சமஸின் இந்தக் கட்டுரைகள் கடல் சார் வாழ்க்கை பற்றியும் கடலை நம்பி வாழ்வும் மனிதர்கள் பற்றியும் கரிசனத்தோடு பேசுகின்றன. சமூகத்தின் விளிம்பில் வாழும் மனிதர்களின் வரலாற்றை இவை சொல்கின்றன. பல ஊர்களையும் நிலங்களையும் மலைகளையும் கடல்வெளிகளையும் அவை சார்ந்த வாழ்க்கையையும் இந்த நூலின் மூலம் அறிந்துகொள்ளலாம். இதில் வரும் மக்கள் மொழி மிகவும் முக்கியமானது. ஒரு மகத்தான இலக்கியவாதி தனது படைப்புகளின் மூலம் தன் மொழிக்குச் செய்யக் கூடிய பங்களிப்பை இந்த நூலின் மனிதர்கள் செய்கிறார்கள். அவர்களின் பேச்சுமொழியை ஒரு தேர்ந்த எழுத்துக் கலைஞனின் நுட்பத்துடன் சமஸ் பதிவுசெய்திருக்கிறார். வெகுஜனப் பத்திரிகைக் கட்டுரைகள் எவ்வித ஆழமோ, ஆய்வோ இன்றி எழுதப்படுபவை என்னும் பொதுவான குற்றச்சாட்டுக்கு மாறாக ஆழமாக எழுதப்பட்டுள்ள கட்டுரைகள் இவை.
சமஸின் இந்தக் கட்டுரைகள் கடல் சார் வாழ்க்கை பற்றியும் கடலை நம்பி வாழ்வும் மனிதர்கள் பற்றியும் கரிசனத்தோடு பேசுகின்றன. சமூகத்தின் விளிம்பில் வாழும் மனிதர்களின் வரலாற்றை இவை சொல்கின்றன. பல ஊர்களையும் நிலங்களையும் மலைகளையும் கடல்வெளிகளையும் அவை சார்ந்த வாழ்க்கையையும் இந்த நூலின் மூலம் அறிந்துகொள்ளலாம். இதில் வரும் மக்கள் மொழி மிகவும் முக்கியமானது. ஒரு மகத்தான இலக்கியவாதி தனது படைப்புகளின் மூலம் தன் மொழிக்குச் செய்யக் கூடிய பங்களிப்பை இந்த நூலின் மனிதர்கள் செய்கிறார்கள். அவர்களின் பேச்சுமொழியை ஒரு தேர்ந்த எழுத்துக் கலைஞனின் நுட்பத்துடன் சமஸ் பதிவுசெய்திருக்கிறார். வெகுஜனப் பத்திரிகைக் கட்டுரைகள் எவ்வித ஆழமோ, ஆய்வோ இன்றி எழுதப்படுபவை என்னும் பொதுவான குற்றச்சாட்டுக்கு மாறாக ஆழமாக எழுதப்பட்டுள்ள கட்டுரைகள் இவை.
சமஸ் (பிறப்பு: டிசம்பர் 4, 1979) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர், கட்டுரையாளர், பத்திரிக்கையாளர், உரையாளர். ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’, ‘தி இந்து’ தமிழ் ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ’அருஞ்சொல்’ இணைய இதழின் ஆசிரியர்.
தற்போதைய நவீனத்துவ / பின்நவீனத்துவ கட்டமைப்பில் அன்றாட நகர வாழ்க்கையினை வாழும் நாம், மற்ற சமூக மக்களையோ அவர்களின் போரட்டங்களையோ நினைத்து பார்க்க போதிய நேரமும் பொது அறிவும் சிந்தனை ஆற்றலும் இல்லை. கன்னியாகுமரியின் நீரோடியில் தொடங்கி வடசென்னை பழவேற்காடு வரை ஆங்காங்கே ஆசிரியரின் பத்திரிகைப் பயணங்கள் இந்த இடைவெளியினை விவரிக்க முயற்சிக்கின்றன. பாரம்பரிய கடலோடிகள், அன்றாட வாழ்க்கை பற்றிய எதார்த்தங்கள், நவீன தொழில்நுட்ப நிறுவனங்கள் மாற்றும் அந்நிய செலவானியை விரட்டியோடும் அரசாங்கத்தால் ஏற்படுகின்ற அவலங்களைப்பற்றி யோசிக்க வாசகர்களுக்கு வழிகள் கிடைக்கிறது.
எனினும் சில பகுதிகளில் ஆசிரியரின் வியன்புனைவுப் போக்குகளை (Romanticism) உணர முடிந்தது.
"ஒரு வாழ்கையை வெளியிலிருந்து வேடிக்கைப் பார்ப்பது வேறு. அதற்கு உள்ளிருந்து வாழ்ந்து பார்ப்பது வேறு," என்ற வரிகளை படிக்கும் போது உள்ளிருந்து வேடிக்கைப் பார்ப்பது வேறு வாழ்ந்து பார்ப்பது வேறு என்று தான் தோன்றியது.
