தமிழ்ப் பதிப்பியலின் தலைமகன் தாமோதரனார். கறையானுக்கும் தமிழரின் மெத்தனத்திற்கும் இரையாகி அழியவிருந்த பழந்தமிழ் நூல்களைச் செம்மையாகப் பதிப்பித்துக் காத்தது மட்டுமன்று சி.வை. தாமோதரம் பிள்ளையின் சாதனை. செம்மாந்த நடையில் இலக்கிய நயத்தோடு அவர் எழுதிய நீண்ட பதிப்புரைகளுக்கும் இலக்கிய வரலாற்றில் இடமுண்டு. புதிதாகக் கிடைத்துவந்த சான்றுகளின் அடிப்படையில் தமிழ் இலக்கிய வரலாற்றை வரைவதற்கான குறிப்புகளை அவர் முன்வைத்தார். சமகாலப் புலமை மரபோடு விவாத நோக்கில் அவர் தொடர்ந்த உரையாடல்கள், தமிழின் நவீனமயமாக்கத்தைப் புரிந்துகொள்ள வழிகோல்வதோடு வாசிப்புச்சுவையும் மிகுந்தவை. ‘தமிழ் மாது’ (தமிழன்னை), ‘பாஷாபிமானம்’ (மொழிப் பற்று), ‘தேசாபிமானம்’ (நாட்டுப் பற்று) ஆகிய தொடர்களை முதன்முதலில் கையாண்டவர் சி.வை. தாமோதரம் பிள்ளையே. ஒரு நாவலுக்குக் கருப்பொருளாக அமையக்கூடிய அளவுக்குச் சுவையானது இருபதாம் நூற்றாண்டின் முதல் நாளில் முடிவுற்ற அவருடைய வாழ்க்கை. சி.வை. தாமோதரம் பிள்ளையின் சில பதிப்புரைகளைப் புதியதாகக் கண்டெடுத்தும், அறியப்பட்ட பதிப்புரைகளுக்கு நம்பகமான பாடம் அமைத்தும் மீண்டுமொரு பதிப்புச் சாதனையை நிகழ்த்தியிருக்கிறார் ப.சரவணன். ஆ. இரா. வேங்கடாசலபதி
முனைவர் ப. சரவணன் (மே 14, 1978) தமிழாசிரியர். தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். பொதுவாசிப்புக்கு உரிய நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், வரலாறுகள் போன்றவற்றை எழுதியுள்ளார். இலக்கிய ஆளுமைகளைப் பற்றிக் கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரின் எழுத்துப் பணிகளைப் பாராட்டி திருச்சி கௌரா பதிப்பகம் இவருக்கு 'எழுத்துலகத் தேனீ’ என்ற பட்டத்தை 2022-ல் வழங்கியது.