்விட்டோம்
கதை சொல்ல யாரும் இல்லை

இப்பொழுது இருக்கிறது
காயம்பட்ட ஒரு பெருநிலம்
அதற்கு மேலாகப் பறந்துசெல்ல
எந்தப் பறவையாலும் முடியவில்லை
நாங்கள் திரும்பி வரும் வரை.”


(சேரன்- ‘நீ இப்பொழுது இறங்கும்’ ஆறு தொகுப்பு)

திரும்பி வருவோம் என்னும் நினைவோடுதான் எல்லோரும் போனார்கள்; போனோம். இன்று, “இது சிங்களவர்களின் நாடு; நீங்கள் இலங்கை அரசுக்கெதிராகப் பரப்புரை செய்தவர்கள்; தேசத்துரோகிகள்”என்கிறது பேரினவாதம். இரட்டைக் குடியுரிமை இடைநிறுத்தப்பட்டிருக்கிறது. இதுநாள்வரை வழக்கத்தில் இருந்துவந்த ‘உள்நுழைவு விசா’நடைமுறை மாற்றப்பட்டு, இணையத்தளம் மூலம் (கண்காணிக்க ஏதுவாக) விண்ணப்பிக்கும் புதிய நடைமுறை அமுலுக்கு வந்திருக்கிறது. விமான நிலையத்தில் வந்து இறங்கும் பயணிகள் உளவுக் கண்களால் கண்காணிக்கப்படுகிறார்கள். சந்தேகத்திற்குரியவர்கள் விமான நிலையத்தில் வைத்தே கைது செய்யப்படுகிறார்கள்.

‘ஓடிப் போனவர்களுக்கு தாய்நிலத்தை நினைத்து உருக என்ன தகுதி இருக்கிறது?’என்று பேசும் ஊதுகுழல்களை தமிழர்களுக்குள்ளேயே உருவாக்கி, உருவேற்றி உள்நாட்டிலும் உலகெங்கிலும் உலவ விட்டிருக்கிறது இலங்கை அரசு. அதிகாரம் நுாலிழுக்கும் திசையிலெல்லாம் வாயசைக்கக் கற்றிருக்கிறார்கள் அந்தப் பொம்மலாட்டச் சலனிகள். வல்லாதிக்கச் சக்திகளின் கூட்டுச்சதியால் ‘முடித்துவைக்கப்பட்ட’போராட்டத்திற்கு ஆதரவாகப் பேசும், எழுதும், போராடும் புலம்பெயர் தமிழர்களுக்கும், தமிழகத்திலும் உலகெங்கிலும் தமிழ்த்தேசியம் பேசுவோருக்கும் எதிரான குரலை- இணையப் பரப்புரைகளிலும், தமக்கு இசைவாகத் தாளம் போடும் ‘இள(க்)கிய’மட்டங்களிலும் இயன்றமட்டிலும் எழுப்புவதன் மூலமாகத் தமது ‘இருப்பை’த் தக்கவைத்துக்கொள்வது சிலரது அரசியலாகத் தொடர்ந்துவருகிறது. இலங்கையில் தொங்கவிடப்பட்டிருக்கும் இரும்புத் திரையை நியாயப்படுத்துவதன் வழி கிடைக்கப்பெறும் இலாபங்களுக்காக சொந்த இனத்தையே வஞ்சிக்கிறார்கள் அவர்கள். துணைக் குழுக்களின் துப்பாக்கிப் பின்பல உபயத்தில் தமது சொந்த மக்களையே பலியாடுகளாக நடத்துகிறார்கள்.

றஷீத் ஹூசைன் என்ற பாலஸ்தீனியக் கவிஞனின் வரிகள் மேற்குறிப்பிடப்பட்டவர்களுக்குச் சாலப் பொருந்தும்.

எங்கள் மத்தியில்
இன்னும் ஒரு கும்பல் எஞ்சியுள்ளது
அவமானத்தை அது சாப்பிடுகின்றது
தலைகுனிந்து நடந்து செல்கின்றது
அவர்களின் பிடரியை நிமிர்த்துவோம் நாங்கள்
எதிர்ப்படும் ஒவ்வொரு கையையும்
நக்கும் ஒருவனை
எப்படி நாங்கள் எம்மிடை வைக்கலாம்?


(தொகுப்பு: மண்ணும் சொல்லும், மொழியாக்கம்: வ.கீதா-எஸ்.வி.ராஜதுரை)

“அவ்வளவு அக்கறை உடையவர்களாக இருந்தால், நீங்கள் ஏன் உள்நாட்டிலேயே சனங்களோடு சனங்களாக வாழ்ந்திருக்கக்கூடாது? எழுதக்கூடாது?”என்று புத்திசாலித்தனமாகக் கேள்வி எழுப்புகிறவர்களுக்குச் சொல்லவென ஒரேயொரு பதில்தான் உண்டு. “உயிராபத்துக்கு அஞ்சியே நாட்டைவிட்டு வெளியேறினோம். சித்திரவதைக்குள்ளாகி அநாதைப் பிணங்களாகத் தெருக்களில் துாக்கியெறியப்படுவதையும், கண்காணாத இடங்களில் புதைக்கப்படுவதையும் நாங்கள் விரும்பவில்லை”. ஊடகவியலாளர்களுக்கெதிராக தாக்குதல்கள், கொலை, மிரட்டல், ஆட்கடத்தல், கடுமையான செய்தித் தணிக்கை என குரூரமான வன்முறையைப் பிரயோகிக்கும் நாடுகளுள், இலங்கை முதல் ஐந்திற்குள் இடம்பிடித்திருக்கிறது. 2006ஆம் ஆண்டிலிருந்து 13க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பலர் காணாமல் போயிருக்கிறார்கள். நுாற்றுக்கணக்கான ஊடகவியலாளர்கள் நாட்டைவிட்டுத் தப்பியோடியிருக்கிறார்கள். மயில்வாகனம் நிமலராஜன் (2000), ஐயாத்துரை நடேசன் (2004), தர்மரத்தினம் சிவராம் (தராக்கி-2005), “ஈற்றில் நான் கொல்லப்படுவேனாக இருந்தால், அந்தக் கொலை அரசாங்கத்தின் கைகளால் செய்யப்பட்டதாகவே இருக்கும்.” என்று, கொலையாளிகளைக் குறித்து இறப்பதற்கு முன்னம் ஆசிரியர் தலையங்கத்தில் எழுதிவைத்த ‘சன்டே லீடர்’ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க (2009, ஜனவரி), பிரகீத் எக்னெலிகொட (2009 ஜனவரியில் கடத்திச்செல்லப்பட்ட அரசியல் கார்ட்டூனிஸ்ட், ஊடகவியலாளர்) என நீளும் கொலையுண்டோர் பட்டியல், காலகாலமாக இலங்கையில் நிலைத்திருக்கும் ஊடக சுதந்திரத்திற்கு எடுத்துக்காட்டு. அரசாங்கங்கள் மாறியபோதிலும் ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல் மட்டும் மாறுவதேயில்லை. இலங்கையை விட்டுத் தப்பியோடியவர்களும் (சிங்களவர்கள் உள்ளடங்கலாக), கருத்துச் சுதந்திரம் மறுக்கப்பட்டு சிறையுண்டிருப்போரும் காணாமல் போனோரும் கணக்கிலர். விடுதலைப் புலிகளின் அரசவைக் கவிஞர் என்று அறியப்பட்ட புதுவை இரத்தினதுரை அவர்கள், மே 2009 பேரனர்த்தத்தின் பிற்பாடு வவுனியா தடுப்புமுகாமொன்றிலிருந்து இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டார் என்று சொல்லப்படுகிறது. அதன்பிறகு அவரைக் குறித்த எந்தவொரு தகவலும் இல்லை. அவர் கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் நாட்பட நாட்பட மிகுந்துவருகிறது.

சொந்த நிலத்தில் உயிர் வாழும் உரிமை, கருத்துரிமை, பேச்சுரிமை பறிக்கப்பட்டவர்கள் வேறு வழியற்று நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள். உலகெங்கிலும் நடந்த, நடந்துகொண்டிருக்கும் விடுதலைப் போராட்டங்களில், புலம்பெயர் எழுத்தாளர்களது பங்கை வரலாறு பதிந்துவைத்திருக்கிறது. ‘குளிரூட்டப்பட்ட அறைகளுள் சொகுசாக இருந்துகொண்டு கண்ணீர் வடிக்கிறார்கள்’என்று இணையத்தளங்களிலும் அரச சார்பு ஊடகங்களிலும் அவதுாறு செய்பவர்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய வரலாறுகள் அவை.

1948 ஆம் ஆண்டு ஜூன் மாதம், கலிலீயிலிருந்த அல்-பேர்வா என்ற கிராமத்தை இஸ்ரேலியர்கள் சூறையாடினார்கள். அங்கிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டார்கள். அவ்வாறு விரட்டப்பட்டவர்களுள் தார்விஷ் என்ற ஆறு வயதுச் சிறுவனும் ஒருவன். தார்விஷின் குடும்பத்தினர் அகதிகளாக எங்கெங்கோ அலைந்துவிட்டு ஓராண்டின் பின் சொந்த மண்ணுக்குத் திரும்பியபோது, அவர்களது மண் இஸ்ரேலாக மாற்றப்பட்டிருந்ததைக் கண்டார்கள்.




“நாங்கள் மீண்டும் அகதிகளாக வாழத் தொடங்கினோம்; இம்முறை எங்களது சொந்த மண்ணிலேயே. அந்தக் காயத்தை என்னால் ஒருபோதும் மறக்கமுடியாது.”

பின்னாளில், ‘பாலஸ்தீனத்தின் தேசிய கவி’என்று கொண்டாடப்பட்ட மஹ்மூத் தார்வீஷால் கூறப்பட்ட வார்த்தைகளே மேற்கண்டவை.

‘அரபுலகின் ஆன்மா’எனப் புகழப்பட்ட அவரது கவிதைத் தொகுப்புகள் பல இலட்சக்கணக்கில் விற்றுத் தீர்ந்தன. அரங்கம் நிறைந்த (25,000 பேருக்கும் மேற்பட்டோர்) கவிதை ஆர்வலர்கள் அவரது கவிதைகளைக் கேட்கக் கூடினார்கள். அவர் போகுமிடமெல்லாம் விடுதலையின் அலை பரவியது. இருபதுக்கும் மேற்பட்ட மொழிகளில் அவரது கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டன. எழுத்தில் எத்தனை உயரத்திற்குச் சென்றபோதிலும், சொந்தமண்ணிலிருந்து விரட்டப்பட்ட துயரத்தை அவரால் தன் வாழ்நாளில் மறக்கமுடியவில்லை.

“நாடு திரும்புதல் குறித்த காலவரையறையற்ற இழுத்தடிப்பை, இழப்பின் பாடல் வரிகளாக மாற்றியமைக்கும் காவிய முயற்சி” என்று, தார்வீஷின் கவிதைகளைப் பற்றிச் சொல்லியிருக்கிறார் எட்வர்ட் செய்த்.

இஸ்ரேலின் ஒரு பகுதியாக மாறிவிட்ட தாய்மண்ணில் தார்விஷூக்கு மேற்படிப்பு மறுக்கப்பட்டது. (தரப்படுத்தல் ஞாபகம் வருகிறது) அதனால், மேற்படிப்பைத் தொடரும் நிமித்தம் 1970இல் மொஸ்கோவுக்குச் செல்லவேண்டியேற்பட்டது. 1973இல் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தில் இணைந்துகொண்ட பிற்பாடு, அவரது மண்ணில் காலடி எடுத்து வைக்கும் அனுமதி இஸ்ரேலிய அதிகாரத்தினால் முற்றிலும் தடைசெய்யப்பட்டது. 1973-1982 வரை பெய்ரூட்டில் நாடு துறந்த வாழ்வு, 1982 இல் லெபனானை இஸ்ரேலியப் படைகள் முற்றுகையிட்டபோது அங்கிருந்து தப்பியோட்டம் என அலைந்துலைய நேர்ந்தது. 26 ஆண்டுகள் சிரியா, சைப்ரஸ், கெய்ரோ, டூனிஸ், பாரிஸ் என நாடற்றவராக அலைந்து திரிந்த பிறகு, 1996ஆம் ஆண்டில் றமல்லாவுக்குத் (பாலஸ்தீன அதிகார மையம் இருக்குமிடம்)திரும்பி வாழத் தொடங்கினார். சொந்தமண் மீதான தீராத காதலை கீழ்க்காணும் வார்த்தைகளால் வெளிப்படுத்துகிறார்...

“நாடு கடத்தப்படுவதென்பது புவியியல் எல்லைக்கோடுகளாலானதன்று. நான் போகுமிடமெல்லாம் அதை எடுத்துச் செல்கிறேன். எனது தாய்நாட்டை என்னோடு எடுத்துச் செல்வதைப் போல…”

‘பாலஸ்தீனத்தின் வழக்குரைஞர்’, ‘பயங்கரவாதத்தின் பேராசிரியர்’என்றெல்லாம் வலதுசாரிகளாலும் இஸ்ரேலிய ‘ஜியோனிஸ்ட்’டுகளாலும் அடைமொழிகளிட்டு அழைக்கப்பட்டவர் பேராசிரியர் எட்வர்ட் செய்த். ஜெருசலேமில் பிறந்து, பதினாறு வயதிலேயே அமெரிக்காவிற்கு வந்து வாழத் தொடங்கியவர். என்றாலும், பாலஸ்தீனப் போராட்டத்தை ஆதரிப்பதைத் தனது வாழ்நாள் கடமையாகத் தொடர்ந்திருந்தார். இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை ஆதரிக்கும் அமெரிக்காவின் வெளியுறவுக்கொள்கையைச் சாடவும் தவறினாரில்லை. தனது சொந்த மண்ணின் மீதான ஆக்கிரமிப்பைச் சாட அந்த மண்ணிலேயே இருக்கவேண்டுமென்ற அவசியம் ஏதுமில்லை என்பதற்கு அவரைக் காட்டிலும் ‘அறிவுபூர்வமான’ எடுத்துக்காட்டு தேவையில்லை. ‘பாலஸ்தீனத்தின் பக்கம் சாய்கிறார்’ என்று, செய்த் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டபோது அவர் அதை உறுதியாக மறுத்துரைக்கிறார்.

“யூதர்களின் மீது தொடுக்கப்பட்ட அடக்குமுறையை ஒத்துக்கொள்வதற்கும், அதையொரு கவசமாகப் பிரயோகித்து அவர்கள் வேறொரு இனத்தை (பாலஸ்தீனியர்களை) அடக்குவதற்கும் இடையில் பாரிய வித்தியாசம் உள்ளது.”

எங்களது ஜெருசலேம் ஈழமே! நாங்கள் அங்குதான் பிறந்தோம். குடியேற்றத் திட்டங்கள் மூலமாக எந்த மண்ணைக் கபளீகரம் செய்ய பேரினவாதம் திட்டமிட்டுச் வஞ்சகமாகச் செயற்படுத்துகிறதோ அந்த மண்ணில்தான் எங்களுடைய பால்யம் கழிந்தது. இளமையின் இளவேனிலை நாங்கள் கடந்துவந்த மரத்தடிகளும் வயல்வெளிகளும் புழுதித் தெருக்களும் இன்னமும் அங்குதான் இருக்கின்றன. விதிவசத்தால் வேறு தேசங்களில் விழுதெறிய விதிக்கப்பட்டோமேயன்றி, எங்களது வேர்கள் அங்குதான் இருக்கின்றன. ஆகவே, எங்களது மக்களுக்காகக் குரல் கொடுக்கவும் எழுதவும் எங்களுக்கு உரிமை இல்லையென்று எவராலும் மறுக்கமுடியாது.


புலம்பெயர்ந்த தேசங்களில் வாழும் ஈழத்தமிழர்களது வாழ்க்கை சில ஊடகங்களில் சித்தரிக்கப்படுவதுபோல, இலையுதிர்கால மரங்களைப் போல வண்ணமயமானதன்று; சிலசமயங்களில் அது கண்ணீரைப் போல நிறமற்றதும்கூட. மே, 2009 இற்குப் பிறகு நடைபிணங்களாக அலையும் பலரை புலம்பெயர்ந்த தேசங்களில் நான் சந்தித்திருக்கிறேன். அவர்களளவில் வாழ்வை அர்த்தப்படுத்திக்கொண்டிருந்த பெருங்கனவு கலைந்துவிட்டது. பெருமிதம் மங்கிய விழிகளை விலக்கிக்கொண்டு, பழகிய எவரையும் சந்திக்க விரும்பாமல் விரைந்து செல்கிறார்கள். பல்லாண்டுகளுக்குப் பிறகு சந்தித்த ஒரு நண்பர் சொன்னார்... “எனது உறவினர்களில் அறுபத்திரண்டு பேர் வன்னியில் படுகொலை செய்யப்பட்டார்கள்.”என்று. “அந்த மாதம் முழுவதும் செத்தவீடுகளுக்குப் போவதிலேயே கழிந்தது”என்றார். தனது இழப்பிற்காக அவர் யாரையும் பழித்துரைக்கவில்லை; “எங்கள் போராட்டத்தை அழித்தொழித்துவிட்டார்களே படுபாவிகள்!”என்பதே அவரது குமுறலாக இருந்தது.

கடந்த புத்தகக் கண்காட்சியில்,(2011 ஜனவரி) ‘ஈழப் போராட்டத்தைப் பின்னணியாக வைத்து எழுதப்பட்ட த்ரில்லர்’என்ற பரபரப்பு அட்டைப்பட வாசகத்துடன் விற்பனைக்கு வந்தது ஜெயமோகனின் ‘உலோகம்’என்ற நாவல்(?). அதற்கு ஈழத்தவர்களால் எழுதப்பட்ட எதிர்வினைகளுக்கு தனது இணையத் தளத்தில் கீழ்க்கண்டவாறு பதிலளித்திருக்கிறார் ஜெயமோகன்.

“பொதுவாக இந்நாவலுக்கு வந்த எதிர்வினைகளில் அதிக தீவிரத்துடன் எழுதியவர்கள் விடுதலை இயக்கங்களுடன் எந்தத் தொடர்பும் இல்லாதவர்கள். எண்பதுகளின் ஆரம்பத்திலேயே புலம்பெயர்ந்து வசதியாக வாழ ஆரம்பித்தவர்கள். அவர்கள் ஒரு குற்ற உணர்ச்சியாலோ ஒரு பிம்ப உற்பத்திக்காகவோ இன்று அதிதீவிர உணர்ச்சி நிலைப்பாடு எடுக்கிறார்கள்.”

எத்தகைய பொறுப்பற்ற, அசிரத்தையான, மேம்போக்கான வார்த்தைகள்!!! “வரலாற்றுப் புரட்டுப் புரட்சி“ செய்பவர்களுக்கு இருக்கும் உரிமைகூட புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களுக்கு இல்லையென்கிறார் அவர். நன்று! ஈழப் போராட்டத்தைப் பற்றி தெளிவான விளக்கமின்றி எழுதப்பட்ட தனது படைப்பை நியாயப்படுத்துவதற்காக, இத்தகைய அபத்தாபத்தமான எதிர்வினையை, அறியப்பட்ட எழுத்தாளர் ஒருவரால் ஆற்ற முடிவதும் இலக்கிய உலகின் துயரங்களில் ஒன்றே. விடுதலை இயக்கங்களுடன் தொடர்புடையவர்கள் மட்டுமே அந்நாவலுக்கு எதிர்வினையாற்றத் தகுதிவாய்ந்தவர்கள் என்பதையும், எண்பதுகளில் புலம்பெயர்ந்தவர்கள் வசதியான வாழ்க்கை வாழ்கிறார்கள் என்ற அதீத கற்பனையையும் என்னவென்பது? இது, “குரங்குகளுக்கு நீண்ட வாலுண்டு; ஆகவே நீளமான வாலுள்ள யாவும் குரங்குகளே”என்பதை இது நினைவுறுத்துகிறது. இரண்டு உலகங்களில் வாழ விதிக்கப்பட்ட புலம்பெயர்ந்தவர்கள், தங்களது பொருளாதார நலன்களைப் பற்றி மட்டுமே சிந்தித்தல் இயலாது; அவர்களால் விட்டுவிட்டு (கைவிட்டு அல்ல) வரப்பட்ட நிலத்தின் அரசியல், சமூக, பொருளாதாரக் கடமைகளுக்குப் பொறுப்பானவர்களாகவும் அவர;கள் இருக்கவேண்டியிருக்கிறது.

மேலும், தமது தாய் மண்ணில் வாழ முடியாமல் அதை நீங்கிச்சென்றவர்கள் அல்லது மறைமுகமானதும் நேரடியானதுமான அச்சுறுத்தல்களால் விரட்டியடிக்கப்பட்டவர்கள் ஏன் குற்றவுணர்ச்சி கொள்ள வேண்டும்? அவர்கள் பொருளாதார நோக்கில் நாட்டைவிட்டு வெளியேறியிருந்தாலும்- அறுபதுகளிலோ, எழுபதுகளிலோ ஈழத்தைவிட்டு வெளியேறியிருந்தாலும்- அங்கே பிறக்காதவர்களானாலும் கூட தமது மக்களுக்காகக் குரல் கொடுக்கத் தகுதிவாய்ந்தவர;களே. இன்னுஞ் சொல்லப்போனால் உரிமைகள் மறுக்கப்பட்ட எந்தவொரு மனிதனுக்காகவும் இனத்துக்காகவும் குரல்கொடுக்கும் தார்மீகக் கடமையும் உரிமையும் இப்பூவுலகில் வாழும் யாவருக்கும் உள்ளது; விலங்குகள் உள்ளடங்கலாக எவ்வுயிர்க்கும் உரியது இவ்வுலகம். அறியாததை ‘அறியேன்’என்று ஏற்றுக்கொள்வதே அறிவுடமை; அஃதல்லாதது மடமை.

உலகெங்கிலும் இருக்கும் வல்லரசுகளாலும், பேரினவாதிகளாலும், ஏகாதிபத்திய எதேச்சாதிகாரிகளாலும் எளிய-சிறுபான்மை-சுதேச மக்கள் மீது தொடுக்கப்பட்ட போர்கள், இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு அஞ்சிப் புலம்பெயர்ந்து போன எல்லா மக்களும் குற்றவுணர்ச்சி கொள்ள வேண்டியவர்கள்தானா? அப்படியானால், ஆங்கிலேய அரசால் கைது செய்யப்படுவோம் என்ற பயத்தில் புதுச்சேரிக்குச் சென்று தலைமறைவு வாழ்வு வாழ்ந்த பாரதிக்கும் இது பொருந்துமா? தனது பதினாறு வயதிலேயே நியூயோர்க் நகருக்கு வந்து சேர்ந்து தனது 37 ஆவது வயதில் பாலஸ்தீனத்திற்காகக் குரல்கொடுக்க ஆரம்பித்த எட்வேர்ட் செய்த்தும்- தனது 22ஆவது வயதிலேயே ‘குறித்துக்கொள் நான் ஒரு அராபியன்’எனும் புகழ்பெற்ற கவிதையை எழுதி அரபுலகில் விடுதலையுணர்வைத் துாண்டியவரும், இருபத்தாறு ஆண்டு காலமாக இஸ்ரேலுக்குத் (பாலஸ்தீனமே) திரும்பிவரத் தடை விதிக்கப்பட்டிருந்தவருமாகிய கவிஞர் மஹ்மூத் தார்விஷூம் குற்றவுணர்ச்சி கொண்டிருக்கவேண்டியவர்கள்தானா?

அவர்கள் உன்னதமான படைப்புகளைத் தந்த உலகறிந்த அறிவுஜீவிகள், கவிஞர்கள்தாம்! ஆயினும், ‘தன்னளவில் சிறுபுல்லும் முழுமை’யன்றோ?

உலகெங்கிலும் ஒடுக்கப்பட்டு வரும் சிறுபான்மையினர் உயிருக்கும் சுயபங்க இழிவுக்கும் அஞ்சி வெளிநாடுகளில் புகலிடம் தேடுவதும், அங்கிருந்தபடி உள்நாட்டில் துயரைத் தின்று வாழும் தமது மக்களுக்காகக் குரல்கொடுப்பதும் காலாகாலமாக நடந்துவருவது. குர்திஷ்கள், காஷ்மீரிகள், திபெத்தியர்கள் இன்னபிறரை இதற்கு மிகச்சிறந்த உதாரணங்களாகக் காட்டவியலும்.

நாடற்று உலகெங்கிலும் அகதிகளாக பரந்துள்ளவர்களுள் குர்திஷ் இனத்தவர் குறிப்பிடத்தக்கவர்கள். ஜேர்மனியில் மட்டும் ஏறத்தாழ எட்டு இலட்சம் குர்திஷ் இனத்தவர்கள் வாழ்ந்துவருகிறார்கள். அதைவிடவும் அமெரிக்கா, கனடா, லெபனான், நெதர்லான்ட், பிரிட்டன், ஸ்வீடன், பின்லான்ட், அவுஸ்திரேலியா மற்றும் முன்னாள் சோவியத் யூனியனிலிருந்து பிரிந்த ஆர்மேனியா, உஸ்பெக்கிஸ்தான், அஸர்பைஜ்ஜான், கஸகஸ்தான் இங்கெல்லாம் அவர்கள் சிதறிப்போய் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். ஈராக்-ஈரான்-துருக்கி-சிரியா என்ற நாற் கணங்களுக்கும் நடுவில் கிடந்து நசிபட்டுக் கொண்டிருக்கிறது ‘குர்திஷ்தான்’எனும் கனவு. ஆயினும், வன்முறையினாலோ அழுத்தங்களாலோ ஒரு இனத்தை அடக்கியொடுக்க முடியாது என்பதை, அண்மைக்காலத்தில் துருக்கிக்குக் கற்பித்திருக்கிறார்கள் உலகெங்கிலும் பரந்துவாழும் குர்திஷ்கள். ‘நாலு நிலங்களில் பரந்திருக்கும் ஒரே தேச’த்தின் தொழிலாளர் கட்சித் தலைவராகிய சுபையிர் அய்தர் (Zubeyir Aydar) நேர்காணல் ஒன்றில் கீழ்க்கண்டவாறு பதிலளித்துள்ளார்.

