ஈழ மண்ணில் ஒரு சவால்மிகு பயணம். போரால் துண்டாடப்பட்ட ஒரு தேசத்தைக் கண்முன் நிறுத்தும் ஆவணம்.
‘இலங்கை அரசியல், அங்கு தமிழ் மக்கள் நடத்திய அகிம்சைப் போராட்டம், ஆயுதம் தாங்கிய யுத்தம், சிங்கள இராணுவம் நடத்திய இனப்-படுகொலைகள், இறுதி யுத்தம் ஆகியவை பற்றி ஏராளமான புத்தகங்கள் உண்டு. ஆனால் போருக்குப் பிந்தைய ஈழம், அந்த இடங்கள், மக்கள் நிலைமை பற்றிய புத்தகங்கள் இல்லை. அதுவும் நேரடி சாட்சி எழுதிய பதிவுகள் இல்லை. அந்த வரலாற்றுக் கடமையை மகா. தமிழ்ப் பிரபாகரன் துணிச்சலாகச் செய்துள்ளார்.’ - ஜூனியர் விகடன்
போருக்கு பிந்தைய இலங்கையை ஒரு பயண நூல் போல இப்புத்தகம் அளிக்கிறது. கொழும்பில் தொடங்கி மொத்த இலங்கையை சுற்றி வரும்போது அதனூடே ராணுவம், புலிகள், அரசியல், இனப்படுகொலை, வாழ்வாதாரம், நிலவுரிமை, மொழி, பனிப்போர், ஒடுக்குமுறை, சீன ஆதிக்கம், அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆகியவற்றை பேசுகிறது. போர் முடிந்த பிறகும் அங்கே நடந்துகொண்டிருக்கும் ராணுவ ஆட்சியை நேரடித் தரவுகளுடன் தருகிறது.
அ. முத்துலிங்கம் முன்னிறுத்தும் போர்க்கால இலங்கையிலிருந்து ஷோபாசக்தியுடைய இலங்கை மாறுபட்டு தெரியும். இப்புத்தகம் எனக்கு காண்பித்தது முற்றிலும் மாறுபட்ட மூன்றாவது ஒரு இலங்கையை.
நூலாசிரியர் இலங்கை சிறையில் இதற்காக வைக்கப்பட்டார் என்பது இந்த புத்தகத்திற்கு கூடுதல் நம்பகத்தன்மையை தருகிறது.