Bharath Jambulingam's Blog, page 2
September 9, 2016
சூப்பர்வைசரும்…மத்தியான சாப்பாடும்….
அண்ணே… சாப்பாடு ஆச்சாண்ணே…
அவர்
ஆச்சு ஆச்சு அதுதான் வேளாவேலைக்கு ஆகுதுள்ள….
இது நான்..
என்ன சாப்பாடு ?
அவர்
சம்பா கோதுமை கஞ்சி…
இது நான்..
ஓஓ…
அவர்
எங்க சாப்புட்டீக…
இது நான்…
இங்க தான்.. சரவணபவன்ல…
அவர்..
சசீ… அந்தஸ்து சாப்பாட்டுக்காரன் சாப்புடுற இடமா ?
இது நான்
என்னன்ன இப்படி சொல்லிப்புட்ட ? தமிழ்நாட்டுக்கே சோறுபோடுற ஊர்லேந்து வாறேன்… சோறு எங்க கிடைச்ச என்ன ?
அவர்..
வக்கனையா 40 ரூவா சாப்பாட்ட 130 ரூவாய்க்கு சாப்ட்டீயே… சோறு ஒன்னு ஒன்னும் ஒட்டிக்கிடவே ஒட்டிக்கிடாது அவன் கடையில. உடம்புக்கு அத்தனையும் ஆகாது.
இது நான்..
ஆமாம்.. ஒட்டிக்கிடல. பொன்னியா இருக்கும்.
அவர்
எல்லா பயலுக்கும் சோத்து ருசி இல்லாம போச்சு. நா திருவண்ணாமலைக்காரன். காரை அரிசி கேள்விப் பட்டிருக்கியா ? சோத்த திண்ணுதுக்கு அப்பறம்… கைய மோந்து பாத்தா ஆப்பிள் வாசனை அடிக்கும். 40 வருசத்துக்கு முன்னாடி இங்க சென்னையில கெடச்சிது. இப்போ திருவண்ணாமலையில தேரடி வீதியில கெடைக்கிது. ஒரு கிலோ வாங்கி பொங்கி திண்ணு பாரு. சோறா போடுறானுவ இங்க … கேட்டா மெட்ரோவாம்.. சிட்டியாம்…. எல்லா கெடைக்கிது வயித்துக்கு நல்ல சோறு இல்ல….
இது நான்…
அண்ணே இப்புடி கோவப்பட்டுப்புட்ட ?
அவர்..
உங்க ஊரு கைகுத்தல் அரிசி சாப்பிட்டுருக்கியா ? உங்க ஊரு சம்பா அரிசி சாப்பிட்ருக்கியா ? சாப்பிட்டுருக்க மாட்ட… நீ சாப்புடுறது எல்லாமே மைசூர் பொன்னி…. சின்ன வயசுல ஐஆர் இருவது சாப்பிட்டுருப்ப.. அப்போ விலை வாசியும் சம்பாத்தியமும் அவ்வளவுதான்… இப்ப அப்படி இல்ல. சம்பாவையே பிரியாணி அரிசி அளவுக்கு சமச்சி சாப்புட நினைக்கிறானுவ.
இது நான்…
சரிதான். நீங்க சொல்றது எல்லாமே சரிதான். என்னச்செய்ய… சம்பாத்தியம் இருக்கற அளவு அரிசி விலை வாங்கணும்ன்னு முடிவு பண்ணிடறான்…
அவர்..
நீங்க வாங்குறதுனாலத்தான்டா அவன் விக்கிறான். கேப்ப, கேழ்வரகு இதையெல்லாம் மளிகை கடையில வாங்குன காலம் போய் டயட் சென்டர்ல வச்சி ஆயிரக்கணக்குல விக்கிறான். நீங்களும் அந்தஸ்துக்காக அதையெல்லாம் வாங்கி திண்ணு எல்லா திருட்டுப்பயலுகளையும் பணக்காரன ஆக்கிடறீங்க.