“17 ஆண்டுகளாக நான் நாடற்றவனாக அலைந்துகொண்டிருக்கிறேன். தடைசெய்யப்பட்ட நாடொன்றைச் சேர்ந்த ஒருவனது விருப்பம் என்னவாக இருக்கமுடியும்? எனது ஒரே விருப்பம் சுதந்திர குர்திஷ்தானுக்கு கௌரவத்தோடு செல்வது மட்டுமே.”

சீனாவின் மேலாதிக்கப் பிடியிலிருந்து விடுபட்டு தனித்தன்மையுள்ள சுயாட்சி அமைப்பதற்காகப் போராடிவரும் திபெத்தியர்களின் குரலானது உள்நாட்டிலிருந்து மட்டும் ஒலிக்கவில்லை. சீனாவின் அடக்குமுறைக்கு அஞ்சி வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்த கலைஞர்கள், ஆன்மீகத் தலைவர்கள், எழுத்தாளர்கள், மாணவர்கள் வெளிநாடுகளிலிருந்தபடி தமது அடிப்படை உரிமைகளுக்காகக் குரலெழுப்பி வருகிறார்கள். விடுதலைக்காகக் குரலெழுப்பும் தொண்டைகளில் அழுத்தப்படவென துப்பாக்கிக் குழல்களோடும், எழுதுபவர்களின் விரல்களை முறித்தெறிவதற்கான சிறைகளோடும் காத்திருக்கிறது சீன வல்லாதிக்கம். ஜமான் கீ, டொல்மா கியாப் போன்ற பல நுாறு எழுத்தாளர்கள் அங்கு சிறையிடப்பட்டிருக்கிறார்கள். திபெத்தியர்களின் அரசியல் மற்றும் ஆன்மீகக் குருவாகிய தலாய் லாமா உள்ளிட்டோரின் மீள்திரும்புதலுக்காக இரத்தப்பசியோடு காத்திருக்கின்றன சீனாவின் சிறையறைகள்.

1959ஆம் ஆண்டு, சீன மக்கள் குடியரசின் துன்புறுத்தல்களால் நாட்டை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்ட பெற்றோருக்கு, இந்தியாவின் வீதியோரக் கூடாரமொன்றில் பிறந்தவர்தான் டென்சின் ட்சூண்டு (Tenzin Tsundue).-பெயர்களைத் தமிழ்ப்படுத்தினால் விசித்திரமாக ஒலிக்கிறது. திபெத்திய விடுதலைக்காக ஒலிக்கும் குரல்களில் அவருடைய குரலும் குறிப்பிடத்தகுந்தது.) அவரது பெற்றோர் இந்தியாவில் வீதி செப்பனிடும் தொழிலாளர்களாக வேலை செய்யவேண்டியேற்பட்டது. ஒருபோதும் பார்த்தறியாத தன் தாய் தேசத்தைப் பற்றி அவர் எழுதிய கவிதை கீழ்வருமாறு:

…………………………………

…………………………………


ஒவ்வொரு காவல் நிறுத்தங்களிலும் அலுவலகங்களிலும்,
நான் ஒரு ‘இந்தியன்-திபெத்தியன்.’
ஒவ்வொரு ஆண்டும், ஒரு சலாமுடன் புதுப்பிக்கப்படும்
எனது பதிவுப் பத்திரத்தின்படி
நான் இந்தியாவில் பிறந்துவிட்ட வெளிநாட்டவன்.

இந்தியனே போலிருப்பேன்
ஒடுங்கிய திபெத்திய முகம் தவிர்த்து,
“நேபாளி?” “தாய்? “யப்பானியன்?”
“சீனன்?” “நாகா?” “மணிப்புரி?”
ஆனால், ஒருபோதும் கேட்கப்பட்டதில்லை -“திபெத்தியன்?”

நான் ஒரு திபெத்தியன்.
ஆனால், அங்கிருந்து வரவில்லை
ஒருபோதும் அங்கு இருந்ததுமில்லை.
ஆயினும்
எனது கனவெல்லாம்
அங்கு மரணிப்பதே!



மலர்கள் பூத்துக் குலுங்கும் மலைகளும் பள்ளத்தாக்குகளும் நீரேரிகளுமாக இயற்கை எழுதிய கவிதையென மலர்ந்திருக்கும் காஷ்மீருக்காக, பல்லாண்டுகளாக மோதிக்கொண்டிருக்கின்றன இந்தியாவும் பாகிஸ்தானும். இரண்டு நாடுகளுக்குமிடையிலான ஆதிக்கப் போட்டியில் அழிந்துகொண்டிருக்கிறது காஷ்மீரிகளின் அமைதி மற்றும் விடுதலை குறித்த கனவு. கீழைத்தேசங்களின் தலைவிதியை நிர்ணயிக்கிற மேலைத்தேசங்களோ, காஷ்மீரின் விசயத்திலும் சுயலாப நட்டக் கணக்குப் பார்ப்பதைத் தொடர்ந்து செய்கின்றன. இந்நிலையில், அந்த மண்ணின் இரத்தக் களரியிலிருந்து தமது மக்களை விடுவிப்பதற்காக புலம்பெயர்ந்த காஷ்மீர்கள் உலக அரங்கில் குரலெழுப்பிவருகிறார்கள்.

நியூயோர்க் மற்றும் மசாசுசெற்ஸ் பல்கலைக்கழகங்களின் முன்னாள் விரிவுரையாளரும், காஷ்மீரி-அமெரிக்கக் கவிஞருமான அஹா சாஹிட் அலியின் வார்த்தைகளில் விரியும் ஸ்ரீநகர் அச்சந்தருவது.

“மேலும், இரவுகளிலும் ஸ்ரீநகரில் சூரியன் ஒளிர்ந்துகொண்டிருக்கிறதா? வானத்திலுள்ள நட்சத்திரங்களைச் சுட்டுவீழ்த்துகின்றன துப்பாக்கிகள். விண்மீன் கூட்டங்களின் ஓயாத புயல்களால் கிழித்தெறியப்படுகின்றன இரவுகள். ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது ஸ்ரீநகரில்….அந்த சித்தம் கலங்கவைக்கும் ஓசைகளுள் உங்களது அடையாளப் பத்திரங்கள் உங்களுக்கு உதவியிருக்கக்கூடும் அல்லது, இல்லை. பிடித்துச் செல்லப்பட்ட எங்களது பிள்ளைகள் திரும்பியதேயில்லை சித்திரவதை இரவுகளுக்குத் தப்பி.”

புலம்பெயர்ந்த குர்திஷ்களுக்கும் காஷ்மீரிகளுக்கும் திபெத்தியர்களுக்கும் இருக்கும் அதே உரிமை ஈழத்தமிழர்களுக்கும் உண்டு. ஈழவிடுதலைப் போராட்டத்தை ஆதரிப்பவர்கள் மீது எதிரிகளின் குதர்க்க மூளைகள் சுமத்தும் குற்றச்சாட்டுகள் வினோதமானவை. அள்ளி விசிறும் அவதுாறுகள் மனவுளைச்சல் தருபவை. ‘விடுதலைப் புலிகள் இயக்கமும் தமிழீழ விடுதலைப் போராட்டமும் விமர;சனத்திற்கு அப்பாற்பட்டவை’ என்ற வார்த்தைகளை ஆதரவு நிலைப்பாடுடையவர்களின் சார்பில் தாங்களாகவே உற்பத்தி செய்து உலவவிடுவதன் வழியாகத் தங்களது இருப்பினை உறுதிசெய்துகொள்கிறார்கள். போராட்டம் மீதான நியாயமான விமர்சனங்களுக்கும், திட்டமிட்டுக் கட்டவிழ்த்துவிடப்படும் அதிகார நலன்சார்ந்த பரப்புரைகளுக்கும் இடையிலான வித்தியாசங்களை இனங்காண வேண்டும் என்பதே எங்களது வேண்டுகோளாகும். பாலஸ்தீனச் சிக்கலில் ஆழ்ந்த அவதானிப்புக் கொண்டவரும், புலம்பெயர்ந்து வாழும் அறிவுஜீவியுமாகிய காடா கர்மி(Ghada Karmi) அவர்களின் வார்த்தைகளை இவ்விடத்தில் சுட்டிக் காட்டுவது பொருத்தப்பாடுடையது.

“யாசர் அரபாத்தின் மீது எந்தத் தவறுமில்லை என்றோ அவர் குறித்த விமர்சனங்கள் கண்டுகொள்ளப்படாமல் விடப்பட வேண்டியவை என்றோ நான் சொல்லவரவில்லை. மக்கள் தமது தலைமையை விமர்சித்து சீர்திருத்த வேண்டுமென்பது சரியே. ஆனால், அத்தகைய விமர்சனங்கள், இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை மூடிமறைப்பதற்கோ, பாலஸ்தீன வரலாற்றில் யாசர் அரபாத்தின் ஈடிணையற்றதும் நியாயமானதுமான இடத்தை மறுதலிப்பதற்கோ அனுமதிக்கக்கூடாது. வரலாற்றில் பின்னொதுக்கப்பட்டிருந்த நிலைமையில் இருந்த பாலஸ்தீனப் பிரச்சனையை உலக அரங்கின் முன் எடுத்துவந்தவர் அவரே. ஆங்காங்கு சிதறியிருந்த மக்களை ஒன்று திரட்டி - 60 வீதமானவர்கள் வெளியேற்றப்பட்டிருந்தார்கள்- ஆக்கிரமிக்கப்பட்ட தாய்மண் அவர்களுடையது; அது மீட்கப்படவேண்டியது என்ற எண்ணத்தை வலுவடையச் செய்ததும் அரபாத்தே. பாலஸ்தீனப் பிரதேசங்கள் கொஞ்சம் கொஞ்சமாக இஸ்ரேலியப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுக்கொண்டே போகும் இன்றைய ஆபத்தான நிலையில், இஸ்ரேலின் மிகப்பலம்வாய்ந்த கபளீகரத்தை எதிர்கொள்ளக்கூடிய ஒருங்கிணைந்த பாலஸ்தீன அடையாளமாக அவரே திகழ்கிறார்.”

(‘யாசர் அரபாத்தைக் கொன்றது யார்?’என்ற தலைப்பில், காடா கர்மி அவர்களால் 2004ஆம் ஆண்டு எழுதப்பட்ட கட்டுரையிலிருந்து…)

யாசர் அரபாத் கூட அழுத்தங்கள் காரணமாக சில சமரசங்களுக்கு உடன்பட்டார்; ஆனால், தலைவர் பிரபாகரனின் வரலாற்றில் மலினமான சமரசங்களுக்கு இடமிருக்கவில்லை. இலங்கை அரசால் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைகளை அனைத்துலக அரங்கில் வெளிக்கொணர்ந்ததில் ஈழவிடுதலைப் போராட்டத்தின் பங்கினை மறுதலிப்பவர்கள், கண்களை மூடிக்கொண்டு ‘இருட்டு’ என்று சொல்பவர்கள். அத்தகைய போராட்டத்தையும், தாங்கள் நேசித்த மக்களுக்காக, மண்ணுக்காகத் தம்முயிரை ஈந்த முப்பத்தாறாயிரத்துக்கும் மேற்பட்ட மாவீரர்களது அர்ப்பணிப்பையும் நாங்கள் மறந்துவிடவேண்டும் என்று பேராசை கொண்டலைகிறது பேரினவாதம். அதாவது, “முப்பதாண்டு கால வரலாறு உங்களுக்கு இல்லை; நீங்கள் நீளுறக்கம் கொண்டிருந்தீர்கள். உங்களை நாங்கள் ‘அடித்து’எழுப்பியிருக்கிறோம். உங்கள் முன் இருப்பது வேறு உலகம்”என்பதே அதன் சாரம். “ஆமாம்… நாங்கள் முப்பதாண்டு காலம் உயிரோடு இருந்திருக்கவில்லை”என்று ஆட்டாத தமிழரது தலைகள் கழுத்தில் இருக்காது என்பது இலங்கையின் அராஜக நியதி. அந்தக் கொலைபடுகளத்தில் உறவுகளையும் உடமைகளையும் பறிகொடுத்து, உணர்வுகள் சிதைக்கப்பட்ட மக்களே தங்களுக்காகப் பேசும் முன்னுரிமை கொண்டவர்கள் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. ஆனால், பேரினவாதத்திற்கு எதிராக சிறு ஒலியையும் எழுப்ப முடியாத அளவிற்கு அராஜகம் அங்கு தலைவிரித்தாடும் நிலையில், குரலற்றவர்களின் குரலாக ஒலிக்க வேண்டிய வரலாற்றுக் கடமை புலம்பெயர் தமிழர்களுக்கும் (புலம்பெயர் தமிழர்களுக்கும் என்பதைக் கவனிக்க) உண்டு.

இராஜபக்சே அரசும் அதன் அதிகாரிகளும் போர்க்குற்றவாளிகளே என்று நிரூபிக்கும் பிரயத்தனம் தொடர்ந்துகொண்டிருக்கும் இவ்வேளையில், ‘அந்த எத்தனத்தில் வெற்றி கொண்டுவிடுவார்களோ தமிழர்கள்’ என்ற அச்சம் பேரினவாதிகளுக்கு மட்டுமல்ல; சில அதமிழர்களுக்கும் உண்டு.

அத்தகைய அதிகாரச் சார்பு ஊதுகுழல்களுக்கும், அவர்களின் எசமானவர்களுக்கும் விடுதலைக் கவிஞன் மஹ்மூத் தார்விஷின் கீழ்க்காணும் வரிகளைச் சமர்ப்பித்து முடிக்கலாம்.

“அவர்கள் பலம் வாய்ந்தவர்கள் என்பதையும், எவரையும் ஆக்கிரமிக்கவும் கொலை செய்யவும் முடியும் என்பதையும் நான் அறிவேன். ஆனால், எனது வார்த்தைகளைச் சிதைக்கவோ அதனை ஆக்கிரமிக்கவோ அவர்களால் ஒருபோதும் முடியாது.”



-நன்றி - அம்ருதா நவம்பர் இதழ்


1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 22, 2012 08:46

February 11, 2012

35ஆவது, சென்னை புத்தகக் கண்காட்சியும் இன்னுஞ் சில நினைவுகளும்…


இன்னுமொரு புத்தகக் கண்காட்சி, கோடிக்கணக்கான புத்தகங்களோடு வந்திருக்கிறது. கடந்த ஆண்டும் அதற்கு முன்னமும் வாங்கிய புத்தகங்களே இன்னமும் வாசித்துத் தீராத நிலையில், மீண்டும் அந்தக் குரல் இழைந்து குழைந்து அழைக்கிறது. வாழ்வின் பிடிமானமாகக் கற்பித்துக்கொண்டிருக்கும் இலக்கியமும் வாசிப்பும் இன்னமும் எத்தனை காலம் கூடவரும் என்ற சுயவிசாரணையை வசதியாக, தற்காலிகமாக மறந்தாயிற்று. ஜனவரி மாதம் நெருங்கத் தொடங்க பரவசம் கலந்த பதட்டம் தொற்றிக்கொள்வதைத் தவிர்க்கமுடிவதில்லை. திருவிழாவை எதிர்நோக்கிக் காத்திருக்கும் கிராமத்துக் குழந்தையைப் போல, புத்தகங்கள் நடுவில் நடந்து திரியும் கனவுகளோடு காலைகள் புலர்ந்தன.

34ஆவது (கடந்த ஆண்டு) சென்னை புத்தகக் கண்காட்சியின்போது, பெருநகரின் தெருக்களிலும் கண்காட்சியின் நுழைவாயிலிலும் 'தமிழே… அமிழ்தே'என்ற பெருமித விளிப்புடன் கூடிய கலைஞரின் 'கட் அவுட்'கள் உயர்ந்தோங்கியிருந்தன. திரும்பிய திசைகளில் எல்லாம் கலைஞர் ஸ்டாலின் சகிதம் சிரித்துக்கொண்டிருந்தார். கடந்த தேர்தலின்போது, மக்கள் அமிர்தத்தைக் குடித்துத் 'தீர்த்து'விட்டார்கள். இந்நாள் முதல்வரோ கண்காட்சி விடயத்திலும் அலட்டிக்கொள்ளவில்லை. அவரது ஆர்வங்கள் சமச்சீர் கல்வி, நூலக மூடுவிழா என, அறிவிலும் செறிவானவை! கண்காட்சி நடக்கும் பிரமாண்ட கூடாரத்திற்கு இட்டுச்செல்லும் வழிநெடுகிலும் எஸ்.ராமகிருஷ்ணனும் சாரு நிவேதிதாவும் ஜெயமோகனும் பாலகுமாரனும் சுஜாதாவும் வைரமுத்துவும் உருவப்படங்களாக உயரங்களில் நின்றுகொண்டிருக்கிறார்கள்.

முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் இம்முறை பெருந்திரளான சனங்கள் புத்தகச் சந்தையில் கலந்துகொண்டார்கள் என்பது எனது அனுமானம். புத்தகச் சந்தை நிறைவுற்றதும் ஆட் கணக்கெடுப்பு, பதிப்பகங்களின் இலாப நட்டத் தகவல்கள் (அண்ணளவாக) தெரியவரும். அதற்கியைபுற அனுமானத்தையும் முன்பின் நகர்த்திக்கொள்ளலாம். கடைசி இரண்டு நாட்களிலும் ஆளோடு ஆளுரசி தோளோடு தோளுரசி நடக்க வேண்டியிருந்தது. புத்தகக் கடலினுள் இறங்குவதன் முன்பாக நுழைவாயிலிலிருந்து பார்த்தபோது 'இதனுள் நுழைந்து வெளிவந்துவிட முடியுமா?'என்ற ஐயம் எழுமளவிற்குக் கடைசி இரண்டு நாட்களிலும் கூட்டம் திரண்டிருந்தது. இலக்கியக் கூட்டங்களில் காணக்கிடைக்காத அரிய காட்சியை புத்தகக் கண்காட்சியில் காணமுடிந்தது. பெண்கள் அதிகளவில் வந்திருந்தார்கள். குழந்தைகளுக்கோவெனில் கடற்கரை போல பொழுதுபோக்கும் இடங்களில் கண்காட்சியும் ஒன்றாயிருந்தது. விற்பனை நிலையங்களில் சில பிள்ளைகள் புத்தகங்களில் கண்பதித்து ஆழ்ந்த வாசிப்பில் ஈடுபட்டிருந்ததைக் காணமுடிந்தது. சோப்புக் குமிழிகள் மிதந்து வந்து முகத்தில் மோதி உடைந்தபோது ஒரு கணம் குழந்தைமை மீண்டு திரும்பிற்று. மாங்காய்ச் சீவல், பாலுள் முக்கிப் பொரித்த கடலை, வீண்தீனி விலக்குவோருக்கென பழங்கள் என அங்கு வயிற்றுக்கும் நிறையவே ஈயப்படுகிறது. தத்தம் வணிகத் தகவல்களைத் தாங்கிய துண்டுப் பிரசுரங்களை வழி நெடுகிலும் நின்று சிலர் விநியோகித்துக் கொண்டிருந்தார்கள். கழிப்பறைகள் கடந்த ஆண்டைக் காட்டிலும் சுத்தமாகவும் நிறைந்த நீர்வசதியோடும் இருக்க, பெண்கள் கழிப்பறை அருகில் பெண் காவலர்கள் லத்திகளோடு அமர்ந்திருக்கிறார்கள்.

சுற்றவர இருந்த மனிதர்கள் மறைந்துபோக, புத்தகங்கள் நடுவில் கனவில் நடப்பதைப்போல அலைந்த பலரைப் பார்த்தேன். புத்தகங்களைப் புரட்டிக் கொண்டோ அல்லது புரட்டாமல் வெறுமனே முகப்பட்டைகளை உற்றுநோக்கிக் கொண்டோ காலம் உறைந்தாற் போல அவர்கள் நின்றிருந்தார்கள்.

பார்க்கப் பார்க்க, 'சென்னை மாநகரத்தில் இவ்வளவு பேர் புத்தகங்களில் ஈடுபாடு கொண்டிருக்கிறார்களா?'என்று வியப்பாக இருந்தது. வருபவர்கள் எல்லோரும் புத்தகம் வாங்குபவர்களல்லத்தான். வேடிக்கை பார்க்கவும் பொழுதுபோக்கவும்கூட சிலர் அங்கு வருகிறார்கள். ஆனாலும், இவ்வளவு ஆயிரம் பேருள் ஓராயிரம் பேர் இலக்கியம் என்று எங்களால் விளிக்கப்படுவதை வாங்கினாலும் பிரதிகள் தீர்ந்துபோகுமே…! ஆனால், ஒரு பதிப்பு விற்றுத் தீர ஆண்டு பல காத்திருப்பதே (ஒரு சில நட்சத்திர எழுத்தாளர்களது படைப்புகள் விதிவிலக்கு) தமிழுக்கு விதிக்கப்பட்ட விதி. சாகித்திய அகாதமி விருது இன்னபிற அறிவிக்கப்படும்போது மட்டும் திடீரென்று விழித்துக்கொண்டாற் போல அந்தக் குறிப்பிட்ட புத்தகத்தின் விற்பனை எண்ணிக்கை உயர்கிறது. கடந்த ஆண்டு சாகித்திய அகாதமி விருது பெற்ற நாஞ்சில் நாடன் அவர்களது 'சூடிய பூ சூடற்க'நான்காயிரத்து ஐந்நூறு பிரதிகள் விற்கப்பட்டதாக நண்பர்கள் சொன்னார்கள். இவ்வாண்டு சாகித்திய அகாதமி விருது பெற்ற சு.வெங்கடேசனின் 'காவல் கோட்டம்'இதுவரையில் ஏறத்தாழ மூவாயிரத்து நூற்றியம்பது பிரதிகள் விற்கப்பட்டிருப்பதாக இணையத் தகவலொன்றில் வாசித்தேன். ஆக, திடீர் நன்னிமித்தங்கள் ஏற்பட்டாலன்றி, இலக்கியம் என்று எங்களைப் போன்றவர்களால் நம்பப்படுகிற எழுத்தை சராசரி மனிதர்கள் கண்டுகொள்வதில்லையோ…? அப்படித்தான் இருக்கவேண்டும்! நிலைமை இவ்விதமிருக்க, எதை முன்னிட்டு இத்தனை குறுங்குழுவாதக் குமுறல்கள், குடுமிப்பிடிச் சண்டைகள், தம்மைத்தான் பிரேரித்தல், சொற்போர்கள், மற்போர்கள், அங்கீகார ஆரவாரங்கள், அடையாள அரசியல்கள், பிதாமகத் தோரணை தொனிக்கும் பட்டியல்கள், அற்பப் புகழ்ச்சிகள், இருட்டடிப்புகள், மனம் செத்துச் சரிதல்கள்….? எல்லாவற்றுக்கும் பதிலாக, 'ஆத்ம திருப்திக்காக எழுதுகிறோம்'என்றொரு வாக்கியம் எப்போதைக்குமாக நம்மைத் தாங்கிக்கொள்ளக் காத்திருக்கிறது. எந்தவொரு சொல்கொண்டு போர்த்தியும் மூடமுடியாத அம்மணமாம் நுகர்வுக் கலாச்சாரத்தின் அகராதியில் எழுத்தெனப்படுவது யாதுமில்லை.

'புத்தகங்களின் விலைகளைப் பார்க்கும்போது பதிப்பகங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களாக ஆகிவிட்டனவோ என்று எண்ணத் தோன்றுகிறது' என்ற அதிருப்தி கலந்த குரல்களை இவ்வாண்டு அதிகளவில் செவிமடுக்க நேர்ந்தது. பணப்பற்றாக்குறையால் வாங்கமுடியாமல் போன புத்தகங்களின் சுமையை மனதில் சுமந்துகொண்டு திரிவதென்பது உண்மையில் கொடுமையானது.

கைநிறையப் புத்தகப் பைகளைத் தூக்கமாட்டாமல் தூக்கிக்கொண்டு போனவர்களை, தனது ஏக்கம் வழியும் கண்களால் பார்த்துக்கொண்டிருந்த சிறுவன் ஒருவனை ஒருநாள் கண்டேன். அவனது கைகளில் ஒரு ஆங்கில-தமிழ் அகராதி மட்டும் இருந்தது. தந்தையின் சைக்கிளின் பின்னால் அமர்ந்து திரும்பித் திரும்பிப் பார்த்தபடி போனான். 'இந்த உலகம் ஏன் இப்படி இருக்கிறது?'என்று வேதனையாக இருந்தது.

