மக்களின் பயன்பாட்டிற்கு வரும் அரிய கண்டுபிடிப்புகள் அனைத்துமே எதிரிகளை வென்று அதன் கண்டுபிடிப்பாளரின் சாதுரியத்தால் நெருக்கடி நிலையில் இருந்து மீண்டு தன் இடத்தை வந்தடைகிறது.
வாயில் இருந்து உதித்த ஒரு பொய் தனக்கான வடிவத்தை எடுக்க அடுத்து அடுத்து உதிக்கும் பொய்களின் மூலம் ஒரு பிரமாண்ட உருவத்தை எடுத்து முதலில் எவரிடம் இருந்து வந்ததோ அவரையே அழித்த பிறகு தான் காணாமல் போகும்.
கண் குறைபாடு உள்ளவர்களை அப்பிரச்சனையில் இருந்து மீட்டெடுக்க செயற்கை விழித்திரையை உண்டாக்கும் பயோனிக் ப்ராஜெக்டை செய்யும் சபரி வெற்றியின் வாசலில் நிற்கும் போது கம்பெனியின் முதலாளியும் சீனியரும் செய்யும் தவறுகளால் சட்டத்தின் முன் இவர்களின் ப்ராஜெக்ட் தவறானதாகக் காட்டப்படும் சூழல் உருவாகுகிறது.
சபரியின் மனைவி அஜந்தாவின் தோழியான வாசுகி ஜாதி தகராறால் ஊரில் இருந்து காதலனுடன் ஓடிவந்தவள் சபரியின் வீட்டில் தங்கி இருக்கும் போது கொல்லப்படுகிறாள்.தான் கொலை செய்யவில்லை என்றாலும் தன் வீட்டில் கொலை நடந்திருப்பதால் போலீஸ் விசாரணையில் ஈடுபடும் போது எங்கே தன் ஆராய்ச்சிக்கு அது முட்டுகட்டையாகுமோ என்று பயந்து வாசுகியின் உடம்பை அழிக்கும் சபரிக்கு அதுவே வில்லங்கமாகிறது.
சீனியரும் கம்பெனி முதலாளியும் அடுத்து அடுத்து கொல்லப்பட மறுபக்கம் வாசுகியின் உடம்பை அழித்ததை வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு ஆராய்ச்சியின் நுணுக்கங்கள் அனைத்தும் ஒரு குரூப் கேட்பதால் போலீஸ் உதவியில்லாமல் இதிலிருந்து தப்பிக்க முடியாது என்று புரிந்து கொண்ட சபரி இன்ஸ்பெக்டர் மகாதேவனிடம் உண்மைகள் அனைத்தையும் ஒப்புவித்த பிறகே தெரிய வருகிறது பல உண்மைகள்.
பயோனிக் ப்ராஜெக்டை கைப்பற்ற பல நாட்டுக் கம்பெனிகள் முயல்கிறது அதில் ஒருவன் தான் வாசுகியின் காதலன்,சபரி வீட்டிற்கு வந்து அவனுக்குத் தெரியாமல் டாக்குமெண்டை திருடும் முயற்சியில் முதலில் ஒத்துழைத்த வாசுகி பிறகு மனமாற்றம் கண்டதால் காதலனே அவளைக் கொலை செய்கிறான்.முதலாளிக்குத் தெரியாமல் சபரியின் சீனியர் வேறு கம்பெனிக்கு பல ப்ராஜெக்ட் செய்து கொடுப்பதால் முதலாளியே அவனைக் கொன்றுவிடுகிறார்.தொழிலில் ஏற்பட்ட தகராறால் முதலாளியை வேறு ஒருவன் கொன்றுவிடுகிறான்.
தன்னைச் சுற்றிப் பின்னப்பட்ட வலையில் இருந்து போலீஸின் உதவியால் சபரி எந்தவித சேதாரமும் இல்லாமல் தப்பிக்கிறான்.