இது நான்…
இவ்வளவு பேசிறீயேண்ணே.. யாருனே நீ… எங்க இருக்க…
அவர்..
திருவண்ணாமலை வெவசாயி. இப்போ… ஷாப்பிங் மால் சூப்பர்வைசர். போ… போய் அந்த லட்சிய வாழ்க்கைய வாழ்ந்திடு…
இது நான்…
இப்போதாண்ணே நீ நல்ல வார்த்தை பேசியிருக்க… ஆனா.. நீ சொன்னது எல்லாமே உண்மைதான்.
அவர்..
போ… அரியலூர் வந்திடுச்சு… போய் ஊர் சேரு. இனிமே பெரிய கடையில.. போய் சாதாரண அரிசிய தங்க விலை கொடுத்து சாப்புடாதீங்க…. வெதச்சவன் பிச்சையெடுக்குறான்… விக்கிறவன் பங்களா கட்டுறான்… இந்த மாச சம்பளம் கூட இன்னும் வரல…. இந்த நாட்டோட நிலை இன்னும் மோசமா போகும். நம்ம எதிர்கால சந்ததிக்கு நாம ஏதுமே பண்ணப்போறதில்ல. நாம நல்லா வாழ்ந்தோம் … சாப்பிட்டோம். அதுங்களுக்கு அது கிடைக்கவே கிடைக்காது. ஆனா… ஊர் முழுக்க பணக்காரனுங்க கூட்டம் மட்டும் இருக்கும்.
…….
வெவசாயத்த விட்டு நகரவாழ்க்கையில பொழப்பு நடத்துற ஒவ்வொரு வெவசாயியோட மனசும் இப்படித்தான் தீயா எறிஞ்சிக்கிட்டு இருக்கும் போல.
August 24, 2016
கற்றது இங்கிலீஷ்
[image error]
தமிழ் ஒருவனுக்கு பேரன்பையும் வீரத்தையும் சொல்லிக்கொடுக்கும் என்று சொல்வார் எங்கள் தமிழ் ஐயா. சிலம்பாட்டம், குஸ்தி, குத்துச்சண்டை இவற்றையெல்லாம் கற்றுக்கொண்டுதான் வீரத்தை வளர்க்கவேண்டும் என்று இல்லை. ஆனால், தமிழால் இவையெல்லாமே சாத்தியம்.
எத்தனையோ பாடங்களை படித்துவிட்டு மார்க்கும் வாங்கிவிட்டு ஒரு வழியாக வேலைக்கும் வந்துவிடுகின்றோம். ஆங்கிலத்தில் படித்த டெபடைல்ஸ், தி சோல்ஜர் போன்ற செய்யுள்கள் நினைவிற்கு வந்துவிடும் ஆனால் தமிழில் படித்த தாயுமானவர் செய்யுளோ, பாரதியின் பாடலோ, திருவருட்பாவின் வரிகளோ, சிலப்பதிகாரத்தின் காண்டங்களோ ஏன் திருக்குறளில் ஒரு 5 குறள்களோ நமக்கு என்றுமே நினைவிற்கு வருவதில்லை. நாம் பேசும் மொழியையே பாடமாக படிக்கவேண்டும் என்ற நிர்ப்பந்தம் அந்த மொழியின் மீதான வெறுப்பை மறைமுகமாக காட்டச்செய்தது. காலனியாதிக்கத்தின் தாக்கமாகக் கூட இருக்கலாம். தினமும் ஒரு திருக்குறள் அதற்கான விளக்கஉரை என்று வீட்டு வாசலில் கரும்பலகைகளில் எழுதி பொதுமக்கள் பார்வைபடும் படி தினமும் வைக்கும் தமிழ் ஐயாக்கள் இன்னும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.