இலக்கியம் என்பது உன்னதம், கலை அது இதுவென்று நம்பிக்கொண்டிருக்கும் இலட்சக்கணக்கான வாசகர்களை ஒரு சில பதிப்பகங்கள் (பெயர் குறிப்பிட விரும்பவில்லை) ஏமாற்றிக்கொண்டிருக்கின்றன. விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் புத்தகத்தை மலிவான தாளில், இலகுவில் கிழிந்துவிடும் அட்டைகளோடு அச்சிட்டு 'உயர்ந்த'விலையில் தலையில் கட்டும் சிலரது அறம் துணுக்கிற வைக்கிறது. அதே புத்தகம் அதனிலும் நேர்த்தியான அட்டை,காகிதம்,நேர்த்தியான வடிவத்தில் அதனிலும் குறைவான விலையில் வேறொரு பதிப்பகத்தில் காண நேர்கிறபோது, 'எழுத்தின் அறம் இதுவோ!'என்று நொந்து நடப்பதன்றி வேறென்ன செய்வதற்கியலும்?

புத்தகங்களைப் 'பண்டங்களாக'க் கருதுபவர்கள் மத்தியில் இன்னமும் சில மனிதர்கள் எஞ்சியிருக்கிறார்கள் என்றவகையில் மகிழ்ச்சி. 'க்ரியா'பதிப்பகமானது ஒப்பீட்டளவில் குறைந்த எண்ணிக்கையிலான புத்தகங்களையே ஒவ்வோராண்டும் வெளியிட்டு வருகிறது என்று (எனது அவதானத்தின்படி) எண்ணுகிறேன். க்ரியாவின் புத்தகங்கள் மட்டுமல்லாது, அதன் விலைப்பட்டியல் கையேடுகூட கலைநயத்தோடு, நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட கவிதை நூலொன்றின் சாயலுடன் மிளிர்ந்தது. கடந்த ஆண்டினைப்போலவே இவ்வாண்டும் விகடன், கிழக்கு, உயிர்மை, காலச்சுவடு ஆகிய விற்பனை நிலையங்களில் அதிக கூட்டம் குழுமியிருந்ததை அவதானிக்க முடிந்தது. அத்துடன், நற்றிணை போன்ற பதிப்பகங்களும் உற்சாகமான வரவேற்பைப் பெற்றதாக அறிந்தேன்.

எனது நண்பரும் எழுத்தாளருமாகிய பாஸ்கர் சக்தியிடம் "இம்முறை நிறையப் புத்தகங்கள் வாங்கினீர்களா?"என்று கேட்டபோது, "அதிகம் இல்லை"என்று பதில் வந்தது. "குறுகிய காலப் பயிராகிய குறுவைச் சாகுபடி போல, ஆகஸ்டில் எழுத ஆரம்பித்து டிசம்பரில் எழுதிமுடித்து புத்தக வெளியீட்டு விழாவும் நடத்தி, ஜனவரியில் புத்தகக் கண்காட்சிக்குக் கொண்டுவரப்படும் தயாரிப்புகளில் எனக்கு ஆர்வமில்லை"என்றார் அவர். அத்தகைய படைப்புகளில் எனக்குந்தான் ஆர்வமில்லை. கலையின் ஆவேசம் பிடரி பிடித்துத் தள்ள, படைப்பெழுச்சியால் உந்தப்பட்டு ஒரு பித்துநிலையில் அமர்ந்து ஒரே மூச்சில் உன்னதங்களைப் படைக்கக்கூடியவர்கள் மேற்குறித்த விமர்சனக் கத்தியை வைத்துத் தங்கள் கழுத்தை அறுத்துக்கொள்ள வேண்டியதில்லை.

இம்முறை புத்தகச் சந்தையில் வெளியிடப்பட்டிருக்கும் நூல்களுள் முக்கியமானவைகளாகக் கருதுவது (என்னளவில்) மொழிபெயர்ப்புகளையே. 'ராதுகா'பதிப்பகம் என்ற பெயரும் மக்கினாற்போன்ற நிறத்தினாலாகிய காகிதத்தில் விரிந்த மஞ்சள் பூச்சொரியும் புல்வெளிகளும் கோதுமை வயல்களும் மறக்கக் கூடியனவா? ஒவ்வொரு ஆண்டும் தஸ்தயேவ்ஸ்கியின் "கரமசோவ் சகோதரர்கள் வந்துவிட்டதா?"என்று விசாரிப்பது வழக்கமாக இருந்தது. ஈற்றில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸில் இவ்வாண்டு அந்நூல் வந்திருக்கக் கண்டேன். தமிழில் மொழிபெயர்த்திருப்பவர் கவிஞர் புவியரசு. அதே பதிப்பகம், டால்ஸ்டாயின் 'போரும் வாழ்வும்'இனை அழகிய முகப்பும் கெட்டி அட்டையுமாய் மூன்று தொகுதிகளாகப் பதிப்பித்திருக்கிறது. டி.எஸ்.சொக்கலிங்கம் மொழிபெயர்த்திருக்கிறார். 1957ஆம் ஆண்டு முதற்பதிப்பு வெளிவந்ததாக விவரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 'போரும் அமைதியும்'(சீதை பதிப்பகம்) என்ற பெயரில் ஏற்கெனவே என்னிடம் இருந்த மூன்று தொகுதிகளையும் அலைந்துலையும் வாழ்வில் எங்கோ தொலைத்துவிட்டேன். 'குற்றமும் தண்டனையும்'ஐ தமிழில் மொழிபெயர்த்த எம்.ஏ.சுசீலா தஸ்தயேவ்ஸ்கியின் Idiot ஐத் தமிழில் 'அசடன்'ஆக மொழிபெயர்;த்திருக்கிறார். பாரதி புக் ஹவுஸ் அந்நூலை வெளியிட்டிருக்கிறது. மாக்ஸிம் கார்க்கியின் 'யான் பெற்ற பயிற்சிகள்' (தமிழாக்கம்: ஆர்.ராமநாதன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்), ஜெர்மெயின் கிரீரின் 'பாலற்ற பெண்பால்: பெண்பால் நபும்சகம்' (தமிழாக்கம்: ராஜ்கௌதமன், விடியல்), சார்த்தரின் 'சொற்கள்' (தமிழாக்கம்: பரசுராம், தோழமை), 'கார்ல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு' (கையில் ஏந்தி வைத்துப் படிக்க இயலாத அளவு கனமுடையது- தமிழாக்கம்: ஏ.சீனிவாசன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்), மாம்மே ப்ராடர்சனின் 'வால்ட்டர் பெஞ்சமின்: நிலை மறுக்கும் வாழ்வு' (தமிழாக்கம்:எஸ்.பாலச்சந்திரன், விடியல்), கிராம்ஷி: புரட்சியின் இலக்கணம் (எஸ்.வி.ராஜதுரை-வ.கீதா – விடியல்), டிராட்ஸ்கி என் வாழ்க்கை (தமிழில்:துரை.மடங்கன் - விடியல்) ஆகிய நூல்கள் இம்முறை வாங்கியவைகளுள் குறிப்பிடத்தகுந்தவை.

மொழிபெயர்ப்பென்பது மிகக் கடினமான கலை. அதைச் செய்ய அளவிறந்த பொறுமையும் மூலமொழியிலும் பெயர்க்கும் மொழியிலும் தெளிந்த அறிவும் அவசியம். மூலமொழிக்கு நியாயம் சேர்க்கும் அதேசமயம், பெயர்க்கப்படும் மொழியின் உச்சபட்ச பயன்பாட்டிலும் கவனஞ் செலுத்த வேண்டும். மூலமொழியின் நிலம், அரசியல் பின்புலம், பண்பாடு என்பன பற்றியும் அறிந்திருத்தல் வேண்டும். உலக இலக்கியங்களையும், மானுடத்தைச் செழுமையுறச் செய்த (அல்லது, தம்மால் முடிந்தவரை முயற்சித்த) கோட்பாடுகளையும் தத்துவங்களையும் தமிழில் மொழியாக்கம் செய்துதரும் கைகளைத் தொட்டு வணங்கத் தோன்றுகிறது. எந்தவொரு படைப்பும் தாய்மொழியில் வாசிக்கும்போது மூளையில் சென்று படிவதுபோல, பிறமொழிகளில் வாசிக்கும்போது படிவதோ நிலையாகப் பதிவதோ கிடையாது.

இம்முறை புத்தகச் சந்தையில் ஈழம் பற்றிய புத்தகங்கள் நிறையக் காணக் கிடைத்தன. 'இலங்கையின் பேரினவாதிகளால் காலகாலமாக ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்டு வந்த கொடுமைகளைத் தமது எழுத்தில் கொணர்ந்து தமிழகத்தில் எழுச்சியை ஏற்படுத்தத் தவறினார்கள்' என்றொரு அதிருப்தி பாதிக்கப்பட்டவர்களிடத்தில் நிலவியது. அதே நேரத்தில், 2009 மே மாதம், பேரழிவு நிகழ்ந்து குருதியின் சூடு ஆறுவதற்குள்ளாகவே கிழக்குப் பதிப்பகம் 'பிரபாகரன்:வாழ்வும் மரணமும்'என, 'சுடச் சுட'ஒரு புத்தகம் போட்டது வாசகர்களுக்கு நினைவிருக்கும். எந்த தி.மு.க. இனப்படுகொலைக்கு முதுகு காட்டிக்கொண்டு காங்கிரஸோடு நாற்காலி பேரத்தில் ஈடுபட்டிருந்ததோ, அந்த தி.மு.க.வோடு தோளோடு தோள்நின்ற அருட்தந்தை ஜெகத்கஸ்பர் 'வீரம் விளைந்த ஈழம் - மறக்க முடியுமா?'என்ற புத்தகத்தின் மூலம் தனது ஆறாத் துயரத்தை 2009இல் வெளியிட்டார். நந்திக்கடலோரத்தில் ஒரு சகாப்தம் நிறைவுற்றது என்ற செய்தி வெளியாகிச் சில நாட்களிலேயே, தலைவர் பிரபாகரன் தமது பத்திரிகையைப் படித்துக்கொண்டிருப்பதுபோல அட்டைப் படம் வெளியிட்டு, மக்களின் எதிர்பார்ப்பைக் காசாக்கி கல்லாவை நிரப்பியது 'நக்கீரன்'. ஈழத்தில் என்ன நடந்தது என்பதை அறிந்துகொள்ள, தமிழகத்திலுள்ள சாதாரண சனங்களுக்கு புத்தகங்களன்றி வேறு கதியில்லை என்பது புரிந்துகொள்ளத்தக்கதே. ஆனாலும், கொலைபடுகளத்தின் ஓலம் ஓய்வதற்குள், ஒரு இனம் தாம் வீழ்ந்துபட்டோம் என்ற திகைப்பிலிருந்து மீள்வதற்குள், அதை விலை பேசி விற்றுவிடும் சில பிழைப்புவாதிகளின் வணிக தந்திரம் சகித்துக்கொள்ளற்பாலதன்று.

2009ஆம் ஆண்டுவரை, ஈழச்சிக்கல் குறித்து விவாதங்களை முன்னெடுக்கும் புத்தகங்கள் குறைவாகவே வெளிவந்திருந்தன. இம்முறை கண்காட்சியில் அந்தக் குறை நிவர்த்தி செய்யப்பட்டிருந்தது. சொல்லப்பட்டு வரும் பல்வேறு வரலாறுகளிலிருந்து தீர்க்கமான வரலாற்றை (அப்படியொரு வரலாறு மனிதர்களால் அறிந்கொள்ளச் சாத்தியமற்றதெனினும்) வந்துசேரும் நோக்கில் ஈழம் பற்றி மேலும் சில அபுனைவு (அவற்றுள் அதிபுனைவுகளும் உண்டு) நூல்களை வாங்கினேன். ஏனையவர்களுக்குப் பயன்படக்கூடும் என்பதனால் அந்தப் புத்தக விபரத்தைத் தருகிறேன்.

நூல்களின் பட்டியல்: இலங்கையில் சமாதானம் பேசுதல்: முயற்சிகள், தோல்விகள், படிப்பினைகள் (கலாநிதி குமார் ரூபசிங்க – அடையாளம்), போர் உலா (கப்ரன் மலரவன் - விடியல்), கூண்டு (கார்டன் வைஸ் - தமிழில்: கானகன் - காலச்சுவடு, வாழ்புலம் இழந்த துயர் (மு.புஷ்பராஜன்-சாளரம்), ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிட முடியுமா? (கலையரசன்-வடலி), இந்துமகா சமுத்திரமும் இலங்கை இனப்பிரச்சனையும் (உதயன்-விஜயன், விடியல் பதிப்பகம்), இலங்கை: தேசிய இனப்பிரச்சினையும் தீர்வுக்கான தேடல்களும் (சி.சிவசேகரம்-கீழைக்காற்று), இந்திரா மற்றும் ராஜீவ் காந்தி கொலையாளிகளும் அப்பாவிகளும் (ஜெய.ஆ.இராமநாதன்), இலங்கை: ஐக்கிய நாடுகள் அவையின் வல்லுநர் குழு அறிக்கை (தமிழில்:பூங்குழலி, புதுமலர் மற்றும் தலித் முரசு வெளியீடு),கொலை மறைக்கும் அரசியல் (சேனன் - உயிர்மை),தமிழினப் படுகொலைகள் 1956 – 2008 (வடகிழக்கு மனித உரிமைகள் செயலகம் - மனிதம் வெளியீடு) இலங்கை இறுதி யுத்தம்: இலங்கை இராணுவம் வென்றது எப்படி? (நிதின் கோகலே – கிழக்கு), விடுதலைப் புலிகள் மீதான அவதூறுகளுக்கு மறுப்பு (விடுதலை இராசேந்திரன் - பெரியார் திராவிடக் கழக வெளியீடு), ஈழம் போர்நிலம் (தீபச்செல்வன் - தோழமை வெளியீடு), ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள் (கணேசன் ஐயர் - இனியொரு வெளியீடு), மகாவம்ச: சிங்களர் கதை (வில்ஹெம் கெய்கர்- தமிழில்:எஸ்.பொ. – மித்ர பதிப்பகம்), வாய்மையின் வெற்றி: ராஜீவ் காந்தி படுகொலை புலனாய்வு (டி.ஆர்.கார்த்திகேயன், ராதா வினோத் ராஜூ - தமிழில்:எஸ்.சந்திரமௌலி – ராஜராஜன் பதிப்பகம்). மேற்குறிப்பிடப்பட்டவற்றுள் சில புத்தகங்கள் ஏற்கெனவே என்னிடம் இருந்து தொலைந்துபோனவை.

ஈழத்தில், இந்திய அமைதிப் படையின் காலத்துடன் தொடங்கி, 2003ஆம் ஆண்டுவரையான காலகட்டத்தைப் பேசிய சயந்தனின்'ஆறாவடு'நாவல் (தமிழினி வெளியீடு) தமிழக வாசகர்களிடையேயும் எழுத்தாளர்களிடையேயும் பரவலான கவனத்தைப் பெற்றது இங்கு குறிப்பிடத்தக்கது.

சிறுவருக்கான புத்தகங்கள் தமிழில் அருகிப் போய்க்கொண்டிருக்குங் காலத்தில், யூமா வாசுகியின் மொழிபெயர்ப்புப் பங்களிப்பினைப் பற்றிச் சொல்லியாக வேண்டியிருக்கிறது. 'இப்படியொரு கவித்துவ மொழி நடை கொண்ட கலைஞன், குழந்தைகள் இலக்கியத்தில் எதற்காக இவ்வளவு கவனஞ் செலுத்துகிறார்?'என்று வியந்தார் தோழியொருவர். யூமா வாசுகியின் 'மஞ்சள் வெயில்'ஐ அண்மையிலே வாசித்து நெகிழ்ந்திருந்தார் அவர். இவ்விலக்கிய வகைமையுள் இரா.நடராசனும் குறிப்பிடத்தகு பங்களிப்பைச் செய்திருக்கிறார். 'ஆயிஷா'வை வாசித்தவர்கள் அவளை ஒருபோதும் மறக்கமாட்டார்கள். குழந்தைகளை ஆத்மார்த்தமாக நேசிக்காமல் அவர்களது உலகைக் குறித்து எழுதவும் மொழிபெயர்க்கவும் முடியாது என்றவாறாக எங்களது உரையாடல் நீண்டது. சின்னஞ்சிறாரது மனவுலகம் குறித்த கவிதைகளையும் பதிவுகளையும் பற்றிப் பேசுகையில், அவ்வகைமையுள் எழுதிவரும் விஷ்ணுபுரம் சரவணன் நினைவில் வருகிறார்.

விஜய் தொலைக்காட்சியில் அறிவிப்பாளராக, நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணியாற்றும் கோபிநாத்தின் 'ப்ளீஸ்… இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க'என்ற புத்தகம் பல்லாயிரக் கணக்கில் விற்றுத் தீர்ந்து சாதனை படைத்ததாக நண்பரொருவர் சொன்னார். இந்தப் புத்தகக் கண்காட்சியில் கோபிநாத்தைப் பார்த்தேன். அவரோடு சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொள்ள பெரிய கூட்டமே கண்களில் ஆவல் கொப்பளிக்கக் காத்திருந்தது. அதன்பிறகு மேடையில் உரையாற்றிய கோபிநாத், தன் பலம் அறியாத யானையின் கதையைச் சொல்லி, 'அப்படித்தான் இந்தியர்களாகிய நாமும்'என்றபோது, 'சிறுகயிற்றில் கட்டப்பட்டிருந்த பெருங்களிறுகள்' உற்சாகத்தில் கரவொலி எழுப்பினர். ஆக, புத்தகங்கள் விற்றுத் தீர்வதற்கும், உரையாற்றுகிறபோது நாற்காலிகள் நிறைந்திருக்கவும் நட்சத்திரப் பெறுமதி வேண்டும் என்பதறிக.

'தாமரை'இதழின் ஆசிரியரும் கம்யூனிஸ்ட் தோழருமாகிய சி.மகேந்திரனின் 'வீழ்வேனென்று நினைத்தாயோ…'புத்தக வெளியீட்டு விழாவின் ஆரம்பத்தில் பல நாற்காலிகள் காலியாகவே இருந்தன. கூட்ட முடிவில் ஏறத்தாழ எல்லா நாற்காலிகளும் நிறைந்திருக்கக் கண்டேன். அதற்கு தமிழருவி மணியனின் உரையும் ஒரு காரணம் என்று சொல்லின், அந்நேரம் அங்கிருந்தோர் அதை மிகையெனச் சொல்லார். மிகுந்த துயரமும் வெப்பியாரமும் கொதிப்பும் வெறுப்பும் வழியும் குரலில் அவர் சொன்னார்…"சமூக அக்கறையற்ற சொரணையிழந்த இந்த மக்கள் கூட்டத்தினிடையில் வாழ நேர்ந்தமைக்காக வெட்கப்படுகிறேன். விரைவில் செத்துப் போக வேண்டுமென விரும்புகிறேன்." பிறர்மேல் தமிழெனும் மூச்சை விடும் உணர்ச்சிவசப்பட்ட பேச்சிலிருந்து மாறுபட்டு அது உண்மையின் குரலாக ஒலித்தது. பொய்யிலிருந்து அத்தகைய வெம்மை புறப்பட்டு வந்து நெஞ்சைத் தீய்த்திருக்க முடியாது.

ஒவ்வொரு நாட்களும் யாராவது ஒருவருடைய புத்தக வெளியீட்டு விழா கண்காட்சியில் நிகழ்ந்தபடியிருந்தது. மேடையில் அமர்ந்திருக்கும் கருத்துரையாளர்களிடம் மணிக்கணக்கில் செவிகளைக் கையளித்துவிட்டு 'எப்போதடா கூட்டம் முடியும்?'என்று காத்திருப்பதிலும், புத்தகக் கண்காட்சியினுள் இடம்பெற்ற பதினைந்து நிமிட வெளியீட்டு விழாக்கள் மகிழ்ச்சியளிப்பனவாக இருந்தன. கடந்த ஆண்டு போல, கண்காட்சியைச் சாட்டாக வைத்து நண்பர்கள் சந்தித்துக் கொள்ளும் குதூகலம் என்ன காரணத்தினாலோ இம்முறை அதிகளவில் கிட்டவில்லை.

முந்தைய ஆண்டுகளோடு ஒப்பிடுமிடத்து இவ்வாண்டு குறிப்பிடத்தகுந்த அளவில் ஈழத்து எழுத்தாளர்கள் புத்தகக் கண்காட்சிக்கு வந்திருந்தார்கள். கொழும்பிலிருந்து கே.எஸ்.சிவகுமாரன், மட்டக்களப்பிலிருந்து உமா வரதராஜன் கல்முனையிலிருந்து அனார் (குடும்பத்துடன் வந்திருந்தார்) கனடாவிலிருந்து சேரன், சுவிட்சர்லாந்திலிருந்து சயந்தன், நோர்வேயிலிருந்து வ.ஐ.ச.ஜெயபாலனும் வந்திருந்தார்கள். ஈழவாணியும் சோமிதரனும் தீபச்செல்வனும் யாழ் தர்மினியும் நானும் சென்னைவாசிகள் என்ற கணக்கெடுப்பினுள் வருகிறோம். தமிழகத்தைச் சேர்ந்தவர்களுள் அமெரிக்காவிலிருந்து பெருந்தேவியும், நைஜீரியாவிலிருந்து நேசமித்ரனும் வந்திருந்தார்கள். அல்லது, அவர்களை மட்டுமே சந்திக்கவும் பேசவும் முடிந்தது.

கண்காட்சியிலிருந்து வெளியே வந்தபோது எதிர்ப்பட்ட கவிஞர் ஒருவர், "ஈழத்தமிழர்கள் ஏன் எப்போதும் புலம்புகிறீர்கள்?"என்று கேட்டார். அவர் குடித்திருந்தார். அந்தக் கேள்வி அவரால் மட்டும் கேட்கப்பட்டதாக அதன் தொனி உணர்த்தவில்லை. பல்லாண்டுகளாகக் கேட்கப்பட்டு வரும் கேள்விதான் அது. "உங்கள் உறவுகளில் சில பேரைக் கொன்றுவிடலாம். உங்கள் வீட்டை எரித்துவிடலாம். உங்களை வேறொரு மாநிலத்திலோ அல்லது நாட்டிலோ கொண்டுபோய் இறக்கிவிட்டு விட்டு உங்களிடம் இதே கேள்வியைக் கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள்?"என்று கேட்க நினைத்தேன். ஆனால், கேட்கவில்லை. வயதானவர்களையும் குடித்திருப்பவர்களையும் வார்த்தைகளால் தானும் காயப்படுத்துவது பண்பாட்டுக்கு முரணானது. மேலும், அவர் நேசிக்கத்தகு கலைஞனாயிருக்கிறார் என்பதனாலும் எதிர்வினையாற்றுவதைத் தவிர்த்து விலகி விரையவேண்டியதாயிற்று. 'குடி நீக்கம்'செய்யப்பட்ட வார்த்தைகளே பொருட்படுத்தத் தக்கனவாம்.

இனிமேல் புத்தகங்கள் வாங்குவதில்லை என்ற சங்கற்பம் சங்கற்பமாகவே நின்றுவிட்டது. வாங்கிக் குவித்திருக்கும் புத்தகங்கள் என்னைப் பரிகாசப் புன்னகையோடு பார்த்துக் கொண்டிருக்கின்றன. பட்டியலைக் கணனியில் சேமிக்கும் வேலைகூட இழுபறியாக இருக்கும் நிலையில், எப்படித்தான் இவ்வளவையும் வாசித்து முடிக்கப் போகிறோம் என்று மலைப்பாக இருக்கிறது. புத்தகங்களுக்குள்ளிருந்து, கொலையுண்டவர்களின் குருதி பெருக்கெடுக்கிறது. நம்பிய கொள்கைக்காக மாண்டவர்களது சாம்பல் பறந்து வந்து முகத்தை மூடுகிறது. சரிந்த சாம்ராஜ்ஜியங்களின் இடிபாடுகளுக்குள்ளிருந்து தீனமான குரல்கள் கேட்கின்றன. இழந்த காதலின் பாடல்கள் மிதந்து வருகின்றன. மொழியின் அழகு பித்தேற்றிப் பிதற்றத் தூண்டுகிறது.

புத்தகங்களுக்கு நடுவில் எப்போதும் இருக்க வாய்த்தவர்கள் பாக்கியவதிகள்-பாக்கியவான்கள்.

நன்றி - தீராநதி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 11, 2012 21:40

October 3, 2011

சாதலின் அழகியல்






"மிதமிஞ்சிய பித்துநிலையே தெய்வீகமான அறிவு"
-எமிலி டிக்கின்சன்

பெப்ரவரி 11, 1963. இலண்டனில் அது கடுங்குளிர் காலம். ஏறத்தாழ நூறு ஆண்டுகளுக்குப் பிறகு அத்தகைய கொடிய பனிக்காலம் வந்து சேர்ந்திருந்தது. அதிகாலையில் இரு குழந்தைகளும் உறக்கத்தில் தேவதைகளுடன் உரையாடிக்கொண்டிருந்தார்கள். அவர்களது கனவு கலைந்துவிடாதபடி மென்மையாக முத்தமிட்டாள் சில்வியா. காலை உணவாக ரொட்டியும் பாலும் எடுத்துவைத்தாள். சமையலறைக்குச் சென்று அதன் கதவிடுக்கின் வழியாகவோ யன்னல்கள் வழியாகவோ மரணம் வெளியில் கசிந்துவிடாதபடி ஈரத்துணிகளால் இறுக அடைத்தாள். அடுப்பைத் திறந்து அதனுள் ஒரு துவாலையை மடித்துவைத்தபின் எரிவாயுவைத் திறந்துவிட்டாள். துவாலையில் தலைசாய்த்து நிதானமாக சாவைச் சுவாசிக்க ஆரம்பித்தாள். குறிப்பிட்ட நேரத்தில் தாதி வந்துவிடுவாள் என்ற நினைவு, மயங்கத் தொடங்கியவளுள் நிழலாடி மறைந்தது.

