நீண்ட சரித்திரத்தின் ஒரு துளி! வரலாற்றின் பக்கங்களை நாவல்களாக மாற்றுகிற புனைவு பித்து எனக்கு உண்டு. 20 ஆம் நூற்றாண்டின் கதையை 'வெட்டுப்புலி' ஆக்கினேன். 'ஆண்பால் பெண்பால்' என்றேன். 'வனசாட்சி' என்றும் சொல்லிப் பார்த்தேன். மூன்று நாவல்களும் பேசியது அந்த ஒரு நூற்றாண்டின் கதையைத்தான். இது 19 ஆம் நூற்றாண்டின் கதை. நியாயம் கேட்டுப் போராடிய ஓர் உண்மை மனிதனின் கதை. 19ஆம் நூற்றாண்டின் முழு நீளத்திற்கும் வாழ்ந்த மனிதர். அவர் வாழ்ந்த வீட்டைச் சுற்றி இருந்த ஒரு மைல் தூரத்தில்தான் அன்றைய சென்னைப் பட்டனத்தின் அத்தனை மாற்றங்களும் நிகழ்ந்தன. பெரியாரும் அண்ணாவும் பாவேந்தர் பாரதிதாசனும் பன்மொழிப் புலவர் அ.கி.பரந்தாமனாரும் பெரியார் தொண்டர் ஆனைமுத்து ஐயாவும் பேராசிரியர் வீ.அரசுவும் இன்னும் பலரும் போற்றிய ஒரு மாமனிதன் கதை இது. வரலாற்றுப் பிழையால் வஞ்சிக்கப்பட்ட விவசாயிகளின் கதை. நிலத்தின் கதை.
தமிழ்மகன் தமிழ் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர் ஆவார். இயற்பெயர் வெங்கடேசன். வளவன், தேனீ ஆகியவை பிற புனைப் பெயர்கள். இதுவரை ஏராளமான சிறுகதைகள், கட்டுரைகள், சில நாவல்கள் எழுதியுள்ளார். அறிவியல், சமூக சிறுகதைகளை சுவாரசியமான நடையில் எழுதி வருகிறார். திரைப்படம் தொடர்பான கட்டுரைகள், திரைப்படங்களுக்கு உரையாடல்கள் எழுதி உள்ளார். இவர் எழுதிய மானுடப் பண்ணை எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 1994 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதினம் வகைப்பாட்டிலும் “எட்டாயிரம் தலைமுறை” எனும் நூல் 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சிறுகதை வகைப்பாட்டிலும் பரிசு பெற்றிருக்கின்றன.
1799 திப்பு சுல்தான் மறைவிற்குப் பிறகு ஒவ்வொரு தமிழக குறுநில மன்னர்களும் நயவஞ்சகமாக வீழ்த்தப்பட்டு விஜயநகர பேரரசு உருவாகிறது. செங்கல்பட்டு அருகே திருவிடைச்சுரம் என்ற ஊரை காந்தவராயன் சேர்ந்தவராயான் சகோதரர்கள் சேர்ந்து ஆட்சி செய்கிறார்கள். இவர்கள் கிருஷ்ணதேவராயருக்கு கப்பம் கட்ட முடியாது என்று மறுத்து வந்தார்கள் இவர்களை ஒடுக்கவும் கைது செய்யவும் ராமர் ராயர் என்ற கிருஷ்ணதேவராயரின் மூத்த மருமகனை ஒரு படையோடு அனுப்புகிறார். ஆறு மாத காலம் போர் செய்தும் தோற்று ஓடுகிறது கிருஷ்ணதேவராயரின் படை. இவர்களை எப்படி தேற்கடிப்பது என்று தவிக்கிறார்கள் பிறகு அவர்களுக்கே உரியது கேவலமான முறையை தேர்ந்தெடுக்கிறார்கள். எப்படி குமாரகம்பண்ணன் சம்புவராயர்களை அழித்தானோ அதே வழியில் குப்பிச்சி என்ற தாசியை அனுப்பி கந்தவராயனை மயக்கி கொலை செய்கிறாள். பிறகு இவர்கள் சிற்றரசை கைபற்றுகிறது விஜயநகர பேரரசு . இதே போல் தமிழகம் முழுவதும் கைபற்றி கடுமையான சாதிய வர்ணாசிரம முறையை நிறுவுகிறார்கள். இவர்களுக்கு பின் நவாப்புகளிடம் அதிகாரம் செல்கிறது பிறகு வெள்ளையர்கள்.
