உலகு தழுவிய நிலையில் வாழும் தமிழ் மக்களும் தமிழில் ஈடுபாடு கொண்டுள்ள பிற மொழியினரும் தமிழ் மொழியையும், அறிவியல், தொழில் நுட்பம், கணினித் தமிழ் மற்றும் தமிழ்ப் பயன்பாட்டு மென்பொருள்களைக் கற்கவும், தமிழர் வரலாறு, இலக்கியம், கலை, பண்பாடு ஆகியவை பற்றி அறிந்து கொள்ளவும் வேண்டிய வாய்ப்புகளை இணையம் வழியாக ஏற்படுத்துவதும், அரசு, கல்வி, ஊடகம், வணிகம் போன்ற பல்துறைகளுக்கும் வேண்டிய கணினித் தேவைகளுக்கான தீர்வுகளைக் கண்டறிந்து, நிறுவி, பராமரித்து, பயிற்சியளித்துப் பயன்பாட்டை பெருக்குதலும் இணையவழி அளிப்பதும் இதன் நோக்கமாகும்.
அ.ச. ஞானசம்பந்தன் (1916 - ஆகஸ்ட் 7, 2002) தமிழறிஞர், சைவ அறிஞர். புகழ்பெற்ற மேடைப்பேச்சாளராகவும் மரபிலக்கிய ஆய்வாளராகவும் திகழ்ந்தார்.
அ.ச. ஞானசம்பந்தன் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கல்லணைக்கருகில் உள்ள அரசன்குடி என்ற ஊரில் புகழ்பெற்ற தமிழறிஞரான அ.மு. சரவண முதலியார் மற்றும் சிவகாமி இணையருக்கு 1916-ல் பிறந்தார். அவரது தந்தை அ.மு. சரவண முதலியார் பெருஞ்சொல்விளக்கனார் என பட்டம் பெற்ற தமிழறிஞர். அவர் ஒரு துணிக்கடை நடத்திக்கொண்டிருந்தார். அப்போது ந.மு. வேங்கடசாமி நாட்டாருடன் தொடர்பு ஏற்பட்டது. ஏற்கனவே இலக்கண நூல்களையும் கம்பராமாயணத்தையும் படித்திருந்த சரவண முதலியார் வேங்கடசாமி நாட்டாருடன் இணைந்து திருவிளையாடல் புராணத்திற்கு உரையெழுதி வெளியிட்டார். பின்னர் லால்குடி போர்டு உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றினார்.
அ.ச. ஞானசம்பந்தன் தந்தையிடம் தொடக்க கல்வியை பெற்றார். பின்னர் லால்குடி போர்டு உயர்நிலைப் பள்ளியில் உயர்நிலைக் கல்வி முடித்து 1935-ல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பாடத்தில் இண்டர்மீடியட் படித்தார். அண்ணாமலைப் பல்கலையில் தமிழ்ப் பேராசிரியராக இருந்த நாவலர் சோமசுந்தர பாரதியார் அவரது தமிழ் அறிவை அடையாளம் கண்டு அவரை இயற்பியலில் இருந்து தமிழுக்கு மாறும்படி செய்தார். அக்கல்லூரியில் படிக்கும் போது வி.எஸ். ஸ்ரீனிவாச சாஸ்திரி , திரு.வி. கல்யாணசுந்தர முதலியார், ரா. ராகவையங்கார் ,தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் போன்ற தமிழ் அறிஞர்களின் தொடர்பு கிடைத்தது. அண்ணாமலை பல்கலையில் தமிழில் இளங்கலையும் முதுகலையும் பயின்றார்.
அ.ச. ஞானசம்பந்தன் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்று 1942-ல் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராக வேலையில் சேர்ந்தார். அக்கல்லூரியில் 1956 வரை வேலை பார்த்தார். அதன்பின் சென்னை அகில இந்திய வானொலியில் நாடகத் தயாரிப்பாளராக பணியேற்றார். 1959 முதல் தமிழ்நாடு அரசின் செய்தித்துறையின் மொழிபெயர்ப்புத்துறை இணை இயக்குநராக பணியாற்றினார். தமிழ் வெளியீட்டுத்துறை இணை இயக்குநராகவும் பணியாற்றினார். அ.ச. ஞானசம்பந்தன் 1967 முதல் 1970 வரை தமிழ்வளர்ச்சித்துறை இயக்குநராகப் பணியாற்றினார். 1971-ல் தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் மதுரை பல்கலை துணைவேந்தரானபோது அவரது அழைப்பின்பேரில் அ.ச. ஞானசம்பந்தன் மதுரை பல்கலை தமிழ்த்துறை தலைவராக பணியில் சேர்ந்தார். 1973-ல் ஓய்வுபெற்றார்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் படிக்கையில் திரு.வி. கல்யாணசுந்தர முதலியார் அ.ச. ஞானசம்பந்தனுக்கு தெ.பொ. மீனாட்சிசுந்தரனாரை அறிமுகம் செய்துவைத்தார். தெ.பொ. மீனாட்சிசுந்தரனாரை தன் ஆசிரியராக ஏற்றுக்கொண்டார் அ.ச. ஞானசம்பந்தன்.
