"வந்தார்கள் வென்றார்கள்" - மதன்
*********************************
"வந்தார்கள் வென்றார்கள்" தொடர் "பாபர் மசூதி" இடிப்புக்கு பிறகு ஜூனியர் விகடனில் எழுதப்பட்டதாக, இப்புத்தகத்தின் முன்னுரையில், "விகடன்" தலைமை ஆசிரியரான திரு எஸ். எஸ். பாலசுப்ரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
போலவே, சரித்திரத்தை ரசனையான நடையில், போர்களை பற்றி 'போர்' அடிக்காமல் எழுதியதாக திரு சுஜாதா அவர்களும் அணிந்துரையில் தெரிவித்துள்ளார்.
அதாவது கொலைபாதக, இரணகொடுர படையெடுப்புகள், சூழ்ச்சியும் துரோகங்களும் கொண்ட அரசியல், மத துவேஷங்களும் அது தொடர்பான கொலைகளும் கற்பழிப்புகளும் கொண்ட இஸ்லாமிய மன்னர்களின் படையெடுப்பு ஆட்சிமுறை சரித்திரத்தை, சலிப்பும் வெறுப்பும் ஏற்படா வண்ணம் உள்ளதை உள்ளபடி எழுதியிருக்கிறார் திரு மதன் அவர்கள்.
கிட்டத்தட்ட 10ம் நூற்றாண்டு முதல் 19ம் நூற்றாண்டு வரை நடைபெற்ற படையெடுப்புகள், கோட்டை முற்றுகைகள், கொள்ளைகள், எதிர் புரட்சிகள் மற்றும் கலகங்கள் என அந்தந்த காலங்களில் நடந்ததை படம்பிடித்து, நம்மையும் ஆப்கானிய சமர்கண்ட் முதல் பர்மா வரை சுற்றிக்காட்டியிருக்கிறது இப்புத்தகம். அதிலும் குறிப்பாக டெல்லி சுற்றியுள்ள கோட்டைகள் மற்றும் சமாதிகள் பற்றி படங்களுடன் விவரிக்கிறது.
ஆட்சியாளர்களை பற்றி சொல்ல வேண்டுமென்றால் கஜினி முகமது, கோரி முகமது, தைமூர், குத்புதீன், இல்தூத்மிஷ், பல்பன், அலாவுதீன் கில்ஜி, முகமது பின் துக்ளக், முகலாயர்கள் வம்சம்(பாபர், ஹுமாயுன், அக்பர், ஷாஜஹான், ஜஹாங்கிர், அவுரங்கசிப் , முகமது ஷா)., சிவாஜி, பற்பல ராஜபுத்திர மன்னர்கள், பீஜப்பூர் சுல்தான்கள், நிஜாம்கள், மேலும் சில இஸ்லாமிய சிற்றரசர்கள், ஆங்கிலேயர்கள் என அனைவரும் இந்த பாரத பூமிக்கு வந்து வென்ற கதையையும், வீழ்ந்த கதையையும் சொல்கிறது, கால் நூற்றாண்டுக்கு முன் எழுதப்பட்ட இந்த புத்தகத்தில்.
பற்பல நூல்களை மேற்கோளாக கொண்டு, குறிப்பாக`பாபர் எழுதிய சுயசரிதியை கொண்டும் எழுதப்பட்டுள்ளது இந்நூல். இன்றளவும் பாபரும் அக்பரும் இந்தியர் மனதில் நீங்கா இடம் பெற்றிருப்பதற்கு, அவர்களுடைய ஆட்சிக்காலத்தில் "அனைத்து மதத்தவரும் சமம். எந்த மதமும் ஒன்றுக்கொன்று சளைத்ததில்லை. ஒரே சட்டம் ஒரே நீதி" என்ற கோட்பாடுடன் ஆட்சி புரிந்துதான் என்பதனை நன்கு உணர்த்துகிறது இப்புத்தகம்.
மதமாற்றம், கோவில் சொத்துக்கள் கொள்ளை, தலை சீவல்கள், அந்தப்புர கேளிக்கைகள், மது மற்றும் ஓபியம் நுகர்வு என இஸ்லாமிய மன்னர்கள் கோரத்தாண்டவம் ஆடியிருந்தாலும், மற்றொரு பக்கம் சில மன்னர்கள் நீதிபரிபாலனம், சட்ட ஒழுங்கு, சமத்துவம், கவிதை, கலை, கட்டிடக்கலை என நல்வழிப்போக்கும் கொண்டிருந்தார்கள் என்பதை அறியமுடிகிறது.
வரலாற்று பாடத்தின் மீது சுணக்கம் உள்ளவர்கள், இந்த புத்தகத்தை எடுத்து வாசிக்க ஆரம்பித்தால், ஒரே மூச்சில் கூட முடித்துவிடக்கூடிய அளவில் உள்ளது, திரு மதன் அவர்களின்` எழுத்துநடை.
(புத்தகத்தில் நாம் குறித்துள்ள பகுதிகளை "Highlights"ல் காண்க !!!)