படிக்கவேண்டும். பாஸ் ஆக வேண்டும். அவ்வளவுதான் தமிழ் மீது இருக்கும் தேவை என நான் கருதுகிறேன்.நம்மில் எத்தனைபேர் தமிழ் செய்யுட்பகுதிகளை அர்த்தம் புரிந்து படித்தோம் என்று தெரியவில்லை. புரிந்து படித்தவர்கள் இருப்பார்கள் ஆனால் முதல் மார்க் வாங்கியவன் நம்ம க்ளாஸ் லீடராத்தான் இருப்பான். கோனார் தமிழ் உரை மார்க் வாங்க உதவியதே தவிர பொருள் புரிந்து தமிழை கற்க பயன்படவேயில்லை. மாணவன் என்ற அந்த ஸ்டேடஸை இழக்கப்போகும் தருவாயில் தமிழ் மீது எனக்கு ஆர்வம் வந்தது கல்லூரியின் இரண்டாம் ஆண்டு நான்காவது பருவம். இறுதியாண்டில் தமிழ் இல்லை. எங்கள் வகுப்பிற்கு தமிழ் ஐயாக்கள் வருவதேயில்லை.ஒன்றாம் வகுப்பு முதல் கலைப்படிப்பின் இரண்டாம் ஆண்டு வரை தமிழை நீ படித்தே ஆக வேண்டும் என்று சொல்லும் இந்த கல்வி கட்டமைப்பு, இறுதியாண்டிற்கு பிறகும் முதுகலைபட்டத்திற்கும் தமிழை நீ இனி படிக்கவேண்டாம் என்கிறது. ஒன்று இல்லை என்றதும் அதன் அருமை புரிந்தது. தேட ஆரம்பித்தேன். தமிழ் ஐயாக்களை தேட ஆரம்பித்தேன். அவர்கள் எங்கேயும் கிடைக்கவில்லை. அடர்ந்த காட்டுப்பகுதியில் கட்டப்பட்ட சில கல்லூரிகளிலும், ஆற்று ஓரமாய் இருக்கும் சில கலைக் கல்லூரிகளிலும்தான் தமிழ் வாழ்ந்துகொண்டிருக்கிறது, அதே ஐயாக்கள் நினைத்தால் காலத்தை வீணடிக்காமல் தமிழ் புலவர்களை பி.காம்., பி.ஏ., பொருளாதாரம் போன்ற துறைகளில் இருந்து கூட அவர்கள் உருவாக்கலாம். ஆனால் நமது தொழில்நுட்ப அசுர வளர்ச்சி அதை ஏற்றுக்கொள்ளாது. நாமும் தேதி முடிந்த சரக்குகளாகத்தெரிவோம் என்ற நினைப்பில் தமிழை தள்ளினோம்.
பள்ளிக்கூடங்களிலும் கல்லூரிகளிலும் தமிழ் வகுப்பிற்கு மணி அடித்தவுடன் வருகைப் பதிவேட்டில் நம் பெயரை தமிழ் ஆசிரியர் வாசிக்கும்போது உள்ளேன் ஐயா, உள்ளேன் அம்மா என்று சொல்ல வேண்டும் என்ற விதியை மனது தயார்ப்படுத்திக்கொள்ளும். ஒரு வேளை மாற்றி யெஸ் சார் அல்லது பிரசண்ட் சார் என்று சொல்லிவிட்டால் அவ்வளவுதான் தமிழ் ஐயாவின் கோபத்திற்கு எல்லையே இருக்காது. டஸ்டரோ சாக் பீஸோ வந்து முகத்தில் விழும். அல்லது…. யாரு தொற லண்டன்லேந்து வந்தெறங்கியிருக்கு போல என்ற கேளிக்கையான பதிலும் வரும்.
