Jump to ratings and reviews
Rate this book

ரமலோவ்

Rate this book
ரமலோவ்’ தமிழில் வேறு எதனோடும் ஒப்பிட முடியாத தனித்த மொழியின் பெரும் சாகச நிகழ்வு. கடல் அதனோடு வாழ்பவர்களுக்கு இடையறாத கனவுகளின் பெருவெளி. கடல் தன் குடிமக்களை அவர்களின் உள்ளுணர்வின் வழியே ஆள்கிறது. தொன்மங்களின் மூலம் வழி நடத்துகிறது. அதன் தீராத அற்புதங்களை இந்த நாவல் கவித்துவத்தின் உச்சத்தில் நின்று நிகழ்த்துகிறது. சரவணன் சந்திரனின் ‘ரமலோவ்’ மேஜிக் ரியலிச எழுத்து வகைமையின் ஒரு அசலான படைப்பாக்க முன்மாதிரியை உருவாக்கியிருக்கிறது. மிகமிகச் சீரான, துல்லியமான எழுத்து நடையில் அதீதமான புனைவுகளின் எல்லையை எந்தக் குழப்பமும் இல்லாமல் தீண்டுவது பெரும் சவால். பலரும் தோற்ற இடம் அது. சரவணன் அந்தச் சவாலில் பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறார். கிறிஸ்துவைப்போல ரமலோவ்வின் பிறப்பும் சந்தேகங்களுக்கு உரியதாக இருக்கிறது. அதிலிருந்துதான் அவனது எல்லா அற்புதங்களும் பிறக்கின்றன. எல்லா தொல்மரபு வீரனுக்கும் கிறிஸ்துவின் சாயல் இருக்கிறது. மனுஷ்ய புத்திரன்

Paperback

Published January 1, 2025

About the author

Saravanan Chandran

19 books33 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
1 (25%)
4 stars
1 (25%)
3 stars
0 (0%)
2 stars
1 (25%)
1 star
1 (25%)
Displaying 1 of 1 review
Profile Image for Moulidharan.
97 reviews19 followers
December 2, 2025
கற்பனையில் கரைந்து காணாமல் போன கதையின் கதை

 

நவீன தமிழ் இலக்கியத்தில் எழுதப்பட்ட படைப்புகளுள் முற்றிலும் மாறுபட்ட ஒன்று ரமலோவ் .குடும்ப உறவுகளின் சிக்கல்களையும் , மனித மனங்களின் வேறு வேறு பரிணாமங்களையும் , சமூகம் சார்ந்த இன்னல்களையும் தொடர்ந்து கருப்பொருளாக கொண்டு இயங்கிவரும் நம் தமிழ் இலக்கியத்தில் பரிசோதனைகளுக்கான இடம் மிகக்குறைவாகவே இருந்து வந்துள்ளது . உரைநடையின் வடிவத்தில் வேண்டுமானால் புது புது முயற்சிகளும் முன்னெடுப்புகளை ஆங்காங்கே காணப்பட்டாலும் , கருப்பொருளில் பரிசோதனை செய்யும் முயற்சி அரிதாகவே நிகழ்ந்துள்ளது என்றுதான் நினைக்கிறன் . அதனடிப்படையில் சரவண சந்திரன் அவர்களின் துணிச்சல்மிக்க இந்த முதல் அடிக்கு வாழ்த்துக்கள் .

 

