எஸ்த்தர் எனும் பெண்ணை பற்றியும், அவளை சுற்றி நடக்கும் நிகழ்வுகளும். அவளின் பார்வையில் தான் கதை செல்கிறது...அதனால் விமர்சனமும் அவள் பார்வையிலேயே….
சமூகம், பொருளாதாரம் மற்றும் அரசியல் மாற்றத்துக்கு ஏற்ப அந்த பெண்ணின் அல்லது ஒரு பெண்ணின் வாழ்க்கையை பற்றியது. சுலபமாக சொல்வது என்றால் women under men. ஒரு ஆணால் பெண்ணை தவிர்க்கவும் முடியாது தனக்கு சமமான இனமாக சேர்க்கவும் முடியாது.
ஒரு ஆண் சட்டத்தை மீறினால் அதிகபட்சம் அபராத தொகை, மந்திர ஜபம் தான் தண்டனை ஆனால் ஒரு பெண் எந்த தவறும் செய்யாத போதும், மீறிவிட்டால், மீறிவிடுவாள் என்று அவளை தவறு சொல்லி, திருந்த சொல்லி அவளை இச்சையாய் தீண்டும் நல்லவர்கள்.
சிறுவயது திருமணம் என்பது பெண்களுக்கு பாதுகாப்பு என்கிற முகமூடியோடு ஆண்களின் கவுரவம் என்று அவர்கள் நினைப்பதை காப்பதற்கும் அகங்காரத்தை திருப்தி படுத்தவுமே.
பெண்களை தூக்கி செல்பவனும், பாதுகாப்பவனும், ரட்சிப்பவனும் அனைத்து வகை ஆண்களும் ஒன்றையே செய்கிறார்கள், இது அவர்களுக்கான ஆட்டம், சட்டம்.....
எஸ்தரின் மூலமாகவே நாம் எல்லா நிகழ்வுகளையும் பார்க்கிறோம், உணர்கிறோம். ஒவ்வொரு பகுதியையும் அழகாக இணைத்து அதிலிருந்து கதையை கொண்டு செல்லும் விதமும், எஸ்தர் பருவமடைதலை சொன்ன விதமும், அந்த இரண்டு வரியில் மொத்த கதைக்கான கருவை சொன்ன விதமும் அருமை.
ரவிக்கையில், பெண்ணின் உரிமையையும், அடக்குமுறையையும், அரசியலையும் சொன்னவை உண்மைதானே, பெண்ணின் பொட்டிற்கு பின்னாலும், ஜாக்கெட்டுக்கு பின்னாலும் உள்ள ஆயிரம் அடக்குமுறைகளும், அரசியலும்.
ஒரு பெண் தூணில் வடித்த ஆண் சிலையின் தோளின் மீது கால் வைத்து ஏறி சென்றால், வெகு நாள் சாத்தபட்டிருந்த கதவு கூட திடீரென்று திறந்து அவளை காட்டி கொடுத்துவிடும். இதில் உள்ள உண்மையும், உவமையும்..................”உண்மை”.
நாம் என்னதான் மதம் மாறினாலும் தொன்றுதொட்டு நம்மிடையே உலவி வரும் நம் பழக்கவழக்கங்கள் மாறுவதில்லை அதிலுள்ள பெரும் அரசியலையும் நாம் புரிந்துகொள்வதில்லை.
இறுதியாக இந்த புக்கை முடிக்கும்போது எனக்கு தோன்றியது இதுவே...
அடக்குமுறையும், கொடுமைகளுமே வாழ்க்கை என்று ஜீரணித்து, தன் பிள்ளைகளும் இப்படியே வளர்க்கப்படுகிறார்கள் என்று தெரிந்தும் ஒன்றும் செய்ய முடியாத கையறு நிலையில் அந்த சூழலில் வாழ்ந்துவிட்டு வீழ்ந்துபோகும் பெரும்பாலான பெண்களை போல் இருக்க முடியாமல், அழகோடும், அறிவோடும், எல்லா நியாயங்களும், விஷயங்களும் தெரிந்துகொள்ளும் எஸ்தருக்கு அதை உணர்ந்துகொள்ளாமல் இருப்பதால் அந்த வாழ்கையை ஜீரணித்து கொள்வதற்கு பதினைந்து வருடம் தேவை படுகிறது, வாழ்ந்து வீழ்ந்துவிட்டு போவதற்கு.