வழக்கமான கவிதை நியதிகளுக்கு முகத்தைத் திருப்பிக்கொள்ளும் இசையில் கவிதைகள் அந்தரத்தில் ஒரு கயிற்றைக் கட்டி அதன்வழியே நடக்கத் துணிகின்றன.காவியத்திற்கும் நடைமுறைக்கும் நடுவே அவை சரிபாதித் தூரத்தில் நிற்கின்றன.எந்தப் பக்கம் இருக்கும்போதும் சலிக்காது சிரிக்கின்றன.
கடைசி ரயிலைப் பிடிக்க ஓடும் பயணியைப் போல் மூச்சிரைப்புடனே வாழ்க்கையைத் துரத்த வேண்டியிருக்கும் காலத்தில்,இக்கவிதைகள் வாழ்க்கைக்கு வெளியே பேசுவதை போன்ற பாவனைகளின் வழியே நம் பதற்றங்களைச் சற்றுத் தளர்த்துகின்றன.அச்சங்களுக்குச் சற்று ஓய்வளிக்கின்றன.சஞ்சலங்களின் பிடியிலிருந்து சற்றே விடுதலை அளிக்கின்றன.
1977ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாவட்டம் இருகூரில் ஆறுமுகம் - நாகரத்தினம் தம்பதியருக்கு மகனாக பிறந்த இசை 2002 ஆம் ஆண்டில் தமிழ்ச் சூழலில் கவிஞராக அறிமுகம் ஆகினார். இவரது இயற்பெயர் ‘சத்தியமூர்த்தி’ என்பதாகும். இவர் தற்போது தமிழ்நாடு பொதுச் சுகாதாரத்துறை, அரசு மருத்துவமனை ஒன்றில் மருந்தாளுநராகப் பணியாற்றி வருகிறார். மேலும் இவரும் இவரது நண்பர்களும் இணைந்து ‘கருக்கல்’ எனும் சிறுபத்திரிகை ஒன்றை நடத்தி வருகின்றனர். அது ஆனந்த விகடனின் சிறந்த சிறுபத்திரிகைக்கான விருதினைப் பெற்றுள்ளது. மேலும் காலச்சுவடு, உயிர்மை, அம்ருதா, அந்திமழை, தடம், தீராநதி முதலிய இலக்கிய இதழ்களில் கவிதைகள் மற்றும் திறனாய்வு கட்டுரைகளை தொடர்ந்து எழுதி வருகிறார். 2014ஆம் ஆண்டில் “இளம் படைப்பாளருக்கான சுந்தரராமசாமி விருது” பெற்றுள்ளார்.