ரமலோவ் ஒரு மேஜிக்கல் ரியலிசம் நாவல் என்று மனுஷ் அவர்கள் முன்னுரையில் ஒரு அடையாளத்தை இந்த நாவலுக்கு கொடுத்தாலும் , நாவலை வாசித்து முடித்த பிறகு இதனை அதன் அடிப்படையில் ஒத்துக்கொள்ள மனம் ஏனோ மறுக்கிறது . மாறாக இதனை தமிழில் எழுதப்பட்ட ஒரு மிகு புனைவு நாவல் என்று ஏற்றுக்கொள்ளலாம் . இத்தகைய களத்தில் ஆசிரியருக்கு முழு சுதந்திரம் உண்டு . நிலம் - அதை சார்ந்த மனிதர்கள் - அவர்களின் உணர்ச்சி வெளிப்பாடு என அனைத்திலும் ஆசிரியர் ஒரு பரந்து விரிந்த கற்பனை தளத்தில் நாவலை விரிந்துகொண்டே போகலாம் , எங்கும் யாருக்கும் எந்த ஒரு விளக்கமும் கொடுக்கவேண்டும் என்ற அவசியமும் இல்லை . மேலும் இதன் மேல் யதார்த்தம் என்ற கோட்பாட்டின் வழி எழும் கேள்விகளுக்கு இடமேயில்லை . ஏனெனில் இந்த கதை நாம் இதுவரை கண்டு கேட்டிராத ஒரு நிலப்பரப்பிலும் - பண்பாட்டிலும் நிகழும் வண்ணம் ஆசிரியர் இதனை வடிவமைத்துள்ளார் . இது முழுக்க முழுக்க கற்பனையே என்பதை கதையை நமக்கு சொல்லாமல் சொல்லிவிடுகிறது . இதனை வாசிக்க தொடங்கிய சில பக்கங்களுக்கு என் மனம் யதார்த்த புள்ளிகளை கதைகளின் உள்ளே தேடிக்கொண்டேயிருந்தது ,ஆனால் பாதி புத்தகத்தை தாண்டிய பின்னர் நாம் எதிர்பார்ப்பது தவறு எனவும் இந்த கதையை முழுக்க முழுக்க கற்பனையான ஒரு தளத்தில் நின்று மட்டுமே வாசித்து உள்வாங்கிக்கொள்ள வேண்டும் என்றும் என் மனதை அசுவாசப்படுத்திக்கொண்டு வாசிப்பை தொடங்கினேன் . அதன் பின்னர் கப்பாங்கும் - செம்படவர்களும் - அந்த கடலும் என் கண்களுக்கு துல்லியமாக புலப்பட தொடங்கிவிட்டதை நான் உணர்ந்தேன் .

 

கனவுகள் தான் இந்த புனைவுலகின் பிரதானம் . கனவுகள் இல்லாத மனிதனை காண்பது அரிது . கனவுகள் மனிதனுக்கு ஏன் தேவைப்படுகிறது ? கனவுகள் நிஜமில்லை என்று அறிந்திருந்தும் மனிதன் ஏன் கனவுகளை தன் நினைவுகளில் எப்பொழுதும் மீட்டெடுக்கவும் , சேமித்துவைத்துக்கொள்ளவும் தொடர்ந்து முயன்றுகொண்டேயிருக்கிறான் . கனவுகள் எப்பொழுதும் கடந்த காலத்தையோ - நிகழ் காலத்தையோ ஒருவருக்கு காட்டுவதில்லை மாறாக தன் மனதையும் நினைவையும் சுற்றித்திரியும் எதிர்காலம் பற்றிய சாத்தியக்கூறுகளையே கனவுகளாக நமக்கு படம் போட்டு காட்டுகின்றன . ஒரே மனதிலிருந்து தோன்றினாலும் மனிதன் சில கனவுகளை நிகழ்ந்துவிட  என்றும் சிலவற்றை நிகழ்ந்துவிடக்கூடாது என்றும் நினைத்துக்கொள்கிறேன் . கனவுகள் எங்கோ வெளியில் இருந்து அவனுக்குள் புகுந்துகொள்வதாக நினைக்கிறன் ,ஆனால் அவன் தான் அவனுடைய கனவுகளுக்கான  தொழிற்சாலை என்பதை உணர மறுக்கிறான் . இந்த புனைவுலகிலும் இரண்டு கனவுகள் தான் ஒட்டு மொத்த கதைக்கும் அச்சாணி . ரமலோவ் - இரண்டு கனவுகளின் சங்கமம் என்று சுருக்கமாக கூறலாம் . கடற்கரை பண்பாட்டின் காப்பாங் இனத்தின் கடல் மெய்ஞ்ஞானியான ஆந்திரேயனின் கனவும் - மலை வாழ் பண்பாட்டின் இளம் பெண்ணான எப்சி -யின் கனவும் எதிரெதிர் திசையில் தோன்றினாலும் அவையிரண்டும் இணையும் புள்ளியாக கதையின் முடிவு அமைந்தது சிறப்பு.