மற்றபடி கடலோடி மீனவ சமூகங்களைப் பற்றி அறிய இப்புத்தகத்தை ஒரு தொடக்கமாக வைத்து பயனிக்கலாம்.
தமிழ்நாட்டில் கடற்க்கரை முழுவதும் பயணம் செய்து, கடலோடிங்க வாழ்வியல் சிக்கல்களை பற்றி அவர்கள் சொன்ன தகவல் தொகுப்புகளை உள்ளடக்கிய தங்கப்பெட்டகம் கடல்(நீர் நிலம் வனம்) புத்தகம்.
கடல் (நீர் நிலம் வனம்) : கடலோடிகளின் குரல்களில் சில,
மீனவன்னு சொல்லாத - கடலோடின்னு சொல்லு : மீனு புடிக்கறதுங்குறது ஒரு கடலோடிக்குத் தெரிஞ்ச பல கலைகள்ல ஒண்ணு. ஒரு விவசாயியானவன் எத்தன வித்தைங்களையும் தொழில்நுட்பங்களையும் கத்துவெச்சிருக்கான்? அவன வெறும் நெல்லுக்காரன்னு சொல்றது கொச்ச இல்லயா? அப்பிடித்தான் ஒரு கடலோடிய மீனவன்னுவ சொல்லுறதும்.
ஒரு பாரம்பரியக் கடலோடியோட வலைல சின்ன மீன் பட்டா கடல்ல தூக்கி விட்டுருவான். சினை நண்டு பட்டா கடல்ல தூக்கி விட்டுருவான். சங்குப் பூக்கள் உள்ள சங்கு சிக்கினா கடல்ல தூக்கி விட்டுருவான். இதெல்லாம் நாளைக்கி வர்ற நம்ம தலைமுறைக்கு. நாம் அழிச்சிடக் கூடாதுங்கிறது அடிப்படை.
காத்துல பல வகை உண்டு. பெரும் வகை எட்டு. நேர்வாடைக் காத்து, நேர்சோளக் காத்து, நேர்கச்சான் காத்து, நேர்கொண்டல் காத்து, வாடைக்கச்சான் காத்து, வாடைக்கொண்டல் காத்து, சோளக்கச்சான் காத்து, சோளக்கொண்டல் காத்து.
வடக்குலேர்ந்து தெற்கே அடிக்குறது நேர்வாடை. தெற்குலேர்ந்து வடக்க அடிக்குறது நேர்சோளம். கிழக்குலேர்ந்து மேற்கே அடிக்குறது நேர்கொண்டல். மேற்கிலேர்ந்து கிழக்கே அடிக்குறது நேர்கச்சான்.
இந்த ஒவ்வொரு காத்துக்கும் ஒரு குணம் இருக்கும். காத்துக்கேத்த மாரி நீரோட்டம் மாறும். மீன்பாடும் மாறும். காத்தைப் புரிஞ்சுக்காம கடல்ல கால் வெச்சவன், வாக்கரிசியைக் கையிலேயே எடுத்துக்கிட்டுப் போவணும்பாங்க பெரியவங்க.
முத்து குளிக்கும் தொழில் : அது செத்து பல காலம் ஆகுதுங்க. பத்துப் பன்னெண்டு வயசுல கால்ல பத்து கிலோ குளிகல்லைக் கட்டிவிட்டு, கடல்ல தள்ளிப் பழக்குவாங்க. கடலுக்குள்ள எறங்குன வேகத்துல குளிக்கல்லைக் கழட்டிவுடணும். அதாம் மொதப் பயிற்சி. பொறவு சுத்தி கடலுக்குள்ள சுறா, திருக்கை, பாம்புகதிரியுதான்னு கவனிக்கணும். பொறவு முடிஞ்ச மட்டும் மூச்சடக்கிப் பழகணும். பொறவு தரயில துழாவி, கவனமா அரிக்கணும். பொறவு மூச்சு தட்டுற நேரத்துக்கு முன்னால, தண்ணிக்கு மேல வரணும். மூச்சு தட்டுற நேரத்துல வைடூரியமே கிட்ட கெடந்தாலும், யோசிக்காம மேல ஏறிரணும். இப்படியெல்லாம் தயாரானாதான் குளியனாவலாம். எங்க ஐயா காலத்துலயே தூத்துக்குடில முத்துக் குளிக்கிற தொழில் செத்துப்போச்சு.
