தமிழ்பாட்டி ஔவையின் பாடல்வரியான பாடுக பாட்டே என்பது புத்தகத்தின் தலைப்பு. அவருடனான நெல்லிக்கனியை (உள்ளங்கை) உதாரணமாக்கி சொன்னால் இந்த புத்தகம் பழந்தமிழ் இலக்கியங்களில் காணப்படும் சில பாடல்களின் தொகுப்பு என்பதை தலைப்பு உணர்த்தும். பள்ளியில் படித்தபோது “தண்டலை மயில்களாட” வும், நாராய் நாராய் செங்கால் நாராய் என்றபாடலும் சமீப காலமாக( 2வருடங்கள்) மனதுக்குள் ஓடி ..ஓடிக் கொண்டிருந்தது. கடைசி வரி நினைவிலில்லை.
இந்த புத்தகத்தில் நிறைய என்னைப் புதுப்பிக்கும்படியான பாடல்களுடன் மனதுக்குள் ஓடிய பாடலும் கிடைத்து சந்தோஷப்பட வைத்தன. ஒளவையார் ஒருவரல்ல பல்வேறு காலங்களில் பல்வேறு ஓளவையார்கள் இருந்திருக்கிறார்கள் என 1897ம் ஆண்டு ஔவையார் சரித்திரம் எழுதிய ஐயம்பதி தா. வேதாசல முதலியார் குறிப்பிடுவதாக இந்தநூலில் பதிவிட்டிருக்கிறார்கள்.
நாஞ்சில் நாடன் (பிறப்பு: டிசம்பர் 31, 1947, வீர நாராயண மங்கலம் (கன்னியாகுமரி மாவட்டம்) ) நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளர்களில் ஒருவர். இவரது இயற்பெயர் சுப்ரமணியன். வேலையின் காரணமாகப் பல ஆண்டுகள் மும்பையில் வாழ்ந்தார். தற்போது கோயம்புத்தூரில் வாழ்ந்து வருகிறார். நாஞ்சில்நாடன் நகைச்சுவையும் சமூகவிமர்சனமும் இழையோடும் படைப்புகளுக்காக புகழ்பெற்றவர். தமிழ் மரபிலக்கியத்தில் உள்ள தேர்ச்சி இவரது படைப்புகளில் வெளிப்படும். கம்பராமாயணத்தில் ஆழமான ஈடுபாடு கொண்டவர். தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள் என்ற சிறுகதைத்தொகுதி மூலம் புகழ்பெற்றார். தலைகீழ்விகிதங்கள் இவரது முதல் நாவல். இவரின் மிக முக்கியமான அடையாளம் நாஞ்சில் நாட்டு வட்டார வழக்கிலான எழுத்துநடை. தலைகீழ் விகிதங்கள் நாவலை இயக்குநர் தங்கர்பச்சான் சொல்ல மறந்த கதை என்ற பெயரில் திரைப்படமாக்கி இருக்கிறார். 2010ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது இவரது "சூடிய பூ சூடற்க" என்ற சிறுகதைத் தொகுப்பிற்கு வழங்கப்பட்டது.