உண்ணி.ஆர் கதைகள் அறிமுகமாவது முன்னுதாரணமற்ற எழுத்தின் காலகட்டத்தில், மலையாளச் சிறுகதையில் மறுமலர்ச்சிக் காலக் கதைகளோ, நவீனத்துவ, பின் நவீனத்துவக் கதைகளோ உருவாக்கி வைத்திருந்த வகைமாதிரிகளை நிராகரித்ததால் ஏற்பட்ட சிதில சமவெளியிலிருந்து தோன்றியவையே புதிய கதைகள். மறுமலர்ச்சிக் காலக் கதைகள் சமூகப் பிண்ணனியில் எழுதப்பட்டவை. நவீனத்துவ, பின் நவீனத்துவ கதைகள் இருப்பின் சிக்கல்களைப் பின்புலமாகக் கொண்டவை. புதிய காலம் இந்த மதிப்பீடுகளைக் காலாவதியாக்கியிருக்கிறது. புதிய கேள்விகளையும், புதிய நுண்ணுணர்வு களையும் முன்வைக்கிறது. சமகால மனித மனம் அவற்றை எவ்வாறு எதிர் கொள்கிறது அல்லது எதிர்கொள்ளத் தயங்குகிறது என்பதைச் சார்ந்த கதையாடல்களே தற்காலச் சிறுகதைகளின் அடையாளம். உண்ணியின் கதைகள் இந்த அடையாளத்தை முதன்மையாகக் கொண்டவை.