இந்த நாவல் போலந்து நாட்டின் தலைநகர் வார்ஸாவைப் பின்புலமாகக் கொண்டிருந்தாலும் ஒரு தமிழனின் பார்வையில் அமைகிறது. ஐரோப்பியக் கலாச்சாரத்திற்குள் ஒரு கிழக்கத்தியக் கலாச்சார முகமிருப்பதையும் இந்தக் கலாச்சாரத்தின் விவரிக்க முடியாத புதிர்களையும் இந்நாவல் எளிய, புதுமையான கதையமைப்பின் மூலம் முன்வைக்கிறது
தமிழவன் (தமிழவன் கார்லோஸ் சபரிமுத்து) (பிறப்பு:அக்டோபர் 17, 1945) பேராசிரியர், ஆய்வாளர், எழுத்தாளர், இதழாளர், இலக்கியத் திறனாய்வாளர். முதுகலை இலக்கியம் படிப்பவர்களுக்கு 'திராவிட இலக்கியம்' கற்பித்து அந்த சிந்தனைப் பள்ளியை உருவாக்கியவராக அறியப்படுகிறார். இலக்கியத்திறனாய்வுகளுக்கான புதிய சிந்தனைக் கோட்பாடுகளை உருவாக்கினார்.
தமிழவன் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கில மொழிகளில் எழுதவும் பேசவும் தெரிந்தவர். ஆய்வாளர், கட்டுரையாளர், நவீன தமிழ் இலக்கிய விமர்சகர், இலக்கியக் கோட்பாட்டாளர், தமிழில் புதுக்கவிதை மற்றும் படைப்பிலக்கியங்களில் பங்காற்றியவர், நாவல்கள், சிறுகதைகள் மற்றும் இலக்கிய விமர்சனங்கள், திறனாய்வுகள் எழுதியுள்ளவர். ’ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்’ நாவல் மாய-யதார்த்தவாதத்தைப் பயன்படுத்தி எழுதியது. ’சரித்திரத்தி்ல் படிந்த நிழல்கள்’ நாவல் பாலிம்ப்செஸ்ட் (palimpsest) எனப்படும் வரலாற்றை அழித்தெழுதும் உத்தியை அடிப்படையாகக் கொண்டு நிகழ்கால தமிழ் வரலாற்றை அழித்தெழுதியது. ஜி.கே. எழுதிய மர்ம நாவல், மதங்கள், மடங்களின் வரலாற்றையும் தமிழீழப் போராட்டத்தையும் முன்வைத்து எழுதிய புதினம். ’வார்ஸாவில் ஒரு கடவுள்’ என்ற நாவல் போலந்து தலைநகர் வார்ஸாவைக் களமாகக் கொண்டு புலம்பெயர்ந்த இந்தியரின்/தமிழரின் கதைசொல்லுதலாக எழுதியது.
இலக்கு இலக்கிய இயக்கம் ’இலக்கு’ என்ற இலக்கிய இயக்கத்தை நடத்தியவர். எண்பதுகளில் கலை இலக்கியம், எதார்த்தவாதமும் தமிழ் நாவல்களும், புதுக்கவிதையும் புதுப்பிரக்ஞையும் போன்ற பல கருத்தரங்குகளை நடத்தி இலக்கிய இயக்கங்களின் போக்கு பற்றிய ஆய்வையும் மதிப்பிடலையும் செய்தது அவ்வியக்கம்.
ஆய்வு நூல்கள் ’புதுக்கவிதை நான்கு கட்டுரைகள்’ இவரின் முதல் நூல். தமிழ் புதுக்கவிதை இயக்கம் பற்றிய கோட்பாடுகளை முன்வைத்து எழுதினார். ’ஸ்ட்ரக்சுரலிசம்’ எண்பதுகளில் வெளிவந்தது. தமிழில் புதிய சிந்தனைகளான அமைப்பியல்வாதம், பின்-அமைப்பியல் மற்றும் பின்-நவீனத்துவம் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியது. அமைப்பியல்வாதம் என்கிற பிரெஞ்சுப் புதிய சிந்தனை முறையை தமிழ்ச்சூழலில் நின்று விரிவாக அறிமுகப்படுத்திய நூல். இப்போது மீண்டும் ’அமைப்பியலும் அதன் பிறகும்’ என மறுவெளியீடாக வந்திருக்கிறது. ’படைப்பும் படைப்பாளியும்’ நூல் படைப்பு மற்றும் ஆசிரியனுக்கு இடையில் உள்ள உறவை பேசுகிறது. இந்நூல் பின்-நவீனத்தவ சிந்தனைகளை அறிமுகப்படுத்தியது. 'தமிழும் குறியியலும்’ நூல் உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் வெளியீடாக வந்த நூல். தமிழில் குறியியலையும் அதன் பயன்பாடுகளையும் ஆராய்ந்தது. ’தமிழில் மொழிதல் கோட்பாடு’ நூல் ரஷ்ய மொழியியல் அறிஞர் பக்தின் முன்வைத்த மொழிதல் கோட்பாட்டை தமிழ் இலக்கியங்களுடன் இணைத்து அறிமுகப்படுத்தியது. இக்கட்டுரைகள் 'நவீனத்தமிழ் விமர்சனங்கள்’; 'இருபதாம் நூற்றாண்டில் கவிதை’ என்ற இரு நூல்களாக தொகுக்கப்பட்டு வெளியானது. ’தமிழுணர்வின் வரைபடம்’ என்ற நூல் உயிரோசை இணைய இதழில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. ’திராவிடம் தமிழ்த் தேசம் கதையாடல்’ ஒரு நூற்றாண்டுத் தமிழ்ச் சிந்தனை வரலாறு என்ற புது நூலும் அடையாளம் பதிப்பக வெளியீடாக வெளியானது. இந்நூல், தீராநதி இதழில் வெளிவரும் வண்ணத்துப்பூச்சியின் சிறகுகள் என்ற தொடரில் எழுதிய கட்டுரைகளின் முதல் தொகுதி.
