அன்பு கொண்டிருந்தாலும் அதைவிட அடிமனதில் செல்வத்திற்குக் கொடுத்து வைத்திருக்கும் பெருமதிப்பு தனக்கு வாய்ப்பு கிடைக்கும் நேரத்தில் விஸ்வரூபம் கொண்டு எத்தகைய கொடிய செயல்களையும் செய்யத் தயங்காது.
அன்பின் மூலமே பாதகத்தை எதிர் கொள்ள முடியும்.
சின்னபெண்ணான ஸ்வாதியை வந்த இடத்தில் தொலைத்துவிட்டு அதனால் மனம் மரத்து போய்ப் பித்த நிலையில் இருக்கும் மனைவியை அரவணைத்துக் கடவுளிடம் மகளைத் திருப்பிக் கேட்டுக் கொண்டு காலத்தைக் கடத்துகிறார் சத்தியநாராயணன்.
தன் கவனக்குறைவால் தான் அண்ணன் மகளை இழக்க நேர்ந்தது என்ற குற்றவுணர்வுடன் மற்றவர்களுக்கு ஆறுதலாகவும்,வீட்டின் பொறுப்புகளைக் கவனித்து வரும் மங்காவிற்கு அண்ணன் சொத்தின் மேல் மோகம் அதிகம்.
நகைக்காகத் திருடர்கள் ஸ்வாதியை கடத்திக் கொண்டு போய் இரயிலில் போட்டுவிடக் குழந்தை பாக்கியம் இல்லாத வெங்கையா-வரலட்சுமி தம்பதிகள் கடவுள் அருளிய குழந்தையாக நினைத்து அவளை வளர்க்கின்றனர். பாம்பு தீண்டி வரலட்சுமி மாண்டுபோகச் சிற்றன்னையாக வந்தவளின் கொடுமைக்கு ஆளாகுபவளை தேடி வருகிறார் அவளைப் பெற்றவர்.
பெற்றவர்களிடம் வந்தவள் தாயை சுயநினைவுக்குக் கொண்டு வந்து அவர்களின் அன்பில் திளைத்தாலும் சிறுவயது தோழனான லோகேஷை மறக்க முடியாமல் போகிறது. பொம்மை செய்வதில் வல்லவனான லோகேஷை நகரத்திற்கு வரவைத்து அவனின் முன்னேற்றத்திற்குப் பாதையமைத்து கொடுக்கிறாள் ஸ்வாதி.
மங்காவின் மகன் வேறுஒருவளை காதலிப்பதால் அதற்குத் தடைப் போட முயன்று தோல்வி கண்டவள் அதற்காக ஸ்வாதியை கொல்லவும் துணிந்துவிடுகிறாள்.தாயின் செய்கை பிடிக்காதவன் அதை ஸ்வாதியிடம் எடுத்துரைக்க அனைவரையும் சமாதானப்படுத்தி யார் யார் யாருடன் வாழ விரும்புகிறார்களோ அவர்களுடனான வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கி வைக்க நினைத்தவள் மங்காவின் மனதையும் மாற்றி அவளின் மனதில் இருந்த கசடுகளை வெளியேற்றி அதில் ஆழப் புதைந்துள்ள பாசத்தை வெளிக்கொணர்ந்து பரப்புகிறாள் ஸ்வாதி.