எதற்காகவும் தன்னை மாற்றிக் கொள்ளாத மனது தன்னிலையை இழப்பதில்லை.
முன்னணி நடிகையான தன் தாயை இழந்த பிறகு அருணா எதிர்கொள்ளும் பிரச்சனைகளும் அதன் தொடர்ச்சியாக வாழ்வில் சந்திக்கும் நபர்களும் அவர்களில் சிலர் உறவாக மாறுவதும் உதவி செய்தவனிடமே மனம் சென்று சேர்வதையும் தான் அடைய வேண்டிய இலக்காக மனதில் வைத்திருந்ததை எப்படி அடைந்தால் என்று சொல்வது தான் பானுமதி பார்த்தசாரதியின் “அருணா”.
நடிகையான தாயை புற்றுநோய்க்கு பலி கொடுத்து விட்டு தந்தையின் முதல் மனைவியின் வீட்டு ஆட்கள் பணத்திற்காகத் தன்னைக் கொல்லவும் தயங்க மாட்டார்கள் என்றுணர்ந்த அருணா கோவைக்கு வந்து சேர்கிறாள்.
அர்ஜுன் நடத்தும் பள்ளியில் ஆசிரியர் வேலைக்கு வந்தவள் அதில் முன் அனுபவம் இல்லாததால் புற்றுநோயில் இருந்து மீண்ட அவனின் தாய்க்கு வீட்டில் துணையாகிறாள். அருணாவின் குணத்தால் அர்ஜுன் ஈர்க்கப்பட்டாலும் அதை வெளிப்படுத்த தயங்குகிறான்.தன் கல்வியைத் தொடர்ந்த அருணா முனைவர் பட்டம் பெற்ற பிறகே தன் மனதை திறந்த அர்ஜுனை ஏற்றுக் கொண்டு அந்த வீட்டின் மருமகளாகி தொழிலிலும் அவனுக்குப் பக்க பலமாகிறாள்.
அர்ஜுனின் நண்பனான ராஜசேகரின் குணத்தை முதலிலே கண்டுபிடித்தவள் கணவனை அவனிடத்தில் இருந்து விலகச் செய்வது மட்டுமில்லால் அவனால் பாதிக்கப்பட இருந்த பெண்ணையும் காப்பாற்றுகிறாள்.
மற்றவர்களின் நலத்திற்காக என்று யோசித்து ஒவ்வொன்றையும் செய்யும் அருணாவிற்குக் குடும்பமும் நட்புவட்டமும் அவள் மனதுப்படியே அமைகிறது.