மு. மேத்தா (Mu. Metha) (முகமது மேத்தா, பிறப்பு: செப்டம்பர் 5, 1945) பெரியகுளத்தில் பிறந்தார். இவர் சென்னை மாநிலக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். புதுக்கவிதைக்கு ஏற்றம் தந்த கவிஞர்களுள் இவரும் ஒருவராவார்.இவர் எழுதிய நூலான ஆகாயத்துக்கு அடுத்த வீடு என்ற கவிதை நூலுக்கு 2006-ஆம் ஆண்டு சாகித்திய அகாதமி விருது பெற்றார்.
உவமை உருவகங்களில் பழமையையும் புதுமையையும் இணைத்த மு.மேத்தா, வளமான கற்பனை, எளிய நடை, எளிய சொல்லாட்சி, மனித உணர்வுகளின் படப்பிடிப்புகளால் மக்கள் உள்ளத்தைக் கவர்ந்தவர். இவரது முதற் கவிதைத்தொகுப்பு கண்ணீர்ப் பூக்கள். காதல் சோகமும், தமிழ்த் தாகமும் இழையோடும் அவரது கவிதைகள் அவ்வப்போது கூர்மையான சமூக விமர்சனங்களிலும் இறங்குவதுண்டு. சமூக விமர்சனத் தொனியில் அமைந்த "தேச பிதாவுக்கு ஒரு தெருப் பாடகனின் அஞ்சலி" என்ற கவிதை மு.மேத்தாவுக்கு புகழ் தேடித் தந்த கவிதை ஆகும்.
மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், சிறுகதை, நாவல், கட்டுரைகள் முதலியவற்றைப் படைப்பதிலும் வல்லவரான மு. மேத்தா அத்துறைகளில் பதினைந்திற்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார். அவருடைய நூல்களுள் "ஊர்வலம்" தமிழக அரசின் முதற்பரிசினைப் பெற்ற கவிதை நூலாகும். இவரது "சோழ நிலா" என்னும் வரலாற்று நாவல் ஆனந்த விகடன் இதழ் நிகழ்த்திய பொன்விழா இலக்கியப் போட்டியில் முதல் பரிசு பெற்றது ஆகும். இவர் திரைப்படத் துறையிலும் பாடல்கள் எழுதி வருகிறார்.
"வானம்பாடி" என்ற புதுக்கவிதை ஏட்டின் வாயிலாக அறிமுகம் ஆன கவிஞர்களுள் மு.மேத்தாவும் ஒருவர்.
கவிஞர் மு.மேத்தாவை நான் அறிந்தது திரைப்பாடல்கள் மூலமே. ரெட்டை வால் குருவி திரைப்படத்தில் வரும் "ராஜ ராஜ சோழன் நான்" பாடலும், காசி திரைப்படத்தில் வரும் "என் மன வானில்" பாடலும் தான் மு.மேத்தாவை எனக்கு அறிமுகப்படுத்தின.
"""கள்ளுர பார்க்கும் பார்வை உள்ளுர பாயுமே துள்ளாமல் துள்ளும் உள்ளம் சல்லாபமே வில்லோடு அம்பு ரெண்டு கொல்லாமல் கொல்லுதே பெண் பாவை கண்கள் என்று பொய் சொல்லுதே"""
“""இறைவனிடம் வரங்கள் கேட்டேன்… ஸ்வரங்களை அவனே கொடுத்தான்… மனிதரில் இதை யாரும் அறிவாரோ…
நான் பாடும் பாடல் எல்லாம்… நான் பட்டபாடே அன்றோ… பூமியில் இதை யாரும் உணர்வாரோ…
மனதிலே மாளிகை வாசம்… கிடைத்ததோ மர நிழல் நேசம்… எதற்கும் நான் கலங்கியதில்லை இங்கே…
ராகம் உண்டு தாளம் உண்டு… என்னை நானே தட்டிக்கொள்வேன்… என் நெஞ்சில் உண்மையுண்டு… வேறென்ன வேண்டும்…”""
- போன்ற வரிகளில் ஈர்க்கப்பட்ட நான், மு.மேத்தாவின் கவிதைகளை வாசிக்க எத்தனித்தேன். "ஆகாயத்துக்கு அடுத்த வீடு" கவிதைத் தொகுப்பை புத்தகக் கண்காட்சியில் தேர்ந்தெடுத்தேன்.