இதழியல் எண்பதுகளில் வெளிவந்த ’படிகள்’ சிற்றிதழின் ஆசிரியர் குழுவில் தமிழவன் இருந்தார். ’இங்கே இன்று’ நடுவகை இதழின் ஆசிரியராக இருந்தார். ’மேலும்’ பாளையங்கோட்டையிலிருந்து வெளிவந்த ஆய்விதழின் ஆலோசகப் பொறுப்பு வகித்தார். ’வித்யாசம்’ நவீன கோட்பாட்டுச் சிற்றிதழை நாகார்ஜுனன், எஸ். சண்முகம், தி. கண்ணன், நஞ்சுண்டனுடன் இணைந்து நடத்தினார்.
விருதுகள் 1999-2001 வரை நடுவண் சாகித்திய அகாடமியின் மொழிபெயர்ப்பு மையமான ஷப்தனாவின் இயக்குநராக இருந்தார்.
மாய எதார்த்த நாவல்கள் அதிகமில்லாத தமிழ் உலகில் ஒரு நல்ல முயற்சி.
போலாந்துக்கு பணி நிமித்தமாக பயணிக்கும் சந்திரனிடம் அந்நாட்டில் சில பெண்கள் வரிந்து கட்டிக்கொண்டு உரையாடுகிறார்கள். ஒருவர் இந்தியாவால் பெரிதும் ஈர்க்கப்பட்ட தன் அண்ணனைப் பற்றி மணிக்கணக்காகப் பேசுகிறார். இன்னொருவர் ஏனோ சந்திரனின் கதையையே நமக்களிக்கும் வண்ணம் செய்தித்தாளில் பிரசுரிக்கிறார். போலாந்தில் அவர் சந்திக்கும் பெண்களிடம் நடத்தும் உரையாடல்கள், அப்பெண்களின் வாழ்க்கை வரலாறு, சந்திரனின் பூர்வகதை , அவர் மனைவியுடனான வாழ்வு, அவ்வாழ்வில் அவர் சந்திக்கும் சில பெண்களின் கதைகள், இரண்டாம் உலகப்போரால் பாதிக்கப்பட்ட போலாந்தின் வரலாறு - இவ்வாறாக பல கதைச்சரடுகளின் இடையே தத்தித் தாவும் இந்நாவலில் முராகாமியின் பாதிப்பு அப்பட்டமாகத் தெரிகிறது (தவறில்லை எனினும் சிறிது நெருடல்).
சந்திரன் சந்திக்கும் அனைத்து பெண்களும் அவரிடையே ஏதோவொரு அபாரமான தன்மையையோ ஈர்ப்பையோ கண்டாலும், வாசகர்களுக்கு அவர் ஒரு passive character ஆகவே தெரிகிறார். தன்னை ரசனை கொண்டவராகவும், அறிவாளியாகவும், அழகானவராகவும் பாவிக்கிறார். பிறர் அவரிடம் காணும் ஈர்ப்பு மாய எதார்த்த விதிகளின்படி விளக்க முடியாததாக இருக்கிறது.
பல கதைகள் மின்னி மறையும் இந்நாவலில் சில கதைகள் அபாரமானதாகவும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் இருக்கின்றன. சந்திரனின் மனைவியின் கதை பெரும் suspense-ஐ ஏற்படுத்தினாலும் இறுதியில் விளக்கப்படாமலே மர்மமாக முடிகிறது. அஷ்வினி, அமலா, லிடியா என்று பலரின் கதையும் ஒரு தெளிவான புள்ளியில் போய் நில்லாமல், மாயத்திற்காக ஏதோவொரு புதிரில் முடிவது அயர்ச்சி அளிக்கிறது. பல கதைகளை உதிர்க்கும் நாவலில் கும்மாங்குத்துவின் கதை மிகச்சிறப்பாக தனித்துத் தெரிகிறது. மற்ற பல கதைகளும் தங்களுக்காகவே ஒரு நாவலைக் கோரினாலும், 2000ங்களில் தமிழில் அதற்கு முன் பெரிதும் பேசப்படாத அகதிகளின் கதை இங்கே சாகசமிக்க பெருஞ்சோகமாக நிற்கிறது.
500 பக்கங்களுக்கு நீளும் இந்நாவலில் பற்றிக் கொள்ள ஒரு மையச்சரடு நீளாமல், கதைக்கு கதை வழுக்கிக் கொண்டு அதன் கவனம் பாய்வதால் ஒரு கட்டத்திற்கு மேல் சலிப்பு ஏற்படுகிறது. மாய எதார்த்த நாவல்களின் உயிர் மூச்சு வாசகர்க்கு ஏற்படும் வசீகரம்; அது தக்க வைக்கப் படவில்லையெனில் அபத்தமாக முடியும் ஆபத்து இந்நாவலின் பக்கங்களைத் தொடர்கிறது. பல வேளைகளில் நிறுத்தி விடலாமெனக் கருதிய நான் சிறிது இடைவெளி விட்டு மீண்டும் வந்ததால் கவர்ச்சி மீண்டும் ஏற்பட்டு கடைசி 100 பக்கங்களில் நீந்தி இறுதியை வந்தடைந்தேன்.
முழு வெற்றி இல்லையென்றாலும் (அக்காலத்துக்கு) நல்ல புதிய முயற்சி.