அறிவியலும் ஆன்மிகமும் எப்படிப் பின்னிப் பிணைந்து இருக்கின்றன என்பதில் தொடங்குகிறது இந்நூல். அறிவியல் தர்க்கத்தை அடிப்படையாய்க் கொண்டது ஆன்மிகமோ சரணாகதியை அடிப்படையாய்க் கொண்டது.
அறிவியல் எல்லாவற்றையும் சந்தேகி என்கிறது ஆன்மிகமோ கேள்வியற்று ஏற்றுக்கொள் என்கிறது.
அறிவியல் மாற்றம் ஒன்றே மாறாதது என்கிறது ஆன்மிகமோ என்றுமே மாறாத நிலையானவை உள்ளன என்று பேசுகிறது.
அறிவியல் ஆராய்ச்சியின் வழி புதுப்புது விடயங்களைக் கண்டுபிடிப்பது. ஆன்மிகமோ இருப்பனவற்றைத் தொகுத்தும் விளக்க முடியாதனவற்றை கடவுள் என்பதற்குள் அடக்கியும் புனையக்கூடியது.
பெரும்பாலான மதங்கள் ஆன்மாவைப் பற்றிப் பேசுகின்றன. இந்து மதத்தில் வேதாந்தங்கள் ஆன்மாவைப் பற்றிப் பேசுகின்றன. ஆன்மா தோற்றமும் அழிவுமில்லாதது என்றும். ஒருவர் இறப்புக்குப் பின் அது வேறொருவராய்ப் பிறப்பெடுக்கக் கூடியது என்றும் கூறுகின்றன. பௌத்தம் மட்டுமே ஆன்மா எனும் கோட்பாட்டை எதிர்க்கிறது.
ஆன்மா என்பதை இப்படி அழிவில்லாதது என்றும் உன்னதமானது என்றும் சொன்னவர்கள் இன்னொன்றும் சொன்னார்கள் பிராமண ஆன்மா உயர்ந்தது உயர் கடமைகளை உடையது சூத்திர ஆன்மா இழிவானது என்று. ஆன்மாவினுள்ளும் ஏற்றத் தாழ்வுகளைப் போதித்தனர்.
இதைப் பற்றித்தான் பெரியார் கேட்பார்.
மனிதர்க்கு மட்டும் தான் ஆன்மா உண்டா இல்லை புல் பூண்டு செடி கொடி விலங்குகளுக்கும் ஆன்மா உண்டா?
ஆன்மா தோற்றமும் அழிவுமில்லாதது என்கிறீர்கள் ஆனால் தொடக்கத்தை விட இப்போது மக்கட்தொகை கூடியுள்ளதே அப்படி என்றால் புதிய ஆன்மாக்கள் உருவாயினவா ?
அறிவியலையும் இயற்கையையும்விட ஆன்மிகம் உயர்ந்தது என்றும் அப்பாற்பட்டது என்றும் நிறுவும் முயற்சியே ஆன்மிகத்தை அறிவியல் விதிகளுக்கெல்லாம் அப்பால் கொண்டு வைப்பது. அது ஒருவகையில் மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்த ஆன்மிகத்துக்குத் தேவையாகவும் இருந்தது. என்னைப் போல உங்களைப் போல கடவுளும் இயற்கைக்குக் கட்டுபட்டவர் என்றால் யார் தான் கடவுளை நம்புவார்கள் சொல்லுங்கள்?
அடுத்து காதலும் சாதியும் எனும் கட்டுரை. பசி தூக்கம் இன்பம் துயரம் போல காதலும் ஒரு இயற்கையான இயல்பான உணர்வே ஆனால் அதற்கும் சாதி தடையாய் வந்து நிற்கிறது. சாதி கடந்து மணம்புரிந்து கொள்வதையும் மணம்புரிந்து வைப்போரையும் வேதங்கள் மிகக்கடுமையாக எதிர்க்கின்றன.
ஆனாலும் சாதி எனும் கோட்டையை காதலெனும் புயல் தகர்த்தே தீரும் என்பது தடுக்கமுடியாததாகிறது.
