மண்வாசம் கமழ, மெல்லிய உணர்வுகளை கடத்த லா.ச.ராவோ, கி.ராவோ, தி.ஜாவோ மட்டும்தான் வேண்டும் என்றில்லை.
எனைப் பொறுத்தவரை மாரிசெல்வராஜ் கர்ணனோ, வாழையோ, மாமன்னனோ, பைசன் காலமாடனோ அல்ல. இன்றும் என் மனதுக்கு நெருக்கமாகிய பரியேரும் பெருமாளே! அதன் நீழ்ச்சியே இந்த ‘மறக்கவே நினைக்கிறேன்’.
நான் இதுவரையில் மயிலாயோ மற்ற பறவைகளையோ வேட்டையாடி தின்றதில்லை, பாவைக்கூத்துக் கூடாரத்தில் இருந்த தோல் பாவை பொம்மையை திருடியதில்லை, சரவணா ஸ்டோர்ஸில் கடைநிலை ஊழியனாக வேலை பார்த்ததில்லை, நண்பனின் அப்பாவைத் தொலைத்து பின் அவருக்கு காணவில்லை போஸ்டர் ஒட்டியதில்லை, திருமண மண்டபத்தில் இருந்து சாதிய வேற்றுமையால் விரட்டப்பட்டதில்லை, ட்ரெயினில் வெள்ளரி விற்கும் அக்காவுடன் நெடு நாட்கள் நட்பு பழகியதில்லை, ரயில்வே ஸ்டேஷனில் ஜோசியக்கிளி பெட்டியுடன் மணிக்கணக்கில் உட்கார்ந்ததில்லை, அறிமுகமில்லா ஒருவரின் மரணச் சடங்கை முன்னின்று நடத்தியதில்லை, கிருஷ்ணர் வேடமிட்டு தெருக்களில் ஆடியதில்லை, ஓர் அரவாணியின்/ பாலியல் தொழிலாளியின் வாழ்வை அருகிலிருந்து பார்த்ததில்லை. ஆனால் இப்புத்தகத்தினால் அவை அனைத்தையும் சிறிதளவு எனது வாழ்வாக்கிக் கொள்ள முடிந்தது.
ஒவ்வொரு கதையிலும் கூறப்பட்ட வலி சில நேரங்களில் இன்பமாகவே பட்டது. எளியோரின் வலி. அவ்வலி இயலாமையாகவும், இறப்பாகவும், அவமானமாகவும், பசியாகவும், பஞ்சமாகவும் ஒவ்வொரு கதையிலும் வெளிப்பட்டிருக்கிறது. சில இடங்களில் கருணையாகவும், அன்பாகவும், காதலாகவும், பரிவாகவும், பாசமாகவும் கூட வெளிப்பட்டிருக்கிறது.
இயல்பாகவே இவை அனைத்தையும் கடந்து வந்த ஒருவனுக்கு, நம்பிக்கையும், தெளிவும், சிந்தனையும் மேலோங்கி இருக்கும்.
இக்கதைகள் மூலம் மாரியின் படக்குறியீடுகளை மேலும் ரசிக்க முடிந்தது.
எழுத்து நடையில் நிச்சயம் இது ஒரு சிறந்த புத்தகம் அல்ல. இருப்பினும் ஒரு நல்ல புத்தகத்தின் அழகு இலக்கியம் மட்டும் இல்லையே. அவர் கூறும் கதை இக்காலத்தை தாண்டி என்னை பல மனிதர்களுக்கு மிக அருகில் கூட்டிச் சென்றதை பெரும் வெற்றியாகவே நான் பார்க்கிறேன்.
புத்தகத்திலிருந்து எனை ஈர்த்த சில வரிகள்:
“கட்டி தழுவுதல்”
“மெலிதான எலும்புகள்”
“அப்பா எப்போதும் ஆடிக் கொண்டிருந்த, ஆடத் துடித்த, ஆட அழைத்த, ஆட கெஞ்சிய தன் கால்களை வலுக்கட்டாயாமக அதட்டி, மடக்கி, ஒடுக்கி, வெறுமனே நடக்கும், ஓடும், நிற்கும், நீட்டும் கால்களாக மட்டும் மாற்றிக் கொண்டாராம்.”
“அவன் திருடினான் என்பதற்காக மட்டும் அவனை தெருவில் முட்டி போட வைத்து கையிரண்டையும் தூக்கச் சொல்லி அடித்து தண்டனை கொடுக்கவில்லை. அந்த ஐம்பது ரூபாய் இருப்பதாக நினைத்து பஸ்சில் ஏறினேன். பணம் இல்லாமல் அவமானப்பட்டு வந்த வெறி என்னை அப்படிச் செய்ய வைத்து விட்டது.”
“இனிமல் தவறு செய்யக்கூடாது என்று முடிவு எடுப்பேன், ஆனால் நான் செய்வதில் எது தவறு எது சரி என்று எனக்கே தெரியாதே.”
“நீங்கள் என்னிடமிருந்து நான் என்ற எனக்கான என் சுதந்திரத்தை பறித்துக் கொண்டீர்கள். நான் உங்களிடமிருந்து நீங்கள் என்ற எனக்கான ஆறுதலையும் அழித்துவிட்டேன். பின்னினி எப்படி புழங்கும் நமக்கிடையே நாம் என்ற அந்த சொல்?”
—
பி.கு:
இயக்குநர் மாரி செல்வராஜின் சாதிய நிலைப்பாட்டையும், திரைக்கதை போக்கையும் கருத்தில் கொண்டு, இப்புத்தகத்தை படிக்க தவறிய அனைத்து ஆன்மாக்களையும் பரமலோகத்தில் உள்ள பரமபிதாவாகிய நீங்கள் மன்னித்தருள்வீர்களாக. ஆமென்!