அழகிய பெரியவனின் இந்தக் கட்டுரைகள் நாம் வாழும் காலத்தின் அவலங்களையும் அநீதிகளையும் பற்றியவை. சமூகத்தின் இருண்ட பிரதேசங்களில் வெளிச்சம் பாய்ச்சுவதன் மூலம் நம்மை நிம்மதியிழக்கச் செய்பவை. ஓடுக்கப்பட்டவர்களின், மறுக்கப்பட்டவர்களின் நியாயங்களை, நேரடியாக கத்திமுனை போன்ற வாதங்களால் அழகிய பெரியவன் இக்கட்டுரைகளில் நிறுவுகிறார்.
அழகிய பெரியவன் (Azhagiya Periyavan) தமிழ் இலக்கிய உலகின் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவர். நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை எனப் பல தளங்களில் இயங்குகிறார். தெளிந்த அரசியலோடு, தலித் மக்களின் பிரச்சினைகளை எழுதும் படைப்பாளிகளில் முக்கியமானவராக விளங்குகிறார். அழகிய பெரியவன் சிறந்த மேடைப் பேச்சாளரும் ஆவார். ‘தகப்பன் கொடி’ புதினத்திற்காக 2003 ஆம் ஆண்டில் தமிழக அரசின் விருது பெற்றவர். அரசுப் பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணிபுரிகிறார். முன்பு இவர் முழுநேர எழுத்தாளராக இயங்கினார்.
அழகிய பெரியவன் எழுதிய 'பெருகும் வேட்கை' கட்டுரைத் தொகுப்பு குறித்து சொல்வதற்கு பல விஷயங்கள் இருந்தாலும், இது அவசியம் படித்தாக வேண்டிய புத்தகம் என்பதை முக்கியமாய் சொல்ல விரும்புகிறேன். தனக்கு பிடித்த எழுத்தாளர் என்று கனிமொழி அவர்களும், அட்டகாசமாய் எழுதி வருகிறார் என்று சாருவும் அவர்களது எழுத்தில் குறிப்பிட்டதின் பின்பே அழகிய பெரியவன் குறித்து நான் அறியலானேன். இந்தப் புத்தகம் சுஜாதா-உயிர்மை விருதும் வாங்கியது. புத்தகத்தில் மொத்தம் 22 கட்டுரைகள். பெரும்பாலானவை கல்வியைப் பற்றியும், ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றியும் பேசுபவை. இக்கட்டுரைகளில் முன்வைக்கப்படும் விஷயங்கள் உணர்வுப்பூர்வமாக இல்லாமல், அறிவுப்பூர்வமாகவும் ஆதாரத்துடனும் இருப்பதுதான் இந்நூலின் சிறப்பம்சம். நம் உள்ளொளியை தீண்டாமல் நம் அறிவை தீண்டுபவை அழகிய பெரியவனின் எழுத்துக்கள்.