1931ம் ஆண்டு செப்டம்பர் 22ந் தேதி, ஆந்திர மாநிலத்தில் உள்ள சிகந்தராபாத்தில் பிறந்தவர். இயற்பெயர் ஜ. தியாகராஜன். தமது இருபத்தொன்றாவது வயதில் (தந்தையின் மறைவுக்குப் பின்) குடும்பத்தினருடன் சென்னைக்குக் குடியேறி, ஜெமினி ஸ்டுடியோவில் மக்கள் தொடர்புத் துறையில் பணியாற்றத் தொடங்கினார். அப்போது அகில இந்திய வானொலி நடத்திய ஒரு நாடகப் போட்டிக்காக "அன்பின் பரிசு" என்னும் நாடகத்தை எழுதினார். அதுவே அசோகமித்திரனின் முதல் படைப்பு. 1954ம் ஆண்டு வானொலியில் அந்நாடகம் ஒலிபரப்பானது.
அசோகமித்திரனின் முதல் சிறுகதை "நாடகத்தின் முடிவு". 1957ம் ஆண்டு கலைமகளில் இது பிரசுரமானது. கலைமகளில் அவரது இரண்டாவது சிறுகதை "விபத்து" பிரசுரமானதையடுத்து, மணிக்கொடி கி.ரா. மூலம் ந. பிச்சமூர்த்தியின் அறிமுகமும், அவர் மூலம் "எழுத்து" பத்திரிகைத் தொடர்பும் கிடைத்தது.
சுமார் நாற்பதாண்டு காலத்துக்கும் மேலாகத் தமிழின் மிக முக்கியமான புனைகதை எழுத்தாளர்களுள் ஒருவராக அறியப்படும் அசோகமித்திரன், அமெரிக்கா, சிங்கப்பூர், ஜெர்மனி, இலங்கை ஆகிய நாடுகளுக்கு அழைப்புகளின் பேரில் இலக்கியச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். அவரது பல படைப்புகள், பல இந்திய அயல் மொழிகளில் மொழியாக்கம் பெற்றிருக்கின்றன. அப்பாவின் சிநேகிதர்' என்கிற சிறுகதைத் தொகுப்புக்காக, அசோகமித்திரனுக்கு 1996ம் ஆண்டு சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது.
இக்குறுநாவல் தந்த பாதிப்புகள் அலாதியானது. இந்த கதையின் தலைப்பாக உள்ள இருவர் என்பவர்கள் வாலாவும் தனமும் தான் என என்னுடைய வாசிப்பின் அனுபவத்தில் உணர்ந்தேன். வெங்கடாசலம் வாலாவை திருமணம் புரிவதற்கு முன்பிருந்தே தனத்தின் மேல் காதல் கொண்டவனாக இருக்கிறான். அது காதலா காமமா என்று வாசித்து அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என வாசகனிடமே அசோகமித்திரன் ஒப்படைத்து விட்டார். தன்னுடைய இளம் வயதிலேயே உடல்நிலை குறைவால் வெங்கடாசலம் மாண்டு போகிறார். அதற்குப்பின் வாலாவின் வாழ்க்கை என்னவாக இருக்கிறது என்றும் தனத்தின் வாழ்வு என்னவாக அமைகிறது என்றும் வாலாவுக்கு பிறந்த 'விசு' இவ்விருவர்களுக்கிடையில் எப்படி வாழ்கிறான் என்பது தான் இக்குறுநாவலின் கதை.
இந்த நிலையில் இருக்கும் இவ்விருவரின் வாழ்வு குடும்பத்தாலும் சமூகத்தாலும் சம்பரதாயத்தாலும் எந்த நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் என வாசிக்கும் ஒவ்வொரு அத்தியாயத்திலும் உணரக்கூடும். இதில் வரும் பல உரையாடல்களை வாசிக்கும் போதெல்லாம் உடல் கூச்சம் ஏற்பட்டு மனதை தொந்தரவுக்கு உள்ளாக்கியது. அதேபோல் இருவரும் இழந்த வெங்கடாசலத்தின் இடத்தை அவர்களின் மனம் இருளால் நிறைவு செய்து அவர்களின் வாழ்வை இருளின் பால் சூழ வைத்து வாழ வைக்கிறது. இப்படி வாழ்வது வாழ்வா? என பல கேள்விகள் மனதில் உதிக்கும். இதை எழுதும் போது கூட பல கேள்விகள் உதித்துக் கொண்டே இருந்தது. அதேபோல் விசுவின் செயல்கள் பல தருணங்களில் நெகிழ்வான தருணங்களாக இருந்தது. ஒரு அருமையான குறுநாவல் கண்டிப்பாக தேடி வாசிக்க வேண்டும்.