 

ஆந்திரேயனின் கனவுலகம் தொட்டு நிஜவுலகம் வரை விரிவாக கதையில் இடம்பெற்றது போல எப்சியின் கனவுலகமும் நிஜவுலகமும் இடம்பெற்றிருந்தால் கதைக்கு கூடுதல் பலமும் , வாசகனுக்கு கூடுதல் புரிதலும் ஏற்பட்டிருக்கும் . எப்சியின் உலகம் ஒரு அத்தியாயத்திற்குள் சுருக்கியதுடன் , எப்சியின் நினைவுகள் அதன்பிறகான எந்த அத்தியாயத்திலும் இடம்பெறாததால் இறுதி அத்தியாயத்தில் திடீரென கதை எப்சியின் உலகத்தை தொடும்பொழுது எப்சியின் உலகத்தை கிட்டத்தட்ட மறந்துவிடும் நிலை வாசகனுக்கு ஏற்படலாம் . சுருக்கமாக சொல்வதானால் கதையின் நாயகன் ரமலோவுக்கு கொடுக்கப்பட்ட இடம் எப்சிக்கும் கொடுத்திருந்தால் கதையின் வீச்சு சற்று சிறந்ததாக அமைந்திருக்கும் .

நிலம் கதையில் காத்திரமாக பதிவுசெய்யப்பட்ட அளவிற்கு காலம் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுகிறது . கடலின் பருவநிலை மாற்றங்கள் - கடலோடிகளின் வாழ்கை முறை - கடல்வாழ் உயிரினங்களோடு அவர்களுக்கு இருக்கும் பிணைப்பு - வெளிஉலகத்திலிருந்து துண்டிக்கப்பட்ட ஒரு வாழ்வு - சக பண்பாட்டு நிலத்தவருடனான நட்பும் பகையும் - மூத்தோரின் அறிவுரைகள் - மூதாட்டிகள் காமம் கலந்த எள்ளலும் பகடியும் - இளையோரின் துள்ளலான மனநிலை - பருவ பெண்களின் அந்தரங்க உரையாடல்கள் என இவையனைத்தும்  அந்த நிலத்தை நமக்கு அருகில் கொண்டுவருகிறது . ஆனால் , காலம் மட்டும் இறுதிவரை பிடிபடவில்லை .ஒரு பக்கம் பண்டமாற்று முறை சொல்லப்படுகிறது , மறுபக்கம் வியாபாரிகள்  மீனவர்களுக்கு முன்பணம் கொடுக்கிறார்கள் , வெளியுலக சந்தையின் அழுத்தமும் சொல்லப்படுகிறது , இப்படி காலம் அங்கும் இங்கும் பதிவுசெய்யப்பட்டாலும் மொத்த கதைக்கும் ஒரு காலம் நிர்ணயிர்த்திருந்தால் கதை இன்னும் உயிர்ப்புடன் இருந்திருக்கும் . கற்பனைக்கு காலம் எதற்கென்று கேள்வி எழுமாயின் வெளியுலக தொடர்பு முற்றிலுமாக தவிர்க்கப்பட்டிருக்கவேண்டும் . வியபாரிகளின் மூலம் வெளியுலக தொடர்பு கதையில் முக்கிய பங்கு வகிப்பதால் காலம் கதைக்குள் ஆசிரியரையும் மீறி நுழைந்துவிடுகிறது .

 

ரமலோவ் நாவலில் பெண் பாத்திரங்கள் இரு வேறு நிலைப்பாடுகளில் ஆசிரியர் பயன்படுத்தியுள்ளார் . வேறு நிலத்து பெண்ணை ஏற்க மறுத்து , மெத்தாயின் கடலைநோக்கிய பயணத்தை குலமிறல் என்று தூற்றும் அதே மக்கள் தான் கதையின் முடிவில் மேகக்கூடங்களின் ஊடாக தோன்றும் அவளின் உருவத்தை தெய்வமாக வழிபடுகின்றனர் . பெண்களை கடலிற்குள் அனுமதிக்காத சமூகம் கடல் கன்னியான ஒரு பெண்ணைத்தான் அதிர்ஷ்டமாக எண்ணி கதை முழுக்க காத்துக்கிடக்கின்றன . ஆந்திரேயன் - அல்பி என்று ஆண்களுக்கு மட்டுமே கடலை பற்றி நன்கு தெரியும் என்றும் அவர்களை கடலின் மெய்ஞானிகளாக போற்றும் மக்கள் அதே ஊரில் கடலை அதன் கரைகளில் இருந்தே உற்றுப்பார்த்து பருவமற்றங்களை கணக்கிடும் மூதாட்டிகளான சிமிக்கிரியையும் - அம்மாயிங்கயும் ஏனோ மெய்ஞானிகளாக ஏற்றுக்கொள்ள மறுக்கிறது . எமிலி கதையின் தோன்றிய தருணம் இவள்தான் ராமலோவுடன் சேர்ந்து இந்த கதையை தூக்கி சுமக்க போகிறாள் என்ற பெரும் நம்பிக்கையை நமக்குள் விதைத்து , ஒரு சிறு குழந்தையாக ரமலோவிற்கு தன் மடியில் அமர்த்தி பால் கொடுப்பது போல பாவிக்கும் கவித்துவமான ஒரு காட்சிக்கு பிறகு அவள் தான் ரமலோவை அந்த உலகிற்கு அடையாளம் காட்டுவாள் என்று எதிர்பார்த்திருந்த நேரத்தில் அவளை காமத்தீயில் வாட்டி வதைத்து ஒரு அற்புதமான கதை மாந்தரை இறுதியில் கூட்டத்தோடு வேடிக்கை பார்க்கும் ஒருத்தியாக நிற்கவைத்து , இறுதி பக்கத்தில் அவளும் எதிர்காலத்தில் வல்லத்தில் ஏறி ஒளியை தேடுவாள் என்று முடித்து சற்று செயற்கையாக தோன்றியது . எமிலி - எப்சிக்கு பதிலாக உண்மையான பேரொளியாக ஒளிர்ந்திருக்க வேண்டிய ஒரு பெண் .