கல்லூரி தமிழ் ஐயாக்களுக்கும் பள்ளி தமிழ் ஐயாக்களுக்கும் இடையே நிறைய வித்தியாசம் இருக்கும். பள்ளி அளவில் தமிழ் ஐயாக்களும் அம்மாக்களும் பாசத்தையும் தமிழையும் ஊட்டுவார்கள். கல்லூரி தமிழ் ஐயாக்கள் … தமிழ் இலக்கியம் பற்றி பாடம் எடுக்கும் நேரம் மிகவும் குறைவே, ஆனால் ரௌத்திரம் பற்றியும், வீரம் பற்றியும், அரசியல் பற்றியும், அக்கால அரசியல் தற்போதைய அரசியல் பற்றியும், தமிழ் இனத்தின் வரலாறு பற்றியும், செய்யுளின் அழகு மற்றும் அழகியல் பற்றியும் பாடம் எடுப்பார்கள். முக்கியமாக அதில் நகைச்சுவை உணர்வு அதிகம் இருக்கும். இது வேறு எந்த துறை ஆசிரியர்களிடமும் காண முடியாத ஒன்று. தமிழையும் அழகியலையும் பிரிக்கமுடியாது.ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியர் நாடகத்தின் மூலம் அழகியலை நிரூபிக்க முடியும், ஆனாலும் அழகியல் என்பது தமிழுக்கே உரியது. அது மற்ற மொழிகளின் அழகியல் வெளிப்பாட்டை தமிழ் மொழியின் மூலம் அளவு காட்டப்படுவது இல்லை. ஏனென்றால் அழகியல் பிறந்ததே தமிழ்மூலமாகத்தான். ஏஸ்தடிக்ஸ் என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். இந்த வார்த்தைக்கெல்லாம் முன்னோடி நமது அழகியல். அழகியலை ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால், உலகில் எல்லாமே அழகு. அழகின்மை என்று எதுவுமே இல்லை என்பதுதான் அழகியல்.
அகல உழுவதைவிட, ஆழ உழு என்பார் தமிழ் ஐயா. எவ்வளவு அர்த்தம் பொதிந்த அழகான சொலவடை. வையும் போதும் கூட, அங்கும் இருப்பான் இங்கும் இருப்பான், ஆக்கிய சோத்துக்குப் பங்கும் இருப்பான்- வெங்கப்பயல் என்பார் அழகாக. புத்திமதி கூறுகையில், தவளை தான் வாயல கெடும் என்பார், சொல்பேச்சுக் கேட்காதபோது, வைக்கப்போர் நாய் கதையை சொல்வார், நக்கல் நையாண்டிக்கு, நாளைக்கு சாகப்போற கிழவி கூறைமேல ஏறி உட்காந்தாளாம் என்பார் மிக அழகாக. மாணவர்கள் இன்னொருவருடன் சண்டைக்கு போகும்போது, சாரை விறுவிறுத்தா மாட்டுக்காரன்ட்ட போகுமாம் என்பார்.
எங்கள் கல்லூரியில் ஒரு மாணவன் தினமும் தாமதமாகத்தான் வருவான். கேட்டால் வீட்டில் அவ்வளவு வேலை அவ்வளவு கஷ்டம் என்று தன் துயரத்தை சொல்வான். அப்படி ஒருநாள் அவன் தாமதமாக வந்தபோது, தமிழய்யா ஒரு கதை சொன்னார்.வாழ்க்கையில் எப்போதுமே கஷ்டங்களை அனுபவித்தவன் கடவுளிடம் எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு கஷ்டம் என்னால் தாங்க முடியவில்லை என்று கேட்கிறான். அவனைப்போலவே கஷ்டங்களை அனுபவித்தவர்களை, கடவுள், அவர்கள் அவர்கள் கஷ்டங்களை ஒரு மூட்டையில் போட்டு எடுத்துவரச்சொல்கிறார். எல்லாம் ஓர் இடத்தில் கூடுகின்றனர். எல்லோரும் கடவுளின் சொல்படி தத்தம் கஷ்டங்களை மூட்டையில் போட்டு தோளில் சுமந்துகொண்டு நின்றனர். கடவுள் அனைவரிடமும் சொல்கிறார், இன்னும் சிறிது நேரத்தில் இந்த இடம் இருண்டுவிடும். அவரவர்கள் எடுத்து வந்த கஷ்ட மூட்டைகளை அதோ தெரியும் அறையினுள் வைத்துவிட்டு வரவேண்டும் என்கிறார். எல்லாம் அதன் படி செய்கின்றனர். கடவுள் மறுபடியும் அவர்களிடம் அதே அறையினுள் சென்று அவரவர்கள் மூட்டையை எடுக்கச்சொல்கிறார். அவர்களால் எது தன்னுடைய மூட்டை என்று தெரியாமல் மாற்றி எடுத்து வந்துவிடுகின்றனர். ஆனால், இம்முறை அவர்கள் மாற்றி எடுத்துவந்த மூட்டை தங்கள் சொந்த மூட்டையைவிட பளு அதிகமாக இருந்தது, யாரலும் தூக்க முடியவில்லை. எல்லோரும் கடவுளிடம் மன்றாடி தங்கள் பழைய மூட்டைகளை தருமாறு வேண்டுகின்றனர். கடவுளும் அவ்வாறு செய்கிறார். இப்படி ஒரு கதையை கேட்கும்போது வகுப்பில் இருக்கும் மாணவர்களின் மன நிலை எப்படி இருக்கும். அந்த அளவு ஒரு உத்வேகத்தை இக்கதை தருகிறது.
