ஓவ்வொருவர் மனதிலும் கட்டாயம் ஒரு ஆசிரியராவது இருப்பார் . பள்ளிப்பருவத்தில் ஆசிரியர்களிடமிருந்து நாம் எவ்வளவோ கற்றுக்கொள்வோம் . அது இயல்பானது . ஆனால் , மாணவர்களிடமிருந்து என்ன கற்றுக்கொண்டேன் என்று ஒரு ஆசிரியர் பேசினால் எப்படியிருக்கும் ? அந்தப் புதுமையான முயற்சியின் விளைவுதான் உங்களின் கையில் இருக்கும் இந்த நூல்.
நாங்கள் கேட்டுக்கொண்டதைவிட சிறப்பாகக் கட்டுரைகளை எழுதித் தந்தார் ஆயிஷா நடராசன் . " என்னைச் செதுக்கிய மாணவர்கள் " என்ற பெயரில் இந்தத் தொடர் தி இந்து தமிழ் நாளிதழில் வெளிவரத் தொடங்கியது . " வெற்றிக்கொடி கட்டு ” இணைப்பிதழில் அது வந்தபோது வந்த எதிரொலிகள் நெகிழ்ச்சியானவை . 20 ஆண்டுகளுக்கு முன்பாகத் தன்னிடம் படித்த மாணவர்கள் தொடர்பான சம்பவங்களை அவர் பகிர்ந்துகொண்டார் . தமிழகத்திலும் வெளியிலும் இருந்த அவரது மாணவர்களையும் அவரையும் மறுபடியும் தி இந்து தமிழ் நாளிதழ் இணைத்தது . தங்களின் ஆசிரியர் தங்களை இன்னமும் நினைவு வைத்துள்ளார் . என்ற மதிப்பும் அன்பும் கலந்த உணர்வோடு மாணவர்களின் கடிதங்கள் எங்களுக்கு வந்தன .
உணர்வுபூர்வமான தொடராக வந்து நிறைவுபெற்ற கட்டுரைகளின் தொகுப்பு இது . ஆசிரியரின் பணி அனுபவமும் உண்டு . தமிழகக் கல்வி சூழலில் விவாதிக்க வேண்டிய முக்கியமான கருத்துக்களும் உண்டு . உலகப்புகழ் பெற்ற கல்வியாளர்களின் பொன்மொழிகள் , நல்ல கல்வி என்றால் என்ன என்பது பற்றிய அறிஞர்களின் கருத்துத்தொகுப்புகள் எனப் பலவற்றின் கலவை இது . இதைப் படிக்கிற ஒருவருக்குக் கல்வி பற்றிய மாற்றுச் சிந்தனையே உருவாகும் . இந்தத் தொடரைப் படித்துவிட்டு அதன்படி எங்களது மகளுக்கு எவ்விதமாகக் கல்வியைக் கொடுக்கலாம் என்று தேர்வு செய்தோம் என்ற கடிதம் எழுதிய பெற்றோர்களும் உண்டு .
கல்வி தொடர்பான அரசின் பார்வையை மாணவர்கள் மீதான சில வகையான ஆசிரியர்களின் பார்வையை மாற்றும் வகையிலான சக்தி வாய்ந்த புத்தகம் இது . ஆசிரியர் பணியை விரும்பி மேற்கொள்பவர்களுக்கான கையேடு. தங்களின் குழந்தைகளுக்கு எப்படிப்பட்ட கல்வியைத் தரலாம் , எப்படிப்பட்ட கல்வி நிறுவனத்தைத் தேர்வு செய்யலாம் என்று பெற்றோர்களுக்கும் வழிகாட்டி இது. மாணவப் பருவத்தில் கல்வி நிறுவனங்களில் ஏற்படுகிற பலவித உளவியல் சிக்கல்களில் மாட்டாமல் தப்பிப்பதற்கு மாணவர்களுக்கு உதவும் நூல் இது , பல்வேறு நிகழ்வுகளில் அன்பளிப்பாக அளிப்பதற்குத் தகுந்த புத்தகம் இது.
இத்தகைய பல்வேறு சிறப்புகள் கொண்ட நூலை உங்களுக்கு வழங்குவதில் மகிழ்கிறோம். படியுங்கள். விவாதியுங்கள்.