அடுத்த கட்டுரை தீட்டும் புனிதமும் என்பதாகும். புனிதம் என்று ஒன்றைச் சொல்வதே மற்றன எல்லாம் தாழ்ந்தன என்று சொல்வதுதான் என்கிறார் பெரியார் அது உண்மையும் கூட.
விலங்குகளில் பசு புனிதமானது
ஆறுகளில் கங்கை புனிதமானது
மொழிகளில் சமற்கிருதம் புனிதமானது
நூல்களில் வேதம் புனிதமானது
என்றெல்லாம் சொல்லப்படுவது உள்நோக்கம் கொண்ட செயல்பாடுகளாகவே படுகின்றன.
உத்திரப் பிரதேசம் மத்தியப் பிரதேசம் அரியானா ஆகிய மாநிலங்களில் 1950 களில் பசுவதைத் தடுப்புச் சட்டம் கொண்டு வரப்படுகிறது. காரணம் பசுவின் புனிதத்ன்மையே ஆகும். அதைத் தேசிய அளவில் கொண்டுவரவும் பலர் கோரிக்கை விடுத்து வந்தனர். இதெல்லாம் தேவையில்லாத விசயம் அவன் அவன் என்ன புடிக்குதோ அதை சாபிட்றான் என்ற கருத்து கொண்ட காமராசர் தில்லியில் தங்கியிருந்த வீட்டை ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர் கொளுத்தினர் என்பது வரலாறு.
பெண்களின் மாதவிடாய்க் காலத்தில் அவர்களைத் தீண்டாமைக்கு உள்ளாக்கும் கொடுஞ்செயலும் தீட்டின் பொருட்டாலே. கீழ்ச்சாதியர் கோவிலுக்குள் வரக்கூடாது என்று சொல்லப்பட்டதும் கோவிலின் புனிதத்தன்மையைக் காக்கத்தான். வங்காள அறிஞர் ஆர்.பி.சாஸ்த்திரி நூல்களில் புனிதமானது என்று சொல்லப்படும் வேதங்களைப் படித்துவிட்டுச் சொன்னது "வேதம் என்பது இறைவனே எனக்கு மழையைக்கொடு பணத்தைக் கொடு எங்களை நன்றாக வைத்துக்கொள்... என்றெல்லாம் பாடப்படும் இல்கியநயம் பொருந்திய அருமையான துதிப்பாடல்கள் மட்டுமே மற்றபடி இவற்றில் வேறெதுவும் இல்லை" என்பதாகும்.
யாருக்குமே தாய்மொழியாய் இல்லாத சமற்கிருதம் புனித்மொழியாக்கப்பட்டதற்கு சொல்லப்படுவது "இது யார்க்கும் தாய்மொழியில்லை ஏனெனில் இது தேவர்களின் மொழி. ஆதலால் இது புனிதமானது" என்பதாகும். இதன் பின்னும் ஏற்றத்தாழ்வுகளை வலியுறுத்தும் உள்நோக்கத்தைத் தவிர வேறெதுவும் இருப்பதாய்த் தெரியவில்லை. தேசியவளவில் இந்தியைத் தூக்கிப் பிடிப்பதன் பின்னும் சமற்கிருதமே இருக்கிறது.
இப்படிப் புனிதமும் தீட்டும் சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை நிலைநாட்ட இன்றியமையாப் பணியைச் செய்துள்ளன. அதனால் சமத்துவம் மலர புனிதம் தீட்டு இரண்டுமே களையப்பட வேண்டும் எனும் முடிவுக்கு வருகிறது இக்கட்டுரை.
அடுத்த கட்டுரை நுகர்வும் துறவும் என்பது. நுகர்வு எனில் தேவையற்றவற்றையும் வாங்கிக்குவிக்கும் ஆசை. உண்மையில் துறவு என்பது அருள்மிக்காராதலே. நம் உறவுகளிடத்தில் அன்பு செலுத்தினால் அது அன்பு. எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்தினால் அது அருள். அப்படிப் பார்த்தால் காந்தியும் பெரியாரும் துறவிகளாவர். ஏனெனில் இவர்கள் எல்லா மக்கட்பாலும் அன்பு செலுத்துதலோடு நிறுத்திக் கொள்ளாமல் அவர்களின் முன்னேற்றத்திற்காக வாழ்நாளெல்லாம் பாடுபட்டவர்களாவர்.
