'பத்ரிக்கு வேலை கிடைக்க வேண்டுமே' என்று அம்மா காத்துக் கொண்டிருந்தாள். பட்டப்படிப்பு முடித்து பத்ரி மூன்று வருடங்கள் வீட்டில் இருந்து விட்டான். இத்தனைக்கும் முதல் வகுப்பு மாணவன். சகலமும் தெரிந்தவன். அபார புத்திசாலி. ஆனாலும் பத்ரிக்கு ஏனோ வேலை மட்டும் கிடைக்கவே இல்லை! முதல் ஒரு வருடம் அது பாதிக்கவில்லை! அடுத்து வந்த நாட்களில் அது மிக பலமாகத் தாக்கியது. காரணம் அப்பா இல்லாத வீடு! பத்ரி மூன்றாவது வருடம் பட்டப்படிப்பில் இருக்கும் போது அப்பா இறந்து போனார். அவர் சுமாராக சம்பாதித்தார். சேமிப்பு எதுவும் இல்லை. கடனுடன் குடும்பம் அக்கா தலையில் வந்து உட்கார்ந்தது! அக்கா சாவித்ரிக்கும் பத்ரிக்கும் ஆறு வயது வித்யாசம்.