அமெரிக்கா என்றவுடன் வல்லரசு என்ற சொல் தானாக உங்கள் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியாது. வட அமெரிக்கக் கண்டத்தில் பிரிட்டனின் சொந்த காலனிகளாக இருந்த13 மாகாணங்கள் எப்படி இருபத்தி ஓராம் நூற்றாண்டில் அமெரிக்கா என்னும் மிகப்பெரிய வல்லரசாக உருவானது என்ற கதையே இந்த டாலர் தேசம். இது குடியேறிகளின் தேசம்; குரூரமாணவர்களில் தேசம். கொஞ்சம் கவனமாகத்தான் சுற்றிப்பார்க்க வேண்டும்.
என்னைப் பொருத்தவரை மொத்த அமெரிக்க வரலாற்றயும் நான்கு பெரும் பாகங்களாக பிரித்துக் கொள்ளலாம்
1. 1500 ல் இருந்து 1783 வரை. பிரிட்டனின் காலனித் தேசங்களாக இருந்த 13 மாகாணங்கள் அமெரிக்க சுதந்திரப் போரின் மூலம் எவ்வாறு ஒற்றைத் தேசமாக உருவெடுத்தன எனும் இந்த வரலாறு. ஜார்ஜ் வாஷிங்டன் எனினும் பண்ணைக்காரர் அமெரிக்க ஜனாதிபதி ஆன கதை இது.
2. 1783 ல் இருந்து 1914 வரை. அமெரிக்க சுதந்திரப் போருக்கு பின் செவ்விந்தியர்களின் இன ஒழிப்பு மற்றும் ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அடிமைகளின் கண்ணீர் வாழ்வு.
பூர்வகுடிகளான செவ்விந்தியர்கலிடமிருந்து நிலத்தையும் வளத்தையும் பிடுங்கிக்கொண்ட அமெரிக்கர்கள் அப்பாவி ஆப்பிரிக்க மக்களிடம் இர���ந்து உழைப்பை உறிஞ்சிக் கொண்டார்கள். அவர்களின் துயரங்களை வார்த்தையில் சொல்லி முடித்துவிட முடியாது. ஆபிரஹாம் லிங்கன், மார்ட்டின் லூதர் கிங், மால்கம் எக்ஸ் மற்றும் பல உத்தமர்கள் தங்கள் இன்னுயிரைத் தந்து பெற்றுத்தந்த கருபரின சுதந்திரத்தின் கதை இது. இதே காலகட்டத்தில்தான் அமெரிக்கா தனது தொழில்த் துறையை உலகுக்கு அகலமாகத் திறந்து வைத்தது. யார் வேண்ணாலும் வந்து கடை விரிக்கலாம்; வியாபாரம் பண்ணலாம் ஆனால் ஒழுங்காக அரசுக்கு வரி மட்டும் செலுத்தி விட்டால் போதும். உனக்கும் லாபம் எனக்கும் லாபம் இதுதான் அவர்களின் பொருளாதாரக் கோட்பாடு.
3. 1914ல் இருந்து 1945 வரை.முதலாம் உலகப் போர் தொடங்கி இரண்டாம் உலகப் போர் முடியும் வரையிலான இந்த காலத்தில்தான் அமெரிக்கா தன்னை ஒரு வல்லரசாக நிலை நிறுத்திக் கொண்டது. அதாவது பிரிட்டனிடமிருந்த வல்லரசு பதவியியை மிகச்சரியாக இப்பொழுதுதான் பறித்துக் கொண்டது. ஐரோப்பிய தேசங்களுக்கு போருக்குத் தேவையான உணவு, உடை, ஆயுதம்,தாதுக்கள் , உலோகங்கள் என்று எல்லாவற்றையும் ஏற்றுமதி செய்து தள்ளிக் கொண்டே இருந்தார்கள். சுருக்கமாகச் சொன்னால் குண்டூசி முதல் போர்விமானங்கள் வரை உலகப் போருக்குத் தேவையான அனைத்தையும் ஏற்றுமதி செய்யும் ஒன் ஷாப் ஸ்டாப்பாக மாறியிருந்தது அமெரிக்கா. அதுவும் உடனே பணம் தர வேண்டியதில்லை வருடாவருடம் வட்டியை மட்டும் கட்டிக் கொண்டிருந்தால் போதும் பின்னால் பணத்தை திருப்பி செலுத்த முடியாவிட்டாலும் அந்த தேசங்கலை தன்னுடைய வர்த்தகக் காலனிகளாக மாற்றிக் கொண்டது அமெரிக்கா. எப்படிப் பார்த்தாலும் லாபம்.
