இலக்கணம் என்பது மொழியெனும் பயிரைப் பாதுகாக்கும் வேலி போன்றதாகும். அதனால் இலக்கணங் கற்பது மொழியறிவுக்கு இன்றியமையாதது என்று தொடங்கும் இந்நூல் பல இலக்கணக் கூறுகளைத் தெளிவே விளக்குகிறது. அவற்றுள் சில பின்வருமாறு.
குற்றியலுகரம் என்பது குறிலிணைச் சொற்கள் அல்லாது ஓரெழுத்து ஒரு மொழிகள் அல்லாது கு சு டு து பு று எனும் வல்லின உகரங்களில் முடியும் சொற்களின் ஈற்றெழுத்தாகிய உகரம் தன் இயல்பான ஒரு மாத்திரை அளவில் இருந்து குறைந்து அரை மாத்திரை அளவாய் ஒலிக்கும் தமிழின் தனிச்சிறப்பாகும். குற்றியலுகரங்கள் அன்றி உகரத்தை ஈற்றாய்க் கொண்ட சொற்கள் யாவும் முற்றியலுகரங்கள் எனப்படும்.
வன்தொடர்க் குற்றியலுகரங்களை அடுத்து வரும் வினைச்சொல்லுக்கு இடையில் வலி மிகும் (எடுத்துச் சென்றான்). மென் தொடர்க் குற்றியலுகரங்களுக்கு அடுத்து வரும் வினைச்சொல்லுக்கு இடையில் வலி மிகா (விழுந்து கிடந்தேன்).
நிலை மொழியின் ஈற்றில் உள்ள குற்றியலுகரங்கள் யகரத்தை முதல் எழுத்தாய்க் கொண்ட வருமொழியுடன் புணரும் பொழுது இகரமாய் திரியும் அப்படி திரிந்த இகரம் தன் இயல்பான ஒரு மாத்திரை அளவில் இருந்து அரை மாத்திரை குறுகி ஒலிக்கும் இதுவே குற்றியலிகரம் எனப்படும்.
உவமைகள் இரு வகைப்படும் அவை இனமுடை உவமைகள் இனமில்லா உவமைகள் என்பவை ஆகும். வெண்ணிலவு என்பது இனமில்லா உவமையின் எடுத்துக்காட்டாகும் ஏனென்றால் வெண்மை அன்றி வேறு நிறத்தில் நிலவு இருப்பதில்லை. இதுவே கருநாய் எனும் பொழுது இது இனமுடை உவமை ஆகும் ஏனென்றால் கறுப்பைத் தவிர பிற நிறங்களிலும் நாய்கள் உள.
ஒரு பெயரோ அல்லது ஏவல் பொருள் வினைச்சொல்லோ ஆண்பால் பெண்பால் விகுதிகளுடன் சேர்ந்து அத்தொழிலை செய்பவரை குறிக்கும் புணர்ச்சி மூவகைப்படும்.
வினைச்சொல் உகரத்தில் முடிந்தால் ந் எனும் இடைநிலை தோன்றி இயக்குநர் ஓட்டுநர் நடத்துநர் என்பது போல் புணரும்.
வினைச்சொல் இகரத்திலோ ஐகாரத்திலோ முடிந்தால் ஞ் எனும் இடைநிலை தோன்றி கலைஞர் கவிஞர் அறிஞர் வலைஞர் என்று புணரும்.
வினைச்சொல் அன்றி குற்றியலுகர முற்றியலுகர பெயர்ச் சொற்களாக அவை இருப்பின் இன் எனும் இடைநிலைத் தோன்றி உறுப்பினர் பொறுப்பினர் குழுவினர் என்று புணரும்.
புணர்ச்சியில் ஈடுபடும் சொற்களில் ஒன்றோ அல்லது இரண்டுமோ வடமொழிச் சொற்களாய் இருப்பின் உயிரும் உயிரும் புணர்கையில் அது நெடில் ஆகும் எடுத்துக்காட்டு மடாதிபதி ரவீந்திரன்.
ஒரு வினை முற்றின் முற்பகுதி ஏவல் வினைகொண்டதாய் இருத்தல் வேண்டும் போனான் என்பதில் போ என்னும் ஏவல் வினை இருக்கிறது சென்றான் என்பதில் செல் எனும் ஏவல் வினை இருக்கிறது. ஏமாந்தான் என்று எழுதுவது தவறு இதில் ஏமாற்றம் அடைவதற்கான ஏவல் வினை இல்லை அதனால் ஏமாந்தான் என்பதற்கு பதிலாக ஏமாறினான் அல்லது ஏமாற்றினான் என்று எழுதுவது சரி.
பூப்பெயர் முன் இனமென்மையும் தோன்றும் எனும் விதிப்படி பூ என்னும் சொல்லோடு பிற சொற்கள் உணர்கையில் கசதப எனும் எழுத்துகளுக்கு இணையான ஙஞநம எனும் எழுத்துகள் வந்து புணரும் எடுத்துக்காட்டு பூங்கொடி பூஞ்சோலை பூம்பாவை பூந்தடாகம்.
சொற்றொடரை எழுவாய், பயனிலை, செயப்படு பொருள் என்று பிரிக்கலாம். அவன் காட்டிற்கு சென்றான். அவன் - எழுவாய் சென்றான் - பயனிலை செயப்படுபொருள் - காட்டிற்கு
ஒரு சொல்லை பிரிக்க முடிந்தால் அது பகுபதம் ஆகும் இல்லையேல் பகாபதம் ஆகும். நீர் - பகாபதம் இருந்தாள் - பகுபதம் இரு - பகுதி த் - இறந்த கால வினைமுற்று விகுதி ஆள் - பெண்பால் விகுதி
ஒரு பெயர்ச்சொல்லையடுத்து வினைச்சொல் வந்து ஒரு தொடரை உருவாக்கின் அது எழுவாய் தொடர் எனப்படும். எழுவாய் தொடர்களில் எப்போதும் வலிமிகாது. எடுத்துக்காட்டாக நீர் பாய்ச்சினான், வீடு கட்டினாள்.