மிதவையில் எனது நோக்கம் ஒரு முகமற்ற இளைஞனைத் தெரியச் செய்வது என்றாலும், ஒருவகையில் அது என் முகத்தோடு பொருந்திப் போய்விட்டது. ஏனெனில் எனக்கென்று ஒரு முகம் கிடையாது. இது எனக்கு ‘மிதவை' எழுதிக் கொண்டிருக்கும்போதே புரிந்தது.... பம்பாயின் இருளைத் துல்லியமாக நான் 'மிதவை’யில் படம் பிடித்துவிட்டேன் என்று விமரிசகர்கள் சொன்னார்கள். பம்பாயைப் பற்றி நான் அறிந்ததில் சொல்ல முடிந்தது. சிறு துளி... நாஞ்சில் நாடன்
நாஞ்சில் நாடன் (பிறப்பு: டிசம்பர் 31, 1947, வீர நாராயண மங்கலம் (கன்னியாகுமரி மாவட்டம்) ) நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளர்களில் ஒருவர். இவரது இயற்பெயர் சுப்ரமணியன். வேலையின் காரணமாகப் பல ஆண்டுகள் மும்பையில் வாழ்ந்தார். தற்போது கோயம்புத்தூரில் வாழ்ந்து வருகிறார். நாஞ்சில்நாடன் நகைச்சுவையும் சமூகவிமர்சனமும் இழையோடும் படைப்புகளுக்காக புகழ்பெற்றவர். தமிழ் மரபிலக்கியத்தில் உள்ள தேர்ச்சி இவரது படைப்புகளில் வெளிப்படும். கம்பராமாயணத்தில் ஆழமான ஈடுபாடு கொண்டவர். தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள் என்ற சிறுகதைத்தொகுதி மூலம் புகழ்பெற்றார். தலைகீழ்விகிதங்கள் இவரது முதல் நாவல். இவரின் மிக முக்கியமான அடையாளம் நாஞ்சில் நாட்டு வட்டார வழக்கிலான எழுத்துநடை. தலைகீழ் விகிதங்கள் நாவலை இயக்குநர் தங்கர்பச்சான் சொல்ல மறந்த கதை என்ற பெயரில் திரைப்படமாக்கி இருக்கிறார். 2010ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது இவரது "சூடிய பூ சூடற்க" என்ற சிறுகதைத் தொகுப்பிற்கு வழங்கப்பட்டது.
மிதவை - நாஞ்சில் நாடன் வேலை நிமித்தமாக வெளிமாநிலங்களிலும், நாடுகளிலும் வாழும் எழுத்தாளர்கள் தங்களை எளிதாக பொருத்திப்பார்க்கக் கூடிய ஒருவர் நாஞ்சில் நாடன். 2010ல் சாகித்ய அகாதமி விருது வழங்கி பெருமைபடுத்தப்பட்ட நல்ல படைப்பாளி. அவருடைய நான்காவது புதினமான "மிதவை"யை சமீபத்தில் வாசிக்கும் வாய்ப்புகிடைத்தது.
**** அறுபதுகளின் பிற்பாதி மற்றும் எழுபதுகளின் தொடக்கத்தில் தமிழ்நாட்டில் வேலை கிடைக்காமல் பம்பாய் சென்று பிழைக்கும் தமிழக கிராமப்புற பட்டதாரி இளைஞனின் நெடுங்கதை மிதவை.
வேலை எனும் பெருங்கனவோடு கிராமத்தில் இருந்து நகரத்துக்கு இடம்பெயரும் இளைஞர்களுக்கே உரித்தான பயத்தையும், கனவுகளையும் கச்சிதமாக பதிவுசெய்வதில் தொடங்கி அவனுடைய எல்லா திண்டாட்டங்களையும் வாசகனுக்கு நுட்பமாக கடத்தியிருக்கிறார். கதை கிராமம், சென்னை, பம்பாய் என பயணித்தாலும். நாம் இதுவரை கேள்விப்பட்டிராத திரைப்படங்களில், ஊடகங்களில் பதிவு செய்யப்படாத நகரங்களின் இருளடைந்த இடங்களையும் அங்கு வாழும் மனிதர்களின் வாழ்வையும் பாசாங்கின்றி பதிவு செய்திருக்கிறார்.
அதுபோல கிராமத்திற்கும், நகரத்திற்குமாக முன்பிருந்த சாதிய பேதங்கள், அரசியல், சாமானியன் எதிர்கொள்ளும் அலுவலக அரசியல், அந்த காலத்து நெருக்கடியான பம்பாய் என எதையும் ஒளிவு மறைவின்றி எழுத்தில் நம் கண்முன் கொண்டுவருகிறார். எ-டு. பம்பாய் போன்ற பெருநகரத்தில் ஒருவன் அன்றாடம் மலம் கழிப்பதற்கு இருந்த சிரமங்களை பட்டவர்த்தமாக பதிவுசெய்திருக்கிறார். இதெல்லாம் நான் தமிழில் இதுவரை வாசித்திராதவை.