4.1945ல் இருந்து இன்று வரை. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்கா ஈடுபட்ட இல்லை இல்லை உருவாக்கிய மற்ற போர்கள் (கிரீஸ்,கொரியா, குவாத்தமாலா ,வியட்நாம், கியூபா, எகிப்து - இஸ்ரேல், ஆப்கானிஸ்தான் -ரஷ்யா, ஈரான் - ஈராக் மற்றும் இறுதி ஈராக் யுத்தம்), ரஷ்யாவுடனான பனிப்போர், மேலும் அமெரிக்கா மீது தொடுக்கப்பட்ட பயங்கரவாத தாக்குதல்கள் ஆகியவை இந்த காலகட்டத்தின் முக்கிய நிகழ்வுகள். இதில் கம்யூனிசத்திற்கு எதிரான போர்களில் (வியட்நாம் , கியூபா) பயங்கரமாக அடி வாங்கியது அமெரிக்கா. ஆனால் மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெற்ற எண்ணெய் வளங்களை சுரண்டுவதற்கான போர்களில் எப்போதும் போல அதற்கு வெற்றிதான். (அரபு நாடுகளின் பங்காளிச் சண்டை இதற்கு முக்கிய காரணம்.)
1980 வரை மிகவும் நடுநிலையாகவும், சரியாகவுமே இந்தப் புத்தகங்கம் எழுதப்பட்டு இருக்கிறது. ஆனால் எப்போது இஸ்ரேல்-பாலஸ்தீன்,ஹமாஸ், அல்கொய்தா ஆகிய பிராந்தியங்களுக்கு கதை நகர்கிறதோ அப்போது ஆசிரியரின் வலதுசாரி பூனைக்குட்டி வெளியே எட்டிப்பார்க்க ஆரம்பித்து விட்டது. எனவே இஸ்ரேல் பாலஸ்தீன விவகாரங்களைப் படிப்பதற்கு இந்த புத்தகத்தை தயவுசெய்து refer செய்யவேண்டாம். மாற்றாக கிழக்கு பதிப்பகத்தின் முகில் அவர்கள் எழுதிய "யூதர்கள் - வாழ்க்கையும் வரலாறும்" புத்தகத்தைப் படிக்க வேண்டுகிறேன். இதை மட்டும் தவிர்த்துவிட்டு பார்த்தால், இவ்வளவு நீண்ட 400 ஆண்டு கால வரலாற்றை மிகச் சிறப்பாக பா.ராகவன் அவர்கள் தொகுத்துக் கொடுத்திருக்கிறார். உண்மையில் அமெரிக்காவில் அரசியல் சரித்திரத்திக்கும் யுத்த சரித்திரத்திற்கும் அதிக இடைவெளி இல்லை. அத்தேசத்தின் அரசியல், யுத்தங்களை தீர்மானிக்கின்றது. யுத்தங்களில் கிடைக்கிற வெற்றியும் தோல்வியும் அடுத்தடுத்த அரசுகளை தீர்மானிக்கின்றன. இந்த அரசியல் - யுத்தச் சக்கரம் அமெரிக்க மக்களை மட்டும் ஒரு போதும் பாதித்து விடாமல் பார்த்துக் கொள்வது தான் வல்லரசின் ஒரே சூத்திரம். இல்லையென்றால் உள்நாட்டு கலவரம் ஏற்பட்டு ரஷ்யா போல அமெரிக்காவும் சிதறிவிடும் அபாயம் இருப்பது அவர்களுக்கும் நன்றாகவே தெரியும்.
இன்னும் வெள்ளை மாளிகை, ஜான் எஃப் கென்னடி மரணம், மோனிகா லெவின்ஸ்கி, என பல அத்தியாயங்களை மேலோட்டமாகக் கூட சொல்லவில்லை அவ்வளவு பெரிய புத்தகம். நிச்சயம் படித்துப் பாருங்கள் உலக வரலாற்றில் ஒரு குறுக்கு வெட்டுத் தோற்றம் கிடைக்கப்பெறும்.
அன்புடன்
நௌஷாத்.
புத்தகத்தின் பெயர்: டாலர் தேசம்
பப்ளிகேஷன்ஸ்: எழுத்து பிரசுரம்
ஆசிரியர்: பா. ராகவன்
பக்கங்கள்: 836