 

கதையின் நாயகன் ரமலோவ் - இன் கதாபாத்திரம் வடிவமைத்த விதம் என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது . ஆந்திரேயன் - மெத்தாய் தம்பதியின் குழந்தை தான் ரமலோவ் என்பதை நம்மால் முன்னரே யூகிக்க முடிந்தாலும் , ரமலோவ் பிறக்கும் இடமும் அந்த சூழலும் தான் இந்த கதைக்கு மிகு புனைவு அந்தஸ்த்தை முதலில் கொடுத்து இந்த படைப்பு அடுத்து பயணிக்கவிருக்கும் பாதையை உறுதிப்படுத்துகிறது . அதற்கடுத்த சில அத்தியாயங்கள் அல்பியின் கனவின் வழியே நமக்கு காட்டப்படுவது வெகு சாமர்த்தியம் . தன்னை தந்தையாக உணரும் மெத்தாய் அதற்கு தரும் விளக்கம் கதையின் உச்ச வரிகளில் ஒன்று . " உடைமையுணர்வை துறந்துவிட்டால் எதுவாகவும் ஆகலாம் " . தன் மகனுக்கு முதன் முதலாக தாய்ப்பாலுக்கு பதிலாக கடலின் ஒரு சொட்டை கொடுக்கும் ஒரு தாயின் காட்சி இதுவரை இலக்கியத்தில் பதிவுசெய்யப்படாத ஒரு கற்பனையின் உச்சம் . துள்ளுகிற மீனை கரங்களில் பற்றி கடித்துண்ணும் ஒரு குழந்தையும் - பிறந்தவுடன் வல்லத்தில் எழுந்து நிற்கும் குழந்தையும் - மூத்த ஆமையின் முதுகில் அமர்ந்து கரைசேரும் ஒரு குழந்தையும் அல்பி தன் கனவில் பார்த்தாலும் நாமோ அதனை நம் கண்களில் பார்ப்பது போலவே தோன்றுகின்றன . கதையின் நாயகனாக - தலைப்பிற்கு சொந்தக்காரனாக திகழும் ரமலோவ் - ஐ சுற்றியே கதை நகர்ந்தாலும் , ரமலோவின் எதிர்வினையற்ற செயல்பாடு கப்பாங் மக்களை போல நம்மையும் உறுத்துகிறது . ஆனால் , ரமலோவோ தன் தாயின் வாக்கின் படிதான் நடக்கிறான் என்பது மெல்ல நமக்கு தெரியவரும்போது அந்த கதாபாத்திரத்தின் வடிவமைப்பிற்கு ஆசிரியர் நியாயமாக நடந்துள்ளார் என்பதை ஏற்றுக்கொள்ளமுடிகிறது . உடமையற்றவனாக இரு - உன் காலத்திற்காக காத்திரு - கடலே உனக்கான காலத்தை காண்பிக்கும் அதுவரை கடலை உற்றுநோக்காதே கடலிடம் சென்று சேராதே என்ற மெத்தாயின் வாக்கை அடித்தவறாமல் பின்பற்றுகிறான் ரமலோவ். அதே நேரத்தில் தந்தையின் கனவு அவனுக்குள்ளும் சஞ்சரித்துக்கொண்டே இருந்திருக்கிறது . அதனால்தான் அவன் பிறந்த அந்த புயலின் கண்ணிற்குள் சென்று தன் தந்தை கனவில் கண்ட அந்த மலையின் உச்சியில் ஒளியாக இருக்கும் எப்சியை கண்டடைந்து அவளை கடல் கன்னியாக மீட்டெடுத்து கப்பாங்கை அழிவிலிருந்து காப்பாற்றுகிறான் . ரமலோவ்  தான் காப்பாற்ற போகிறான் என்பது தெரிந்திருந்தாலும் அந்த பாதை நமக்கு ஆச்சர்யத்தை கொடுக்கிறது . எனினும் , ரமலோவ் கதை நெடுக அமைதி காப்பது ஒரு நடுநாயக கதாபாத்திரத்திற்கு ஏற்புடையதாக இல்லை . உரையாடல்களிலோ - அல்பியுடனான உறவிலோ - எமிலியுடனான நெருக்கத்திலோ ரமலோவ் இன்னும் கொஞ்சம் உயிர்ப்புடன் இருக்கும்படி ஆசிரியர் அனுமதித்திருக்கலாம் . அப்படி செய்திருந்தால் ரமலோவ் மறக்க முடியாத நாயகனாக மாறியிருப்பான் .