தமிழ்ப்பாடம் என்ற ஒரு வகுப்பே நீதியை சொல்லித்தரத்தான் நமது கல்வியாளர்கள் அமைத்துள்ளார்கள் என்பது எனது நம்பிக்கை. இவையெல்லாம் வெர்ட்ஸ்வொர்த், ஷேக்ஸ்பியர்களால் சாத்தியமாகாது.
பள்ளியில் தமிழ் அம்மா எப்போதும் கூறுவார், நீ படி அல்லது படிக்காமல் போ. பாஸ் ஆகு இல்ல பெயில் ஆகு. ஆனா, பொய் சொல்லாத. என்னைக்குமே உண்மைய சொல்லிப்பாரு. உண்மைய காப்பாத்த தேவயில்ல, பொய் சொன்னா நாம சாகுற வரைக்கும் அத காப்பாத்திக்கிட்டே வரணும், நீ காப்பாத்த மறந்துட்டேன்னா அது உன்னைய கொன்னுடும். இது போன்ற சில அறிவுரைகள் சிலருக்கு மனதில் பாடம் ஏறியதோ இல்லையோ கடைசி பெஞ்சில் இருக்கும் மாணவன் வரை காதில் ஏறியிருக்கும். என்றாவது ஒருநாள் இந்த வார்த்தைகளே உங்களை காப்பாற்றும். மற்றபடி தேர்வு எழுதி நீங்கள் மதிப்பெண்கள் வாங்குவது எல்லாம் அடுத்த வகுப்பிற்கு செல்ல வேண்டிய பயணச்சீட்டுதானே ஒழிய வெறும் மதிப்பெண்களால் ஒருவனின் ஒழுக்கத்தையும் நேர்மையையும் தீர்மானிக்க முடியாது என்பார். தமிழ் ஐயாக்களுடன் கொண்ட நமது உரையாடல்கள் பெரும்பாலும் நாம் நமது தாய் தந்தையிடம் கொண்டிருக்கும் உரையாடல்களுக்கு ஒத்து இருக்கும். ஆதலால்தான் என்னவோ அவர்களையும் நாம் ஐயா என்றே அழைக்கின்றோம் பெண்களாயின் அம்மா என்று அழைக்கின்றோம்.
சில மாதங்களுக்கு முன்பு தமிழ் பி.ஏ தொலைநிலைக்கல்வியில் படித்தால் என்ன என்று தோன்றியது. கல்லுரியை விட்டு வந்து இத்தனைவருடத்திற்கு பிறகு தமிழ் மீண்டும் படிக்கவேண்டும் என்ற ஆசை வந்ததே அபூர்வம். அதனைத் தொடர்ந்து, பாடத்திட்டங்களை தமிழ்ப் பல்கலைக்கழகம், சுந்தரனார் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம், மெட்ராஸ் பல்கலைக்கழகம் போன்ற வெப்சைட்டுகளில் பார்த்தேன்.