ஆனால் இன்று தறவு என்பதற்கு நாம் விளங்கிக் கொள்வது யாதெனில் உறவுகளைத் துறத்தலையேயாகும். திருமணத்திற்கு முன் துறவு திருமணத்திற்குப் பின் துறவு என்று இருவகைப்படுகிறது. இதில் முந்தையது இயற்கைக்கு முரணானது பிந்தையது நாணயமற்றது.
வள்ளுவர் கூட
யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.
என்று அஃறிணையிலிருந்து துறத்தல் பற்றியே பேசுகிறார் உயர்திணையான உறவுகளைத்துறத்தல் துறவன்று. உறவுகள் மீதும் அன்பு செலுத்தி பிறயெல்லா உயிர்கள் மீதும் அன்பு செலுத்துவதே மெய்த்துறவு.
நுகர்வுக்கு மதம் ஒரு மாபெரும் சந்தையாகிறது. மதத்தின் பெயரால் செய்யப்படும் வணிகம் மட்டுமே நாற்பத்து நான்காயிரம் கோடி அமெரிக்க டாலர்கள் என்கிறது புள்ளிவிவரம்.
தேவையானவற்றை மட்டும் வாங்கி ஆடம்பரங்களைத் தவிர்த்தல் நல்லது என்பதே இக்கட்டுரையின் சாரம்.
அடுத்த கட்டுரை புலாலும் மரக்கறியும் என்பதாகும். மனிதர் முதன்முதலில் உண்டது இறைச்சியைத்தான் என்பது மனிதவரலாறு. பின் மெல்ல மெல்ல முல்லைக்கு வந்தபின் அந்நிலத்தோர் பழங்களையும் மருத நிலத்தோர் பயிரகளையும் உண்ணத் தொடங்கினர். உணவுமுறை மூன்று காரணங்களால் முடிவு செய்யப்படுகிறது சுயவிருப்பு வெறுப்பு, சமூகக் காரணங்கள், மதம்.
எல்லா நாடுகளிலும் உணவுப் பழக்கம் வேறுபடுகின்றன புலால் உண்போர் கூட புலாலில் சிலவற்றை உண்பதில்லை.
மரக்கறியுண்போர் சொல்லும் காரணம் கொல்லாமை என்பதேயாகும். அது தன் செயலுக்குத் தாமே கற்பித்த்துக் கொள்ளும் காரணமாகக் கூட இருக்கலாம் ஏனெனில் உண்மைக் காரணமும் அதன் பின் உள்ள அரசியலையும் நாம் அறிந்து கொள்வது இன்றியமையாதது.
இன்று பசுவதைத் தடுப்புச் சட்டமெல்லாம் கொண்டு வருகிறார்கள் ஆனால் அவர்கள் போற்றும் வேதங்களிலே கூட பார்ப்பனர் புலால் உண்டதற்கான சான்றுகள் உள்ளன. வாஜ்பேய யாகம் எனும் வேள்வியில் இருந்து மூன்று பசுக்களைக் கொன்று தீயிலிட வேண்டும் என்று வேதங்கள் சொல்கின்றன. வான்மீகி இராமாயணத்தில் கூட ஆரண்யகாண்டத்தில் நெய்யில் வறுத்த மாட்டுக்கறியைச் சீதைக்கு ஊட்டிவிடுகிறார் இராமர். நெய்யில் வறுத்த புலாலை உண்பவனே அறிவாளியாக இருப்பான் என்று உபநிடதங்கள் சொல்கின்றன. இப்படியிருக்க புலால் மறுப்பும் மரக்கறி உண்பவன் உயர்ந்தவன் புலால் உண்போரில் கூட ஆடும் கோழியும் உண்பவன் தாழ்ந்தவன் மாட்டுக்கறி உண்பவன் அவனுக்கும் கீழே பன்றிக்கறி உண்பவன் அவனுக்கும் கீழே நரிக்கறி எலிக்கறி உண்பவன் அவனுக்கும் கீழே எனும் பாகுபாடு எப்படி வந்தது என்பதை நாம் உற்றுநோக்க வேண்டும்.