விஜயநகர ஆட்சியர்கள் காலகட்டத்தில் இங்கு குடியேறியவர்கள் இந்த மண்ணின் பூர்வகுடி மக்களான தமிழர்களின் நிலங்களை அபகரித்துக் கொண்டு தமிழர்களை நிலமற்றவர்களாக ஒடுக்கப்பட்டவர்களாக கீழ் ஜாதிகாரர்களாக மாற்றுகிறார்கள். நிலமற்ற தமிழர்கள் வறுமையில் பஞ்சத்தில் செத்து மடிகிறாற்கள். மாபெரும் இராண்டு பஞ்சம் 1800 க்கு பிறகு தான் வருகிறது...
மன்னவேடு நிலங்களை வரி வசூல் செய்யும் உரிமையை ஜமீன்தார்களுக்கும் மிராசுதார்களுக்கும் வழங்குகிறது ஆங்கிலேய அரசு. அவர்கள் விவசாயிகளிடம் வரி வாங்கிக் கொண்டு அரசிற்கு அதை செலுத்தாமல் ஏமாற்றுகிறார்கள் தரிசு நிலங்களை பயிரிட செய்து அதில் வருவாய் இல்லை என்று கணக்கு காட்டுகிறார்கள். ஆண்டு முழுவதும் உழைக்கும் மக்களுக்கு அறுவடை போது மட்டும் ஒரு மரக்கா நெல் கூலியாக வழங்கப்படுகிறது. குதிரை மேல் ஏறி இந்த குதிரை செல்லும் இடம் வரை எங்களது நிலமென்று எளிய மக்களின் விவசாய நிலங்களை பிடுங்கிக் கொள்கிறார்கள். இதை கவனிக்க ஆங்கில அரசு பி. சங்கரையர் என்பவரை நியமிக்கிறது இவர் நயவஞ்சகமாக நிலங்கள் அனைத்தையும் மிராசுதாரர்களுக்கும் பண்ணையர்களுக்கும் சொந்த நிலமாக பட்டா செய்து கொடுத்து விடுகிறார். பஞ்ச பராரி மக்களாக வறுமையில் செத்து மடியும் தமிழர்களை மீட்க ஒருவர் வருகிறார் அத்திப்பாக்கம் வெங்கடாசலம். பெண் விடுதலை, சமூக நீதி, சாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு , சமத்துவம் என அனைத்திற்கும் முன்னோடி அத்திப்பாக்கம் வெங்கடாசலம். அதேபோல் அவரும் பன்முக ஆளுமை கொண்ட நபர் பள்ளி ஆசிரியர், சுண்ணாம்பு வியாபாரி, சமூகநீதி போராளி, பத்திரிக்கையாளர், எழுத்தாளர் என்று பல்வேறு பணிகளை இந்த சமூக மேம்பாட்டிற்காக செய்த நபர். இவரின் வீடு சென்னை 7 கிணறு பகுதியின் அருகில் இருந்தது இவர் வீட்டைச் சுற்றி தான் இன்றைய சென்னை பறந்து விரிந்து இருக்கிறது. சென்னை மாகாணம் முழுக்க கிராமமாக இருக்கிறது. இவருடன் அருகில் இருந்த நபர்களில் மிக முக்கியமானவர்கள் வள்ளலார் மற்றும் செங்கல்வராயன் ஆவர். வள்ளலார் பற்றி நாம் அறிவோம் ஆனால் செங்கல்வராயன் பற்றி அறிந்தது மிக குறைவு தான் இவர் அன்றே மக்கள் படிப்பதற்காக பள்ளிக்கூடங்களை திறந்து அதுவும் உணவோடு கூடிய பள்ளிக்கூடம் திறந்து நடத்தி இருக்கிறார் தான் சொத்துக்கள் அனைத்தையும் அதற்காக செலவிட்டிருக்கிறார். நாயக்கர் பஞ்ச காலத்தில் கஞ்சி தொட்டி தொடங்கி பசி தீர்க்கிறார். (பெரியார் தான் தமிழர்களை படிக்க வைத்தார் என்று சொல்லும் நபர்கள் எங்கு இருக்கிறது பெரியார் கட்டிய கல்லூரி என்று சொல்லவும்) . வெள்ளையர்கள் கஞ்சி தொட்டி தொடங்கி பிறகு கஞ்சி தொட்டி மருத்துவமனை ஆகி இன்று ஸ்டான்லி மருத்துவமனையாக இருக்கிறது.