ஆனால் உள்ளே இருக்கும் நியாயம்தான் எப்போதும் கூடவே இருந்து குழிபறிப்பது. உள்ளிருந்து ஒரு சப்தம் கேட்டது…. “இட்ஸ் பெட்டர் டு லீவ் இட் நவ், டமிழ் பி.ஏ வோண்ட் மேக் எனி சென்ஸ் அண்ட் இட் வில் நாட் சப்போர்ட் யுவர் கரீர் எனிமோர் அண்ட் டஸ் நாட் இயர்ன் எனி இன்கம் அவுட் ஆப் இட், இட்ஸ் அப்சொலிட், ஜஸ்ட் ஸ்பெண்ட் தி மனி அண்ட் டைம் அட்லீஸ்ட் இன்ய புரோடக்ட்டிவ் மேனர்” என்றது.
நினைவில் உள்ள சில சொலவடைகள்….
மகள் வாழ்ற வாழ்வுக்கு மாசம் ஆயிரத்தெட்டு வௌக்கமாராம்.
கழுத கோபம் கத்துனா தீரும்.
மேயுற மாட்ட நக்குற மாடு கெடுக்குற மாதிரி.
வட்டிக்கு வாங்கி அட்டிகை வாங்கினாளாம் அட்டிகையை வித்து வட்டி கட்டினாளாம்.
நக்குற நாய்க்கு செக்குன்னு தெரியுமா சிவலிங்கம்னு தெரியுமா?
வெளஞ்சா வள்ளி திருமணம் வெளையாட்டா அரிச்சந்திரன் நாடகம்.
சீமான் வீட்டு நாய் சிம்மாசனம் ஏறுதுன்னு வண்ணான் வீட்டு நாய் வெள்ளாவியில ஏறிச்சாம்.
August 14, 2016
நகரவாசியானேனே நாகரிகம் மறந்தேனே
2008இல் பெங்களூருவிற்கு குடிபெயர்ந்த போது பொதுவாக அரசுப் பேருந்துகளில் அலுவலகம் செல்வதுதான் அதிகம். என்னதான் மெட்ரோவில் இருந்தாலும் உள்ளுக்குள் ஒரு தஞ்சாவூர்காரன் இருந்துகொண்டேதான் இருந்தான். ஒரு முழு நகரவாசியாக மாற நினைக்கும்போதெல்லாம், அந்த தஞ்சாவூர்க்காரன் என்னை காப்பாற்றி வந்தான். தினமும் நான்கு பேருந்துகள் மாற வேண்டும். புகை, கூட்ட நெரிசல், போக்குவரத்து பிரச்சினை இதனையெல்லாம் தாண்டி அந்த பெரும் சத்தத்திலும் ஒரு நிதானம் சிலரிடம் இருக்கும். எப்போவாவது சீட் கிடைக்கும். அவசரம் இல்லாமல் மெதுவாக நகர்ந்து உட்காருவதற்கு சென்றால், எனக்கு முன் யாராவது முண்டிக்கொண்டு வந்தால் விட்டுவிடுவேன். சீட் தானே.
ஜன்னல் ஓரம் ஒரு சீட் கிடைத்து உட்காரும்போது வாழ்க்கையில் ஒரு பெரும் விஷயத்தை சாதித்து கிடைக்கும் நிம்மதி கிடைத்தாற்போல் இருக்கும். அப்படி சீட் கிடைத்து ஆர அமர்ந்து கவனித்த விஷயங்கள் ஏராளம். உள்ளிருந்தபடியே மோட்டாரிஸ்ட்டுகளை மிகவும் ரசித்துப் பார்ப்பேன்.
மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்களில் இரண்டு ரகம் என நினைக்கிறேன். ஒரு ரகம் அவசரமாக பதட்டத்துடன் செல்வது, இன்னொரு ரகம் நிதானத்துடன் பொறுமையாக செல்வது. அவசர ஓட்டிகளும் நிதான ஓட்டிகளும் வந்து சேரும் நேரத்திற்கு பெரிதாக ஒன்றும் வித்தியாசம் இருக்காது. இந்த அவரச ஓட்டிகள் சிக்னலில் அவதிப்படுவதை பார்த்து பல நாட்கள் உள்ளுக்குள் சிரித்ததுண்டு. அண்ணன் எப்போ சாவான் திண்ணை எப்போ காலியாகும்ன்னு, எங்கேடா இடுக்கு கிடைக்கும் எப்போடா கார்க்காரன் நகருவான் என்று நினைத்து வண்டியை நகர்த்தும்போது ஒரு ஆட்டோகாரன் நடுவில் புகுந்து அவனது ஆசையை நிராசையாக்கிவிட்டு முன்னேறி நின்றுகொண்டு கரும் புகைச்சலை கொடுப்பான். ஆட்டோகாரனும் ஒரு எகத்தாளமா லுக் விடுவான். அவர்களோட பார்வை யுத்தம் ரசனையாக இருக்கும். இப்படி முண்டி அடித்துக்கொண்டே முன்னேறி ஒரு வழியாக அவர்களுடைய பயணத்தை முடித்துவிடுவார்கள். பேருந்தும் நடையுமாக ஒவ்வொரு நாளும் சென்றுகொண்டிருக்கும் அந்த பெங்களூரு நாட்கள்.
ஒரு முறை இப்படி ஜன்னலோரம் பயணிக்கும்போது ஒரு மோட்டாரிஸ்ட்டை பார்த்தேன். அவர் முண்டி முண்டி பார்த்தார் பிறகு ப்ளாட்பாரத்தில் ஏறிவிட்டார். நான் தான் சரியாக கவனிக்கவில்லை. ப்ளாட்பாரத்தில் பல மோட்டாரிஸ்ட்டுகள் எப்போதுமே அப்படித்தான் செல்கிறார்கள். நான் பார்த்ததுதான் தாமதம். அவ்வளவு கோபம் வந்தது அந்த படித்த முட்டாள்கள் மேல். நடந்துபோவனுக்கு மரியாதையே கிடையாதா இந்த ஊரில். நடைபாதை நடப்பதற்கே என்பதை மறந்து இவர்கள் இப்படி ஏறி வண்டியை ஓட்டுவது அந்த ப்ளாட்பாரத்தின் தளத்தை வலுவிழக்க செய்துவிடும். மறுபடியும் அரசுக்கு செலவு. நடந்து செல்பவர்கள் பீதியிலேயே தான் செல்லவேண்டியிருக்கும். ஏனென்றால் மோட்டாரிஸ்ட்டுகள் சாலையிலும் செல்வார்கள் ப்ளாட்பாரத்திலும் செல்வார்கள். இது என்னுடைய மனதில் தோன்றிய எண்ணம் அன்று.
இன்று சென்னையில்.
இருசக்கர வாகனத்தை ஓட்டிக்கொண்டு அலுவலகம் சென்றுகொண்டிருந்தேன். என்றுமே ப்ளாட்பாரத்தில் ஓட்டுபவர்களையும் ஓட்டுவதையும் வெறுத்த நான், வெறுப்பது மட்டுமல்ல அவர்களை மனதிற்குள் அப்படி வசை பாடுவேன். படித்த முட்டாள்கள் என்று. ஏன் என்னால் அவர்களை மனதார வைய முடிகிறது ? நான் அந்த விஷயத்தில் சரியாக இருக்கிறேன் என்ற நம்பிக்கை. ஆதலால் எனக்கு அவர்களை ஏச உரிமையும் உண்டு. எப்படிப்பட்ட அவசரமாக இருந்தாலும நான் ப்ளாட்பாரத்தில் ஏறியதில்லை. அலுவலக மீட்டிங், சினிமா, நண்பர்கள் சந்திப்பு என்ற எந்த காரியத்திற்கும் அவசரப்பட்டு முந்திக்கொண்டு சென்றதில்லை.