கல்வியாளராக புகழ்பெற்றிருந்த அ.ச. ஞானசம்பந்தன் ம.ரா.போ. குருசாமி, ப. இராமன், ந. சஞ்சீவி போன்று பின்னாளில் புகழ்பெற்ற மாணவர்களை உருவாக்கியவர். திறனாய்வு என்னும் சொல்லை அறிமுகம் செய்தது அவரே. 1967 முதல் 1970 வரை தமிழ்வளர்ச்சித்துறை இயக்குநராகப் பணியாற்றிய காலகட்டத்தில் அனைத்து படிப்புகளையும் தமிழில் கொண்டுவரும் நோக்குடன் 350-க்கும் மேற்பட்ட அறிவியல் மற்றும் வரலாற்றுப் பாடநூல்களை தமிழாக்கம் செய்து வெளியிட்டார். அந்நூல்கள் இன்றும் தமிழின் முக்கியமான அறிவுத்தொகையாக திகழ்கின்றன.
அன்னாருடைய படைப்புகள் நாட்டுடமையாக்கப்பட்டுள்ளன. (இணைப்பு)
திரு அ.ச.ஞானசம்பந்தன் முன்னுரையில் கூறியதை போல், இராமயணத்தை வால்மீகியிடமிருந்து எடுத்துகொண்ட காவியப் படைப்பாக மட்டுமே பார்க்க வேண்டும் என்றும், அதில் கம்பரது கவி சுவையேற்றபட்ட நயங்களையுமே இதில் பொருட்படுத்த வேண்டும் என்பதையும்தான்.
அந்த வகையில், இராவணன் என்பவனை நல்லவனா? தீயவனா? என தீர்மானிப்பதை விடுத்து, அவனது மனம், புத்தி, வாக்கு,குணங்களால் ஏற்பட்ட அவனது மாட்சியையும் வீழ்ச்சியையும் பற்றிய ஆய்வுகளை கொண்டதே இந்நூல்.
தெரிந்த காவியக் கதை என்றாலும், கம்பரின் கவிநயங்களை சிலவற்றை காட்டி, மேலும் அதனை விளக்க திருக்குறளையும் மேற்கோள்காட்டி இராவணனது அவலத்தை ஆழ்ந்து உணர்ந்து கொள்ள வைக்கிறார்.
சீதை, சூர்ப்பனகை, வீடணன், இந்திரசித்தன், மேகநாதன், மாலியவான், மாரீசன், வாலி, அனுமன், இராகவன், இலக்குவன் என்பவர்களின் செயல்களையும், அதில் சிலரது குணங்களையும், மேலும் இராவணனது பெருமை சிறுமைகளை காணவும் திரு.அ.ச.ஞா'வின் இந்நூல் நமக்கு உதவியிருக்கிறது.
இராவணனின் மாட்சிகளில் சில:
"மூன்று கோடி வாணாளும், முயன்று பெற்ற பெருந்தவமும், முதல்வனால் முன்னாளில் எக்கோடி யாராலும் வெல்லப்படாய் என்று கொடுக்கப்பட்ட வரமும், உலகனைத்தையும் செருக்கடைந்த புயவலியும்" யாருக்கும் வாய்க்கப்பெறாத பண்புகளன்றோ!!!
எல்லாம் இழந்த பின்னும், சீதையை விடுவிக்க.."தடுத்தது மானம் ஒன்றே", என தனது மானத்தை காக்க எதையும் விட்டுகொடாதாவனாக..,
"என்னையே நோக்கி நான் இந் நெடும்பகை தேடிக்கொண்டேன்.."எனவும்
"நாசம் வந்துற்றகாலை நல்லதோர் பகையைப் பெற்றேன்"-தீமை வந்தாலும் எனக்கு சரிநிகர் பகையாளியை பெற்றேன் எனவும் கூறியது தன்னிலை உணர்ந்த மதியாளனாகிறானே இலங்கை வேந்தன்.
"யானரேனும் தானாகுக யானென் தனியாண்மை பேரேன் நின்றே வென்றி முடிப்பன் புகழ்பெற்றேன்" என கூறி, கடைசி வரை பேராண்மை கொண்டு சமர் புரிந்து மாய்ந்தது மாண்பாகாதா!!!
