நூற்றாண்டுகளுக்கு முன்பு வழிகாட்டியாக வயநாடு கானகப் பகுதிகளுக்கு வெள்ளையரை அழைத்துச் சென்ற கரிந்தண்டன் முதல் ஜானு வரையிலான ஆதிவாசி சமூகம் நாகரீக உலகால் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டே வந்திருக்கிறது. ஆதிவாசிகளுக்கு அவர்களது காலடி மண்தான் கருப்பை. வீடு, இடுகுழி. எனினும் அந்த மண்ணில் வாழவும் சாகவுமான அடிப்படை உரிமை பறிக்கப்பட்ட நிலையில் அதைத் திரும்பப்பெற அதிகாரமையங்களுடன் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆதிவாசிகளின் நிகழ்கால உரிமைக் குரலாக உயர்ந்தவர் ஜானு. ஜானுவின் கதை ஒரே சமயத்தில் ஒடுக்கப்பட்ட பெண்ணின் வாழ்க்கையும் புறக்கணிக்கப்பட்ட ஒரு சமூகத்தின் வரலாறும் ஆகும்.
சமூக வலைத்தளத்தில் அறிமுகமாகிய தோழர் ஒருவர் வைத்திருந்த சுயவிவரப்படம் மூலமாக அறிமுகமாகியது இந்நூல். வாழ்க்கை வரலாறு என்றாலே விடுதலைப்போராட்ட வீரர்கள், தலைவர்கள் பற்றியே வாசித்துவந்த நான் முதல் முறையாக ஓர் சமூக செயற்பாட்டாளரின் வாழ்க்கையைப் பற்றி அறிய நேர்ந்தது.இயற்கையும் மரங்களும் மண்ணும் அதிகம் சார்ந்திருந்த வாழ்க்கை வாழும் /வாழ்ந்த தொல்குடியினர் என்று அழைக்கப்படும் மலைவாழ் மக்கள் வாழ்ந்தது ஓர் நிரந்தரமற்ற வாழ்வு. கூடி ஒன்றாக ஒற்றுமையாக இருந்த சமுதாயம், நாகரிகம் வளர்ச்சி என்ற பெயரில் நிலத்தை மட்டுமல்லாது வாழ்வியலையும், வாழ்க்கை சூழலையும் பறிகொடுத்து,சமுதாய விரோதப் போக்கை தங்களது சமுதாயத்தின் இடையே வளர்த்தது தான் சாதனை.
ஜானு சிறுவயதிலிருந்தே கல்வி மறுக்கப்பட்டு, அவர்கள் பறிகொடுத்த நிலத்திலேயே சொற்ப பணத்திற்காக கூலி வேலை செய்து, பின்பு தனது 17ஆம் அகவையில் தொண்டு நிறுவனம் மூலமாக எழுதப்படிக்கக் கற்று, தனது மக்களின் வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் காக்கும் பொருட்டு ஒடுக்கப்பட்ட பெண்களின் உரிமைக்குரலாக , புறக்கணிக்கப்பட்ட ஓர் சமூகத்தின் வரலாறாக நிலைத்து நின்று, பல்வேறு நாடுகளில், ஐநா சபையில் கூட பழங்குடியினரின் உரிமைக்காக குரல் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்.
இவர்களின் நிலையை கூற வேண்டும் என்று சொன்னால் 'கல்யாணம் செய்து கொண்டாலும் இல்லாவிட்டாலும் பண்ணையாரின் நிலத்தில் வேலை செய்ய வேண்டும். அவர்கள் எல்லோரும் வேலை செய்தாலும் வயிறு நிறைய ஏதாவது தின்ன வேண்டுமானால் காட்டுக்குத்தான் செல்ல வேண்டும்'. இவ்வாறு இவர்கள் படிக்காத காரணத்திற்காக, அடிமையாக நடத்தி,தகுந்த கூலியைக் கூட தரமறுத்து , ஏமாற்றி இவர்களின் நிலத்தை கையகப்படுத்தி அவர்களின் நிலத்திலேயே அவர்களைகூலி வேலை செய்ய வைத்த கொடுமையை ஆதிக்க சாதியினர் நிகழ்த்தியுள்ளனர்.
ஜானுவைப்போல பழங்குடியினரின் குரல் தங்களது உரிமைக்காக ஒளித்துக்கொண்டே தான் இருக்கிறது. ஆனால், அவர்களின் உரிமைகளும் உடமைகளும் மீட்கப்படுமா என்பதே கேள்வி. இவர்களை சட்டங்களும், கட்சிகளும், அரசியலும், பொது சமுதாயம் எப்போதும் புறக்கணித்துக் கொண்டேதான் இருக்கிறது. ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்பதைப்போல அடக்குமைறைகளுக்கு ஆளாக்கப்பட்டு, ஒடுக்கப்படவர்களாக, சமுதாயத்தில் பின்தங்கியவர்களாக, இன்றும் உரிமைகளை இழந்து வாழும் அவலநிலையே தொடர்கிறது.