உயிரோட்டமான பல மனிதர்களின் நடமாட்டத்தோடு கதை முழுக்க நாஞ்சில் நாடனின் எதார்த்த எழுத்து தெளிந்த நீரோடை போல சீராக ஒடிக்கொண்டே இருக்கிறது. நாஞ்சில் நாடனின் வழக்கமான பகடி கொஞ்சம் குறைவோ என எண்ணத் தூண்டும்படியாக இருந்தது. ஆனால், தொய்வில்லாமல் வாசிப்பவர்களுக்கு அலுப்புட்டாத நடை, எழுத்தில் உள்ள நேர்மை இந்தப் படைப்பை இத்தனை ஆண்டுகளுக்கு (முதல் பதிப்பு-1986) பின்பும் நம்மை ரசித்து வாசிக்கும்படி செய்கிறது.
நற்றிணை பதிப்பகத்தின் மகத்தான நாவல் வரிசையில் பதிப்பித்திருக்கிறார்கள். வாய்ப்பிருந்தால் வாசித்துப் பாருங்கள்.
மிதவை வாசித்து ஏழு ஆண்டுகள் இருக்கும் இன்னும் இரண்டாயிரத்து பதினைந்து வெள்ளத்தின் ஈரம் காய்ந்த பூஞ்சை தன்மீது படர்ந்திருக்க மீண்டும் கையிலெடுத்திருக்கிறேன் புதிதாக வாசிப்பது போலிருக்கிறது சண்முகம் பயணிக்கும் தண்டவாளங்கள் தடதடக்கும் பாதையிலிருந்து மீண்டதனாலோ என்னவோ நெருக்கமான புதினமாக என்னிடமுள்ள மறக்கவே இயலாத புத்தகம் என் பிறப்புக்கு ஓராண்டு முன் முதல் பதிப்பு கண்டது என நேற்றுதான் கவனித்தேன் இக்கதையில் சண்முகம் பட்டப் படிப்பில் இரண்டாவதாக வந்து வெற்றி பெற்றதை விவரிக்கும் இடத்தில் "மனம் தண்ணீரில் சிறகு முக்கிப் படபடத்தது" என்றொரு சொல்லாடல் எழுதப்பட்டிருக்கும் அதை இரண்டு நாட்களாக கடன் வாங்கியிருக்கிறேன் முதலில் வாசிக்கும் போது என்ன உணர்வில் இருந்தேன் என்பதை எண்ணினால் ஓரிரு காட்சிகளைத் தவிர்த்து எதுவும் நினைவுகளில் வர மறுக்கிறது சின்னதாக ஒரு குறிப்பு எழுதிய ஞாபகம் அதைத் தேடிப் பார்க்க வேண்டும் வேலையில்லா பட்டதாரிகள் இல்லாத காலமென்று ஏதேனும் உண்டா ஒருவேளை பட்டதாரிகள் இல்லாத காலத்தில் இருக்கலாமோ அங்கும் உணவுக்கும் உடைக்கும் எதற்கும் போராடவேண்டிய சூழல் எப்போதும் இருக்கத்தான் செய்யும் போல. எழுத்தாளர் நாஞ்சில் நாடன் சொல்லாடலில் நிகழ்வுகள் எவ்வித மிகைப்படுத்தலுமின்றி அதற்கான சித்திரங்களை கண்முன் நிறுத்துவதும் உணர்வுகளை நம்முள் கடத்துவதும் இயல்பாக இருக்கிறது.
வாழ்வை ஒருவித விமர்சனப் பார்வைக்குள் புகுத்தி தன்னைத் தானே விடுவித்துக் கொள்ளும் முனைப்புடன் நகரும் கதையில் வழிநெடுக ஊடாடும் மனித வாழ்வினை எள்ளலுடன் நடைபாதையில் இருந்து விலகி அதனை பார்க்கச் சொல்லும் சொற்கள்.
மிதவை முதல் வாசிப்பின் போது எழுதிய சிறு குறிப்பு இந்த சுட்டியில்
80'களின் பிற்பகுதியில் பொறுப்புகளையும் கனவுகளையும் சுமந்து கொண்டு நகரங்களை நோக்கி பயணிக்கும் முதல் தலைமுறை பட்டதாரிகளின் பாடுகளை, மகிழ்ச்சியை, ஏக்கங்களை படிக்கும் போது நாம் உணரலாம். நகரங்களில் இன்னும் சண்முகங்கள் பல பெயர்களில் நிறைந்து வாழ்கிறார்கள். பம்பாயின் புளுக்கத்தையும், வெக்கயையும் படிக்கும் போது உணரமுடியும் 🥺. சண்முகத்தின் வெற்றிக்காக நீங்கள் ஏங்குவீர்கள். அவனின் அனைத்து உணர்வுகளையும் நீங்கள் உணர்வீர்கள்.
நகரங்கள் கிராமங்களை நினைவு படுத்திக்கொண்டே இருக்கின்றன.
நாஞ்சில் நாடனின் புத்தகங்கள் என்றுமே படிக்கத் திகட்டாதவை. படித்துவிட்டு வேலை இல்லாமல் சொந்தங்களால் அலட்சியப்படுத்தப் படும் இளைஞன், மும்பை மாநகருக்கு வேலை கிடைத்துச் சென்று, அங்கிருக்கும் அவல நிலையில் எப்படி வாழ்கிறான் என்று மிக சுவாரஸ்யமாக எழுதியுள்ளார். முடிவை இன்னும் நன்றாக வருமாறு எழுதி இருக்கலாம்.