"குறத்தி முடுக்கு"
ஆசிரியர் - ஜி நாகராஜன்
குறுநாவல்
காலச்சுவடு பதிப்பகம்
95 பக்கங்கள்
உலகில் எழுதப்படும் அத்தனை கதைகளும் இவ்வுலகில் எங்கோ ஓர் மூலையில் வசிக்கும் ஒரு வாசகனை நோக்கியே எழுதப்படுகின்றன. அது அவனுக்கான கதை என்று அவனுக்கும் அந்த எழுத்தாளனுக்கும் மட்டுமே தெரிந்த ஒரு ரகசிய உள்ளுணர்வு. இது ஒரு வித வினோதமான, அற்புதமான, ஆச்சர்யமான, உணர்வுபூர்வமான, உண்மையான ஓர் பந்தம். அந்த பந்தத்திற்கு பெயரும் கிடையாது, வெளிஉலகில் இருந்து பார்க்கும் கண்களுக்கு அது புரிவதும் கிடையாது. அப்படி ஓர் உணர்வு, ஓர் பந்தம் எனக்கு பெண்களை தனித்து எழுதும் ஒரு சில எழுத்தாளர்களிடம் மட்டுமே ஏற்படும். குறிப்பாக தி ஜானகிராமன், ஜெயகாந்தன், அந்த வரிசையில் இப்பொழுது ஜி. நாகராஜனும் இனைந்து விட்டார். இல்லை இல்லை நான் அவருடன், அவர் கருத்துக்களுடன் என்னை இணைத்துக்கொண்டேன். குறத்தி முடுக்கு வழியே என்னை கரம்பிடித்து அழைத்து சென்று என் வாசிப்பு பயணத்தில் ஒரு நீங்கா துணை பயணியாகிவிட்டார்.
குறத்தி முடுக்கு ஒரு தனி உலகம். இவ்வுலகம் பெரிதாக எங்கும் பேசப்படாது. ஏனெனில் இது இருள் சூழ்ந்த, சரியாக சொல்லவேண்டுமென்றால் நம் ஆண் சமூகம் ஒன்று சேர்ந்து குறிப்பிட்ட பெண் சமூகம் சுற்றி உருவாக்கிய ஒரு செயற்கை இருள் சூழ் உலகம். இருளில் தான் ஆண் தன் அத்தனை மிருகத்தனமான உணர்ச்சிப்பெருக்கை வறுமைக்கு விருந்தாகும் ஒரு பெண்ணிடம் கொட்டி தீர்த்து விட்டு நிம்மதி பெருமூச்சுடன் கலைந்து வைத்த தன் ஆடையுடன், தன் மானம், மரியாதை, சமூக அந்தஸ்தையும் சேர்த்து எடுத்துக்கொண்டு மீண்டும் தன் ஒளிமிகுந்த வாழ்க்கைக்குள் நுழைந்து விடுகிறான். இந்த இருள் உலகை, தமிழகத்தின் தென் பகுதியில் இருந்த ஒரு குறத்தி முடுக்கை தான் ஜி நாகராஜன் வெட்ட வெளிச்சம் போட்டு அம்பலப்படுத்துகிறார். இக்கதை எழுதப்பட்ட காலம் முற்றிலும் மாறுபட்டது. அந்த காலகட்டத்தில் வெளிவந்த இக்கதை நம் நவீன தமிழ் இலக்கியத்தில் என்னை பொறுத்தவரை ரௌத்திரம் மிக்க படைப்பு இதுதான்.
இக்கதையில் குறத்தி முடுக்கு பெண்களுக்கு ஆசிரியர் கொடுத்த பெயர்கள் மிகசிறந்தவை - செண்பகம், தங்கம், மரகதம், மீனாட்சி. இக்கதையில் பல முகியமான இடங்களை ஆசிரியர் நிரப்பாமல் வெற்றிடமாக விட்டுவிடுகிறார். அது வெற்றிடம் அல்ல அந்த இடம் நிரப்ப முடியா அளவு கனமானவை. இக்கதை நம்மை நோக்கி பல கேள்விகளை கேட்கும், இன்று வரை அதற்கு பதில் கிடைத்தா என்பது கேள்விக்குறியே? காதல், திருமணம், இல்லற வாழ்க்கை, ஆண் பெண் உறவு குறித்து பல தர்கங்களை உளவியல் வழியே இக்கதை நிகழ்த்துகிறது. பெயரிடப்படாத ஒரு ஆண் கதாபாத்திரமும் அவன் தினமும் தன் இச்சைக்காக தேடி செல்லும் தங்கம் என்ற பெண்ணறிக்குமான நிகழ்வுகள் தமிழ் இலக்கியத்தில் இதுவரை யாரும் எழுதாத ஒரு உண்மை.
" அவன் கைவலி, கால்வலி, மன வலி எல்லாவற்றுக்கும் ஐந்து நிமிடங்களில் நிவாரணம் காண முயலுகிறான் ",........." இனி அவனுக்கு நல்ல உறக்கம் வரும் "......." செண்பகத்துக்கு தூக்கம் வரவில்லை"
ஆம், உண்மைகள் ஊமையாகமல் ஊமைப்படுத்தப்படமல் உண்மையாக உங்கள் கண் முன்னே நிறுத்தப்பட்டால் இப்படிதான் இருக்கும். இதோ இன்னும் சில உண்மைகள்
" குறத்தி முடுக்கில் 3 மாத கருவை சுமக்கும் செண்பகம் "
காவல்துறை கண்டித்து அனுப்பிய மீனாட்சி தன் சிகை இழந்த சிரத்தை புன்னகையுடன் கண்ணாடியில் பிம்பமாக பார்க்கும் பார்வையில் ஒழிந்திருக்கும் உண்மை
குறத்தி முடுக்கில் காதலும் இருக்கும் காதலனும் இருப்பான் ஆனால் அந்த காதல் எதன் மீது என்பது தான் கேள்வி?
ஆணின் தேவைகள் இந்த குறத்தி முடுக்கிற்குள் ஒரு போதும் நிராகரிக்கபட்டுவிடக்கூடாது. ஆனால் அதற்கும் விதிவிலக்காக விளங்கியவள் தான் தங்கம்.
நான் குறத்தி முடுக்கிற்குள் ஒருவரை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைக்குமானால், நான் சந்திக்க விரும்புவது "தங்கம்" என்பவளைத்தான்.
பக்கங்களில் குறைந்தவையாக இருந்தாலும் இந்த புத்தகம் கனமானது. அந்த கனம் எனக்குள் சற்று தொற்றிகொண்டது. உங்களுக்குள்ளம் நிச்சயம் தொற்றிக்கொள்ளும். அந்த கணத்தை இறக்கிவைக்க ஒரு வழிதேடுவோம். அதுவரை குறத்தி முடுக்குகள் இருளுக்குள் இருளுடன் ஓர் இருளாக இருந்துகொண்டுதான் இருக்கும். இதுதான் உண்மை.
--இர. மௌலிதரன்.