தனது முப்பதாவது வயதில் சொற்களிடமிருந்தும் துயரங்களிடமிருந்தும் விடைபெற்றுக்கொண்டாள் சில்வியா பிளாத்… வாழ்நாள் முழுவதும் உளவியல் சிக்கல் சில்வியாவை ஒரு நிழலெனத் தொடர்ந்துகொண்டிருந்தது. அது, அவளை வீழ்த்துவதும் - அவள் அதனைத் தற்காலிகமாக முறியடித்து விரட்டுவதுமான இடையறாத போராட்டம். சிறுவயதில், சில்வியாவின் தாயார் அவளது கால்களில் காயத் தழும்புகளைக் கண்ணுற்று என்ன நடந்ததென்று வினவியபோது, ஏதேதோ சொல்லி மழுப்பினாள். வற்புறுத்திக் கேட்டபோது, "நான் சாக விரும்பினேன்"என்று பதிலளித்தாள். அதனையடுத்து- மனவழுத்தத்திலிருந்து மீள்வதற்காக உளவியல் ஆலோசனை சிகிச்சை, விரைவில் குணப்படுத்துமென நம்பப்பட்ட மின்னதிர்ச்சி உள்ளிட்ட சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டாள். அவளது இருபதாவது வயதில், மீண்டும் தற்கொலைக்கு முயற்சித்தாள். நடக்கப் போவதாக குறிப்பொன்றை எழுதிவைத்தபின் நாற்பது தூக்கமாத்திரைகளை விழுங்கிவிட்டு நிலவறையிலுள்ள புழங்காத பகுதியொன்றில் மறைந்துகிடந்தாள். அந்தச் செய்தி பத்திரிகைகளில் முதற்பக்கத்தில் பிரசுரமாயிற்று. ஊரே திரண்டு தேடியது. நாற்பது மணித்தியாலங்களுக்குப் பிறகு, வாந்தியால் ஈரமாகி நாற்றமெடுத்த ஆடைகளோடு அரைமயக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டாள். 'லேடி லாசரஸ்'என்ற கவிதையில் அந்தக் காட்சியை இவ்விதம் சித்தரித்திருக்கிறாள்.

இரண்டாம் முறை,
இதுவே கடைசி
இனித் திரும்பேன் எனும் முத்தாய்ப்போடு
இறுக்கி மூடினேன் என்னையொரு சிப்பியென.
மீண்டும் மீண்டும் கூவியழைத்து மீட்டபின்
பிரித்தகற்றினர்
முத்துக்களைப் போல ஒட்டியிருந்த புழுக்களை.

சாதலும்
ஏனைய கலைகளைப் போலொன்றே
அபூர்வ அழகோடு
அதனை நான் நிகழ்த்துகிறேன்.

தற்கொலைக்கு முயன்று தப்பிப் பிழைத்த பிற்பாடு எதிர்கொள்ளவேண்டியிருந்த வாதைகளை 'செய்யுந்தோறும் நரகம்'என மேற்குறித்த கவிதையில் குறிப்பிட்டிருக்கிறாள். பிறகொரு தடவை கார் விபத்தில் சிக்கினாள். அது விபத்தன்று- தற்கொலை முயற்சி என்று, பிறகு அவளாகவே ஒப்புக்கொண்டாள். நீண்ட நாட்களுக்கு – வாரங்களுக்குக் கூட உறங்காமல் 'இன்சோம்னியா'வினால் தொடர்ந்து அவதிப்பட்டுவந்தாள்.

"ஓய்வெடுத்தால், ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினால் நான் பைத்தியம் ஆகிவிடுகிறேன்"

எட்டு வயதில் முதல் கவிதை பிரசுரமாகும் உவகையை அனுபவித்த சிறுமி, படித்த பள்ளிக்கூடங்களில் படிப்பு-படைப்பாற்றலால் புகழ்பெற்ற மாணவி, கேம்பிரிட்ஜ் போன்ற பல்கலைக்கழகத்தில் புலமைப்பரிசல் பெற்றுப் படிக்கக்கூடிய திறன்வாய்ந்தவள், உரைநடை, கவிதை எனப் பன்முக ஆற்றல் மிக்கவளாக அறியப்பட்டு பிரபலமான சஞ்சிகைகளில் படைப்புகள் வெளிவரப் பெற்றவள், சமூகத்தில் மதிப்புக்குரியவர்கள் எனப் போற்றப்பட்டவர்களால் அங்கீகரிக்கப்பட்ட கவிஞர் - மீண்டும் மீண்டும் மரணத்தை நேசித்தது ஏன்? தனது குறிப்பொன்றில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறாள்:

"தன்னை அழிப்பதன் மூலமாக இந்த உலகத்தை அழிக்க நினைக்கும் அதீத அகங்காரத்தினால் என்னை நானே ஏமாற்றிக்கொண்டிருந்தேன். உண்மையில், என்னுடைய பொறுப்பிலிருந்து தப்பித்து மீண்டும் கர்ப்பப்பையினுள் சென்று ஒளிந்துகொள்ளவே தற்கொலை செய்துகொள்ள விரும்பினேன்."

சிறு வயதில் தந்தையை இழந்ததானது சில்வியாவின் இறுதி நாட்கள் வரை அவளைப் பாதித்தது என்கிறார்கள். தந்தையின் மரணச்செய்தியை அவளிடம் தெரிவித்தபோது "இனி நான் ஒருபோதும் கடவுளோடு பேசமாட்டேன்"என்றாளாம். சில்வியா தற்கொலை செய்துகொள்வதற்கு சில நாட்கள் முன்பு எழுதிய'டாடி' என்ற கவிதையில் அந்த இழப்பானது கோபம், வெறுப்பு, துயரம் கலந்து வெளிப்பட்டிருக்கிறது.

அவர்கள் உங்களைப் புதைத்தபோது
எனக்கு வயது பத்து
இருபது வயதில் மரணத்தை விழைந்தேன்
மீண்டும் மீண்டும் மீண்டும் ...
உங்களை வந்தடைய
எலும்புகள் கூட விழைந்தன
Electra on Azalea Path என்ற கவிதையில்…

எவரதும் போலவே
உங்களது மரணமும் இயல்பென்றாள் என் தாய்
அம்மனநிலையை உள்வாங்கும் வயதேறுதல்
சடுதியில் எங்ஙனம் நிகழும்?
தற்கொலையின் அபகீர்த்தியைச் சுமந்தலையும் ஆவி நானே… எனதே எனதான
நீலநிற கூரிய கத்தியொன்று
என் தொண்டைக்குள்ளே
துருவேறிக்கொண்டிருக்கிறது.

'ஆசிரியன் இறந்துவிட்டான்' (ஆசிரியை இறக்கமாட்டாளா?) என்பதற்கு அமைவுற, சில்வியாவின் கவிதைகளை வாசித்தவர்கள் அவற்றைத் தமதெனக் கொண்டார்கள். கொண்டாடினார்கள். அவளுடைய படைப்புகளிலும் தற்கொலையிலும் தங்களைப் பொருத்திப் பார்த்தார்கள். அவளுடைய கண்களால் பார்க்கவும், காலணிகளில் புகுந்துகொள்ளவும் விழைந்தார்கள். கணவன்மாரால் துரோகிக்கப்பட்டவர்கள் அந்தக் கவிதைகளைத் தங்களுக்கானவையாகச் சுவீகரித்துக்கொண்டார்கள். குளிரிலும் தனிமையிலும் வறுமையிலும்-இரண்டு சின்னஞ்சிறு குழந்தைகளுடன் கைவிடப்பட்ட ஒரு பெண்ணின் சித்திரம் சமூகத்தின் கோபத்தைத் தூண்டப் போதுமானதே. சில்வியா பிளாத்தின் கணவர், கவிஞர் ரெட் ஹியூஸின் பெயரை சில்வியாவின் கல்லறையிலிருந்து அழித்துவிடும்படி தொடர்ச்சியாக அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதும் அதன் பொருட்டே. 'கொலைகாரன்'என்ற சாபங்கலந்த தூற்றுதல்கள், குற்றச்சாட்டுகள், துரத்தும் கேள்விகள், கொலை மிரட்டல்களுக்கு தனது வாழ்நாள் முழுவதும் முகங்கொடுக்கவேண்டியவராக ஹியூஸ் இருந்தார். சில்வியா பிளாத்தின் தற்கொலைக்குப் பிற்பாடு சில்வியாவின் நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில் "என்னுடைய வாழ்வு முடிந்துபோயிற்று"என்று துக்கித்திருக்கிறார். சில்வியாவின் அனுதாபிகள், ஆதரவாளர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது, "அவர்களுக்குத் தேவையாக இருந்ததெல்லாம் உண்மைகளல்ல- சில்வியா மீது புனையப்பட்ட மாயைகளே"என்றிருக்கிறார்.

அவர் தன்னுடைய கருத்தை மகளுக்கும் தரத் தவறவில்லை. சில்வியா பிளாத்தின் இறுதி நாட்களில் எழுதப்பட்ட கவிதைகள் 2004ஆம் ஆண்டில், அவரது மகளான பிரீடா ஹியூஸினால் 'ஏரியல்'என்ற தொகுப்பாக வெளியிடப்பட்டது. (சர்ச்சைக்குள்ளான முதல் தொகுப்பு கணவரால் வெளியிடப்பட்டது.) அதன் முன்னுரையில், "என்னுடைய தந்தையால் வெளியிடப்பட்ட 'ஏரியல்'தொகுப்பை, என் தாயின் தற்கொலையால் கட்டமைக்கப்பட்ட புனிதத்தன்மையோடு சேர்த்துப் பார்க்கிறார்கள்."என்று குறிப்பிட்டிருக்கிறார் பிரீடா. மேலும், "எனது தாய் எத்தனைக்கெத்தனை மகத்தான கவிஞராக இருந்தாரோ, அத்தனைக்கத்தனை ஒரு சாதாரண மனிதப் பிறவியாகவும் இருந்திருக்கிறார் என்பதை நான் பின்னாட்களில் உணர்ந்துகொண்டேன். என் தந்தையின் பொறுமையோடும் நன்மை விழையும் தன்மையோடும் ஒப்பிடுமிடத்து என் தாய் பொறாமையும் மிகுந்த கோபமும் உடையவராக இருந்திருக்கிறார் என்பதையும் உணர்ந்துகொண்டேன். எனது தந்தையின் கவிதைகளை ஒரு சமயம் கிழித்தும் மற்றோர் சமயம் எரித்தும் அழித்ததை அறிந்து நான் திகைப்புற்றேன்"என்கிறார். அஸ்ஸியா வேவெல் (டேவிட் வேவெல் என்ற கவிஞனின் மனைவி)என்ற பெண்ணுடன் கணவருக்கு ஏற்பட்டிருந்த உறவை அறிந்த சில நாட்களில், பெருங்கோபமுற்ற சில்வியா 'பெல் ஜார்'நாவல் எழுதுவதற்கான குறிப்புகள் சிலவற்றையும், தனது தாயாரால் எழுதப்பட்ட ஆயிரக்கணக்கான கடிதங்களையும், ஒரு பெட்டி நிறையக் குவிந்திருந்த ரெட் ஹியூசின் கடிதங்களையும், அவரது சில கவிதைகளின் ஆரம்ப வரிகளையும் தீயிலிட்டு எரித்திருந்தாள்.

பிரீடா தன் தந்தையை நியாயப்படுத்துவதில் நியாயமேயில்லை. ரெட் ஹியூஸ் ஒரு தண்மையான மனிதராகவே இருந்திருக்கலாம். சில்வியா பிளாத் இறந்தபிறகு அவளுடைய கவிதைகளில் தற்கொலை ஏற்றிவைத்துப் பேசப்பட்டதானது, ஊடகங்களின் உருப்பெருக்கிக் காட்டும் முயற்சி என்பதையும் ஓரளவு ஒத்துக்கொள்ளவே வேண்டும். சில்வியாவின் வாழ்வையும் தற்கொலையையும் மறந்துவிட்டு ஒரு கவிதையைத்தானும் வாசிக்கமுடியாது என்பதும் உண்மையே. ஆனால், சிறுவயதிலிருந்தே மனவழுத்தத்தால் பீடிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டிய நிலையிலிருந்த (சில்வியாவின் மனநல மருத்துவர் அவளை வைத்தியசாலையில் அனுமதிக்க இடம் தேடிக்கொண்டிருந்தார்) தன் மனைவியை, (காதல் மனைவி என்று சேர்த்துச் சொல்லவேண்டும்) தற்கொலையின்பால் தீரா வேட்கை கொண்டிருந்தவளை, பொருளாதார நெருக்கடியில் அவதியுற்றுக் கொண்டிருந்தவளை, படைப்பெழுச்சிக்கும் - பெண்ணாக இருந்த காரணத்தால் குழந்தை வளர்ப்பு இன்னபிற பாடுகளுக்கும் இடையில் அல்லாடிக் கொண்டிருந்தவளை, நோய்வாய்ப்பட்டிருந்த இரு சின்னஞ்சிறு குழந்தைகளுடன் அந்தக் கடுங் குளிர்காலத்தில் (கோடையில் நீங்கியிருக்கலாம் என்று சொல்லவில்லை) வேறொருத்தியின் பொருட்டு, அதிலும் குறிப்பிடத்தக்க அழகி என்று கருதப்பட்ட ஒருத்தியோடு நீங்கிச் சென்றதன் அடித்தளத்தில் இயங்கிய சுயநலமானது எவ்வகையிலும் எவராலும் நியாயப்படுத்தப்பட முடியாதது; கூடாதது.

சில்வியா பிளாத்தைப் பொறுத்தமட்டில், உளவியல் சிக்கல்கள் காரணமாக அவள் தற்கொலையை நோக்கி இலகுவில் தூண்டப்படக்கூடியவராக இருந்தாள். ஒரு கைவிரல் சொடுக்குக்குக் காத்திருக்கும் விசைபோல மரணம் அவளுக்காகக் காத்திருந்தது. தந்தையை இழந்து, தந்தையின் இடத்தை நிறைத்ததாக எண்ணியிருந்த கணவனும் நீங்கிச்சென்ற அந்தக் குளிர்காலத்தில் 'டாடி'யை எழுதினாள். தற்கொலை செய்துகொள்வதற்கு சில நாட்கள் முன்பாக எழுதப்பட்ட பல கவிதைகளில் 'டாடி'யும் ஒன்று.

நான் ஒருவனைக் கொன்றிருந்தால்
இருவர் அழிந்திருப்பர்.
அந்தக் காட்டேரி
தானே நீங்களென விளம்பிற்று.
அது எனது குருதியை ஓராண்டு…
ஏழாண்டுகளாகக் குடித்திருந்தது
…………………………… ……………………………..

எந்தப் பெண்ணின் பொருட்டு சில்வியா பிளாத்தை அவரது கணவர் நீங்கிச் சென்று தீராப் பழிக்கு ஆளானாரோ, அந்தப் பெண்ணும், ஆறு ஆண்டுகளின் பின் (25 மார்ச், 1969) சில்வியாவைப் பின்பற்றி அதே பாணியில் சமையல் எரிவாயுவைத் திறந்துவிட்டு மூச்சுத்திணறி இறந்துபோனாள், தனியாகவல்ல; தனது நான்கு வயது மகள் சுராவையும் தன்னோடு சேர்த்துக்கொண்டாள். இறந்தவளின் நிழல் போகுமிடமெல்லாம் தொடர்வதை எவரோ சகித்திருப்பர்? இதனையடுத்து ரெட் ஹியூஸ் தன்னை நியாயப்படுத்துவதற்கான தகுதியை முற்றிலும் இழந்தவரானார். 'அவர் ஒரு வன்முறையாளன்'என்பது உறுதிப்படுத்தப்பட்டதாக பெண்ணியவாதிகள் குற்றஞ்சாட்டினர். சில்வியா பிளாத்தின் மகன் நிக்கலஸ் மார்ச் 16, 1989இல் தூக்கு மாட்டிக்கொண்டு இறந்துபோனார். அந்தச் செய்தியை "சில்வியா பிளாத்தும் அவரால் கொல்லப்பட்ட அவரது மகனும்"என்று, பத்திரிகா தர்மம் மீறாமல் எழுதியது ஒரு சஞ்சிகை. தற்கொலை செய்துகொண்டு இறந்தவர்களின் பிள்ளைகளுக்கு சொந்தமாக மனவழுத்தங்கள் இருக்கக்கூடாதென்பது அத்தகையோரின் விதியாக இருக்கலாம். தனது சகோதரர் நீண்ட காலம் மனவுளைச்சலில் இருந்தபின் தற்கொலை செய்துகொண்டதாக அவருடைய சகோதரி பிரீடா தெரிவித்தாள். சில்வியா பிளாத் தற்கொலைக் குறிப்பு எதனையும் எழுதிவைத்திருக்கவில்லை. ஆகவே, அவளால் கடைசியாக எழுதப்பட்ட கவிதைகளை வெளியிடும் பொறுப்பை கணவர் தன்னுடையதென எடுத்துக்கொண்டார். அப்படி 'எடுத்துக்கொள்ளப்பட்ட உரிமை'யானது சில்வியா பிளாத்தின் ஆதரவாளர்கள், அனுதாபிகள், பெண்ணியவாதிகளிடையே பெருங்கோபத்தைக் கிளப்பியது. தற்கொலைக்குத் தூண்டிய ஒருவருக்கு அந்த உரிமை கிடையாது என்று பொங்கியெழுந்தார்கள். 'ஏரியல்'தொகுப்பில், கவிதைகளை சில்வியா ஒழுங்கமைத்திருந்த வரிசையின்படி அல்லாமல் மாற்றி வெளியிட்டதும், சில கவிதைகள் வெளியிடத் தகுதியற்றவையென நீக்கப்பட்டிருந்ததும் அவர்களது கோபம் அதிகரிக்கக் காரணமாயிற்று. ஆனால், சில்வியா ஒழுங்கமைத்திருந்த வரிசையின்படி அவற்றை உள்ளபடியே வெளியிட்டிருந்தால், 'குடும்பத்திலுள்ள அங்கத்தவர்களுக்கும் உறவினர்களுக்கும் சில அயலவர்களுக்கும்கூட அபகீர்த்தி விளைவிப்பனவாகவும், மனம் புண்படுத்தும்படியாகவும் அவை அமைந்திருக்கும்'என்று, பிரீடா தனது தொகுப்பின் முன்னுரையில் கூறியிருக்கிறார். சில்வியாவின் கணவரால், அவளது மரணத்தின் வெளியிடப்பட்ட 'ஏரியல்' தொகுப்பு பற்றி கருத்துத் தெரிவித்த அல்வாரஸ், 'இவ்வகையில் கவிதைகளை வரிசைப்படுத்தியிருப்பது கொலையின் அழகியலைக் கொண்டிருக்கிறது'என்கிறார்.

உண்மையில் சில்வியா பிளாத் அன்று மரணத்தை விரும்பினாளா? மனப்பூர்வமாக விரும்பியிருந்தாளெனில், தனது மனநல மருத்துவரை அழைக்கும்படியாக தாதிக்கு குறிப்பொன்றை எழுதிவைத்திருந்தது ஏன்? சிலர் சொல்வதுபோல, அந்தத் தற்கொலை (முயற்சி) வெறுமனே 'உதவி வேண்டிய அழுகுரலாய்' ஆரம்பித்து துன்பியலாய் முடிவடைந்ததா? அன்று காலை தாதி குறித்த நேரத்திற்கு வந்திருந்தால், 'முப்பதாவது வயதில் மீண்டும் உங்களை வந்தடைய முயன்று தோற்றேன் தந்தையே….'என்றொரு கவிதை எழுதப்பட்டிருக்குமோ? சாவிலும் கொடியது, துயருள் தள்ளியவர்களைப் பழிவாங்குவதற்காக அல்லது பயமுறுத்துவதற்காக அப்படியொரு முயற்சியைச் செய்து சாக விரும்பாமலே செத்துப் போவதாகும்.

"மனநோய் என்பது, குடும்பம் மற்றும் அதனையொத்த அமைப்புகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு சுயத்தை நோக்கி வெளியேறத் துடிப்பதாகும்"என்கிறார் 'மனநோயின் மொழி'யில் டேவிட் கூப்பர்.

சமூகம், குடும்பம், மதம், கல்வி இன்னபிற அமைப்புகளால் மூளைச்சலவை செய்யப்படுவதற்கு முன் குழந்தையின் படைப்பாற்றல் கட்டற்றதாக அமைந்திருக்கிறது. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக சமூகத்தின் விதிமுறைகள், ஒழுக்கங்கள், கட்டுப்பாடுகள் மூளைக்குள் உருவேற்றப்பட்டு சமூகப் பிராணியாக மாற்றப்படுகிறாள்-ன். இயந்திரமயமான அந்த ஓட்டத்தில் மனோரீதியாகவும் உடல் ரீதியாகவும் இணைந்துகொள்ள மறுப்பவர்கள், ஓடிக்களைத்துப் பின்தங்கியவர்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். சமூகத்தின் பொத்தாம்பொதுவான அளவுகோல்களின்படி அவர்களால் இயங்கமுடிவதில்லை. அவர்கள் இப்போது வலிந்து எழுதப்பட்ட எல்லா நியதிகளுக்கும் எதிரான புரட்சியாளர்களாக மாற்றப்பட்டிருக்கிறார்கள். அவர்களளவில் சமூகம் என்பது ஒரு நாகரிக பாவனைக் கூடம். அந்த இருண்ட கூடத்திலிருந்து கலையின் உன்னத வெளிச்சத்தின் உதவியால் தப்பிக்க எத்தனிக்கிறார்கள். புறவுலகிலிருந்து அந்நியமாதல், உள்ளொடுங்கிப் போயிருந்த படைப்பாற்றலை நோக்கி மீண்டும் அவர்களைத் தள்ளுகிறது. படைப்பெழுச்சியானது, இலகுவில் மனப்பிறழ்வு முத்திரை குத்தப்பட்டுவிடக்கூடிய நடத்தைகளைக் கொண்டவர்களாக மாற்றிவிடுகிறது. (அதைச் சாக்காக வைத்து 'போலச் செய்பவர்'களுக்கு இது பொருந்தாது.)

சில்வியா பிளாத், ஆன் செக்ஸ்டன் இன்னபிற கவிஞர்கள் மற்றும் கலைஞர்கள் ஏதோவொரு வகையில் பயிற்றப்பட்ட சமூகத்தை மறுத்தோடியவர்களே. எந்த மனவுளைச்சல் அவர்களைத் தனிமைப்படுத்தியதோ, அதுவே உன்னத கலை வெளிப்பாட்டுக்கும் அவர்களை இட்டுச் சென்றது. உளவியல் சிக்கல்களால் பீடிக்கப்பட்டவர்களை மின்னதிர்ச்சி சிகிச்சை முறை மூலம் குணப்படுத்த முயற்சிப்பது என்பதே அடிப்படை மனிதாபிமானமற்றது. அப்படிச் செய்வதன் வழியாக மூளையின் பேராற்றல் வலுவிழக்கச் செய்யப்பட்டு தனிமனித ஆளுமை சிதைக்கப்படுகிறது. அச்சிகிச்சைக்கு உட்படுத்தப்படும் ஒருவர் தளர்ச்சியடைந்து கீழ்ப்படிவுள்ள நாய்க்குட்டி போலாகிவிடுவார். ஒழுங்கமைக்கப்பட்ட சமூகம் என்ற கற்பிதத்திற்கு அத்தகைய கீழ்ப்படிதலே வேண்டியிருக்கிறது. அண்மைக்காலமாக அத்தகைய சிகிச்சை முறைக்கெதிராக மனிதாபிமானத்தோடு சிலர் குரலெழுப்பி வருகிறார்கள். மேலும், உளவியல் சிக்கல்களால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்திச் சிகிச்சையளிப்பதைக் காட்டிலும், அவர்களை சமூகத்தின் ஒரு அங்கமாக ஊடாட விடுவதே விரைவில் குணப்படுத்தும் என்கிறார்கள் மரபார்ந்த அல்லது வழக்கத்திலுள்ள சிகிச்சை முறைகளுக்கெதிரான மனிதவுரிமையாளர்கள். சில்வியா பிளாத்தும் மின்னதிர்ச்சி உள்ளடங்கலான சிகிச்சைக்குமுறைக்கு ஆட்படுத்தப்பட்டவளே. ஆனால், அவளது ஆளுமையின் வீச்சு மின்னதிர்ச்சியையும் மீறியதாக இருந்ததால் தப்பித்தாள். சில்வியா பிளாத்திற்கு ரெட் ஹியூஸ்ஸிடமிருந்து கிடைத்திருக்க வேண்டிய பரிவும் பராமரிப்பும் கிடைத்திருந்தால் அவள் இன்றும் இருந்திருக்கக்கூடும். படைப்பாளியின் இருப்பும் எழுத்தும் பிரித்துப் பார்க்கக்கூடியனவல்லவே…!