ஈவேரா, அம்பேத்கர், அயோத்திதாசர் ,ரெட்டமலை சீனிவாசன் ஆகிய எல்லா சமூக போராளிகளுக்கும் முன் தோன்றிய விடிவெள்ளி அத்திப்பாக்கம் வெங்கடாசலம். தன் வாழ்நாள் எல்லாம் நிலத்தை இழந்து வறுமையில் வாடும் மக்களுக்காக அந்த நிலங்கள் எவ்வாறு நயவஞ்சகமாக வன்னியர், பரையர் மக்கள் இடமிருந்து பிடுங்கப்பட்டு பிராமணர், தெலுங்கு செட்டி, வெள்ளாளர் இவர்களிடம் சென்றது என்று தொடர்ந்து புத்தகங்கள் எழுதி தனது பத்திரிக்கையில் எழுதி வெள்ளையர்கள் இடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறார் அன்றைய வெள்ளையர்களின் ராணிக்கு இவர் எழுதிய புத்தகங்களை இங்கிலாந்திற்கு அனுப்பி வைத்திருக்கிறார். ஆங்கிலத்தில் புலமை மிக்கவர்.
அதுமட்டுமல்லாமல் இந்து மதத்தில் இருக்கும் மோசமான சடங்குகளையும் மூடத்தனங்களையும் அறியாமையையும் எதிர்த்து போராடி இருக்கிறார் அதற்காக இவர் எழுதிய நூல் "இந்து மத ஆசார ஆபாச தர்சினி ". அச்சுத்துறை வளராத அந்த காலகட்டத்தில் இந்த புத்தகங்களை எல்லாம் பதிப்பிக்க பெரும்பாடு பட்டு இருக்கிறார் வெங்கடாசலம்.
கிட்டத்தட்ட 90 வயதுக்கு மேல் வாழ்ந்த இவர் தன் வாழ்நாள் எல்லாம் முழுமூச்சாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நிலம் கிடைக்கும் வேலையாகவே அலைந்து திரிந்து இருக்கிறார் இதற்காக அவர் ஈட்டியது எல்லாமே அனைவரையும் எதிர்ப்புகளையும் விரோதங்களையும் தான். ஒரு வழியாக வெள்ளை அரசு இவரின் கோரிக்கையை ஏற்று நிலங்களை அந்தந்த மக்களுக்கே கிடைக்கும் வழியை செய்ய தொடங்கியது. சென்னை மாகாணத்தில் மட்டும் 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்களை மக்களுக்கு வெள்ளை அரசு வழங்கியது. இன்று அந்த நிலங்கள் உண்மையிலேயே ஒடுக்கப்பட்ட மக்களிடம் தான் இருக்கிறதா என்று தெரியவில்லை.
ஈவேரா வெறும் அரசியல் லாபத்திற்காக இங்கு அரசியல்வாதிகளால் ஊதி பெருக்கிக் காட்டப்படும் நபர் . அவரின் போராட்டத்தை அரசியலக்கி இலாபம் அடைகிறார்கள். ஆனால் ஈவேராவிற்கு முன் இருந்த சமூக நீதி போராளிகள் மறைக்கப்படுகிறார்கள். ஏனென்றால் அவர்களை வைத்து எந்த அரசியல் லாபமும் இன்று அடைய முடியாது . அப்படி இவர்களின் பெரியாரிய கூச்சல்களால் வரலாற்றில் மறைக்கப்பட்ட மகத்தான மனிதர் அத்திப்பாக்கம் வெங்கடாசல நாயக்கர்.
