“வாழ்க்கையை போராட்டம் என வர்ணிப்போர் உளர். எனக்கோ: போராட்டமே வாழ்க்கையாகிவிட்டது”. இதைவிட அவரது வாழ்வைப் பற்றி தெளிவாகச் சொல்லிவிட முடியாது. உலக வரலாற்றோடு தன் வரலாற்றையும் சொல்லிக் கொண்டு வரும் முறை மிக அழகு. தேர்வு பயம், இந்தி எதிர்ப்பு, சிறை அனுபவங்கள், முரசொலி, தேர்தல் அரசியல், இலக்கியம் என்று பல பரிமாணங்கள். எனக்கென்னவோ அறிஞர் அண்ணா அவர்கள்தான் இந்த முதல் பாகத்தைப் பொருத்த வரைக்கும் நாயகர் என்று தோன்றுகிறது. அவர்மீது தமக்கிருந்த பற்றையும் பாசத்தையும் நம் மீதும் பற்ற வைத்து விடுகிறார் கலைஞர். தமிழ்நாட்டின் பொற்காலம் 1967-இல் தொடங்கிடும் போது ஆட்சியமைக்கக் கோருவதற்காக ஆளுநர் மாளிகைக்குச் செல்லும் அண்ணனும் தம்பியும் கையில் என்ன கொண்டு போனார்கள் தெரியுமா?