ஆன் செக்ஸ்டனுக்கும் சில்வியா பிளாத்துக்கும் குறிப்பிடத்தக்களவு ஒற்றுமைகள் உள்ளன. இருவரும் அமெரிக்காவின் மாசாசுசெட்ஸ் என்ற இடத்தில் பிறந்தவர்கள். இருவருமே தற்கொலையைப் பற்றி இடையறாது சிந்தித்தவர்கள். பேசியவர்கள். கடைசித் தடவை தவிர்த்து, தற்கொலையை முடிந்தபோதெல்லாம் முயன்றுபார்த்துத் தோற்றவர்கள். (இதுவொரு பைத்தியக்காரத்தனமான வாசகமே.)இருவருமே தமது வாழ்நாள் முழுவதும் உளவியல் சிக்கல்களால் அலைக்கழிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டவர்கள். தோழிகள். இருவரும் றொபேர்ட் லோவல் என்ற பேராசிரியரிடம் கவிதை குறித்துத் தெரிந்துகொண்டவர்கள். இருவருடைய கவிதைகளும் தன்வரலாற்றுத் தன்மை கொண்டனவாக விமர்சிக்கப்பட்டிருக்கின்றன. இருவரும் கவிதைக்கான 'புலிட்சர்'விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டவர்கள். ஆனால், சில்வியா பிளாத்தை ஏதோவொரு வகையில் ஆன் பின்பற்றினாள் என்று சொல்வாருமுளர்; தற்கொலையின் வடிவத்தைத் தேர்ந்ததில்கூட.

"நானும் சில்வியாவும் எங்களது முதல் தற்கொலை முயற்சியைக் குறித்து நீண்ட நேரம் பேசுவதுண்டு."என்கிறாள் ஆன் செக்ஸ்டன்.

எழுத்தை ஆத்மார்த்தமாக நேசிக்கும் இருவர் பொழுது சாய்ந்து, இருள் வடிந்து விடிகாலையில் உறங்க விரும்பாமல் உறங்கச் செல்வதுபோல, சாவைக் குறித்து சில்வியா பிளாத்தும் ஆன் செக்ஸ்டனும் இதர கவிஞர்களும் தங்கள் படைப்புகளில் சலிக்காமல் பேசியிருக்கிறார்கள்.

சில்வியாவின் மறைவுக்குப் பின் ஆன் செக்ஸ்டன் தன் மனநல மருத்துவரிடம் சொன்னாள்.

"சில்வியாவின் மரணம் என்னை அலைக்கழிக்கிறது. என்னையும் அதுபோல செய்யத் தூண்டுகிறது. எனக்குரிய மரணத்தை அவள் தன்னுடையதாக்கிக் கொண்டாள்."

இருபத்தாறாவது வயதில் (முதல் குழந்தையின் பிறப்பினை அடுத்து) கடுமையான மனவழுத்தம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஆன் செக்ஸ்டன், தொடர்ந்து வந்த காலங்களில் அடிக்கடி அங்கு நாட்களைக் கழிக்கவேண்டியவளானாள். தான் எழுத ஆரம்பித்ததைப் பற்றிச் சொல்லும்போது…

"எனது சிகிச்சைகளுக்கிடையில் நான் உணர்ந்ததையும் யோசித்ததையும் கண்ட கனவுகளையும் எழுதும்படி எனது மனநல மருத்துவர் என்னைப் பணித்ததற்கிணங்க நான் எழுதவாரம்பித்தேன்."

ஊடகங்களுக்குப் பேட்டி கொடுக்கும்போது கைகளில் புகைந்தபடியிருக்கும் சிகரெட்டும், பேச்சில் மிளிர்ந்தபடியிருக்கும் அலட்சியபாவமும் கேலியும், பித்தின் ஆழங்களில் அவ்வப்போது போய் நிலைத்துவிடும் கண்களுமான ஆன் செக்ஸ்டன் என்னை ஆகர்சிக்கும் பெண்ணாயிருக்கிறாள். 'அவையெல்லாம் வலிந்து பொருத்திக்கொள்ளப்பட்ட பாவனைகளோ..?'என்ற எண்ணம் உள்ளோடுகிறபோதிலும், அப்படியொருத்தியைப் பார்க்கும்போது ஏற்படும் நிறைவு, வாஞ்சை கலந்த புன்னகையாக வெளிப்படுகிறது. அந்த வாஞ்சையானது மறுக்கப்பட்டவற்றிலிருந்து மலர்கிறது என்பதைச் சொல்லவேண்டியதில்லை. 'தன்வரலாற்றுத் தன்மையுடைய கவிதை' என்று கட்டம் கட்டி அடைக்கும் விமர்சனம் எரிக்கா யோங் போன்றவர்களை எரிச்சலடைய வைக்கிறது. 'படைப்பாளியின் மனமே கவிதையில் இயங்குகிறது. சில விமர்சகர்கள் கவிதையைக் கவிதையாகப் பார்க்காமல், இத்தகைய சொற்களைக் கண்டுபிடித்துச் சொல்வதன் வழியாக அதை குறைமதிப்பீடு செய்கிறார்கள்'என்று சாடுகிறார் அவர். இரண்டு பெண்களுமே ரொமான்டிசத்திலிருந்த கவிதையை யதார்த்தத்தை பேசும் தளத்திற்கு எடுத்து வந்தவர்கள். இருவருமே, அதுவரையில் பெருமளவில் வெளிப்படையாகப் பேசப்பட்டிராத அன்றேல் பேசத் தயங்கிய பெண்களின் காமத்தைப் பற்றி, ஆசைகளைப் பற்றி, மாதவிடாய், கருக்கலைப்பு ஆகியவற்றைப் வெளிப்படையாக எழுதினர்.

சில்வியா பிளாத்தைப் போலவே ஆன் செக்ஸ்டனும் எப்போதும் சாவின் அருகாமையை உணர்ந்தபடியிருந்தாள். 27ஆவது வயதில் (இரண்டாவது மகள் பிறந்தபிற்பாடு) தனது பிறந்தநாளன்று தற்கொலைக்கு முயற்சித்தாள் ஆன்.

"மரணத்தின் நாற்றம் காற்றில் நிறைந்திருக்கிறது
அழுகிய உருளைக்கிழங்கைப் போல…"

சில்வியா தற்கொலை செய்துகொண்ட பிற்பாடு அவளை விளித்து எழுதிய கவிதையில்....
இரண்டுமுறை என்னைப் பிரகடனித்தேன்
எதிரியை வெற்றிகொண்டேன்
அவனை உண்டு மகிழ்ந்தேன்
அவனது கலைநேர்த்தியை மாயத்தை எனதாக்கினேன்
. ……………… ………………

இன்னமும் எனக்கான அவளது காத்திருப்பு நீள்கிறது,
ஆண்டுகளாக
பழைய காயமொன்றின் கட்டினை நேர்த்தியோடு அவிழ்க்க,
மோசமான சிறைக்கூடத்திலிருந்து எனது மூச்சை விடுவிக்க.

முதலில் 'எனக்குரிய மரணத்தை உனதாக்கினாய்'என்கிறாள். பிறகோவெனில், 'உன்போலவே நானும் மரணத்தை அறிந்திருந்தேன். அதனை வெற்றியும் கொண்டேன்'என்று மரணத்திற்கும் தனக்குமுள்ள நெருக்கத்தை, பாத்தியதையை (சில்வியாவைக் காட்டிலும்)அழுத்திச் சொல்ல முனைவதைக் காணமுடிகிறது. ஒப்பீட்டளவில் ஆன் செக்ஸ்டனின் தற்கொலை, சில்வியா அளவிற்கு மன அதிர்வைக் கொணரவில்லை என்பது வெளிப்படை. முன்பொரு தடவை நிகழ்ந்து பார்த்த காட்சியின் அசுவாரசியமாகவோ, ஆன் செக்ஸ்டனால் வரையப்பட்ட சுயசித்திரம் காரணமாகவோ அது கூடுதல் கவனம் பெறவில்லை.

வெளிப்படையான பாலியல் உறவுகள் அல்லது அவை குறித்த பிரகடனங்களை- ஒழுக்கத்தைப் பேணும் (முற்றிலும் அது உண்மையன்று; பல நேரங்களில் அவ்வாறான தோற்றமே காட்டப்படுகிறது.) சமூகத்தால் செரித்துக்கொள்ள முடிவதில்லை. ஆணாதிக்க சமூகத்தில் ஒரு பெண், படைப்பாளியாக நிலைத்திருப்பது என்பது தொடர்போராட்டம். அதுபோலவே, உளவியல் சிக்கலும் கலையின்பால் செலுத்திச்செல்லும் பித்துநிலையும் சேர்ந்தியங்கும் ஒருவருடைய பிள்ளைகள், கணவர், உறவினர்களுக்கென்றொரு பக்கமும் உண்டு. அப்படியொரு பக்கத்தை முற்றிலுமாகப் புறமொதுக்கிச் சென்றுவிடல் பக்கச்சார்புடையதாகும். உளவியல் சிக்கலுக்கும் படைப்பாற்றலின் அழைப்புக்கும் இடையில் சிக்கித் திண்டாடிய தனது தாயின் ஞாபகங்களை Searching for Mercy Street, My Journey Back to Mother:Anne Sexton என்ற புத்தகமாக அவரது மகள் லின்டா கிரே செக்ஸ்டன் வெளியிட்டிருக்கிறாள். அதில் தாயின் அரவணைப்புக்காக ஏங்கிய குழந்தையின் குரலை இனங்காண முடிகிறது. மனவழுத்தத்தின் மிகுதியால் குழந்தைகளிடத்தில்கூட வன்முறையாக நடந்துகொண்டாள் என்ற குற்றச்சாட்டு ஆன் செக்ஸ்டன் மீது உண்டு. 'தற்கொலை செய்துகொண்டு விடுவேன்'என்று குழந்தைகளை மிரட்டுபவளாக ஆன் செக்ஸ்டன் இருந்திருக்கிறாள். அதனால், கைவிடப்பட்டுவிடுவோம் என்ற பயத்தினால் தனதும் சகோதரியினதும் இளமைக்காலம் சூழப்பட்டிருந்ததாக லின்டா கிரே தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறாள். ஆக, படைப்பெழுச்சியின் உக்கிர 'வீச்சு' படைப்பாளிகளைச் சுற்றி இருப்பவர்களையும் விட்டுவைப்பதில்லை.

மனப்பிறழ்வின் அழுத்தம் தாளமுடியாமல் போன ஒருநாளில், சொன்னபடியே நடந்தது. அக்டோபர் 04, 1974 அன்று, மாக்ஸின் குமின் என்ற கவிஞருடன் (நீண்டகால நண்பர்) மதிய உணவருந்திவிட்டு வீடு திரும்பிய ஆன் செக்ஸ்டன் மதுவருந்தினாள். தன்மீதும் சிறிது ஊற்றிக்கொண்டாள். பிறகு, தாயின் கம்பளிக்கோட்டை அணிந்துகொண்டு மோட்டார் வண்டி நிறுத்தும் கொட்டகைக்குச் சென்றாள். கொட்டகையின் கதவுகளை இறுகச் சாத்தி மோட்டார் வண்டியின் இயந்திரத்தை இயங்கப் பண்ணினாள். இசையை உரத்து ஒலிக்கவிட்டாள். மோட்டார் வண்டி வெளித்தள்ளிய கார்பன் மோனோக்சைட்டைச் சுவாசித்துச் செத்துப்போனாள்.

தற்செயலாகத் திறக்கப்பட்டுவிட்ட பக்கம் திறந்தபடியிருக்க,
சொல்லப்படாதவை எஞ்சியிருக்க,
தொலைபேசி எடுத்தது எடுத்தபடியிருக்க,
மேலும், காதல்….
அது எதுவெனினும்,
ஒரு தொற்றுநோய்.

குணப்படுத்தமுடியாத அந்த நோயை, திறந்த புத்தகத்தை, சொல்லப்படாத வார்த்தைகளை விட்டுவிட்டுப் போனாள். அவளும் போனாள்.

மனவழுத்தத்தால், பிறழ்வால் பாதிக்கப்பட்ட பல பெண்களுக்கு தன் கவிதைகள் மூலம் ஆறுதலளித்துவந்த, தங்களை அடையாளங் கண்டுகொள்ள வைத்த கவிதைகளை அளித்த துணிச்சல்மிகு பெண்ணின் மூச்சு நின்றுபோயிற்று. தனது காலணியையே சாம்பல் கிண்ணமாக உபயோகித்த- தொடர் புகைப்பிடிப்புப் பழக்கத்தைக் கொண்ட அந்த விசித்திரமான பெண் சாம்பலாகிக் காற்றில் கலந்தாள். ஆம்…. நீங்கள் மிகச் சரியானதை ஞாபகங்கொள்கிறீர்கள்: அழுகிய உருளைக்கிழங்கினையொத்த வாசனையுடன்கூடிய மரணங் கலந்திருந்த காற்றில்.

உலகிலுள்ள அனைத்துப் பெண்களினுள்ளும் ஏதோவொரு துயரத்தின் அழகியல் குடிகொண்டிருக்கிறது. அதைக் கலையாக வெளிப்படுத்தத் தெரிந்தவர்கள், வரலாற்றில் சில தசாப்தங்கள் நீடித்திருக்கிறார்கள். ஏனையோரைக் காலம் கனகதியில் கபளீகரம் செய்துவிடுகிறது.

மறந்ததாகவே இருக்கட்டும்
உதிர்ந்துவிட்ட ஒரு மலரைப்போல.
மறந்ததாகவே இருக்கட்டும்
முன்னொருகாலம் பொன்னொளிர்ந்து
மறக்கப்பட்ட தீயினைப் போல்
நினைவிலிருந்து உதிரட்டும்
என்றென்றைக்குமாய்,
காலம் ஒரு கனிவுமிகு நண்பன்
அவன் நமக்கு அந்திமத்தை அருள்வான்.

எவராவது வினவுவாரெனில் சொல்…
மிக நீண்ட நாட்களுக்கு முன்னரே மறந்தாயிற்று என
ஒரு மலரென, ஒரு தீயென
நீண்டநாட்களின் முன் பொழிந்த பனியில்
புதைந்து மறக்கப்பட்ட கால்பந்தென.

மேற்கண்ட கவிதையில் எழுதியிருப்பதைப்போல, உதிர்ந்த மலராகவோ, நடனம் ஒடுங்கி அவிந்த தீயாகவோ சாரா டீஸ்டேல் மறக்கப்படவில்லை. எழுத்தால் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறாள். இயற்கையின் காதலியும் அழகின் உபாசகியுமாகிய சாரா டீஸ்டேல், ஆகஸ்ட் 8, 1884ஆம் ஆண்டு, செயின்ற் லூயிஸ் மிசூரியில் பிறந்தவள். அங்குதான் கவிஞர் டி.எஸ்.எலியட்டும் மரியன் மூரும் பிறந்தார்கள். சாரா இலகுவில் நோய்வாய்ப்படக் கூடியவளாக, எப்போதும் பணிப்பெண்ணின் பராமரிப்பை வேண்டிய பூஞ்ஞை உடம்புக்காரியாக இருந்தாள். அவளது கவிதைகள் எளிமையானவை போன்று தோற்றமளிப்பினும், மீண்டும் மீண்டும் வாசிக்கும்போது ஆழ்ந்த பொருளுடையவையாகவும் உள்ளடங்கியிருக்கும் துயரைக் கிளர்த்துவனவாக அமைந்துள்ளன.

புகழ்பெற்ற கவிஞரும் ஓவியருமான வாசெல் லின்ட்சேயின் கனவு தேவதையாக இருந்தவள் சாரா டீஸ்டேல். கடிதங்களிலும், கவிதைகளிலும் தன் காதலை வெளிப்படுத்தினார் லின்ட்சே. சில கவிதைகளை தன் காதல் தேவதைக்கு சமர்ப்பணமும் செய்தார். சாராவும் அவரை விரும்பியபோதிலும், பொருளாதார நெருக்கடியில் இருக்கும் ஏழைக் கவிஞனால் தான் எதிர்பார்க்கும் வாழ்வைத் தரமுடியாது என்றெண்ணியோ என்னவோ எர்ன்ஸ் பில்சிங்கர் என்ற தொழிலதிபரை மணந்தாள். சாராவின் கணவர் பணத்தின் பின்னாலும், அதனை ஈட்டுவதன் பொருட்டான பயணங்களிலும் ஓடிக்கொண்டேயிருந்தார். அந்நாட்களில் சாராவின் துணை தனிமை மட்டுமே. 1929 இல், மனமுறிவு மணமுறிவில் முடிந்தது; கணவரின் விருப்பத்திற்கு மாறாகவே. அன்றிலிருந்து கவிதையுடனேயே சாரா வாழ்ந்திருந்தாள். லின்ட்சே தன்னிலும் மிக இளைய வயதினளான பெண்ணொருத்தியை மணந்தார். பெரும் பொருளாதாரச் சிக்கலுக்கு மத்தியில் சாரா டீஸ்டேலுக்கு அண்மையிலேயே அவர் வாழ்ந்துகொண்டிருந்தார். ஒருநாள் லின்ட்சேயும் தற்கொலை செய்துகொண்டார். இறுதிவரையில் சாராவும் அவரும் புரிந்துணர்வுள்ள நண்பர்களாகவே நீடித்திருந்தனர்.

சாராவின் கவிதைகள், கலையின் சிகரங்களில் பயணித்தன. மனமோ தனிமையின் அதலபாதாளத்தில் வீழ்ந்து கிடந்தது. 'ஒரு குளிர்கால இரவு'என்ற கவிதையில் அத்தனிமையின் அழுகுரலைக் கேட்கமுடிகிறது.

எனது யன்னல் கண்ணாடி உறைபனியில் இறுகியிருக்க,
இன்றிரவு இவ்வுலகம் கொடிய குளிரில்
கருணையற்றுப் பொழிகிறது நிலவு,
காற்றோவெனில்
இருபுறமும் கூருடைய கொலைவாளினை ஒத்தது.

கடவுளே, வீடற்றவர்கள் மீதினில் இரக்கமாயிரும்
பிச்சைக்காரர்கள் அந்தரித்து அலையும் இக்கொடிய குளிர் இரவில்
விளக்குகள் ஏற்றப்பட்டதென பனியொளிரும் வீதிகளில் நடந்து செல்லும் ஏழைகளில் கருணை காட்டும்.

எனதிந்த அறை ஜூன் மாதத்தின் சாயலொப்ப
இதந்தரும் வெம்மையானது,
ஒன்றின் மேலொன்றாய் படிந்த திரைச்சீலைகளால் மூடப்பட்டது
இருந்தும் எதனாலோ,
வீடற்ற சிறுமியொருத்திபோல
என்னிதயமும் அழுதுகொண்டிருக்கிறது
இந்தக் குளிரில்.

1917இல் வெளியான, சாராவின் கவிதைத் தொகுப்பான 'காதல் பாடல்கள்' கொலம்பியப் பல்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 03, 2011 07:10

August 16, 2011

துாக்குத் தண்டனையைத் துாக்கிலிடவேண்டும் - கே.எஸ்.இராதாகிருஷ்ணன்





வால்மீகி ஒரு கொள்ளைக்காரராக இருந்தார். ஏழ்மை நிலையில் உள்ள பல உயிர்களைக் காப்பதற்காக அவர் கொள்ளையடித்தார். அந்த வால்மீகிதான் பிற்காலத்தில் உலகின் தலைசிறந்த இராமாயணம் என்ற இதிகாசத்தைப் படைத்த வால்மீகியாக, இலக்கியப் படைப்பாளியாக மாறினார். இதேநிலை யாருக்கும் வரலாம். - நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர்



உலக நாடுகள் எங்கும் தூக்குக் கயிறு வேண்டுமா? வேண்டாமா? என்ற விவாதங்கள் நீண்டகாலமாகவே நடைபெற்று வருகின்றன. இந்த சூழலில் 21ஆம் நூற்றாண்டிலாவது இதற்கு தீர்வு கிடைக்குமா? என்ற ஏக்கம் மனித உரிமை ஆர்வலர்களிடம் எழுந்துள்ளது. குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர் அப்துல் கலாம் மரண தண்டனை குறித்து மறுபரிசீலனை செய்ய மத்திய அரசைக் கேட்டுக் கொண்டார். அச்சமயம் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஆர்.சி.லகோதி, மத்திய சட்ட அமைச்சர் பரத்வாஜ் போன்றோர் மரண தண்டனை தொடர வேண்டும் என்ற கருத்தைத் தனித்தனியாகத் தெரிவித்தனர். உச்சநீதிமன்றம் மரண தண்டனை வழக்கில் அமைச்சரவையின் ஆலோசனையை குடியரசுத் தலைவர் ஏற்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது. தற்போது இந்தியச் சிறைகளில் 50 மரண தண்டனைக் கைதிகள் உள்ளனர்.



1945லேயே அப்போதைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டது. மக்களவையில் 25.11.1956இல் மரண தண்டனை ஒழிப்பு தனி நபர் மசோதா விவாதத்திற்கு வந்தபொழுது அன்றைய அமைச்சர் பொறுப்பிலிருந்த எச்.வி. படாஸ்கர் இதனை ஒழிக்க காலம் இன்னும் கனியவில்லை என்றார். 1957இல் முதன் முதலாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கம்யூனிஸ்ட் அரசு கேரள அரசாகும். இந்த அரசில் ஈ.எம்.எஸ். முதல்வராகவும், நீதிபதி கிருஷ்ணய்யர் உள்துறை அமைச்சராகவும் இருந்தனர். அந்நாளில், சி.ஏ.பாலனுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. சி.ஏ.பாலன் ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவரிடம் கருணை மனு அளித்தார். கடைசியாக கேரள உள்துறை அமைச்சராக இருந்த நீதிபதி கிருஷ்ணய்யரிடம் மனு ஒன்றை அளித்தார். நீண்ட நெடிய போராட்டத்திற்கு பிறகு நீதிபதி கிருஷ்ணய்யர் அவருக்கு விடுதலை வாங்கிக் கொடுத்தார். ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவரால் பாலனின் மனு நிராகரிக்கப்பட்ட போதும், கிருஷ்ணய்யர் போராடி பாலனை தண்டனையிலிருந்து காப்பாற்றினார். இதேபோன்று எடிகா அன்னம்மா என்ற பெண்ணுக்கு வழங்கப்பட்ட தண்டனையிலிருந்தும் விடுவித்தார். அப்போது அவர், 'கடவுள் தந்த உயிரைப் பறிக்கும் உரிமை எந்த அரசுக்கும் கிடையாது' என்று மகாத்மா காந்தி சொன்ன கருத்தை சொல்லி வாதாடியுள்ளார்.



1962-67களில் அன்றைய குடியரசுத் தலைவர் டாக்டர் இராதாகிருஷ்ணன் மரண தண்டனை தேவையில்லை என்று தெரிவித்தார். டாக்டர் இராதாகிருஷ்ணன் குடியரசுத் தலைவராக இருந்தபோது பல்வேறு மாநிலங்களில் பல குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு அதன் மீதான மேல் முறையீடு உச்சநீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டு குடியரசுத் தலைவருக்கு ஏராளமான கருணை மனுக்கள் பரிசீலனைக்கு வந்தன. அவற்றைத் திருப்ப அனுப்பாததால் தண்டனைகள் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் நின்றன. அன்றைய மத்திய உள்துறை அமைச்சர் இதுகுறித்து பிரதமர் நேருவிடம் முறையிட்டார். ஜவஹர்லால் நேருவும் ஒரு சிறப்புத் தூதரை குடியரசுத் தலைவரிடம் அனுப்பிக் கருணை மனுக்களை நிராகரித்துத் திருப்பி அனுப்பும்படி வேண்டிக் கொண்டார். ஆனால், குடியரசுத் தலைவர் நேருவின் கோரிக்கையை ஏற்கவில்லை. அதனால் டாக்டர் இராதாகிருஷ்ணன் குடியரசுத் தலைவராக இருந்த காலம் வரை குற்றவாளிகள் மீதான மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை.



1967இல் சட்டக் கமிஷன் அறிக்கை தூக்குத் தண்டனைக் கெடுபிடிகளை குறைக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. 1953லிருந்து 1963 வரை இந்தியாவில் மட்டும் 1422 பேர் தூக்கிலிடப்பட்டனர். இதன் காரணமாக, ஒரு வழக்கை விசாரிக்கும் நீதிபதி, அவ்வழக்கில் குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை விதிக்கிறார் என்றால், அதற்கான அத்தியாவசியமான காரணத்தை குறிப்பிட்டாக வேண்டும் என்று 1973இல் மத்திய அரசு ஒரு சட்ட திருத்தம் கொண்டு வந்தது.