சூர்ப்பனகையின் சூழ்ச்சியினால், அதாவது இராமனை அடைய, சீதையை அப்புறபடுத்தாகவேண்டிய காரணத்தால், இராவணனிடம் இலக்குவன் தன் மூக்கை அறுத்தான் என கூறுவதை விடுத்து, பேரழகியான சீதையை உனக்காக கொணர சென்றபோது, இலக்குவன் தடுத்து எனது அங்கம் சிதைத்தான் எனக் கூறினாள். இதற்கு முன்பாக, சூர்ப்பனகையின் அங்க சிதைவை கண்டதும், உடனே கோபம் கொண்டு "அவர்கள் ஏன் இப்படி செய்தார்கள்" என கேளாமல், "நீ என்ன தவறு செய்தாய்?"என தர்மத்தின் பக்கத்தின் நின்று மதிநுட்பத்துடன் கேட்டவனின் மாட்சிக்கு வேறெதும் சான்று வேண்டுமோ!!! அதாவது, "தீயிடை உகுத்த நெய்யின் சீற்றத்துக்கு ஊற்றம் செய்ய நீயிடை இழைத்த குற்றம் என்னைகொல் நின்னை இன்னே வாயிடை இதழும் மூக்கும் வலிந்தவர் கொய்ய?"
அதேவேளையில், இராவணனது வீழ்ச்சிக்கு காரணம் பிறன்மனை நோக்கிய காமமேயன்றி வேறல்ல. அதாவது, என்று இன்னொருவனின் இல்லத்தாளை, பாவத்தை மறந்து, வேத மறைகளை துறந்து சிறையெடுத்தாயோ, அன்றே அரக்கர்புகழ் ஒழிய ஆரம்பித்து விட்டது. இதனைகும்பகர்ணன் இராவணனிடம்,
மேலும் பகைவரின் பலத்தை அசட்டை செய்தது, அவர்களை துச்சமென மதித்தது, உற்பாதங்களை(துர்நிமித்தங்கள்) புறந்தள்ளியது என இராவணன் தன் அழிவை தானே தேடிக்கொண்டான்.
கடைசியில், வேதமறைகள் தப்பினாலும் இராமனது வில்(தனு)'லிருந்து வந்த அம்புகள், தப்பாது இராவணனை கொன்று முடித்தது. இதை, "...வேதம் தப்பின போதும் அன்னான் தனுஉமிழ் சரங்கள் தப்பா!" எனக் காணலாம்.
நமது சுயவிருப்பு வெறுப்புகளை ஒதுக்கிவிட்டு காப்பிய மாந்தர்களின் செயல் குணநலன்களை ஆராய்ந்து விளங்கி கொள்ள ஏற்ற வகையில் அமைந்திருக்கிறது இந்நூல்.
அத்தியாயங்கள் தொடங்குவதற்கு முன் அவலம்(Tragedy) என்ற உரை சற்றே சலிப்பூட்டுவதாக இருந்தாலும், பின்பு வந்தவைகள் கருத்துச் செறிவனாய்.
இராமாயணம் பல வடிவங்களில் பலர் மூலமாகவும் வாய்மொழியாகவும் சொல்லப்பட்டு வந்தாலும் முழுக்க முழுக்க கம்பராமாயத்தின் அடிப்படியிலேய இந்த நூல் எழுதப்பட்டுள்ளது என்றும் கற்பனையில் இருக்கும் ராமர் ராவணன் குறித்த கற்பனைகளை விலக்கிவிட்டு படிக்குமாறு கோரிக்கையுடன் ஆரம்பிக்கிறார் ஆசிரியர். இராவணன் குறித்து கம்பர் கூறியது, காப்பியத்தில் வரும் மற்றவர்கள் கூறியது, இராவணனுடன் அவர்களுக்கு நடந்த உரையாடல் மூலம் இராவணனின் பண்புகளை, மனநிலைகளை, சிறப்புகளை, தவறுகளை எடுத்து காட்டியுள்ளார் . கதாபாத்திரங்கள் கூறும் செய்திகளை மட்டுமல்லாது அவர்கள் உபயோகிக்கும் வார்த்தைகள் கொண்டும் ஆராய்ந்து அவர்கள் மனநிலை விளக்கப்பட்டுள்ளது. நுட்பமாக ஆராய்ந்து முன்னும் பின்னும் முரணாக கதாபாத்திரங்கள் பேசியுள்ளனவா? அதற்கான காரணங்கள் என்ன? எந்த மனநிலையில் எந்த மாதிரி பேசியிருக்கிறார்கள் அன்று தெளிவுப்படுத்தியுள்ளார். கம்பர் எந்த அளவிற்கு ஒவ்வொரு கதாபாத்திர மனநிலையில் இருந்தும் எழுதியிருக்கிறார் என்று மிக நுட்பமாக ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள நூல். இராவணன் எத்தகைய உயர்நிலையிலிருந்து ஒரே ஒரு தீய குணத்தால் வீழ்ந்தான் என்பது மிக தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. முன்னதாகவே 'முரண்' குறித்தும் 'அவலம்' குறித்தும் , ஒரு பண்பு மற்ற பண்புகளை வெல்ல நினைத்தால் என்ன ஆகும் என்றும் ஆசிரியர் உபரியாக கூறியிருப்பது புரிதலுக்கு உதவுகிறது. கம்பராமாயணம் முழுவதுமாக படித்தவர்களுக்கு மேலும் சுவாரசியம் அளிக்கும் புத்தகமாக இருக்கும்.
