திரைப்பட இயக்குநர் பாலா எழுதிய 'இவன்தான் பாலா' என்று 'ஆனந்த விகடன்' வெளியிட்ட தொடரிலும் நூலிலும் இந்தத் தொகுப்பின் கதையான 'இடலாக்குடி ராசா'வைக் குறிப்பிட்டு அந்தக் கதைதான் தனது சினிமா நுழைவுக்கான காரணம் என்று நன்றியுடன் குறிப்பிட்டபின், இந்த முதல் தொகுப்புக்கான தேடல் இருந்தது. ஆனால், தொகுப்பு பதிப்பில் இல்லை...
33 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு கதாசிரியனின் முதல் சிறுகதைத் தொகுப்பு மறுபதிப்பு வருவதென்பதும், அது அவன் வாழும் காலத்தில் நடக்கிறது என்பதும், அத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் அதற்கான தேவை இருக்கிறது என்பதும் கலவையான உணர்ச்சிகளைத் தருகின்றது.
நாஞ்சில் நாடன் (பிறப்பு: டிசம்பர் 31, 1947, வீர நாராயண மங்கலம் (கன்னியாகுமரி மாவட்டம்) ) நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளர்களில் ஒருவர். இவரது இயற்பெயர் சுப்ரமணியன். வேலையின் காரணமாகப் பல ஆண்டுகள் மும்பையில் வாழ்ந்தார். தற்போது கோயம்புத்தூரில் வாழ்ந்து வருகிறார். நாஞ்சில்நாடன் நகைச்சுவையும் சமூகவிமர்சனமும் இழையோடும் படைப்புகளுக்காக புகழ்பெற்றவர். தமிழ் மரபிலக்கியத்தில் உள்ள தேர்ச்சி இவரது படைப்புகளில் வெளிப்படும். கம்பராமாயணத்தில் ஆழமான ஈடுபாடு கொண்டவர். தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள் என்ற சிறுகதைத்தொகுதி மூலம் புகழ்பெற்றார். தலைகீழ்விகிதங்கள் இவரது முதல் நாவல். இவரின் மிக முக்கியமான அடையாளம் நாஞ்சில் நாட்டு வட்டார வழக்கிலான எழுத்துநடை. தலைகீழ் விகிதங்கள் நாவலை இயக்குநர் தங்கர்பச்சான் சொல்ல மறந்த கதை என்ற பெயரில் திரைப்படமாக்கி இருக்கிறார். 2010ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது இவரது "சூடிய பூ சூடற்க" என்ற சிறுகதைத் தொகுப்பிற்கு வழங்கப்பட்டது.
ஒவ்வொரு கதையும் என் பால்யகால ஞாபகம். இடலாக்குடி ராசா, விரதம், வாய் கசந்தது என்பன விருப்பமுள்ள கதைகள் . வாழ்வியலை படம்பிடித்து எழுத்தோவியம்மாய் தந்த நாஞ்சில் நாடனுக்கு நன்றி.