ஒரு புத்தகம் வாழ்நாள் எல்லாம் மீண்டும் மீண்டும் எடுத்து கையாளப்படுவதாகவும் பயன்படுத்தக் கூடியதாகவும் வரலாற்று சமூக கருத்துக்களை கொண்டு இருப்பதாலும் சிறந்த புத்தகமாக ஆகிறது. அந்த வகையில் ஞாலம் மிகச் சிறந்த வரலாற்று நாவல் ஒவ்வொரு தமிழர்களும் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல் .
புத்தகத்தின் பெயர்: ஞாலம் வகைமை: நாவல்/புதினம் எழுதியவர்: தமிழ்மகன் வாங்கிய இடம்: மின்னங்காடி பதிப்பக அரங்கு எண் 371 - சென்னை புத்தக கண்காட்சி வாங்கிய தேதி: 10-ஜனவரி-2024 தமிழ் மரபு மருத்துவர் தணிகாசலம் Siddhar Ka அவர்களின் ��ுகநூல் பக்கத்தில் ஞாலம் புத்தகத்தை பற்றிய ஒரு பதிவைப் பார்த்துவிட்டு அதை வாங்க வேண்டும் என்ற எண்ணத்தோடு புத்தக கண்காட்சிக்கு சென்றேன். ஈ வெ ரா விற்கு முன் வாழ்ந்த சமூக சீர்திருத்தவாதி பற்றிய ஒரு புத்தகம் என்ற ஒன்றைத் தவிர இந்த புத்தகத்தை பற்றிய வேறு எந்த தகவலும் என்னிடம் இல்லை. மின்னங்காடி பதிப்பக அரங்கிற்குச் சென்று ஞாலம் புத்தகத்தை எடுத்து கொடுக்கல்-வாங்கல் இடத்தில் கட்டணத்தை செலுத்தும் போது, இருக்கையில் இருந்தவர் என்னை நோக்கி "எப்படி தெரிஞ்சுது இந்த புத்தகத்தைப் பற்றி " என்று கேட்டார். மருத்துவரின் முகநூல் பெயர் சித்தர் க என்று இருந்ததால் அவரின் இயற்பெயர் மறந்துவிட்டேன். பின்பு மருத்துவர் தணிகாசலம் அவர்களின் புகைப்படத்தை காண்பித்த போது அவரை அடையாளம் கண்டுகொண்டார். அதற்கு பின் தான் எனக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. அவர் சொன்னது "நாந்தான் எழுதுனது". எழுதிய புத்தகத்தின் எழுத்தாளரை நமக்கு தெரியாமல் போய்விட்டதே என்ற குற்றவுணர்ச்சியுடன் சிரித்து சில வினாடிகள் உரையாடினோம். அன்போடு அவரது கையெழுத்தையும் நான் வாங்கிய பிரதியில் இட்டு தந்தார். காலத்தால் கிட்டத்தட்ட கரைந்த வரலாற்றை தோண்டி வெளிக்கொண்டு வருவதே ஒரு பெரும்பணி. எழுத்தாளர் தமிழ்மகன் அந்த பெரும்பணியைச் செய்து அதை சற்று புனைந்து ஒரு நாவலை வடித்திருக்கிறார். கத்தி மேல் நடப்பது போன்ற செயல் இது. காரணம் பொதுவாகவே நாவலுக்கு கட்டுரை வடிவம் வரும் இயல்பு உண்டு. அதுவும் முழுமையாக தொகுக்கப் படாத ஒரு நபரின் வரலாற்றில் கையளவு கதாபாத்திரங்கள் கொண்டு சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட சில வரலாற்று நிகழ்வுகளை ஒட்டி தொய்வில்லாமல் அக மற்றும் புறவெளிகளின் விவரங்களையும் மிகுந்த கவனத்தில் கொண்டு அத்திப்பாக்கம் வெங்கடாச்சல நாயகரின் கதை நம்முன் விரிகிறது. 