உறவுகளுக்குள் பாசம் ஓர் அரணாகவே இருக்கவேண்டுமே தவிர அதை ஒரு பகைதீர்க்கும் காரணியாகக் கையில் எடுக்கக் கூடாது.
மாமனார் வீட்டில் தன் மரியாதைக்குக் குறைவு ஏற்பட்டதால் அவர்களுடனான தொடர்பை முறித்துக் கொண்ட சபரிக்கு மனைவியின் ஆசைகள் பின்னுக்குத் தள்ளப்படும் பொருளாகிறது.பெற்றெடுத்த பெண் ஷிவானியின் விருப்பங்கள் மட்டுமே நிறைவேற தகுதியான ஒன்றாக முன்னிலை பெறுகிறது.
தன் அக்கா மகன் மோகனுடன் ஷிவானிக்கு நிச்சயம் பண்ண பதினெட்டு ஆண்டுகளுக்குப் பின் சொந்த மண்ணை மிதிக்கும் சபரி அவர்கள் இருவரும் வெவ்வேறு திசையின் எண்ணப்போக்கில் இருப்பவர்கள் என்று தெரிந்த பிறகு நிறுத்திவிடுகிறார்.
ஷிவானி பிறந்ததில் இருந்து தனக்குதான் என்று பெரியவர்களின் சொல் பேச்சு கேட்டு வளர்ந்த சிவகுருவின் மனதில் வேரூன்றியிருக்க அதை நிறைவேற்றும் பொருட்டு சபரியிடம் அவளைத் தனக்கு மணமுடிக்க வேண்டுகோள் விடுத்தாலும் குடும்பத்தின் மூத்த உயிரின் ஆசையாலே அது நிறைவேறுகிறது.
மனைவியின் உறவுகளிடம் பிடிகொடுக்காமல் இருக்கும் சபரி அவளின் தம்பி சிவகுருவிற்குத் தன் பெண்ணைக் கொடுத்த பிறகே பாசத்தின் பதத்தை உணருகிறார்.
உறவுகளின் சிக்கலை சொல்ல அமைந்த அழகான வாய்ப்பை ஷிவானியை முன்னிலைபடுத்தி எழுதியதால் எந்த உணர்வின் பக்கமும் கதை நெருங்கவில்லை.
வீம்பு என்ற பெயரில் உறவுகளின் பாசத்தைத் துண்டிக்கக் கூடாது என்று சொல்ல எழுதப்பட்ட இக்கதையில் தேவையில்லாமல் பக்கம் இழுபட்டு விட்டது.