இந்திய விடுதலைப் போராட்டத்தில் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு போன்ற தியாகத் தீபங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 1947இல் விடுதலைப் போராட்டத்தில் வெள்ளைக்கார சார்ஜண்டை கொலை செய்ததற்காக குலசேகரப்பட்டினத்தைச் சேர்ந்த ராஜகோபாலன், காசிராஜன் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, இந்திய விடுதலைக்குப் பின் 1947ஆம் ஆண்டு அவர்கள் தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டனர். நேதாஜி இயக்கத்தில் இருந்த கேப்டன் நவாஸ்கான், கேப்டன் தில்லான் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. தெலுங்கானா போராட்டத்தில் 11 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. மலேசிய கணபதி தூக்கிலிடப்படும்போது பண்டித நேரு அதைத் தடுக்கக் குரல் கொடுத்தார். 1946இல் கோவை சின்னியம்பாளையத்தில் ஆறு கம்யூனிஸ்டு தோழர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டபோதும், நக்சலைட் தலைவர் நாகபூஷண் பட்நாயக், தமிழகத்தில் கலியபெருமாள், தியாகு ஆகியோருக்கு தூக்குத் தண்டனை வழங்கியபோது தமிழகத்தில் தூக்குத் தண்டனைக்கு எதிராக குரல் எழுப்பப்பட்டது.



பண்டைய இந்தியாவில் மரண தண்டனையை பற்றி எவரும் அறியவில்லை. அய்ந்தாம் நூற்றாண்டில் சீனத்திலிருந்து வந்த பாகியான் என்ற பௌத்த அறிஞர், மரண தண்டனை இந்தியாவில் நடைமுறையில் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். எட்டாம் நூற்றாண்டில் கொரிய நாட்டிலிருந்து இந்தியாவிற்கு வந்த ஹொய்சோ என்ற அறிஞர் இதே கருத்தை கூறியுள்ளார். ஆனால் ஆதி காலத்தில் உலகில் மரண தண்டனை நடைமுறையில் இருந்தது என்று இலக்கியங்கள் கூறுகின்றன.



இந்தியாவில் வீரபாண்டிய கட்டபொம்மன் பரங்கியரால் தூக்கிலிடப்பட்டார்; ஆனால் அவரது வாரிசான குருசாமி மூன்று முறை தூக்குக் கயிறு முனை வரை சென்று வைகோவின் முயற்சியால் இக்கட்டுரையாளர் மூலம் காப்பாற்றப்பட்டார். இச்சம்பவம் கிட்டத்தட்ட 23 ஆண்டுகளுக்கு முன்னால் நடைபெற்றது. 1984 செப்டம்பர் 27 சென்னை உயர்நீதிமன்ற மண்டபங்களில் புதிர் இறுகிக் கொண்டே போகிறது. ஏழாண்டுகளாக நடந்து வந்த ஒரு வழக்கின் இறுதித் தீர்ப்பு அன்று கூறப்பட்டது.



தீர்ப்பு மனுதாரருக்கு எதிராகப் போகுமானால், இந்திய விடுதலைப் போரின் முதல் வீரர், நமது செவிகளில் பெயரும் புகழும் எதிரொலித்துக் கொண்டிருக்கிற விடுதலைப் போராட்ட முன்னோடி வீரபாண்டிய கட்டபொம்மனின் சட்டப்பூர்வ வாரிசை, இந்தியா இழக்கும்! தீர்ப்பு மனுதாரருக்கு ஆதரவாக அமையுமேயானால் தண்டனைக்குரிய குற்றத்திற்குத் தூக்குத் தண்டனை வழங்குவது நமது நாட்டில் அரிதானதில்லை. எனினும், தீர்ப்பு மனுதாரருக்கு ஆதரவாக வருமானால் மனுதாரர் குருசாமியின் வழக்கு நமது நாட்டின் சட்ட வரலாற்றில் தனித்தத் தன்மை கொண்டதாக ஈடு இணையற்றதாக அமையும்.



1977இல் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டிருந்த காலகட்டத்தில் வைகோ அவர்கள் இந்திய உள்நாட்டுப் பாதுகாப்புப் பராமரிப்புச் சட்டப்படி (மிசாவின் கீழ்) பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போதுதான் அதே சிறையிலிருந்த கைதி குருசாமியை அவர் அறிய நேர்ந்தது. குருசாமி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டுத் தூக்கிலிடப்படுவதற்காகக் காத்திருந்தார். குருசாமியின் சிலம்பம் செய்யும் முறை, தேவராட்டம், ஜக்கம்மா குறித்து பாடிய பாடல்கள், குருசாமியின் அப்பாவித்தனம் ஆகியவை வைகோ அவர்களை ஈர்த்தது. அவரைக் காப்பாற்ற வேண்டும் என்று வைகோ மனதிற்குள் உறுதி செய்தார். அவரது மரணத் தண்டனை ஏற்கனவே மும்முறை (1977 ஜூன் 15, 1981 செப்டம்பர் 15, 1984 ஜூன் 21 ஆகிய நாள்களில்) உறுதி செய்யப்பட்டிருந்தது. குருசாமி போட்ட கருணை மனு இந்திய அரசால் மும்முறை தள்ளப்பட்டுவிட்டது.



அவர் தமிழ்நாட்டு திருநெல்வேலி அமர்வு நீதிமன்றத்தால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டார். சென்னை உயர்நீதி மன்றமும் தண்டனையை உறுதி செய்தது. அவரது வழக்கு எண். எஸ்.சி.87/1976. மரண தண்டனை விதிக்கப்பட்டவர் தந்த சிறப்புரிமை முறையீட்டை 1977இல் இந்தியத் தலைமை நீதிமன்றம் தள்ளிவிட்டது. சிறையில் வைகோ அவர்களும், குருசாமியும் அவ்வப்போது பேசிக் கொண்டதில், குடும்பச் சொத்து காரணமாக குருசாமியின் மாமனாருடன் கடும் சண்டை ஏற்பட்டு, அப்போது குருசாமியின் மாமனார் ஆயுதமேந்தி குருசாமியைத் தாக்க வந்தார். குருசாமி தற்காப்புக்காகத் திருப்பித் தாக்கினார். அதனால் அவரது மாமனார் இறந்தார்.



வைகோ மாநிலங்களவை உறுப்பினராகப் பதவி ஏற்றவுடன் குருசாமியைக் காப்பாற்ற உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டார். அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவர் மேதகு சஞ்சீவ ரெட்டி அவர்களை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் 38 பேர் கையெழுத்திட்ட முறையீடு ஒன்றுடன் வைகோ சந்தித்தார். சஞ்சீவ ரெட்டி அவர்கள், குருசாமியின் புகழ்பெற்ற மூதாதையரான வீரபாண்டிய கட்டபொம்மன் பற்றி நன்கு அறிந்தவர். அவர், 1969இல் நெல்லை மாவட்டத்தில் கயத்தாற்றில் நடிகர்திலகம் சிவாஜி கணேசன் அமைத்த கட்டபொம்மன் சிலையைத் திறந்து வைத்தார் என்ற சம்பவங்களை எல்லாம் வைகோ விவரிக்க, குருசாமி கதை கேட்டு குடியரசுத் தலைவர் மனம் இரங்கி இடைக்காலத் தடையும் வழங்கினார்.



துரதிர்ஷ்டவசமாக, மேல் குறிப்பிட்ட கருணை மனு தள்ளுபடி ஆகிவிட்டது. (ஏற்கனவே ஒரு முறையும் கருணை முறையீடு தள்ளப்பட்டுள்ளது) தூக்கிலிடப்பட வேண்டிய நாள் 1981 செப்டம்பர் 15 என்றும் குறிக்கப்பட்டுவிட்டது. வைகோ மீண்டும் ஒரு கருணை முறையீட்டை நாடாளுமன்ற உறுப்பினர் அய்ம்பது பேர் கையெழுத்திட்டு 1981 செப்டம்பர் 8 அன்று (குடியரசுத் தலைவரிடம்) தந்தார். அதை (அப்போதைய) உள்துறை இணை அமைச்சர் வெங்க சுப்பையாவிடம் தருமாறு வைகோ கேட்டுக் கொள்ளப்பட்டார்.



இந்தத் தண்டனையை நிறுத்த இந்திய அரசுக்கு அதிகாரம் உண்டு என்று, அப்போதைய மத்திய உள்துறைச் செயலாளர் உள்துறை அமைச்சரிடம் எடுத்துச் சொல்லி அவரை ஏற்க வைத்துத் திரும்பவும் தூக்குத் தண்டனைக்கு ஐந்தே நாள்களில் இடைக்காலத் தடை மட்டும் வழங்கி தூக்குத் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால், தண்டனை தள்ளுபடி செய்யப்படவில்லை. அப்பொழுது நாள் செப்டம்பர் 9 ஆகிவிட்டது. குருசாமிக்குச் சாவு மணி அடிக்க அய்ந்தே நாட்கள்தான் இருந்தன. வைகோவின் வேகமான முயற்சியால் தூக்குத் தண்டனை நிறுத்தப்பட்டது. ஆனால் தள்ளுபடி செய்யப்படவில்லை.



இதற்கிடையே குருசாமி வீரபாண்டிய கட்டபொம்மன் வழிவந்தவர்தானா கட்டபொம்மன் பரம்பரை தானா என்ற உண்மையைக் கண்டறியும்படி மத்திய உள்துறை அமைச்சகம் தமிழக அரசைப் பணித்தது. உண்மையைச் சரி பார்க்கும் பணி முடிய ஓராண்டானது. அதுவரை அவரது தூக்குத் தண்டனை தள்ளிப் போடப்பட்டது. பின்னர், அவரது வழக்கு தண்டனைக் குறைப்புக்குப் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், அந்த நிம்மதி ஓராண்டுதான் நீடித்தது. சஞ்சீவ ரெட்டிக்குப் பின் குடியரசுத் தலைவரான ஜெயில் சிங்கின் செயலகம், கருணை மனுவைத் தள்ளுபடி செய்தது. சுதந்திரப் போராட்ட வீரர் ஒருவரின் நேரடி வாரிசு என்பதற்காகக் குற்றவாளி எவருக்கும் (கிரிமினல் எவருக்கும்) தண்டனையைக் குறைக்க முடியாது என்று காரணம் காட்டிவிட்டது.



இந்த நேரத்தில் உச்சநீதிமன்ற நீதிபதி சின்னப்பரெட்டி, தூக்குத் தண்டனைக் கொட்டடியில் குற்றவாளி நீண்டகாலம் அடைக்கப்பட்டு கிடப்பதைக் கருதி, அவரது மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கலாம் என ஒரு தீர்ப்பில் கூறினார். ஏற்கனவே, தந்த முறையீட்டுக்கு மாற்றாக நீதிபதி சின்னப்பரெட்டி அவர்களது தீர்ப்பினை அடிப்படையாக வைத்து இந்தியக் குடியரசுத் தலைவருக்கு மேலும் ஒரு முறையீடு தரப்பட்டது. அதில், குருசாமி ஏற்கனவே சிறையில் அய்ந்தாண்டாக வாடியுள்ளார் என்று கூறப்பட்டது.



1984 ஜூன் 14 அன்று குருசாமிக்கு ஜூன் 21 காலையில் தூக்கு நாளாக தேதியும், அதிகாலையில் நேரமும் குறிக்கப்பட்டுவிட்டது. சென்னையிலிருந்த வைகோ அவர்களுக்கு நெல்லையில் இருந்து நண்பர் குட்டி என்ற சண்முகசிதம்பரம் குருசாமிக்கு வழங்கப்பட்ட இடைக்காலத் தடை நீக்கப்பட்டு தூக்கு உறுதியாகிவிட்டது என்ற துயரச் செய்தியைத் தெரிவித்தார். உடனே வைகோ அவர்கள் மறைந்த சீனியர் வழக்கறிஞர் என்.டி.வானமாமலையை இரவென்று பாராமல் அவரை எழுப்பி இப்பிரச்சினையில் என்ன செய்யலாம் என்று ஆலோசித்தோம். அந்த ஆலோசனையின்படி டெல்லியில் உச்சநீதிமன்றத்துக்கும் சென்னை உயர்நீதிமன்ற பதிவாளருக்கும் பாளையங்ககோட்டை சிறையில் இருக்கும் குருசாமி தன்னைக் காப்பாற்ற தந்திகளை தனித்தனியாக கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில் தந்திகள் குருசாமியிடமிருந்து முறையாக வந்து சேர்ந்தன. அந்த தந்திகளையே மனுக்களாக்கி விசாரிக்க அனுமதி கோர வேண்டும்.



இருந்ததோ இரண்டு, மூன்று நாட்கள். அதற்குள் அந்த தூக்குத் தண்டனையை நிறுத்த வேண்டும். உச்சநீதிமன்றம் மற்றும் குடியரசுத் தலைவர் என்று அனைத்து மட்டங்களிலும் நிராகரிக்கப்பட்டு, இனி வேறு வழி இல்லை என்ற நிலை இருந்தது. என்ன செய்வது? முயற்சி செய்து பார்ப்போம் என்று நான் கருதினோம். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நீதிபதி சந்தூர்கர் அப்போதுதான் பொறுப்பேற்று, சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் விடுதியில் தங்கி இருந்தார். மாலைப் பொழுதாகி விட்டது. இருப்பினும் எப்படியாவது இந்த வழக்கை விசாரிக்க அனுமதி வாங்கியாக வேண்டும் என்ற கடினமான சூழ்நிலை. அவரை சந்தித்த இக்கட்டுரையாளர், 'நீதிபதி அவர்களே, குருசாமி நாயக்கரின் உயிர் காப்பாற்றப்பட வேண்டும். அவர் சென்னை உயர்நீதி மன்ற பதிவாளருக்கு பாளையங்கோட்டை சிறையிலிருந்து தந்தி அனுப்பி உள்ளார். அந்த மனுவை ஏற்று வழக்கு எண் கொடுத்து உரிய நீதிமன்றத்தில் விசாரிக்க அனுமதி தர வேண்டும்' என கேட்கச் சென்றபொழுது, நம்பிக்கை என்பது இக்கட்டுரையாளருக்கு துளியளவும் இல்லை. இருந்தாலும் முயற்சி செய்வோம் என்ற நிலையில் தான் தலைமை நீதிபதியை சந்தித்து முறையிட்டார். கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் நீதிபதி, இக்கட்டுரையாளர் கூறிய முழுமையான விவரங்களை கேட்டறிந்தார். மனிதாபிமானத்துடன் சட்டத்தில் வழி இருக்கிறதா என்று பார்த்து, இருந்தால் அதன் பலன் உரியவருக்கு கிடைக்க வேண்டும் என்ற அனுமதியை நீதிபதி அளித்த போது எனக்கு ஆறுதலையும் நிம்மதியையும் தந்தது.



அதன் பின் பதிவாளருடைய அனுமதியின் பேரில் வழக்கு எண்ணாகி, நீதிபதி இராமசாமி, டேவிட் அன்னுசாமி ஆகியோரிடம் காலை 10.30 மணிக்கு அவர்கள் அமரும்பொழுது விவரத்தை சொல்லி அனுமதி பெற்றாகி விட்டது. மதியம் 2.30 மணிக்கு இடைவேளைக்கு பிறகு வழக்கு வருகின்றது. வழக்கில் வழக்கறிஞர் என்.டி.வானமாமலை ஆஜரானார். இவ்வழக்கில் எவ்வித வழக்குக் கட்டணமும் வாங்காமல் என்.டி.வானமாமலை ஆஜரானார். என்.டி.வானமாமலை நீதிபதிகளிடம் தந்தியை ரிட் மனுவாகப் பாவித்து குருசாமிக்கு தூக்குத் தண்டனையிலிருந்து விடுவிக்க இடைக்காலத் தடை வேண்டும் என்று வாதாடினார். அவரோடு வழக்கறிஞர் ஐ.சுப்பிரமணியம் உடன் ஆஜரானார். அப்போது பப்ளிக் பிராசிக்யூட்டராக இருந்த, பின் நீதிபதியான பத்மினி ஜேசுதுரை அழைக்கப்பட்டார். விசாரணை முடிந்து இறுதியில் தூக்குத் தண்டனைக்கு இடைக்காலத் தடை வழங்கப்பட்டது. அப்போதெல்லாம் செல்பேசி, தொலைநகல் (பேக்ஸ்) போன்ற தொலைதொடர்பு சாதனங்கள் கிடையாது. நீதிபதிகள் பப்ளிக் பிராசிக்யூட்டரிடம் தமிழக அரசு, திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் (அப்போது ஒன்றுபட்ட திருநெல்வேலி மாவட்டம்), பாளையங்கோட்டை சிறை நிர்வாகத்திடமும் உடனே இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்ததைத் தெரிவித்து, மரண தண்டனையை நிறுத்த வேண்டும் என்ற ஆணையைத் தெரிவித்தனர். அன்று மாலை 4.30 மணிக்கு அரசிடம் தெரிவித்த கருத்துகளை, நீதிமன்றத்தில் பப்ளிக் பிராசிக்யூட்டர் தெரிவித்தவுடன், அந்தக் கருத்துகள் உயர்நீதிமன்றத்தில் பதிவு செய்யப்படும் என்ற விவரமான ஆணையை பிறப்பித்தனர். அன்றைக்கு 24 மணி நேரத்தில் தூக்குக் கயிற்றைத் தூக்கிலிட்டது பெரும் செயலாக எனக்குப் பட்டது. இந்த பிரச்சினையை எப்படி தீர்த்தோம்? எப்படி சாதித்தோம்? என்பதை இன்றைக்கும் நினைத்துப் பார்த்தால் மலைப்பாக இருக்கிறது. கிட்டத்தட்ட 27 ஆண்டுகளுக்கு முன்னால் சாதித்த இந்த அனுபவம், முயற்சி இருந்தால் எதிலும் வெற்றி பெறலாம் என்ற படிப்பினையை தந்தது.



இவ்வழக்கு தூக்குத் தண்டனை வழக்கானதால், அப்போது பல நண்பர்கள், பத்திரிகையாளர்கள், இலக்கியவாதிகள், திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் என பலர் விசாரித்தனர். குறிப்பாக பழ.நெடுமாறன், இரா.செழியன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி தலைவரான ஏ. நல்லசிவம் எம்.பி., இந்திய கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் ப.மாணிக்கம், சொ.அழகிரிசாமி, இலங்கைத் தலைவர்கள் அ.அமிர்தலிங்கம் தம்பதியினர், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த யோகேஸ்வரன், பாரிஸ்டர் கரிகாலன், படைப்பாளர்கள் கி.ராஜநாராயணன், சுந்தர ராமசாமி போன்றோர் மட்டுமல்லாமல்; விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன், பாலசிங்கம், பேபி சுப்பிரமணியன் (பேபி இளங்குமரன்), பிரபல பத்திரிகையாளர் அனிதா பிரதாப் போன்ற எனக்கு நெருக்கமான பலர் இதுகுறித்து அக்கறையுடன் ஆர்வம் காட்டினர்.



அதைப்போன்றே உச்சநீதிமன்றத்தில் பிரசித்திப் பெற்ற வழக்கறிஞர் கார்க் ஆஜராகி அங்கும் இடைக்காலத் தடையும் வழங்கப்பட்டு பின்னால் அந்த மனு திரும்பப் பெறப்பட்டது. இந்தப் பிரச்சினையில் ஒவ்வொரு நடவடிக்கையும் எதிர்பார்ப்பு என்ன நடக்கப் போகிறதோ என்ற பரபரப்போடு கடமைகள் செய்யப்பட்டன. இந்த வழக்கில் இடைக்காலத் தீர்ப்பு வந்ததை தொடர்ந்து உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் வெகுவாக வைகோ அவர்களைப் பாராட்டினர். "இந்து" பத்திரிகை இதுகுறித்து எழுதியது. "இது நீதிமன்ற வரலாற்றில் ஒரு மைல் கல்லாக அமைந்தது" என பிரபல வழக்கறிஞர் கோவிந்த சுவாமிநாதன் என்.டி.வியிடம் குறிப்பிட்டார்.



இக்கட்டுரையாளர் அன்று சென்னையில் உயர்நீதிமன்றத்தில் பொதுநல முறையீடு தாக்கல் செய்யும் பொறுப்பை நிறைவேற்றினார். அதில் தாக்கல் செய்த பிரமாண வாக்குமூலம் நான்கு நிலைகளில்தான் தூக்குத் தண்டனை விதிப்பது நியாயமாகும் என்று கூறியது. அவையாவன:



1. வேறு மாற்றுக் கருத்து, எந்தக் கேள்வியுமின்றி இடம் இல்லாத நிலையில் 'அரிதினும் அரிதான வழக்கு'களில்தான் தூக்குத் தண்டனை விதிக்கலாம்.



2. முதிர்ச்சி வாய்ந்த ஒரு சமுதாயத்தில் கண்ணியம் என்று மதிப்பிடப்படும் மதிப்பீடுகளின்படியும் கூட கொலையே தொழிலாகக் கொண்டோர் இரக்கத்திற்கு உரியோரில்லை.



3. கொலையுண்டவனுக்கு ஆதரவாக நிற்க யாருமில்லை என்ற வழக்குகளில் தூக்குத் தண்டனை விதிக்கலாம்.



4. ஆயுள் தண்டனை என்பது போதவே போதாது என்ற வழக்குகளில் தூக்குத் தண்டனை விதிக்கலாம்.



இவ்வாறு பிரமாண வாக்குமூலத்தில் கூறப்பட்டிருந்தது. இதனுடன் (குருசாமியின்) நன்னடத்தை குறித்து பாளையங்கோட்டை மத்திய சிறைக் கூடக் கைதிகள் 150 பேரும் ஜெயிலர்களும் தந்த சான்றிதழ்களும் இணைக்கப் பட்டிருந்தன. இத்தனை பரபரப்புகளுக்கு இடையேயும் நடப்பது நடக்கட்டும் என்று பொறுமையோடும், வேதனையோடும் காத்திருந்த ஒரே மனிதன் குருசாமிதான். அப்படியே தான் தூக்கிலிடப்பட்டு விட்டாலும் தனது உடல் வைகோவிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்பதுதான் அவரது விருப்பமாக இருந்தது. தீர்ப்பு நாள் வந்தது. நீதிபதிகள் வி.இராமசாமியும் டேவிட் அன்னுசாமியும் தீர்ப்பைப் படித்தனர்.



"தொழில் முறைக் கொலைகாரர்களே தூக்குத் தண்டனையிலிருந்து மன்னிக்கப் படுகிறார்களென்றால், விடுதலைப் போராட்ட வீரர் ஒருவரின் வாரிசும் தூக்கு மேடை ஏறுவதிலிருந்து காக்கப்படுவதும் நியாயமே. மரண தண்டனையைத் தள்ளுபடி செய்கிறேன். அந்தத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்படுகிறது!" என்றது அந்தத் தீர்ப்பு!



நீதிபதிகள் தம் தீர்ப்பில் விஷ ஊசி வழக்கில் டி.வி.வைத்தீஸ்வரனுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் இடையே நடந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தந்த தீர்ப்பைச் சுட்டிக்காட்டி இருந்தனர். (ஏ.அய்.ஆர்.1983, எஸ்.சி.361) அந்தத் தீர்ப்பில் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற இரண்டாண்டு காலத்திற்கு மேல் தாமதம் ஆகுமானால், அரசியல் சட்ட 21ஆவது பிரிவை எடுத்துக்காட்டி, தூக்குத் தண்டனையைத் தள்ளுபடி செய்யுங்கள் என்று கேட்க அதுவே (அந்தத் தாமதமே) மரண தண்டனை விதிக்கப்பட்ட மனிதனுக்குப் போதுமானது என்று அந்த வழக்கின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.



செர்சிங்குக்கும் பஞ்சாப் அரசுக்கும் இடையே நடந்த வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும் (உயர்நீதிமன்றத் தீர்ப்பில்) எடுத்துக்காட்டப் பட்டது. (ஏ.அய்.ஆர்.1983, எஸ்.சி.465) அந்தத் தீர்ப்பில் தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதில் நீண்ட தாமதம் ஏற்பட்டிருந்தால் அத்தண்டனையை நிறைவேற்றுவதா இல்லையா என்று தீர்மானிப்பதில் அந்த தாமதமும் முக்கியமான பரிசீலனையாகும் என்று கூறப்பட்டுள்ளது. இரண்டாண்டுக் காலத்திற்கு மேலான தாமதமே தூக்குத் தண்டனையைக் குறைக்க போதுமானதாகிவிட்டது என்றும், மரண தண்டனை அரிதினும் அரிதாகத்தான் தரப்பட வேண்டும் என்றும் பச்சன் சிங்குக்கும், பஞ்சாப் மாநில அரசுக்கும் இடையே நடந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. (ஏ.அய்.ஆர்.1980, எஸ்.சி.898).



மேற்குறிப்பிட்ட வரையறைகளுக்குள் குருசாமியின் வழக்கு அடங்காது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் திட்டவட்டமாகக் கருத்துத் தெரிவித்தனர். தனிமைக் கொட்டடியில் வாடிய மரண தண்டனைக் கைதியின் உயிரைக் காக்க ஏழாண்டுகள் நடந்த போர் வீணாகவில்லை. குருசாமி தனது ஆயுள் தண்டனையை 'கன்விக் வார்டர்' ஆகக் கழித்து பத்தாண்டுகளுக்கு முன்பு விடுதலை ஆகி தன் குடும்பத்தோடு ஒட்டப்பிடாரத்திற்கு அருகே வாழ்ந்து, மறைந்தார்.



குருசாமி தூக்கிலிடப்பட்டிருந்தால், அவரும் தம் மூதாதையரைத் தேடிக் கல்லறைக்குத்தான் போயிருப்பார். அவரது வழக்கில் தரப்பட்ட முன் எடுத்துக்காட்டு இல்லா தீர்ப்பு இந்திய நீதியின் போக்கில் இடம்பெறும். ஏனெனில், இந்தியாவின் சட்ட நீதி வரலாற்றில் ஒரு முறை தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவர் இல்லை; இல்லை மூன்று முறை தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவரது உயிர் காப்பாற்றப்பட்டது இதுவே முதன் முறை!