 

கதையில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்களும் கற்பனையான ஒன்றாக உள்ளதால் நம் மொழியிலுருந்து தள்ளி நிற்பதால் வாசிப்பின் ஓட்டத்தில் மனதில் பதிய மறுத்து அந்நியப்பட்டு நிற்கிறது . ஏனோ ஒரு மொழிபெயர்ப்பு வாசிப்பினை போன்ற உணர்வை கொடுத்துவிடுகிறது .  கதை பெரும்பாலும் கடலிலும்  அதன் கரையிலும் மட்டுமே சுழல்கிறது . மக்களின் பண்பாட்டு வெளிக்குள்  கதை செல்லவில்லை . மக்களின் குடிலுக்குள்ளும் , வாழ்க்கை முறைகளுக்குள்ளும் , தினசரி வழக்கங்களுக்குள்ளும் , தொழிமுறைகளுக்குள்ளும் கதை ஊடுருவி செல்லவில்லை .  இதில் உவமைகளுக்காக உபாயயோகப்படுத்தப்பட்ட மீன்களின் பெயர்களும் ,அதன் குணாதிசயங்களும் ,அதனை சார்ந்த மக்களின் புரிதல்களும் என கதைக்காக ஆசிரியரின் ஆராய்ச்சியின் உழைப்பு தென்படுகிறது . இதன் நீட்சியாக அம்மக்களின் பண்பாட்டு வெளிக்குள்ளும் அந்த ஆராய்ச்சி நீண்டிருந்தால் கதை நிச்சயம் தடம் பதித்திருக்கும் . கதையின் முடிவில் வரும் அந்த ஏழு நாள் கடல் விழா இந்த பண்பாட்டு வெளிக்கான ஒரு நுழைவாயிலை போல தோன்றியது  . ஏனெனினும் அவை மேலோட்டமாக கடந்து விட்டது போன்ற உணர்வுதான் ஏற்பட்டது . இன்னும் சற்று ஆழமாக , கூடுதல் நுணுக்கங்களுடன் , கூடுதல் விவரினைகளுடன் , வரலாறு சார்ந்த படிமங்களுடன் அந்த விழா விவரிக்கப்பட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் .

 

சில நாவல்களின் ஒரு சில காட்சிகள் நம் மனதில் நீங்காமல் நின்றுவிடுவதோடு , மீண்டும் மீண்டும் நம் நினைவுகளின் ஓடைகளில் நீர்குமிழிகளாக மேலெழுந்துகொண்டே இருக்கும் . அப்படி ஒரு காட்சி இந்த நாவலிலும் உள்ளது . எமிலி ரமலோவ் மேல் உள்ள ஆசையின் பொருட்டு நிகழ்த்தும் அந்த மாந்த்ரீக செயல்களுக்கு முன் தன்னுடைய அழகை பேரழகை தானே உணரும் தருணம் .தன் தந்தை கொண்டு வந்த தூரதேசத்து குவியாடி - அந்த கப்பாங்கிலே இருக்கும் ஒரே ரகசிய குவியாடி அது . அதன் முன்னே தன்னுடைய முழு உடலின் அழகினை அங்குலம் அங்குலமாக தொட்டு பார்த்து உணரும் தருணம் ,அதே நேரத்தில் அந்த பூரிப்பில் உச்சத்தை தன் முகம் காட்டிக்கொடுத்துவிடும் என்றும் அதனை ரமலோவ் இன் கண்களில் வழி மட்டுமே தான் முதலில் காணவேண்டும் என்று முகத்தை மட்டும் பாராமல் அந்த பூரிப்பை உள்ளதினால் உணர்ந்து அந்த குவியாடியின் முன் நிற்கும் எமிலி நிச்சயமாக இலக்கியத்தில் படைக்கப்பட்ட பேரழகிகளுள் ஒருத்தி தான் .

