பொதுக்கல்வி, பொது மருத்துவம் என்பன இன்று பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போய்விட்டன. மெதுவாகத் தொடங்கி இன்று கல்வியும், மருத்துவமும் அதிவேகமாகத் தனியார் மயமாக்கப்பட்டுவிட்டன. இவை அனைத்தும் இன்றைய நவதாராளப் பொருளாதாரக் கொள்கைகளின் விளைவு என்பதை யாரும் யோசிப்பதில்லை. குழந்தைகள் மத்தியில் ஏழ்மை, சுற்றுச்சூழல் அமைப்பு நொறுங்குதல், டொனால்ட் ட்ரம்ப், நரேந்திரமோடி போன்றோரின் தலைமை உருவாதல் எல்லாம் இன்றைய இந்தப் பொருளாதார அமைப்புடன் இணைந்து பொருந்துவதைக் காண்பது அவசியம். ஆனால் நாம் அப்படியெல்லாம் யோசிப்பதில்லை. இன்று உருவாகும் நெருக்கடிகள், கோவிட் 19 போன்ற பெருந்தொற்றுக்கள் எல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை, எந்த நெருக்கடியும் தனியானவை அல்ல. எல்லாம் ஒன்றுக்கொன்று இறுக்கமான தொடர்புடையவை. இதற்கொரு பெயருண்டு என்பவற்றையும் எண்ண மறுக்கிறோம். எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு கடந்து போகிறோம்.
அ. மார்க்ஸ் தமிழின் குறிப்பிடத்தக்க எழுத்தாளரும், இயற்பியல் பேராசிரியரும் ஆவார். மனித உரிமைப் பணிகளுக்காக களப்பணி ஆற்றி வருபவர். இலக்கியம், சமயம், அரச நிறுவனம், தேசியம் என ஒவ்வொன்றுக்குப் பின்னாலும் உள்ள அரசியலை தனது எழுத்துகளின் மூலம் தொடர்ந்து கவனப்படுத்தி வருபவர்.
இடதுசாரி சிந்தனையாளரான பேரா அ.மார்க்ஸால் உலகின் முன்னணி பத்திரிகைகளில் வெளியான மிகப்பெரும் பொருளாதார சிந்தனையாளர்களால் நவதாராளவாதம் பற்றி எழுதப்பட்ட கட்டுரைகளின் மொழியாக்கம் இந்நூலாகும். இக்கட்டுரைகள் 1.நவதாராளவாதத்தால் சீரழிந்து கொண்டிருக்கும் உலகப் பொருளாதாரத்தின் நிலையையும் 2.கோவிட் பாதிப்பால் உண்டான பொருளாதார நெருக்கடியும் 3.மோடியின் பாசிச அரசு நவதாராளவாத கொள்கைகளை ஏற்றுக் கொண்ட விதத்தையும் 4.அரசு நிறுவனங்களை தனியார்மயப்படுத்தும் செயற்பாடுகள் 5.இன்றைய சூழ்நிலையில் நவதாராளவாதத்தால் பணிமனைகளில் உருவாகியுள்ள மிகக் கொடூரமான கார்ப்பரேட் வேலைச் சூழலும்,அதனால் ஏற்படும் பணியாளர்களின் ஒடுக்குமுறையையும் 6.தொழிற்சங்கங்களை நசுக்கும் ஒன்றிய அரசின் செயல்பாடுகள் 7.வால் ஸ்ட்ரீட் அமர்வுப்போராட்டம்
ஆகியவற்றை இக்கட்டுரைகள் மிக விரிவாக விவாதம் செய்கின்றன. சோஷலிசம் பற்றிய எழுதப்பட்ட கட்டுரையின் மொழி சற்று கடினமாகவே இருந்தது. நூலில் ஒரு சில பத்திகள் மீண்டும் மீண்டும் வருவதும் ஓரிரு இடத்தில் விளக்கப்படங்கள் விடுபட்டுள்ளன. இன்றைய சூழலில் பொருளாதாரம் பற்றி அறிய விரும்புவோருக்கு இந்நூல் உதவிகரமாக அமையும்.