குருசாமி வழக்கு மூலம் திரு.பி.எச்.பாண்டியன் ஆஜரான வழக்கில் மாகாளி நாடார் போன்ற பல தூக்குத் தண்டனை கைதிகள் தூக்குக் கயிற்றிலிருந்து காப்பாற்றப்பட்டனர். சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு இன்றைக்கு இந்தியாவில் உள்ள பல உயர்நீதிமன்றங்களில் முன் உதாரணத் தீர்ப்புகளாக வழக்கறிஞர்கள் எடுத்து வைக்கின்றனர்.



உலகத்தின் மூன்றில் இரண்டு பங்கு நாடுகள் தூக்குத் தண்டனையை ரத்து செய்து விட்டன. இதுவரை 135 நாடுகளில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டுள்ளது. சதாம் உசேன், பூட்டோ போன்றோர் தூக்கிலிடும்பொழுது உலக அளவில் கடுமையாக எதிர்ப்புகள் எழுந்தன. தூக்குத் தண்டனை பிரச்சினையில் சீனா, ஈரான், ஈராக், பாக்கிஸ்தான், சூடான், அமெரிக்கா போன்ற நாடுகள் சற்றும் மனம் இரங்காமல் கடுமையாக நடந்து கொள்கின்றன. ஆனால், அமெரிக்காவில் தற்போது மாற்றங்கள் ஏற்பட்டு, அங்கு பல மாநிலங்களில் கடுமையான முறைகள் தளர்த்தப்பட்டுள்ளன. ஆசிய, ஆப்பிரிக்க கண்டங்களைச் சேர்ந்த நாடுகளே தூக்குத் தண்டனையை அமல்படுத்துவதில் முனைப்பாக உள்ளன. சிங்கப்பூர் இதில் முதலிடம் வகிக்கிறது.



சிங்கப்பூரில் மரண தண்டனைகள் விதிக்கப்பட்டவர்கள், எந்தவித அறிவிப்புமின்றி ஏதாவதொரு வெள்ளிக் கிழமையன்று தூக்கிலிடப்படுவர். பின்னர் தான் வெளி உலகுக்கே தெரிய வரும். நைஜிரியாவை சேர்ந்த 21 வயதே ஆன கால்பந்தாட்ட வீரர் டோச்சி, துபாய் அணியில் விளையாடுவதற்கு ஆசைப்பட்டபோது, பலர் அவருக்கு பாகிஸ்தான் சென்று விட்டால் உனது கனவு நனவாகும் என்றனர். இதனை நம்பி இஸ்லாமாபாத் சென்றார். அங்கும் அவரது ஆசை நிறைவேறாமல், கையில் பணமில்லாமல் ஒரு சர்ச்சில் தங்கினார். அங்கு ஸ்மித் என்ற ஒரு நபர் டோச்சியை சந்தித்துப் பேசி, சிங்கப்பூர் மார்க்கமாக டோச்சியின் சொந்த நாடான நைஜீரியாவுக்கு விமான டிக்கெட் எடுத்து கொடுத்து வழியனுப்பினார். அப்போது அவர் சில மாத்திரைகளை டோச்சியிடம் கொடுத்து இதனை சிங்கப்பூரில் மாலச்சி என்ற என் நண்பர் பெற்று கொள்வார் என்று சொல்லியுள்ளார். டோச்சி இந்த மாத்திரைகளுடன் சிங்கப்பூர் விமான நிலையத்தில் காத்திருந்தபொழுது, அவரை சந்தேகப்பட்டு கைது செய்தனர். இரண்டு ஆண்டு கால வழக்கு விசாரணைக்குப் பின் அப்பாவியான டோச்சி தூக்கிலிடப்பட்டார்.



இங்கிலாந்து நாட்டில் டங்கன் பிரபு, பிரபுக்கள் அவையின் தலைவராக இருந்தபோது முதன் முதலாக தூக்குத் தண்டனை ஒழிப்பு சட்டம் கொண்டு வந்தார். மவுண்ட்பேட்டன் பிரபுவைக் கொலை செய்தவர்களுக்குகூட இங்கிலாந்து அரசு தூக்குத் தண்டனை வழங்கவில்லை. தென் ஆப்பிரிக்காவில் 1995இல் மரண தண்டனை ஒழிக்கப்பட்டது. கடந்த 2007 ஆம் ஆண்டு ஐ.நா. பொது மன்றம் தூக்குத் தண்டனை ஒழிப்புத் தீர்மானம் நிறைவேற்றியது. இதனை அமெரிக்கா, சீனா, இந்தியா போன்ற நாடுகள் எதிர்த்தன. இத்தீர்மானத்தை 99 நாடுகள் ஆதரித்தன. 52 நாடுகள் எதிர்த்தன. 18 நாடுகளில் மரண தண்டனை போர்க்காலக் குற்றங்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டும், 27 நாடுகளில் பயங்கரவாதிகளுக்கு மட்டும் மரண தண்டனை விதிக்கப்படுகிறது. 1976ஆம் ஆண்டு கனடா நாட்டில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டது. கனடாவில் இதற்கு முன்பு கொலைக் குற்றங்கள் 3.09 சதவீதம் என்ற அளவில் அதிகமாக இருந்தது. மரண தண்டனை ஒழிக்கப்பட்ட காலத்திலிருந்து கொலைக் குற்றங்கள் குறைந்து விட்டன. 1983ஆம் ஆண்டளவில் அங்கு 2.74 என்ற அளவிலேயே கொலைக் குற்றங்கள் நடந்துள்ளன.



1985ஆம் ஆண்டு பன்னாட்டு அளவில் இலஞ்சம் வாங்கியதாக சோவியத் நாட்டிலும், சீனாவில் அரசுக்கு விரோதமாக உளவுத் தொழிலில் ஈடுபட்டதற்கும், விபசாரத்திற்கும், சீனா, கயானாவிலும், பொருளாதாரக் குற்றத்திற்காக ஈராக் நாட்டிலும், கற்பழிப்புக் குற்றத்திற்காக சீனா, எகிப்து, சவுதி அரேபியா, சிரியா, தாய்லாந்து, டுனீசியா ஆகிய நாடுகளிலும், களவு மற்றும் பயங்கர ஆயுதங்களை கையாண்டதற்காக சீனா, நைஜீரியா, சவுதி அரேபியா, சிரியா, உகாண்டா போன்ற நாடுகளிலும், போதைப் பொருள் குற்றத்திற்காக ஈரான், மலேசியா, தாய்லாந்து, போன்ற நாடுகளிலும், சீனாவிலும் மரண தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன.



இளைஞர்களுக்கு மரண தண்டனை விதிக்கக் கூடாது என்ற வாதமும் உள்ளது. 1949ஆம் ஆண்டு ஜெனீவாவில் நடைபெற்ற பன்னாட்டு சட்ட மாநாட்டில் 18 வயதுக்குக் குறைந்தவர்களுக்கு மரண தண்டனை வழங்கக் கூடாது என்ற தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இது சுமார் 75 நாடுகளில் தற்பொழுது நடைமுறையில் உள்ளது. அய்க்கிய அமெரிக்க நாட்டில் நடந்த மாநாட்டில் 70 வயது கடந்த முதியவர்களுக்கு மரண தண்டனை கூடாது என்று தீர்மானம் நிறைவேறியது. இருந்தபோதிலும், 76 வயதான மகமத் முகமது தகா என்ற சூடான் நாட்டுத் தலைவரும், 78 வயதான பையோடர் ஃபெடரன்கோ என்பவரும் அமெரிக்காவிலிருந்து சோவியத் ரஷ்யாவுக்கு நாடு கடத்தப்பட்டு அரசியல் காரணமாக தூக்கிலிடப்பட்டனர். கர்ப்பிணிப் பெண்களுக்கும், புத்தி சுவாதீனம் இல்லாதவர்களுக்கும் மரண தண்டனை வழங்கக் கூடாது என்ற கட்டுப்பாடும் உலகளவில் நடைமுறையில் உள்ளது.



தூக்கிலிடுதல், துப்பாக்கியால் சுடுதல் ஆகிய இரண்டு நடைமுறைகள் இந்தியாவில் உள்ளன. இந்திய தண்டனைச் சட்டத்தின்படி கொலை, கொலை முயற்சி, கூட்டமாகச் சென்று கொள்ளையடித்தல் மற்றும் தாக்குதல், அரசாங்கத்திற்கு எதிராகப் போர் ஆயத்த வேலைகளைச் செய்தல், எதிரிக்கு மரண தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் பொய்ச் சாட்சியம் அளித்தல் போன்ற குற்றங்களுக்கு மரண தண்டனை அளிக்கப்படுகிறது.



இந்திய இராணுவச் சட்டம் 1950இன் படியும், விமானப் படைச் சட்டம் 1950இன் படியும் கடற்படைச் சட்டம் 1956இன் படியும் படைவீரர்கள் தவறு செய்தால் மரண தண்டனை விதிக்க இடமுண்டு. பயங்கரவாதிகளுக்கு 1987ஆம் ஆண்டின் சட்டத்தின்படி மரண தண்டனை விதிக்க வழியுள்ளது. 1967ஆம் ஆண்டு சட்ட வரையியல் குழு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் 18 வயதுக்குக் குறைவாக உள்ளவர்களுக்கு மரண தண்டனை அளிக்கக் கூடாது என்ற பரிந்துரையை அளித்தது. இந்தியாவில் மாவட்டத் தலைமை நீதிமன்றங்கள், உயர்நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் மற்றும் தனி நீதிமன்றம் ஆகியவை மரண தண்டனைகளை விதிக்கின்றன. ஆனால், குடியரசுத் தலைவர் மற்றும் மாநில ஆளுநர்கள் மரண தண்டனைக் குற்றவாளிகள் மீது கருணை காட்ட அதிகாரமும் இருக்கிறது.



இந்தியாவைப் பொறுத்தவரை அப்சல் குரு, ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட மூன்று பேர் இன்றைக்கும் தூக்குக் கயிற்றின் பிடியில் இருக்கின்றனர். அப்சலுக்கு அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பு குறித்து அன்றைய காஷ்மீர் முதல்வர் குலாம் நபி ஆசாத் 'இந்த தீர்ப்பு காஷ்மீர் மக்களின் உணர்வுகளுக்கு எதிரானது' என்று குறிப்பிட்டார். இந்தத் தீர்ப்பு நிறைவேற்றப்பட்டால் காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்டு வரும் அமைதி முயற்சிகள் தோல்வியடையும் என்ற கருத்தும் நிலவுகிறது. இந்த கருத்தை ஒட்டியே எழுத்தாளர் அருந்ததி ராயும் கருத்து வெளியிட்டுள்ளார். இத்தீர்ப்பை எதிர்த்து, அப்சலின் மனைவி கருணை மனு ஒன்றை உள்துறை அமைச்சகத்துக்கு கடந்த 2006ஆம் ஆண்டில் அனுப்பி இருந்தார்.



மரண தண்டனை குறித்து எதிர்மறையான சிந்தனைகளை விட்டு ஆக்கபூர்வமாக நாம் சிந்திக்க வேண்டும். மரண தண்டனைகள் விதிப்பதால் குற்றங்கள் குறைந்துவிடும் என்று சொல்வதற்கில்லை. அவ்வகையில், காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சேவைத் தூக்கிலிட்ட இந்தியாவில் இந்திராவும், ராஜிவும் படுகொலை செய்யப்பட்டனர். கொலை மற்றும் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுபவர்களை எல்லாம் தூக்கிலிட்டு விட்டால் குற்றங்கள் குறையும் என்பது எள்ளளவும் உண்மையல்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 16, 2011 18:45

July 11, 2011

ஊழல் எழுதும் ‘குற்றமும் தண்டனையும்…’


முன்னொருகாலத்தில்
இங்கு நதிகள் சுழித்தோடின
பறவைகள் கிக்கிக்கென்றிடும் ஓசையுடன்
காடுகள் மலர்ந்திருந்தன
வயல் வரம்பின் மீது அமர்ந்து
கதிர்களின் மினுக்கத்தைப் பார்த்திருந்த
காலங்கள் போயின என் மகளே…!

நதிகளின் மேலிருந்து
புகைவிடுகின்றன தொழிற்சாலைகள்
காடுகளிலிருந்து விரட்டப்பட்ட
நம் சனங்களின் இதயம்
உனது ஆடைபோலவே
கந்தலாகி விட்டது.

அழாதே அன்பே!
முன்னொரு காலத்திலே
எங்களுக்கொரு நிலம் இருந்தது
வானில் நிலவும்
மேலதிகமான
ரொட்டித் துண்டுகளும் இருந்தன.

மனித உரிமைப் போராளி மேதா பட்கர் ‘சிவில் சொசைட்டி’என்ற சஞ்சிகைக்கு அளித்த நேர்காணலில் ‘அரசியல் ஊழல்’என்ற ஒரு வார்த்தையைப் பிரயோகித்திருந்தார். இந்தியாவின் இன்றைய நிலைமையை அந்தச் சொல்லாடல் முற்றிலுமாகப் பிரதிபலித்திருக்கிறது. இந்தியாவின் பெரும்பாலான (வெளிச்சத்துக்கு வந்த) ஊழல்களின் சூத்திரதாரிகள் கார்ப்பரேட் பணமுதலைகளும் அவர்களுக்கு பின்பலமும் பக்கபலமும் கொடுத்துத் தாங்கி நிற்கும் அரசியல்வாதிகளுமாக இருக்கக் காண்கிறோம்.

ஃபோபர்ஸ் பீரங்கி ஊழல், ஸ்பெக்ட்ரம் இரண்டாவது அலைக்கற்றை ஊழல், ஆதர்ஷ் தொடர்மாடி ஒதுக்கீடு விவகாரம், ஜார்கன்ட் மாநிலத்தின் மது கோடா ஊழல், காமன்வெல்த் போட்டி-2010 ஊழல் என்று பட்டியலிட அயர்ச்சியளித்து நீண்டுசெல்லும் ஊழல்களில் மேற்கண்டவர்களின் முகமூடிகள் தொடர்ந்து கிழிந்து செல்கின்றன. ஆகையினால், அவர்கள் மக்கள் சந்நிதானத்தில் தலைகுனிந்து நிற்கிறார்கள் என்றெல்லாம் கதைவிடப் போவதில்லை.

அரசியல்வாதிகளும்-கார்ப்பரேட் முதலாளிகளும்-தாதாக்களும்-சார்புநிலை ஊடகங்களும்-காவற்துறையும்-அரச அதிகாரிகளும் இணைந்து சாமான்ய மக்களின் மீது நிழல் யுத்தம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய ஒரே குறிக்கோள் - பணம். பணத்திற்காக அதிகாரம் - அதிகாரத்திலிருந்து பணம் என்ற சுழற்சி முறையில் மேற்கண்டவர்கள் செயற்பட்டு வருகிறார்கள். தேர்தல் காலங்களில் மக்களைக் கடவுள் நிலைக்கு உயர்த்தி அவர்தம் கால்களைப் பிடிப்பதெல்லாம் ‘மக்கள் சேவை… மகேசன் சேவை’என்ற நல்லெண்ணத்தினாலன்று. இந்தியா என்ற தேசத்தைக் கொள்ளையடித்து, தமது ‘மக்களுக்கு’ நல்வாழ்வு வழங்குவதற்காகவே. அத்தகையோரின் பேராசை சிலசமயங்களில் சறுக்கி பத்துக்குப் பதினைந்தடி திஹார் சிறையறையினுள் முடிந்துவிடுவதும் உண்டு.

“ஒரு மனிதனுக்கு எவ்வளவு நிலம் வேண்டும்?”என்ற டால்ஸ்டாயின் நெடுங்கதையை உங்களில் பலர் வாசித்திருக்கக்கூடும்.

“இதோ கண்முன் பரந்து கிடக்கிறதே இந்த நிலம் முழுவதும் எங்களுக்குச் சொந்தமானதுதான்… எவ்வளவு தூரம் நீ நடந்துபோய் வருகிறாயோ அவ்வளவு நிலமும் உனக்கே சொந்தம். சூரியன் சாய்வதற்குள் வந்துவிடவேண்டும்.”என்றார்கள் அவர்கள்.

பேராசை பிடித்த பாஹொம் போனான்… போனான்… போனான். அவ்வளவு தூரம் போனான். திரும்பிச் செல்ல முடியாது போய்விடுமோ என்ற பயத்தில் மூச்சு இரைக்கத் தொடங்கியது. ஆடைகள் வியர்வையில் நனைந்து ஒட்டிக்கொண்டன. வாய் உலர்ந்து விட்டது. இதயம் வேகமாகத் துடித்தது. கால்கள் அவனுக்குச் சொந்தமில்லாதன போல தொய்ந்து தொங்கின.

அவன் கீழே விழுந்தான். கைகள் நீண்டு அடையாளமாக வைத்துவிட்டுப் போன தொப்பியைத் தொட்டன. வேலைக்காரன் வேகமாக ஓடிவந்து அவனை எழுப்ப முயன்றான். பாஹொமின் வாயிலிருந்து இரத்தம் ஒழுகியது. அவன் இறந்துவிட்டான்!

“வேலைக்காரன் மண்வெட்டியை எடுத்து பாஹொமிற்கு (எசமானனது பெயர்) அளவான ஒரு குழியைத் தோண்டி அதனுள் அவனைப் புதைத்தான். தலையிலிருந்து கால்வரை அவனுக்குத் தேவைப்பட்டதெல்லாம் ஆறடி நிலம் மட்டுமே.”

‘ஸ்பெக்ட்ரம்’விவகாரத்தில் சிக்கி சிறைக்குள் இருக்கும் கனிமொழி டால்ஸ்டாயை வாசித்திருப்பார் என்பதில் ஐயமில்லை. இது ஒருவரின் வீழ்ச்சியில் எக்களிக்கும் துர்க்குணமன்று. நண்பர்கள் அணுகுவதற்கும் பழகுவதற்கும் எளிமையானவராகவும், வாசிப்பையும் எழுத்தையும் நேசிப்பவராகவும், தந்தையின் அரசியல் வெளிச்சத்தில் தன்னை முன்னிறுத்திக்கொள்ளாமல்- தனக்கென சுய ஆளுமைகளை வளர்த்துக்கொண்டவருமாகிய கனிமொழியை அதலபாதாளத்தில் தள்ளியிருப்பது பணத்தின் பாலான ஈர்ப்பு எனும் சாத்தானே.

ஒரு சில வழக்குகளிலன்றி ஏனையவற்றில் ‘சந்தேக நபர்கள்’, ‘தூய அரசியல்வாதிகள்’ நிலைக்குத் திரும்பிவிடுகிறார்கள். எந்தத் தரப்பு ஆட்சியில் இருக்கிறது, அதன் எதிர்காலக் கணக்கீடுகள், இலாபநட்டங்களைப் பொறுத்து அமைவனவே குற்றமும் தண்டனையும்.

ஃபோபர்ஸ் பீரங்கி ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கையூட்டுப் பெறவில்லை (ஏமாற்றியது, அரசுக்கு இழப்பீடு நேரக் காரணமாக இருந்தது என்ற திசைமாறியிருக்கிறது) என்று பெப்ரவரி, 2004இல் டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததும், இத்தாலிய தொழிலதிபர் குவாத்ரோச்சி இவ்வாண்டு மார்ச் மாதம் ‘தகுந்த ஆதாரங்கள்’இல்லாத காரணத்தால் அந்த வழக்கிலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்டிருப்பதும் இந்தியாவில் ‘குற்றமும் தண்டனையும்’ இயங்கும் முறைக்கு எடுத்துக்காட்டாகும். குவாத்ரோச்சி 64 கோடி ரூபாய்களை இலஞ்சமாகப் பெறவில்லை என்பதைக் கண்டுபிடிக்க இந்தியப் புலனாய்வுத் துறை 21 ஆண்டுகளையும் 250 கோடி ரூபாய்களையும் செலவிட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் தற்போதைய முதல்வராகிய செல்வி ஜெயலலிதா மீதும் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு, அதை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இன்மையால் வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

அரசாங்கம் கார்ப்பரேட் பணமுதலைகளின் தயவில் இயங்குகிறதென்றால், அதை வட்டியோடு திருப்பிக் கொடுக்கவேண்டிய கடப்பாடு உடையதாகிறது அரசாங்கம். இந்த அதிகார-முதலாளித்துவ கொடுக்கல் வாங்கலின்போது, அரசின் சட்டங்களும் ஷரத்துகளும்கூட தளர்த்தப்படுகின்றன. சட்டமீறல்கள் கண்டுகொள்ளாமல் விடப்படுகின்றன. அதற்குப் பிரதியுபகாரமாக அரசியல்வாதிகளின் மாளிகைப் பின்கதவு வழியாக உள்ளே பிரவேசிக்கிறார் குபேரன்.

தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி (Comptroller and Auditor General) அண்மையில் ஒரு தகவலை வெளியிட்டிருக்கிறார். அதாவது, தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனமானது, கிருஷ்ணா-கோதாவரியை அண்மித்த இயற்கை எரிவாயு விவகாரத்தில், அரசுடன் போடப்பட்டுள்ள ஒப்பந்த விதிமுறைகளை மீறுவதற்கு பெட்ரோலியத் துறை அமைச்சு அனுமதித்துள்ளது அல்லது கண்டுகொள்ளாமலிருந்திருக்கிறது என்பதே அந்த எரிச்சல் அல்லது கடுப்பு மிகுந்த குற்றச்சாட்டாகும். அவ்வாறு ‘சிறப்புச் சலுகை’செய்ததன் வழியாக தேசத்திற்குப் பெரும் இழப்பு ஏற்பட்டிருப்பதாக அவர் சுட்டிக் காட்டியிருக்கிறார். பெட்ரோலியத் துறை அமைச்சராக முர்ளி தியோராவை நியமிக்க காங்கிரசிடம் பரிந்துரைத்தவர் முகேஷ் அம்பானியே என்பதை, ஊடகத்தரகர் நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடலின் ஒரு பகுதி உறுதிப்படுத்தியிருக்கிறது. பெட்ரோலியத் துறை அமைச்சர் முர்ளி தியோராவும் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியும் நெருங்கிய நண்பர்களாக இருப்பதோடல்லாமல், திருப்பதி ஏழுமலையானின் பக்தர்களாகவும் இருக்கும் காரணத்தால், தேசத்தின்-மக்களின் பணத்திற்கு நாமம் போட்டுவிடலாம் என்று நினைத்திருந்தால், அது அத்தனை எளிதானதில்லை என்று தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி உணர்த்தியிருக்கிறார். ஆனால், ஒரு சில நியாயமுள்ள அதிகாரிகளின் விசனங்களை அரச தரப்பு பொருட்படுத்தாமல் முன்னகர்ந்து செல்லும் என்பதை கடந்தகாலம் கற்பித்திருக்கிறது.

குடும்பத்திற்குள் நடக்கும் அதிகாரசார்பு-முதலாளித்துவ பரிவர்த்தனைகளுக்கு உலகின் மிகப் பொருத்தமான எடுத்துக்காட்டாகத் திகழ்பவர்கள் இந்தோனேசியாவின் முன்னாள் அதிபர் சுகார்த்தோ குடும்பத்தினராவார். அவர்களையடுத்து யார் இடம்பெறுவர் என்பதை வரலாறு குறித்துக்கொண்டிருக்கிறது. இனிவருங் காலங்களில் அந்தப் பட்டியலில் நமக்குப் பரிச்சயமான பெயர்கள் இடம்பெறலாம்.

1967-1998 வரையிலான 31 ஆண்டு காலம் இந்தோனேசியாவை ஆண்ட சுகார்த்தோவும் அவரது பிள்ளைகளும் அந்நாட்டை எப்படிச் சுரண்டிக் கொழுத்தனர் என்பதை வாசிப்பவர்கள் மலைத்துப்போவார்கள். அதிகாரத் துஷ்பிரயோகம் என்பதை அவர்களிடமே கற்றுக்கொள்ளவேண்டும். மூத்த மகளான ரகுமானாவிற்கு சுங்கவரிச் சாலைகளை நிர்மாணிக்கும் அனுமதியை வழங்கினார் சுகார்த்தோ. அந்தச் சாலைகளில் பயணிக்கும் இராணுவ வண்டிகளிடமிருந்துகூட சுங்கக் கட்டணத்தை வசூலித்தார் ரகுமானா. தொண்ணூறுகளின் நடுப்பகுதியில், ரகுமானாவின் சுங்கச்சாலைகள் நாளொன்றுக்கு 210,000 டாலர்களை (86 இலட்சம் ரூபாய்கள்) வருமானமாகப் பெற்றதாகக் கூறப்படுகிறது. சுகார்த்தோவின் ஆறு பிள்ளைகளும் இந்தோனேசியாவைக் கொள்ளையடித்துக் குட்டிச்சுவராக்கினர். மாவு ஆலைகள், சீமெந்து உற்பத்தித் தொழில், விமான நிறுவனங்கள், கட்டுமானத் தொழில், தொலைத்தொடர்பு, எண்ணெய் மற்றும் மரக் கூட்டுத்தாபனங்கள், வனவளத் தொழில் இவை போதாதென்று வங்கிகளிலும் அவர்களுக்குப் பங்குகள் இருந்தன. மேலும், கடன் கொடுக்க மறுக்கும் அல்லது கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்கும் வங்கி அதிகாரிகளை வீட்டுக்கு அனுப்பிவைக்கவும் அவர்கள் தங்களது தந்தை வழியாக ‘அதிகாரம்’ பெற்றிருந்தனர்.