“தம்பி, காலங்காலமா கடலுக்குப் போவணும்னா, கடலோடி மட்டும்தான் போவ முடியும்னு இருந்துச்சு. சுதந்திரத்துக்கு அப்புறம் மீன்பிடியை அதிகரிக்கணும்னுட்டு அரசாங்கம் நினச்சிது பாருங்க, விசைப்படகு, இழுவை மடின்னு அடுத்தடுத்து கொண்டாந்துட்டுச்சு பாருங்க, யாரு வேணா கடலுக்குப் போவலாம்னுட்டு ஆயிட்டு. இது என்னாயிட்டுன்னா, கடலுக்குள்ள முதலீட்டைக் கொண்டாந்துட்டு. ரெண்டு வர்க்கம் உருவாவுது. ஒண்ணு, பாரம்பரியக் கடலோடிங்க வர்க்கம்; இன்னொண்ணு, தொழில்மொற கடலோடிங்க வர்க்கம். மொத வர்ககம், காலங்காலமா கடலை நம்பி பொழச்சது. ரெண்டாவது வர்க்கம், பண மூட்டையோட கடக்கரைக்கு வந்தது. இந்த ரெண்டாவது வர்க்கம் என்ன பண்ணுச்சுன்னா, காச வெச்சி மொத வர்க்கத்துல தொழில் தெரிஞ்ச ஆளுங்களத் அதன் கைக்குள்ள போட்டுக்கிட்டு. மொத வர்ககம், தன்னோட அன்னாட பொழப்புக்குக் கடலுக்குப் போவுது. ரெண்டாவது வர்க்கம், தன்னோட மொதலீட்ட ரெண்ட நாலாக்கி, நால எட்டாக்கப் போவுது. பணம் மனுசனை வுடுமா? தொரத்துது. எட்ட பதினாறாக்கவும், பதினாற நூறாக்கவும் தொரத்துது. மனுசன் கடல அரிக்க ஆரம்பிச்சிட்டான்”.
கடற்க்கரையில் உள்ள தொழிற்சாலைகள் கரையிலும், கரையில் வாழும் மக்களுக்கும், கடலின் சூழியலுக்கும் ஏற்படுத்தும் துயரங்கள், ஆழ்கடல் ‘டிராலரை’ கரைக்கடலிலும், அண்மைக்கடலிலும் பயன்படுத்துவதால் மாற்றம் காணும் கடல் சூழியல் போன்றவை தொடர்ந்தால் இன்னும் எத்தனை காலம் இந்த பூமியில் மனிதன் வாழமுடியும் என்ற கேள்வி என்னுள் எழுகிறது .
கடலை கடலோடியிடம் விட்டுவிடுங்கள் எனும் வறீதையா கான்ஸ்தந்தின் குரல் காது வழி மனதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. மீனவன்னு செய்தில எழுதுறீங்களே அதுவே தப்பு நாங்கள் கடலோடிகள் என்பவரது குரலை மறுக்கவும் மறக்கவும் இயலுமா. ஒரு நகரத்தாளுக்கு ஒட்டுமொத்த விவசாய நிலத்தையும் விவசாய நிலமாகவும், கடல் சாராத ஆளுக்கு ஒட்டு மொத்த கடலும் ஒரே கடலாகவும் புரிதலுக்குள்ளாக வாய்ப்பிருப்பதும் அதை நாம் அல்லது குறைந்தபட்சம் இந்நாட்டின் அரசு அறியாதிருப்பது எவ்வளவு அயற்சியானது
தமிழக கடற்கரைகளை நம் கண் முன்னே கொண்டு வருகிறது இந்த புத்தகம். நுகர்வு கலாச்சாரத்தின் விளைவாக தமிழக கடல் வளங்களும், அதை சார்ந்த நம் மக்களின் வாழ்க்கையும் எவ்வாறு சுரண்டப்படுகிறது என்பதை அழுத்தமாக சொல்கிறது. தமிழகத்தின் இயற்கை வளங்களைப் பற்றி ஒரு விழிப்புணர்வை கொடுப்பது மட்டுமல்லாமல், நம்மை அவற்றைப் பற்றி மேலும் தேடி படிக்க வைக்கும் புத்தகம் இது.
தம��ழர்கள் அனைவரும் கண்டிப்பாகப் படிக்கவேண்டிய புத்தகம்.
நிலத்தில் மட்டும் அல்ல சமூகத்தின் விளிம்பில் இருக்கும் கடலோடிகளின் (மீனவர்களின்) வாழ்க்கையில் உள்ள சந்தோஷங்கள், சாகசங்கள், துன்பங்கள், நெருக்கடிகள் மற்றும் சமவெளியில் இருக்கும் மக்களுக்கு தெரியாத பல அனுபவங்களை மிக நேர்த்தியாக சேகரித்து எளிய தமிழில் தந்த சமஸ் போற்றுதலுக்கும் பாரட்டுதலுக்கும் உரியவர். இந்த புத்தகம் மீனவ சமூகத்தை சாராத அனைவரும் படிக்க வேண்டிய பொக்கிஷம்.