ரெயினீஸ் ஐயர் தெரு - ஆறு வீடுகள் அடங்கிய தெரு. ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு கதை. முதல் வீட்டு வாசலில் அமர்ந்திருக்கும் டாரதி வழியாக கதை தொடங்குகிறது. தாய் கோழி இல்லாமல் தனியே இரை தேடும் குஞ்சுகள், எதிர் வீட்டு இருதயத்து டீச்சர், எபன் அண்ணன் மீதான அன்பு என்று கதை கதாபாத்திரங்களின் மூலம் விரிந்து செல்கிறது. டாரதி சின்ன பெண், யார் நல்லவர்கள், யார் கெட்டவர்கள் என்ற விபரம் பத்தாது. இப்படியாக ஒவ்வொரு வீடாக கதாபாத்திரங்கள் வழியாகவே கதை நகர்கிறது. பெரும்பாலும் பெண்கள்தான் முக்கிய கதாபாத்திரங்கள். டாரதி, அவளது சித்தி மகள் ஜீனோ, அத்தெருவில் உள்ள எல்லா வீட்டுக்காரர்களுக்கும் இஷ்டமான கல்யாணி அண்ணன், இரண்டாவது வீட்டு இருதயத்து டீச்சர், அவரது அத்தையம்மாள் இடிந்தகரையாள், அவரது தங்கை பிலோமி, அவளது கணவன் சேசய்யா, பக்கத்து வீட்டு அன்ன மேரி டீச்சர், மூன்றாவது வீட்டு அற்புதமேரி, அவளது அன்பிற்குரிய அண்ணன் சாம்சன், சித்தி எஸ்தர், அன்புள்ளம் கொண்ட ஆனால் குடிக்கு அடிமையான தியோடர், நான்காவது வீட்டு ஆசீர்வாத பிள்ளை, ரெபெக்காள் தம்பதி, அவர்களது இடிந்த வீடு, கொஞ்சமே வந்தாலும் மனத்தைக் கொள்ளை கொள்கின்ற ஆலிஸ், அந்த அடுப்பங்கரை நடைக்கல் இப்படி எண்ணற்ற பாத்திரங்கள், அவர்களுக்குண்டான ஆசைகள், கஷ்டங்கள் என புத்தகம் அதற்கே உண்டான வேகத்தில் நகர்கின்றது. அந்தத் தெருவாசிகளின் குடும்ப நிலவரங்கள், யாருக்கு யாரை பிடிக்கும், பிடிக்காது, வாரத்திற்கு வாரம் வருமானத்திற்கு ஏற்ப மாறும் அவர்களுது வாழ்க்கை முறை என்று நம் கண் முன்னே நிஜ ஆசாமிகளை உலவ விட்டு வேடிக்கை காட்டுகிறார் கதையாசிரியர்.கடைசியாக தெரு ஓரத்தில் இருக்கும் ஜாஸ்லின் பிள்ளை வீட்டையும் அவரது பூர்வீகமும் விளக்கப்படுகிறது. இத்தருணத்தில் அது ஏதோ பின் இணைப்பாக மட்டுமே என்னால் கடந்து போக முடிந்தது. இப்புத்தகம் இப்படியான வாக்கியத்துடன் நிறைவு பெறுகிறது - "மழையைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது எல்லோருடைய மனமும் கடவுள் தன்மையை அடைந்துவிடுகிறது. யாரும் யாருக்கும் தீங்கிழைக்க மாட்டார்கள் போலத் தோன்றுவார்கள் மழையின்போது."