மொஹமட் ஹசன் என்ற பெரும் பணக்காரர் சுகார்த்தோக்களின் தொழில் பங்காளியாக இருந்தார். அவரது கட்டுப்பாட்டில் பெரும்பாலான ஊடகங்கள் இருந்தன. வாரத்தில் இரண்டு நாட்கள் கோல்ப் விளையாடியதுபோக, மீதமுள்ள நாட்களில் முக்கியமான பணியாக அவர் வைத்திருந்தது தனது தொழில் பங்காளியான சுகார்த்தோவின் புகழை தனது ஊடகங்களில் விதந்தோதுவது ஆகும். முரசொலி, தினத்தந்தி (ஆட்சியில் இருப்பவர் பக்கம் சாயும் நிலைப்பாடு இதற்கு உண்டு.), தினகரன், சன் தொலைக்காட்சி, கலைஞர் தொலைக்காட்சி இன்னபிற உங்கள் நினைவுக்கு வரலாம்.

ஆக மொத்தத்தில், சுகார்த்தோ ‘கோடு’போட்டால், அவரது பிள்ளைகள் அதில் ‘ரோடு’போட்டார்கள்.

உறவினர்களின் அதிகார பலத்தைப் பின்புலமாகவும் பலமாகவும் கொண்ட முதலாளிகள், எப்படி ஒரு மாநிலத்தில் ஏகபோக உரிமைகளையும் சலுகைகளையும் கொண்டிருக்க முடியும் என்பதற்கு, மாறன் சகோதரர்களைக் காட்டிலும் தகுந்த உதாரண புருசர்கள் இருக்கமுடியாது. Crony capitalism என்ற சொல்லாடல் அவர்களுக்கே முற்றிலும் பொருந்தும். முன்னாள் முதல்வர் கருணாநிதி ஏழை எளிய மக்கள் உழைத்த நேரம் போக எஞ்சிய நேரத்தில் இன்புற்றிருக்கட்டுமே என்று இலவசத் தொலைக்காட்சிகளை வழங்கினார். அந்தத் தொலைக்காட்சிகளுக்கு ‘கேபிள்’வசதியை வழங்கியதன் வழியாக வீட்டுக்குள் சொர்க்கத்தைக் கொண்டு வந்தது ‘சுமங்கலி’; இலவசமாக அல்ல. மேலும், அவர்கள் குடும்பத்தினரே தயாரித்து, அவர்களே இயக்கி, அவர்களே நடித்து, அவர்களே விளம்பரம் செய்து, அவர்களே வரிவிலக்கு அளித்து, அவர்களே வெளியிட்டு (ஏனைய படங்களை வெளியிட விடாமல் முடக்கி) அவர்களே பணத்தை அள்ளிக்கொள்வதற்குப் பெயர்தான் தனியுடமை அல்லது கலப்பிலா சர்வாதீனம் என்பது.

ஒருநாள் விடிகாலையில் எழுந்து பார்க்கும்போது உங்களது வீட்டுத் தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டிருக்கும்; நீங்கள் தொடர்ந்து சில மாதங்களாகக் கட்டணத்தைச் செலுத்தவில்லையானால். ஆனால், “தனது போட் கிளப் வீட்டுக்கும் சன் தொலைக்காட்சி அலுவலகத்திற்கும் இடையில் 323 தொலைபேசி இணைப்புகளைக் கொண்ட தனியான தொலைபேசி இணைப்பகத்தை நிறுவி, சட்டவிரோத பாவனையில் ஈடுபட்டதனூடாக பி.எஸ்.என்.எல்.க்கு 440 கோடி ரூபாய் இழப்பிற்குக் காரணமாக இருந்திருக்கிறார் முன்னாள் தொலைத்தொடர்புத்துறை அமைச்சரும், இந்நாள் ஜவுளித்துறை அமைச்சருமாகிய தயாநிதி மாறன்”என்று ‘த நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’என்ற நாளிதழ் செய்தி அண்மையில் வெளியிட்டிருக்கிறது. தவறான செய்தியை வெளியிட்டதன் மூலம் தன்னை அப்பத்திரிகை அவதூறு செய்துவிட்டது என்று கொதித்து, மானநஷ்ட இழப்பீடாக பத்துக் கோடி ரூபாய் கேட்டிருக்கிறார் தயாநிதி மாறன்(கோடீஸ்வரர்கள் நட்ட ஈட்டையும் கோடிகளில்தான் கேட்பார்கள்). தவிர, ‘ஏர்செல்’லை சிவசங்கரன் என்பவரிடமிருந்து பிடுங்கி ‘மேக்சிஸ் கம்யூனிக்கேசன்ஸ்’உரிமையாளர் அனந்தகிருஷ்ணனுக்குக் கொடுத்தார்@ அதற்குப் பிரதியுபகாரமாக ‘மேக்ஸிஸ்’ தயாநிதி மாறனைக் கவனித்துக்கொண்டது”என்று தெஹல்கா வார இதழ் புலனாய்வு செய்து செய்தி வெளியிட்டிருக்கிறது. அதற்கும் தயாநிதி மாறன் அவதூறு ‘வக்கீல் நோட்டிஸ்’ அனுப்பியிருக்கிறார் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

ஊழலுக்கு முன்னாள்-இந்நாள் என்ற பேதங்கள் எல்லாம் இல்லை. கலைஞர் கருணாநிதி குடும்பத்திற்கு ஒரு காலம் என்றால், இந்நாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா குடும்பத்தினருக்கு வேறொரு காலம். ஆட்சியில் இருப்பவர்களது ஊழல்கள் என்பவை புதைகுழிகள் போல. மண்ணுக்கடியில் புழுத்துக்கொண்டிருக்கும். ஆட்சியிலிருந்து தூக்கியெறியப்பட்டதும் கிண்டப்படும். இப்போது கலைஞரது குடும்ப உறுப்பினர்களைக் கிண்டிக் கிழங்கெடுத்துக் கொண்டிருப்பதைப் போல.

இந்தியா என்ற நாட்டில் கோடீஸ்வரர்களுக்கு ஒரு நீதியும் கோவணாண்டிகளுக்கு வேறொரு நீதியும் என்பதற்கு நீதிப் பானையிலிருந்து ஒரு சோற்றை எடுத்துக் காட்டலாம். சில வாரங்களுக்கு முன்னால் டெல்லி நீதிமன்றம் ஒன்றில் திருட்டு வழக்கொன்றுக்குத் தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டிருந்தவர்கள் நான்கு இளைஞர்கள். இருவருக்கு ஏழாண்டுகளும் (கடூழியம்) மற்ற இருவருக்கும் நான்காண்டுகளும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவர்கள் நான்கு பேருமாக 740 ரூபாய்களைத் திருடியிருந்தார்கள். 740ரூபாவை நான்கால் வகுத்தால் தலைக்கு 185 ரூபாய் திருடியிருந்தார்கள். ஒரு சாதாரண, அரசியல் செல்வாக்கற்ற மனிதனுக்கு 185 ரூபாயைத் திருட எவ்வளவு துணிச்சல் இருக்கவேண்டும்?

‘இந்தியா ஏற்றத்தாழ்வுகளின் உதாரண தேசம்’ என்று சொன்னால், அதன் தேசாபிமானிகள் வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்கு வரலாம். ஆனால், மனிதாபிமானிகளும் பொருளியலாளரும் அறிவியலாளரும் அதை ஒத்துக்கொள்வர். இந்த ஏற்றத்தாழ்வு ஒருநாள் பூகம்பத்தில் நிகழ்ந்ததன்று. அரசாங்கம் முதலாளித்துவ பெருமுதலைகளுக்குச் சார்பாகச் செயற்பட்டதே பொருளாதாரச் சமமின்மைக்குக் காரணம். ஊழலின் பிரமாண்டத்தின் முன் ‘சமமின்மை’ என்ற சொல் நலிந்து பிச்சைக்காரக் கோலத்தில் நிற்கிறது. இது முரண்களின் தேசம். சாக்கடையின் துர்நாற்றத்தைச் சகித்தபடி பன்றிகளோடு பன்றிகளாக சேற்றில் கிடந்துழலும் மனிதர்கள் வாழும் மும்பை நகரத்தில்தான் உலகத்திலேயே பெறுமதிவாய்ந்த, (பணப்பெறுமதி-2 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் வீடு இருக்கிறது. 27 தளங்களைக் கொண்ட அந்த வீட்டையும், ஆறு பேரைக் கொண்ட முகேஷ் அம்பானியின் குடும்பத்தையும் பராமரிக்க 600 வேலைக்காரர்கள் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.

ஸ்பெக்ட்ரம் ஊழலில் 1,76,000 கோடி ரூபாய்கள் இழப்பீடு ஏற்பட்டதாகக் கணிப்பிடப்பட்டது. 41.6 வீதமான மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே, அதாவது நாளொன்றுக்கு இருபது இந்திய ரூபாய்களுக்குக் குறைவாக வருமானம் பெற்றுக்கொண்டிருக்கும் ஒரு தேசத்தில் 1,76,000 கோடிகளில் எத்தனை சமூக நலத்திட்டங்களை முன்னெடுக்கலாம் என்பதைப் பொருளியலாளர்கள் கவனத்திலும், கணக்கிலும் கொண்டிருக்கிறார்கள். இந்திய சனத்தொகையில் 75.6 வீதமானவர்களின் வருமானம் எண்பது ரூபாய்க்கும் குறைவாகவே இருக்கிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இதனிடையில் ஒருநாளைக்கு இருபது ரூபாவிற்குக் கீழ் வருமானம் பெறுபவர்களே வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களாகக் கருதப்படுவர் என்றும், அவர்களுக்கே அரச மானியம் வழங்கப்படும் என்றும் திட்டமிடல் இலாகா அண்மையில் அறிவித்திருக்கிறது. அதிலும், நகரங்களில் வசிப்பவர்களுக்கே அந்தச் சலுகை! கிராமங்களில் வசிப்பவர்களில் பதினைந்து ரூபாய்க்குக் குறைவாக வருமானம் பெறுபவர்களே வறுமைக் கோட்டுக்குக் கீழே வருகிறார்களாம்! குடும்பக் கட்டுப்பாடு மற்றும் எயிட்ஸ் குறித்த விழிப்புணர்வுகளுக்காக கிராமங்கள்தோறும் பணியாளர்கள் அனுப்பிவைக்கப்படுவதுபோன்று, கிராமங்களிலும் நகரங்களிலும் முறையே பதினைந்து, இருபது ரூபாய்களில் ஒரு நாளைக் கழிப்பது எப்படி என்ற விழிப்புணர்வைப் பரப்புவதற்கு அரசு ஆவன செய்தல் வேண்டும். ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ சகாப்தம் முடிந்துவிட்டது. ‘சாப்பிடக் கூடிய’ஒரு கிலோ அரிசியின் விலை 25 ரூபாய். பருப்பின் விலை 140ரூபாய் என்ற விலை விபரங்களெல்லாம் திட்டக் கமிசனின் மேலாளராக இருக்கும் உயர்திரு. மன்மோகன் சிங்கிற்கோ துணை மேலாளர் மாண்டேக் சிங் அலுவாலியாவிற்கோ தெரிந்திருக்க நியாயமில்லை.

மதுரையில் பூ விற்கும் எழுபது வயதான மூதாட்டி மீனாட்சி சொல்கிறார்.

“வீட்டிலிருந்து பூக்கடைக்குச் செல்வதற்கு ஒரு நாளைக்கு இருபது ரூபாய்கள் பயணச் செலவாகிறது”

மஹாராஷ்டிராவிலுள்ள ஜசுபேன் என்ற பெண்மணி (கந்தை ஆடைகள், காகிதங்களைப் பொறுக்கி விற்பவர்) சொல்கிறார்.

“இருபது ரூபாயில் ஒருநாளைக்குத் தேவையான பழுதடைந்த காய்கறிகளுட் சிலவற்றை மட்டுமே வாங்கமுடியும். என்னுடையது வறுமை இல்லையென்றால், எதுதான் வறுமை என்று எனக்குத் தெரியவில்லை.” (தெஹல்கா – நிஷா சுசானின் சுற்றாய்விலிருந்து)

மானியங்கள் மூலமாக அரசாங்கத்தின் கஜானாவைக் காலி செய்பவர்களாக ஏழைகள் இருந்துவிடக்கூடாது என்பதற்காக, பதினைந்து ரூபாயில் ஒருநாளைக் கழிக்கலாம் என்று வறுமைக் கோட்டைக் கீழிறக்கும் இதே அரசுதான் கோடி கோடியாகப் பணத்தை ‘காமன்வெல்த்’விளையாட்டுப் போட்டிகளில் கொட்டியது. அரச விழாக்களை ஆடம்பரமாக நடத்துகிறது. ஊடகத் தரகர்களான நீரா ராடியாக்களும் கார்ப்பரேட் முதலாளிகளும் செல்வத்தில் மிதக்க நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒத்தாசை செய்கிறது.

‘பணக்கார இந்தியா’வின் பெரும்பாலான குடிமக்கள் பூச்சியத்திற்கு இணையானவர்கள். கோடிகளைப் பின்தொடரும் பூச்சியம் அன்று. அவர்கள் பதினைந்து ரூபாய் வருமானத்தில் வாழப் பணிக்கப்பட்ட பெறுமதியற்ற சுழியங்கள்.

“இந்தியாவின் இதயம் கிராமங்களில் இருக்கிறது”என்றார் காந்தி. இரண்டு இலட்சம் விவசாயிகள் வறுமை தாளாமல், கடன்தொல்லை பொறுக்கமுடியாமல், முதலாளித்துவப் பாய்ச்சலுக்கு ஈடுகொடுக்கமாட்டாமல் தற்கொலை செய்துகொண்டார்கள்.

“அபிவிருத்தி என்ற பெயரில் ஏழைகளின் நிலங்கள் போன்ற சொத்துக்கள் பணக்காரர்களின் கைகளுக்கு மாற்றப்படுவது கூட சட்டபூர்வமான ஊழலே” என்று மனிதவுரிமைப் போராளி மேதா பட்கர் கூறியிருப்பது இங்கு நினைவிற்கொள்ளற்பாலது.

அண்மையில், ஒரிஸ்ஸாவிலுள்ள கொபின்பூர் என்ற கிராமத்து மக்களது வாழ்நிலங்களை அபகரித்து, ‘பொஸ்கோ திட்டம்’என்ற மேலுமொரு முதலாளித்துவப் பண்ணைக்கு வழங்குவதற்கு அதிகாரத் தரப்பு வெட்கமின்றித் துணைபோயிருக்கிறது. அந்த மாவட்டத்தின் செயலாளர், காவற்துறை உயரதிகாரி இருபது ‘பிளாட்டூன்’கள் காவற்துறையினரோடு அந்தக் கிராமத்து மக்களை அச்சுறுத்தி வெளியேற்றச் சென்றிருந்தனர். பாடசாலை மாணவர்களும், பெண்களும், வயோதிபர்களும்கூட நிலத்தில் படுத்துக் கிடந்து வழிமறித்து ‘நிலக்கொள்ளையர்களை அனுமதியோம்’ என முழக்கமிட்டார்கள். அதிகாரத் தரப்பு வேறு வழியின்றித் திரும்பிச் சென்றது. ஆனால், அவர்கள் மீண்டும் திரும்பி வருவார்கள் என்பதில் ஐயமில்லை. ஆக மொத்தத்தில், சனநாயக நாடு என்று சொல்லப்படும் இந்தியா போன்றதொரு நாட்டில், காவற்துறையும் அரசதிகாரமும் முதலாளித்துவத்தின் சேவகன் போலவே செயற்பட்டுவருவதை அவதானிக்கலாம்.

இப்போது இந்தியாவைப் பற்றிப் பேச்சு எழும்போது, அதிகமும் மேற்கோள் காட்டப்படும் வாக்கியம் ஒன்று உண்டென்றால், “ஏழைகள் நிறைந்த பணக்கார நாடு இந்தியா”என்பதாகும். உலகத்தின் பணக்காரர்கள் வரிசையில் நான்காவது (லட்சுமி மிட்டல்), ஐந்தாவது (முகேஷ் அம்பானி), ஆறாவது (அனில் அம்பானி), ஒன்பதாவது (குசல் பல் சிங்) இடங்களில் இந்தியர்கள் அமர்ந்திருக்கிறார்கள். மேலும், உலகிலேயே அதிகளவு கறுப்புப் பணத்தை ஸ்விஸ் வங்கியில் வவைத்திருக்கும் நாடுகளில் இந்தியா முதன்மை பெற்றுப் பெருமையடைந்திருக்கிறது. 7,280,000 கோடி ரூபாய் கறுப்புப் பணம் ஸ்விஸ் வங்கியிலும், பெயரைத் தமிழ்ப்படுத்த முடியாத ஜேர்மன் வங்கியொன்றிலும் (Liechtenstein Bank) வேறும் சில நாடுகளிலும் உறங்கிக்கொண்டிருக்கிறது. முடக்கப்பட்டிருக்கும் அந்தத் தொகையானது இந்தியாவின் தலையை அழுத்திக்கொண்டிருக்கும் கடனை பதின்மூன்றால் பெருக்க வருவது. அதாவது இந்தியாவின் கடன்தொகையில் பதின்மூன்று மடங்கு பணம் ஊழல் பெருச்சாளிகளால் அங்கு வைப்பிலிடப்பட்டிருக்கிறது.

ஆக, பளபள கார்களில், பப்பள பள முகங்களோடு விரைந்து செல்லும் கோடீஸ்வரர்களை வீதியோரங்களில் அமர்ந்து ஏக்கம் வழியும் கண்களால் பார்க்கவே விதிக்கப்பட்டிருக்கிறார்கள் இந்த நாட்டின் பெரும்பான்மைக் குடிமக்கள். உழைத்துப் பிழைப்பவர்களின் வயிற்றில் பசி அக்கினி கொழுந்துவிட்டெரியும்போது, ‘அக்கினி’ இன்னோரன்ன ஏவுகணைகளை விண்ணில் செலுத்தி எக்களித்துக் கொண்டிருக்கிறது இந்திய வல்லரசு. ‘உலக அழகி’களின் தேசம் இந்தியா என்கிறார்கள். வறுமை வரைந்த கேலிச் சித்திரங்களைப் போலத் தோற்றமளிக்கும் மனிதர்களும் இங்குதான் வாழ்கிறார்கள்.‘ஸ்கோர் என்ன?’என்று தெரிந்துகொள்ளாவிட்டால், தலையே வெடித்துவிடும்போல பதறியடிக்கும் மனிதர்கள் வாழும் தேசத்தில்தான் இலட்சக்கணக்கான குழந்தைகள் ஆண்டுதோறும் போசாக்கின்மையால் இறந்துகொண்டிருக்கிறார்கள்.

இந்தியா என்பது கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகள், அவர்களால் பயன்பெறும் கார்ப்பரேட் முதலாளிகள், ஏழை மக்களிடமிருந்து அபிவிருத்தி என்ற பெயரில் நிலங்களைப் பிடுங்கத் துணை செய்யும் நிழல் வீரர்களான தாதாக்கள், மேற்சொன்னவர்கள் மீது சட்டம் பாய்ந்துவிடாது பாதுகாப்பளிக்கும் காவற்துறை, அரசியல்வாதிகளின் கட்டளைக்கும் கற்பனைக்கும் இயைபுற இயங்கும் ஊடகவியலாளர்கள் என்ற ஒரு வலைப்பின்னலால் சூழப்பட்டிருக்கிறது.

பசி தாளமாட்டாமல் உணவகத்தில் திருடியவன் நீதிமன்றத்தில் கைகட்டி நின்றுகொண்டிருக்கும்போது, 50,345 கோடி ரூபாய்களை வருமான வரியாகச் செலுத்தவேண்டியிருப்பதாகச் சொல்லப்பட்டுவரும் ஹசன் அலி கானை 2010ஆம் ஆண்டு ஏப்ரல் வரை ‘கண்டுகொள்ளாமல்’ வெளியில் விட்டு வைத்திருந்தது ஏன்? மேலும், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி 2010 மார்ச் மாதம் ஊடகங்களுக்கு வழங்கிய செய்தியில், ஹசன் அலி அரசுக்குச் செலுத்தவேண்டிய வருமான வரியைச் செலுத்திவிட்டதாகத் தெரிவித்திருந்தார். அந்த வருவாய் 2009-2010 இற்கான வரவுசெலவுத் திட்ட அறிக்கையில் காட்டப்படவில்லை. நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ஹசன் அலி கானைக் காப்பாற்ற முனைவதன் காரணம் என்ன என்பது 9 பில்லியன் டாலர் பெறுமதியான கேள்வியாகும். ஹசன் அலி உண்மையிலேயே 9 பில்லியன்களுக்கு அதிபதியா? அன்றேல் அந்த பில்லியன்களுக்கு அதிபதியாக இருப்பவர்கள் பவிலியனில் அமர்ந்திருந்தபடி வேடிக்கை பார்க்க, ஊழல் களத்தில் இறக்கிவிடப்பட்ட பலியாடா? என்பது இன்றுவரையில் கேள்விக்குறியாகவே நீடிக்கிறது.

ஃபோபர்ஸ் பீரங்கி ஊழலில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் குடும்பத்திற்கு கையூட்டு எதுவும் கிட்டவில்லை; அவர் இந்திய அரசுக்கு பண இழப்பு ஏற்படக் காரணமாக இருந்தார் என்று டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டது. இந்திய அளவிலும் காங்கிரஸ் அளவிலும் அவர் உதாரண ‘புருசனாகி’விட்டார். ஆனால், இந்திய எல்லையைத் தாண்டிய ஊடகங்களுக்கு நேரு குடும்பத்தின் தூய்மையைக் காப்பாற்ற வேண்டிய அவசியமில்லை.

Schweizer Illustrierte என்ற, சுவிர்ட்சலாந்துப் பத்திரிகையில் நவம்பர் 19, 1991 அன்று வெளியிடப்பட்ட செய்தியொன்றில், 2.2 பில்லியன் டாலர்கள் (இன்றைய கணக்கின்படி பத்தாயிரம் கோடி ரூபாய்கள்) சோனியா காந்தி அவர்களது இரகசியக் கணக்கில் இருப்பதாகச் செய்தி வெளியிட்டிருந்தது. அது இன்றைக்கு 43,000 கோடியிலிருந்து 84,000 கோடி வரை வளர்ந்திருக்கலாம் என்று ஊகங்களும் கணிப்பீடுகளும் சொல்கின்றன. புலனாய்வு ஊடகவியலாளரும், அரசியல் விஞ்ஞானியுமாகிய வேர்ஜினியா அல்பர்ட்ஸ் (ரஷ்யர்) 1989 இல் The State within a Stake: KGB and Its Hold on Russia என்ற புத்தகத்தை எழுதினார். அதில், குறிப்பிடப்பட்டிருந்த ஒரு விடயம் இந்திய ஊடகங்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரஷ்ய உளவு நிறுவனமான கே.ஜி.பி. மேலாளர் விக்ரர் செப்ரிகோ-1985இல் ராஜீவ் காந்தி குடும்பத்தினருக்குப் பணம் கொடுக்கப் பணித்ததாக அந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. “ராஜீவ் காந்தி, சோனியா காந்தி,ராகுல் காந்தி மற்றும் பௌலா மைனோ (சோனியா காந்தியின் தாயார்)ஆகியோருக்கு அமெரிக்க டாலர்களில் அந்தப் பணம் கொடுக்கப்பட வேண்டும்” என விக்ரர் செப்ரிகோவ் பரிந்துரைத்துள்ளார்.

நிலைமை இவ்விதமிருக்க, “வெளிநாடுகளில் இருக்கும் இந்தியாவின் கறுப்புப் பணம் இந்தியாவுக்குள் கொண்டு வரப்பட வேண்டும்”என்ற உரத்த குரலுக்கு, திருமதி சோனியா காந்தி தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு செவிகளை மூடிக்கொண்டிருப்பதில் சித்தஇரகசியம் ஒன்றுமில்லை.

ஊழலுக்கெதிராக ‘லோக் பால்’ சட்டத்தைக் கொண்டு வருவதாலோ, காந்தியவாதி அன்னா ஹசாரேயும், யோகா குரு ராம்தேவும் உண்ணாவிரதம் இருப்பதாலோ, மெழுகுவர்த்திப் பிரார்த்தனைகளாலோ இந்தியாவிலிருந்து ஊழலை ஒழித்துவிட முடியாது.

இந்திய அரசியல் மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பு அடித்தட்டு மக்களுக்கானவையாகவும் மாற்றப்படாதவரையில் ஊழல் பெருச்சாளி நாட்டைக் கபளீகரம் செய்வது நிற்காது. ஆட்சிகள் மாறலாம்; ஆட்களும் மாறலாம்; மேற்கண்ட மாற்றம் நிகழாதவரையில், ஊழலே அரியணையில் அமர்ந்து பல்லை இளித்துக் காட்டி மக்களைப் பரிகசித்துக்கொண்டிருக்கும்.

நன்றி அம்ருதா ஜூன் மாத இதழ்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 11, 2011 07:44

தமிழ்நதி's Blog

தமிழ்நதி
தமிழ்நதி isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow தமிழ்நதி's blog with rss.