முதன்முதலாக நான் வாசிக்கும் பாண்டியர்கள் பற்றிய புதினம் இது. குறிப்பாகச் சொல்லப் போனால், சோழர்களைப் பற்றி உடையார் முதல்கொண்டு பல நூல்களை வாசித்த அனுபவம் எனக்கு இருக்கிறது. ஆனால் பாண்டியர்களை மையமாகக் கொண்ட முழுமையான ஒரு புதினத்தை வாசிப்பது இதுவே முதல் முறை.
பாண்டிய நாட்டின் தலைநகரான மதுரையைச் சேர்ந்தவன் என்ற அடையாளமே, பாண்டிய மன்னர்கள் மற்றும் அவர்களின் வரலாறு குறித்து தெரிந்துகொள்ளும் ஆர்வத்தை என்னுள் எப்போதுமே உயிருடன் வைத்திருக்கிறது. அந்த ஆர்வம் இருந்தபோதும், இதுவரை பாண்டியர்களைப் பற்றிய வாசிப்பு என்பது மிகவும் குறுகிய வரம்பிலேயே இருந்தது. சிலப்பதிகாரத்தில் வரும் மதுரைக்காண்டம், அல்லது பொன்னியின் செல்வன் புதினத்தில் இடையிடையே தோன்றும் பாண்டிய நாட்டைச் சார்ந்த சிறு கதைக்களங்கள் ஆகியவையே, நான் பாண்டியர்களைப் பற்றி வாசித்த முக்கியமான பகுதிகளாக இருந்தன.
அந்த வகையில், பாண்டியர்களை மையமாகக் கொண்டு விரிவாகவும் ஆழமாகவும் பேசும் இந்தப் புதினம், எனது வாசிப்பு பயணத்தில் ஒரு புதிய பிரிவை திறந்து வைத்துள்ளது என்றே சொல்ல வேண்டும்.ராஜ முத்திரை என்பது வெறும் ஒரு வரலாற்றுப் போர்க்கதை மட்டுமல்ல.
கதையின் தொடக்கமே கொற்கை என்ற துறைமுக நகரத்தை உயிருடன் வாசகன் முன் நிறுத்துகிறது. நகரங்களையும் அரசியல் சூழல்களையும் வெறும் பின்னணியாக அல்லாது, கதையின் ஒரு செயல்படும் பாத்திரமாக மாற்றுவதில் சாண்டில்யன் இங்கு சிறப்பாக வெற்றி பெறுகிறார். கொற்கையின் செல்வமும் அதனைச் சுற்றிய அரசியல் பேராசையும், கதையின் மைய மோதலை இயல்பாக உருவாக்குகின்றன.
சாண்டில்யனின் மிகப் பெரிய பலம், படை வலிமையைவிட அறிவை மேலிடமாகக் காட்டும் அணுகுமுறை. ராஜ முத்திரையில் வீரபாண்டியன் ஒரு தோல்வியே நெருங்காத வீரன் அல்ல. அவன் தவறுகள் செய்கிறான், தோல்வியின் விளிம்பைத் தொடுகிறான், ஆனால் அதிலிருந்து அறிவால் மீள்கிறான். இந்த மனிதத்தன்மையே கதாபாத்திரத்தை நம்பகமாகவும் நெருக்கமாகவும் மாற்றுகிறது. பெரும்படையைக் கொண்ட சேர மன்னன் வீரரவிக்கு எதிராக சிறிய படையுடன் நிற்கும் பாண்டியன், அறிவு, சாதுரியம், அரசியல் நுணுக்கம் ஆகியவற்றின் மூலம் முன்னிலை பெறுவது, சாண்டில்யன் தொடர்ச்சியாக வலியுறுத்தும் கருத்தாக அமைகிறது.