இந்த கவிதைத் தொகுப்பில் காதல், இயற்கை, மனித இயல்பு ஆகியவற்றைப் பற்றிய கவிதைகளிருந்தும், அரசியல் நையாண்டியும், சமூக அவலநிலை பற்றிய கோபமும் பல கவிதைகளில் பிரதானமாக தென்படுகின்றன. சமகால அரசியல் நிகழ்வுகளையும் கவிதைகள் மூலம் பதிவு செய்கிறார் மு. மேத்தா. இன்றைய சூழலுக்கும் அக்கவிதைகள் பொருந்திப் போகின்றன. பழகிப்போன கற்பனைகள் ஆங்காங்கே இருந்தாலும் மக்களுக்கு நெருக்கமான மொழியில், வாசகர்களைத் திணரடிக்காமல் எளிய சொற்களை கையாள்கிறார் கவிஞர்.
என்னை கவர்ந்த சில வரிகள் -
***இந்தியா என் காதலி***
.... உன் மைய மண்டபத்தில் குயில்களின் குரலை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டுமென்று காக்கைகள் கலகம் செய்கின்றன. .... இராம ஓவியம் தீட்டுவதற்கு இரத்தம் போதவில்லை என்று சத்தம் போடுகின்றன தூரிகைகள்...
நீயோ "தூரிகை வாழ்க" என்று பேரிகை கொட்டுகிறாய்! .... எந்த நேரத்தில் இடிப்பார்களோ எந்த நேரத்தில் வெடிப்பார்களோ என்று ஊர் ஊராகக் கடவுள் ஒளிந்து வாழ்கிறான்...
அன்னிய முதலாளிகளின் கோப்பைகளை எமது குருதியால் நிரப்பிவிட்டு அவர்களது குளிர்பானங்களால் எம்மைக் குளிரவைக்கப் பார்க்கிறாய்...
ராமராஜ்யக் கனவுகள் மெல்ல மெல்ல ரோம ராஜ்யக் கனவுகளாய் மாறிவருகின்றன...
***எழுத்தெனப் படுவது*** அதை நான் எழுதி முடிக்கும் போது அதற்கான சுவடுகள் அழிந்து போயிருக்கும்... அவற்றின் சுவடுகளாய் என் எழுத்துக்கள் இருக்கும்!
எழுதும் முன் எது என்னை வதைத்ததோ அது உங்களை வதைக்கத் தொடங்கும் போது நான் எழுதப்பட்டிருப்பேன்...
***விளக்குகளின் விழா*** ... ஒற்றை விழிச்சுடரால் விளக்கு உற்றுப் பார்க்கிறது... இருட்டு எங்கேனும் ஒளிந்துள்ளதா என்று.
திடீரென்று சோகம் விளக்கைச் சூழ்ந்து கொள்கிறது.
நிழலாய் உடன் நிற்கும் சொந்த இருட்டினைத் துரத்த முடியவில்லையே...
***ஓர் உரையாடல்*** (2002-2003 காவிரி பிரச்சினை)
“செப்புத் தகட்டில் எழுதுவதா? கல்லில் செதுக்குவதா? எதில் எழுதிவைத்தால் நிலைக்கும் இந்திய ஒருமைப்பாடு?" என்றார்.
தயங்காமல் சொன்னேன் "தண்ணீரில் எழுதுங்கள்" என்று.
"நீர்மேல் எழுத்து நிலைக்காதே" என்றார்.
"நீரில் எழுதாவிட்டால் இந்திய ஒருமைப்பாடு நிலைக்காதே" என்றேன்.
2006 ஆம் ஆண்டில் எழுத்தாளர் மு.மேத்தா இப்புத்தகத்திற்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார். கவிதைகள் எங்கும் கவிஞரின் பார்வையானது தனித்துவம் வாய்ந்ததாக உள்ளது. தமது கருத்துக்கள் வாசிப்போரிடையே தாக்கம் ஏற்படுத்தும் வகை முரண், குறியீடு, உருவகம், சிலேடை ஆகிய உத்திகளைச் சிறப்பாகக் கையாண்டுள்ளார்.
இத்தொகுப்பில் உள்ள கவிதைகளில் எம் மனதைப் பெரிதும் நெகிழ வைத்தது "உயிர் பாடும் ஒப்பாரி". கோவை வேளாண்மை பல்கலைக் கழக மாணவிகள் மூவர் தர்மபுரியில் உயிரோடு எரிக்கப்பட்டதை பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட மிகவும் உருக்கமானதொரு பாடல்.