எட்டாம் நூற்றாண்டில் சமணமும் பௌத்தமும் பெருமளவில் இந்தியா எங்கும் பரவின. அப்போது அதைத் தடுக்க நினைத்த ஆதிசங்கரர் வைதீக மதங்களைப் பரப்ப நினைத்து சமண மற்றும் பௌத்தக் கோட்பாடுகளை வைதீக மதங்களுக்குள் கொண்டு வருகிறார். பௌத்த விகாரங்களைப் போல வைதீக மடங்களை நிறுவுகிறார். இதனால் அவர் மறைமுக பௌத்தர் என்றும் குறிப்பிடுகிறார். இப்படிச் சமணத்தையும் பௌத்தத்தையும் ஒழிக்கும் முயற்சியில் வெற்றியும் பெற்றுவிட்டார் என்றே சொல்ல வேண்டும். இந்த முயற்சியில் தான் முதன்முதலில் மரக்கறி உண்ணுதல் மேன்மையானது எனும் கருத்து போதிக்கப்பட்டது. அந்தக் கருத்து ஒரு சமூக மனப்பாங்காகக் கூட பின்னாளில் ஆனது. இவையே மரக்கறிக்குப் பின்னுள்ள மெய்க்காரணங்கள்.
கருநாடகச் சிற்றூர் ஒன்றில் இருப்போர் மரக்கறி மட்டுமே உண்ண வேண்டும் அதிலும் உறைப்பு குறைவாகவே உண்ண வேண்டும் பூண்டு வெங்காயம் உள்ளிட்டவை உண்ணக் கூடாது. இவ்வுணவுமுறையே புனிதமானது எனும் உத்தரவைப் பிறப்பிக்கிறார் மாதவர். அச்சிற்றூரின் பெயரே உடுப்பி. அந்த உணவுமுறை பலர்க்கும் பிடித்துப் போய் எல்லா ஊர்களிலும் உடுப்பி உணவகங்கள் உள்ளன.
இப்படி வரலாறு எங்கும் உணவின் பெயரினாலான அரசியல் விரவிக் கிடக்கின்றன. இதுவே இக்கட்டுரையின் சாரம்.
கருப்பும் வெள்ளையும் எனும் கட்டுரையில் வெள்ளையரும் கருப்பினத்தவரும் சமமாய்ப் பேருந்திலும் சமூகத்திலும் பயணிக்க மார்ட்டின் லூதர் கிங் செய்த போராட்டங்களும் பிற போராட்டங்களும் பதிவு செய்யப்படுகின்றன.
வானியலும் சோதிடமும் எனும் கட்டுரை சோதிடமும் அறிவியலிலிருந்து எவ்வளவு முரண்படுகிறது என்றும் அது எவ்வளவு பெரிய வணிகச் சந்தையாக மாறியிருக்கிறது என்றும் கூறுகிறது. துணைக் கோளான நிலவு விண்மீனான சூரியன் நிழற்கோள்களான இராகு கேது என எல்லாவற்றையும் கோள்கள் என்றும் மேற்சொன்ன கோள்கள் எல்லாம் புவியை மையமாய் வைத்துச் சுற்றி வருகின்றன என்றும் சொல்லும் சோதிடம் அடிப்படையிலேயே அறிவியற்தன்மையற்று விளங்குகிறது.
வரலாற்றில் புரூனோ கோப்பர்நிகசு போன்ற அறிவியலறிஞர்கள் எப்படி மதத்தின் பெயரால் கொல்லப்பட்டனர் என்றும் விவரிக்கிறது இக்கட்டுரை.