பெண் கதாபாத்திரங்களைச் சாண்டில்யன் எப்போதும் போல வலிமையுடன் வடிவமைத்துள்ளார். இளநங்கை, முத்துக்குமாரி, குறிஞ்சி ஆகியோர் கதையின் மாந்தர்கள் அல்ல,கதையின் ஓர் அங்கம், முக்கிய திசையை மாற்றும் சக்திகளாக இருக்கிறார்கள். குறிப்பாக இளநங்கையின் பதவி உயர்வும் செயல்பாடுகளும், அந்தக் காலச் சூழலைக் கருத்தில் கொண்டால், சாண்டில்யனின் முன்னோக்குப் பார்வையை வெளிப்படுத்துகின்றன. முத்துக்குமாரி வெறும் இளவரசி என்ற வார்ப்புக்குள் அடங்காமல், அரச மரியாதையின் குறியீடாகக் கதையில் நிற்கிறாள். மலையகப்பெண்ணாக வலம்வரும் குறிஞ்சி வீரபாண்டியனின் அன்பையும் நன்மதிப்பையும் நம்பிக்கைக்கு பாத்திரமானவள். எதிரியின் கோட்டைக்குள் சென்றே துணிச்சலாக இவள் மேற்கொள்ளும் காரியங்கள் மெய்சிலிர்க்க வைக்கிறது.
இந்திரபானு என்ற பாத்திரத்தின் மூலம், காதல் தனிப்பட்ட உணர்ச்சியாக மட்டுமல்ல, அரசியல், அறம், பொறுப்பு ஆகியவற்றுடன் பின்னிப்பிணைந்த ஒன்றாகக் காட்டப்படுகிறது. அவன் செயல்கள் கதையை வேகப்படுத்துவதோடு, மனித உணர்வுகளுக்கு இடமளிக்கும் சமநிலையையும் ஏற்படுத்துகின்றன. அதே நேரத்தில், குருநாதன் பாரதபட்டன் போன்ற பாத்திரங்கள், அதிகாரத்துக்கும் அறத்துக்கும் இடையேயான முரண்பாட்டை நுட்பமாக முன்வைக்கின்றன.
சாண்டில்யனின் போர் தந்திரங்கள் இந்���ூலில் கணிசமான இடத்தைப் பெறுகின்றன. குறிப்பாக பரளி முற்றுகை, வெறும் வன்முறைக் காட்சியாக இல்லாமல், அறிவு எப்படி ஒரு போரை வெல்லும் என்பதற்கான வடிவமாக அமைந்துள்ளது. இவையனைத்தும் வாசகனை வியப்பில் ஆழ்த்துவதோடு, எழுத்தாளரின் கற்பனை வளத்தையும் வெளிப்படுத்துகின்றன. மொழிநடையில் சாண்டில்யன் எளிமையையும் நாடகத்தன்மையையும் சமநிலையில் வைத்துள்ளார். உரையாடல்கள் கதாபாத்திரங்களின் மனநிலையை வெளிப்படுத்துவதோடு, காலப்பின்னணியை உணர்த்துகின்றன. அதே சமயம், சில இடங்களில் மிகையான நாடகத்தன்மை, இன்றைய வாசகனுக்கு பழமையானதாக உணர வாய்ப்பும் உள்ளது.
மொத்தத்தில், ராஜ முத்திரை ஒரு முழுமையான வரலாற்றுப் புதினம். இது வாசகனை ஒரு காலகட்டத்துக்குள் இழுத்துச் சென்று, அரசியல், போர், காதல், அறம் ஆகியவற்றை ஒன்றாக அனுபவிக்கச் செய்கிறது. சாண்டில்யனின் வரலாற்றுப் புதினங்களை விரும்புவோருக்கு இது ஒரு தவிர்க்க முடியாத நூல். அதே நேரத்தில், அறிவின் வலிமை எவ்வாறு அதிகாரத்தை வெல்லும் என்பதை இலக்கியமாகக் காண விரும்பும் வாசகனுக்கும் ராஜ முத்திரை ஒரு வலுவான வாசிப்பு அனுபவமாகத் திகழ்கிறது.