19ஆம் நூற்றாண்டு மனிதர்களின் வாழ்க்கை முறை, வாழ்வாதாரம், ராமலிங்க அடிகளாரின் இளம் பருவத்தில் நடந்த நிகழ்வுகள், பட்டா வழங்குதலில் வெள்ளையர்கள், மராட்டியர்கள் மற்றும் நவாபுகள் ஆட்சியில் நடந்த முறைகேடுகள், சடங்குகளில் இருந்த செலவு என்று நம்மை புனைவுக் கொக்கியில் சிக்க வைக்க பல அம்சங்கள் இருக்கிறது. ஆனால் புத்தகத்தை மூடிவைத்தப் பின் என் மனத்திரையில் ஓடுவது அபகரிக்கப்பட்ட நிலங்களை அதன் உரியவருக்கான பெயரில் பட்டா செய்ய வெங்கடாச்சல நாயக்கர் பட்டப் பாடு, திருவிடைச்சுரத்தில் இருக்கும் கோட்டையை கைப்பற்ற வந்த கிருஷ்ண தேவராயரின் படைககளை விரட்டி அடித்த காந்தவராயன் மற்றும் சேந்தவராயன் சகோதரர்கள். கஞ்சித்தொட்டியை நோக்கி செங்கல்பட்டில் இருந்து தொடர்வண்டியில் வந்த மக்கள். நீங்கள் எதையாவது விரும்பினால், அதை அடைய உங்களுக்கு உதவுவதில் இந்த ஒட்டு மொத்த பிரபஞ்சமே ஒன்று கூடி திட்டமிடும் என்று பவுலோ கோயிலோ வின் கூற்றுக்கு இணங்க எனது அம்மாவின் பிறப்பிடமான செங்கல்பட்டு குறித்த தரவுகளை உள்ளடக்கிய இரண்டாம் புத்தகம் என் வாசிப்பிற்கு இந்த வருடம் பிரபஞ்சம் அருளியதாகவே கருதுகிறேன். வெறும் விவரணைகளில் மட்டும் இல்லாமல் மொழி நடையிலும் நம்மை 19ஆம் நூற்றாண்டிற்கு கடத்துவது இந்த புதினத்தின் மற்றும் ஓர் சிறப்பு. இந்த சொல்வனத்தில் நான் அறுவடை சில சொற்கள் லோடா -> பானம் பருகும் சிறிய அளவிலான குடுவை. எனது தாத்தா மற்றும் பாட்டி இந்த சொல்லை பயன்படுத்துவர். பாரியா -> மனைவி (இன்றளவிலும் மலையாளம் தெலுங்கு மொழி வழக்கில் உள்ள சொல் ) உலுப்பை -> காணிக்கை கெளிப்பு -> வெற்றி (இன்றைக்கும் தெலுங்கு மொழியில் வழக்கில் உள்ளது ) குளம்பு -> விலங்கினங்களின் கால்களின் அடிப்பகுதியை பாதுகாக்கும் கனமான நகம் இந்த படைப்பை வாசித்தால் - அரசு பதவியில் ஏக போக மாக இருக்கும் சில கணக்கு பிள்ளைமார்கள், பிராமணர்கள் மற்றும் வெள்ளாளர்களின் முறைகோடுகளால் பலரும் தங்களுக்கு உரிய நிலங்களை இழந்து பட்டினியாய் தவிக்கும் சந்ததியினருக்கு கோரும் ஒதுக்கீட்டை குறித்து இனி ஏளனம் கொள்ளவேண்டாம் என்ற அறைகூவலை இனி அசட்டைசெய்ய மனம் வராது. காரணம் நலிந்த மக்களின் பொருளாதார நலனை கருத்தில் கொண்டதல்ல இடஒதுக்கீடு. இழைக்கப்பட்ட அநீதியை சரிசெய்வதற்கும் விகிதாச்சார அடிப்படையில் அதிகாரத்தை பிரித்தளிப்பதும் தான் இதன் நோக்கம். அத்திப்பாக்கம் வெங்கடாச்சல நாயகருக்கும் அவரின் செயல்பாடுகளுக்கு எழுத்து வடிவம் தந்து அந்த வாழ்விற்கு ஒரு உரைகல்லாக இந்த புத்தகத்தை படைத்த தமிழ்மகனுக்கும் மனமார்ந்த நன்றிகள் - அன்புகுமரன் எத்தியரசன் பெரும் வரவேற்பை பெற்ற படைவீடு நாவலை வேண்டும் என்றே வாங்காமல் இருந்தேன். அடுத்த முறை மின்னங்காடி அரங்கிற்கு செல்வதற்கு ஒரு காரணம் வேண்டாமா?