தனக்கு என்ன தேவை என்பதைப் பிரித்தறிய முடியாத மனநிலையில் இருப்பவர்களால் மற்றவர்களுக்குத் துன்பத்தையே அளிக்க முடியும்.
மற்றவர்களுக்காக என்று பார்த்து பார்த்துச் செய்து தன்னை மறப்பவர்களின் மெல்லிய இதயத்தைக் குத்தி கிழிக்கக் கத்திமுனைகள் எப்பொழுதும் தயாராக இருக்கும்.
அப்பாவின் நண்பர் மகனை கைகாட்டி மணக்க கேட்கும் போது எதுவும் சொல்லாமல் இருக்கும் சுஜாதா தாலிகட்ட போகும் நேரத்தில் கோவிந்தனை மறுத்ததால் அவன் மட்டும் காயப்பட்டுப் போகாமல் சுஜாதாவின் அண்ணனை காதலிக்கும் மைதிலியின் வாழ்வும் கேள்விக்குறியாகுகிறது.
விபத்தில் கண் பார்வையை இழந்த கோவிந்தனின் தங்கை மைதிலியை காதலிக்கும் ஸ்ரீராமிற்குத் தன் தங்கையின் திருமண முடிவு அதிர்ச்சி கொடுத்தாலும் அவள் விருப்படியே வாழ்வை அமைத்து கொடுத்து தன் உணர்வுகளை உள்ளுக்குள்ளே பொத்தி வைப்பதை வெளிப்படுத்தும் காலமும் வந்து சேர்கிறது.
இரு குடும்பங்களும் டெல்லி செல்ல ஒரே இரயிலில் பயணப்படும் போது அவர்களுக்குள் இருக்கும் மனஸ்தாபங்கள் களையப்பட்டுக் காத்திருந்த ஸ்ரீராமின் காதல் ஒரு முடிவுக்கு வருகிறது.
ஸ்ரீராம் கதை முழுவதும் மைதிலியை நினைத்து உருகிக் கொண்டே இருப்பது லேசாகச் சலிப்பை கொடுக்கிறது.
கதை முடித்த பிறகு அந்தக் காலத்துக் கருப்பு வெள்ளை படங்களின் நாயகன்களின் நடிப்பு உங்கள் கண் முன் வந்து போனால் கதையை ஒன்றி படித்தீர்கள் என்று நீங்களே புரிந்து கொள்ளலாம்.