இராவணனை பற்றி அறிய ஒரு teaser என்றே இந்நூலை சொல்லலாம். மேற்கோள்கள் அதிகம். இராவணனின் கலை, தவம், குடும்பத்தின் மீது அன்பு, அரசாட்சி பண்புகள் அவனுக்கு மாட்சியை தந்தன. ஆனால் 'ராமனும் அவனும் சம பலமுள்ள எதிரிகள் என்ற உணர்ந்த நிலையிலும், இனி என் முறையை ஏற்றுக்கொள்கிறேன்' என்ற அவன். அப்பொழுதும் அவன் பகைவரைத் துச்சமாக மதிக்கும் குணத்தை விடவில்லை. இதனால், இராவணன் அழிவுக்குக் 'காம' மயக்கம் மட்டுமே காரணமில்லை. அவன் அதீத 'தன்னம்பிக்கையும்' 'தற்பெருமையும்' சேர்ந்து தூண்டிய 'செருக்கே காரணமாகும் என அறிகிறோம்.
வரலாறு வெற்றி பெற்றவர்களால் எழுதப்படுவது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் சற்று ஆழ்ந்து ஆராய முற்பட்டால் இருதரப்பினருக்கும் பெரிய அளவில் வித்தியாசங்கள் இருந்திருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றும்.
வெற்றி பெற்றவர் நல்லவர் என்றும் தோல்வி பெற்றவர் ��ீயவர் என்றும் வரையறுத்து சொல்ல முடியாது. வெற்றி பெற்றவரின் நன்மையிடம் தோல்வி அடைந்தவரின் தீமை அடைந்த தோல்வி என்பது என் கருத்து.
அவ்வகையில் இந்த அருமையான புத்தகம் கம்பநாடன் பாரபட்சமின்றி நடுநிலைமையோடு தான் காவியத்தை இயற்றி இருக்கிறார் என்பதை ஆழமாக விவரித்திருக்கிறது.
தொடக்கத்தில் உள்ள சில பகுதிகள் சிறிது வளவளவென்று தோன்றுகிறது. ஆனால் அதன்பின் ராமகாவியத்தில் வரும் அனைவரின் பார்வையில் ராவணன் யார்,அவனின் வீழ்ச்சி நிகழ்ந்தது எப்படி என்று திருக்குறள் மேற்கோள்களும் ராமாயணத்தின் மேற்கோள்களும்(அவை புரிந்து கொள்ள சிறிது நேரம் எடுத்துக் கொள்ளும்) கொண்டு ராவணன் உண்மையில் யார் என்று நம்மை புரிந்து கொள்ள உதவுகிறார் ஆசிரியர்.
காவியதலைவர்கள் மட்டுமல்ல எல்லா மனிதர்களையும் சற்று அருகில் சென்று பார்க்க நாம் முயற்சி செய்தால் நிச்சயம் அவர்களை குறித்த நம் எண்ணம் மாறுபடும் என்ற உண்மையை இந்த புத்தகம் வாயிலாக காணமுடிகிறது.
இந்த புத்தகம் ராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் பற்றி மட்டும் பேசவில்லை மேலும் ராவணனும் நல்லவன்தான் என்பதை சரியான முறையில் எடுத்துக் காட்டியுள்ளனர். ஒரு தவறு ஒரு மனிதனின் வாழ்க்கையை மாற்றி விடும் என்பதற்கு ராவணன் சிறந்த எடுத்துக்காட்டாகும்..
நல்லவனாக வாழ வேண்டும் ஒரு நாள் மட்டும் அல்ல வாழ்நாள் முழுவதும் அப்போதுதான் அவனுக்கு முழு பெயரும் புகழும் கிடைக்கும்...
கம்பனின் வரிகளுக்கு அருமையான விளக்கங்கள்... இராவணன் தன் பகைவர்கள், மற்றும் உடன் பிறந்தவர்கள் , இவர்களால் எப்படி ரசிக்கபெற்றான். அவனது இச்சை எப்படி அவனது அனைத்து பெருமைகளையும்,வீரத்தையும் மாய்தது, என்று அழகாக விவரிக்க பட்டுள்ளது...