 

பெண்களும் - பிம்பம் தாங்கிய கண்ணாடிகளும் இலக்கியத்தில் எழுதி எழுதி தீராத இரு துருவங்கள் . இவ்விரண்டு துருவங்களை எதிரே எதிரே நின்று பார்த்துக்கொள்ளும் தருணங்கள் நிஜத்தை காட்டிலும் கதைகளிலும் கவிதைகளிலுமே அதிகமாக நிகழ்த்தப்பட்டிருக்கின்றன . நிஜத்தில் அதற்கான வாய்ப்பும் , வசதியும் , சுதந்திரமும் , வலிமையையும் இந்த உலகம் அவர்களுக்கு கொடுப்பதில்லை . உலகம் கொடுக்காத ஒன்றை இலக்கியம் அவர்களுக்கு அள்ள அள்ள குறையாமல் கொடுத்துக்கொண்டே இருக்கிறது இந்த ரமலோவ் வரை . அதிலும் தன் முழு உடலை ஆடையின்றி ரசிக்கும் ஒரு பெண்ணின் உணர்வை ஒரு ஆணாக நம்மால் புரிந்துகொள்வது கடினம் .அந்த ரகசியம் அறிந்தவர்கள் அவளும் அந்த பிம்பம் தாங்கி நிற்கும் கண்ணாடி மட்டுமே . அவர்கள் வேறு உலகத்திற்குள் அத்தருணத்தில் சஞ்சரிக்கின்றார்கள் அங்கு காலமும் நிலமும் அற்ற ஒரு வெளி உருவாகி உரையடலற்ற மௌனமான உணர்ச்சிகளுக்கு மட்டுமே இடமுண்டு . அத்தகைய ஒரு தருணத்தை தான் சரவண சந்திரன் எமிலியின் மூலம் இங்கு நிகழ்த்திப்பாத்திருக்கிறார் .

 

ரமலோவ் ஒரு superhero வா என்றால் ? heroism இல்லாத ஒரு superhero என்றுவேண்டுமானால் கூறலாம் .  ஒரு மாறுபட்ட வாசிப்பனுபவத்திற்கான படைப்பு இந்த ரமலோவ் . ஒரு கிளாசிக் ஆக மாற ரமலோவ் எங்கு தவறியது . நாவலின் கதாபாத்திரங்களின் உடல்மொழி பெரிதாக நாவலில் இடம்பெறவில்லை . கதையின் முக்கிய கதாபாத்திரங்களாக உருவெடுத்திருக்க வேண்டிய மாந்தர்கள் ஒரு  அத்தியாயங்களுக்குள் சுருங்கிவிட்டனர் . கதையை தூக்கி சுமக்க வேண்டிய ரமலோவ் பேரமைதி காப்பது சற்றே ஏமாற்றம் அளிக்கிறது . கதையின் மையமான அல்பி யின் கதாபாத்திரம் கதையின் முடிவில் வெகு சாதாரணமாக முடிந்து ஏற்புடையதாக இல்லை . கடல்வாழ் உயிரினங்கள் பற்றிய ஆழமான பார்வையை சற்று கரையின் மேல் காலம் காலமாக வாழ்ந்து  வந��த அந்த காப்பாங் இன மக்களின் வாழ்க்கை முறையையும் கூறியிருந்தால் நாவல் வேறு தளத்தில் விரிந்திருக்கும் . மற்றபடி ரமலோவ் எளிமையன மொழி நடையில் கற்பனையான கதை களத்தில் மாறுபட்ட ஒரு வாசிப்பனுபவத்தை கொடுக்க தவறவில்லை .இந்த புத்தகத்தின் மூலம்  கண்களை மூடி ஒரு சில மணிநேரங்கள் நாம் அந்த காப்பாங்கின் கடற்கரையில் இளைப்பாறலாம் .

 

இர.மௌலிதரன் 

26-11-25

இரவு 7.47
Displaying 1 of 1 review

Can't find what you're looking for?

Get help and learn more about the design.