கமலி அண்ணி:::::: ********************* கணவனின் தங்கை வைசாலியை பத்து வயதில் இருந்து தானே அன்பு செலுத்தி வளர்த்து வருவதால் வளர்ந்த பிறகும் அவளை குழந்தையாகவே பாவித்து அவள் கேட்கும் அனைத்தையும் நிறைவேற்றும் கமலி அவளுக்கு மனிதர்களின் குணங்களை பேச்சில் இருந்தே எடைபோடும் அறிவை வளர்க்காமல் விட்டது அவளின் வாழ்வை திசைத் திருப்ப பார்க்கிறது.
ஊருக்கு ஒரு பேரில் ஏமாற்றுபவன் உத்தமன் என்று பெயர் வைத்து வைசாலிக்கு காதல்வலை வீசி அவளை ஏமாற்றிக் கொண்டிருக்கிறான். சிலரின் உதவியால் கமலிக்கு வைசாலி ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறாள் என்பது தெரிய வந்தவுடன் அதை வைசாலியையே உணரவைத்து செல்லும் தவறான பாதையிலிருந்து காப்பாற்றிவிடுகிறாள்.
மழை மேக மயில்கள் ::::: ************************************ தன்னலம் மட்டுமே மனதில் இருக்குமானால் அடுத்தவர்கள் நலனில் அக்கறை காட்ட மனம் விழையாது அதில் தான் பெற்ற குழந்தைகளும் அடக்கம்..
காதலித்துத் திருமணம் செய்து இருகுழந்தைகளுக்குப் பெற்றவர்களான பின்பும் தன் வேலை தன் முன்னேற்றம் மட்டும் பார்த்துக்கொண்டு வீட்டில் எப்பொழுதும் சண்டை போட்டுக் கொண்டு வாழும் ஜீவனும் , வைதேகியும்... இவர்கள் சண்டை பார்த்து பயத்தோடு வாழும் குழந்தைகள், அவர்களின் எல்லை மீறிய சண்டையைப் பொறுக்க முடியாமல் தன் தாத்தா வீட்டில் அடைகலமாகின்றனர்.
தேடி வந்த பெற்றவர்களிடம் தாங்கள் இருக்க விரும்பவில்லை என்றுரைத்து விட்டுத் தங்களிடம் பாசம்காட்டும் தாத்தா வீட்டிலே வாழ விரும்புவர்களை நீதிபதியும் தடுக்கவில்லை அவர்களின் முடிவையே நடைமுறைப்படுத்துகிறார்.
தனி மனிதனை அவனுடைய தன்னலம் மட்டுமே முன்னுக்குக் கொண்டுவரும் ஆனால் தன்னைச் சார்ந்து ஓர் உயிர் வாழ வந்த பிறகு தன்னலத்தை அகற்றாவிடில் அதுவே பின்னடைவுக்காக வழியை ஏற்படுத்தும்...