எப்போதும் போல்தான் அலுவலக நேரத்திற்கு இன்றும் சென்றேன். என்ன நினைத்தேன் என்று தெரியவில்லை. உள்ளுக்குள் இருந்த தஞ்சாவூர்க்காரன் உறங்கிவிட்ட நிலையில்… நானும் வண்டியை ப்ளாட்பாரத்தில் ஏற்றி ஓட்டிவிட்டேன். மற்ற வண்டிகள் நிற்கும்போது நாம் மட்டும் சர்ர்ர்ர்..சர்ர்ர்ர்ன்னு வண்டியை பாய்ச்சி செல்லும்போது ஒரு வித மகிழ்ச்சி ஏற்படத்தான் செய்கிறது. ஆனால், உள்மனது நீயும் இப்படி ஆகிவிட்டாயே என்றது. எனக்கு முன்னே ப்ளாட்பாரத்தில் கிட்டத்தட்ட ஆறு பேர் வாகனங்களை ஓட்டிச் சென்றுகொண்டிருந்தார்கள்.
எதிரே ஒரு பெரியவர் 20 அடி தூரத்தில் நான் ப்ளாட்பாரத்தில் இருந்து இறங்குவதற்குள் ஏறிவிட்டார், அவர் என்னை பார்த்துவிட்டதாக எண்ணி சாதாரணமாக ஓட்டி வந்தேன், அவரை கடக்கும்போதுதான் தெரிந்தது நான் வருவதை அவர் கவனிக்கவேயில்லை என்று. எனக்கு முன்பு ஓட்டிச்சென்றவர்கள் அவர் ஏறும்போதே இறங்கிவிட்டார்கள். ப்ளாட்பார பயணத்தை வெறுத்த நான் இன்று அதில் மேல் ஏறி அவரை கடக்கும்போது அவர் திடீரென பயந்து கோபத்துடன்…. டேய் ப்ளடி ராஸ்கல் என்று கத்திவிட்டார், அவர் என்னுடைய தோள்பட்டையை தட்டியிருக்க வேண்டும் என நினைக்கிறேன். உள்ளுக்குள் இருந்த தஞ்சாவூர்க்காரன் விஷயம் தெரிந்ததும் எழுந்தான், இப்படி சூடு சுரணை இல்லாத மனிதனாக மாறிவிட்டாயே ? நீயெல்லாம் படித்தவனா ? ஏன் இந்த அவசரம் ? நிதானமின்மை ? இப்படியா பறத்திக்கொண்டு செல்வார்கள்? என்றான். என்னிடம் பதில் ஏதும் இல்லை அந்த உண்மையான கேள்விகளுக்கு. அவருக்கு அப்பா வயது இருக்கும் என நினைக்கிறேன். நாம்தான் படித்தவர்களாயிற்றே. அவர் விழுந்தாரா, தடுமாறி நின்றாரா என்று எதையும் சேட்டை செய்யாமல் என் பாட்டுக்கு எனது வாகனத்தை ஓட்டிக்கொண்டு ஒரு நன்கு படித்த பட்டம் வாங்கிய ஒரு பட்டதாரியாக நாட்டின் ஒரு பொறுப்புமிக்க குடிமகனாக எனது எனது இலக்கை நோக்கி சென்றுகொண்டே இருந்தேன்.
சாலை முனையில் திரும்பும்போது நின்றுகொண்டிருந்த அரசுப்பேருந்து ஜன்னலோரத்தில் அமர்ந்தபடி ஒரு மத்திம வயது ஆண் என்னை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதை கவனித்தேன். பொறை ஏறிய இருமலுடன் அலுவலகம் வந்து சேர்ந்தேன். தாமதமாக. ஒரு முழு நகரவாசியானேன். உள்ளிருந்த தஞ்சாவூர்க்காரனை தேடிக்கொண்டிருக்கிறேன்.
ப்ளாட்பாரத்தில் வாகனம் ஓட்டுபவர்கள் அனைவருக்கும் சமர்ப்பணம்