இந்த நாவல் அனுபவங்களின் அப்பட்டமான உணர்வுகளின் ஆதாரத்தில் எழுதப்பட்டது. ஆனால் கற்பனைதான் என்கிறார் பா. விசாலம் தன் முன்னுரையில். குழந்தைப் பருவத்திலிருந்து இயக்கத் தோழரையே மணப்பதுவரை போகும் கதையைப் படிக்கும்போது அதிலுள்ள விசாலத்தின் ஆழமான உணர்வுகள் மற்றும் சொந்த அனுபவங்களின் கனத்தை அறிந்துகொள்ள முடிகிறது. பெயரில்லா இந்தக் கதையின் நாயகியை நான் விசாலம் என்றே படித்தேன். அந்த அன்னம் வானில் பறப்பதையும் அது தாமரைக்குளத்தில் இறங்குவதையும் உணர முடிகிறது. அத்துடன் அதன் சோர்வையும் தனிமையையும்கூட. - முன்னுரையில் அம்பை
தந்தையின் அரவணைப்பில் குழந்தையாய், படிப்பும், பாட்டும் குதூகலமுமான இளம் பிராயம் முதல் பகுதி என்றால் அவர் இறப்பின் பின் அம்மாவுடன் தனியாக, வறுமையில் வதங்கும் சோகமான இரண்டாம் பகுதி, பின் இதை கடந்து தன்னை அறிந்து, சமூகம், கட்சி, நாடு பற்றிய கொள்கைகள் சிந்தனைகள் என்று மூன்றாம் பகுதி.
காதல் சுற்றியே எழுதப்பட்டிருக்கும் கதைகளுக்கும், சுய பச்சாதாபங்கள் நிறைந்து வழியும் கதைகளுக்கும் நடுவே மாறுபட்ட கதைகளத்துடன் அசத்துகிறது மெல்ல கனவாய் பழங்கதையாய்.
விடுதலைக்கு முன் தொடங்கி 1960கள் வரை நீடிக்கும் இக்கதை நாஞ்சில் நாடு, கன்யாகுமரி சார்ந்திருப்பினும் பொது தமிழ் உபயோகம் அதிகமாகவும் வட்டார மொழி அறியாதவர்களும் புரிந்துகொள்ளும் வகையில் அமைந்த நடை பாராட்டுதற்குரியது. ஆசிரியர் அந்த காலகட்ட அரசியல் சூழலை அழகாக ஆதங்கத்துடன் விவரிக்கிறார். இனவெறி அரசியலும் சினிமா நாயகர்கள் மேலான மோகமும் அடிப்படை ப்ரச்னைகளிலிருந்து திசை திருப்பும் மூன்றாம் தரமான அரசியல் நடவடிக்கைகளும் இன்றும் தொடர்வது வேதனையான உண்மையே.
பெயரில்லாத நாயகியும் தோழர் நந்தனும் கொண்ட காதல் அணு அளவே என்றாலும் அழகாக, உண்மையாக, மேற்பூச்சின்றி தோழமையாக, நெகிழ்ச்ச்சியாக எழுதப்பட்டுள்ளது.
அழகிய நாவல் வடிவம். மிகவும் அனுபவித்து வாசித்தேன். மூன்று பகுதிகளாக பார்க்கலாம், நாயகியின் இளமைப்பருவம், தந்தை இறப்பு /அரசியல் ஆர்வம் உருவாகும் காலம், தோழமைக்கட்சிப்பணி அனுபவங்கள் மற்றும் சிக்கல்கள். முதல் இரண்டையும் ஒப்புநோக்க 3வது பகுதி சற்று மெல்ல நகர்ந்தது. ஆனால் நாவலின் மையம் அதுவே. கதை ஒரு தன்வரலாறு போல இருந்தாலும் இது புனைவு என்கிறார் ஆசிரியர் விசாலம்.
விடுதலைக்கு முன்பு தொடங்கி 1960 கள் வரை கதை நீள்கிறது. திருவிதாங்கூரின் தமிழ் பேசும் பகுதியான நாஞ்சில் நாட்டு கதைக்களம் என்றாலும் வட்டார வழக்கில் முழுவதும் இல்லாமல் இருப்பது தனித்தன்மை. நேர்மையான அனுபவங்களின் மூலம் எழுதப்பட்ட வரிகள் என உணரும் தருணங்கள் ஏராளம். பல முக்கிய கதாப்பாதிரங்களின் பெயரைச்சொல்லாமலே அதை குறையாக வாசகர் உணராமலே கதை நகர்கிறது.
அன்பு, மகிழ்ச்சி, இறப்பு, துக்கம், ஏமாற்றம், கவலை, காதல் போன்ற பல உணர்வுகளை நாடகப்படுத்தாமல் மென்மையாகவும் சாதரணமாகவும் சொல்லியிருப்பது என்னை மிகவும் கவர்ந்தது. 1994 ல் வெளிவத்த இவரின் இந்த முதல் நாவல் தமிழ் கிளாசிக் வரிசையில் கொண்டாடப்படுகிறது, முழுதகுதி இருக்கிறது என்றே நினைக்கிறேன்.
பெண்ணின் பார்வையால் மட்டுமே காண இயலும் சில நுண்ணிய அவதாணிப்புகளை ரசித்தேன். எனக்கு தெரிந்து எனது முத்தைய தலைமுறை பயன்படுத்திய சொற்களையும் சொல்லாடல்களையும் வாசிக்கையில் கதைக்கு நெருக்கமாக உணர்தேன். மேலும் இது ஒரு காலகட்டத்து வாழ்வை ஆவணப்படுத்தும் படைப்பு. பரவலாக மேலும் பல வாசகர்களால் வாசிக்க விவரிக்கப்படவேண்டிய படைப்பு.