இலக்கியமும் சினிமாவும்

Filmmaker Vasanth S Sai hopes ‘Ponniyin Selvan I’ success will spur more literary adaptations in Tamil cinema

அன்புள்ள ஜெ,

தி ஹிந்து வெளியிட்டிருக்கும் இச்செய்தியில்  ‘The positive reception of Vendhu Thanindhathu Kaadu (VTK) and Ponniyin Selvan I (PS I) has put two writers in the spotlight: the late Kalki Krishnamurthy, who wrote the Ponniyin Selvan novel, and Jeyamohan, who wrote the story for VTK and the dialogues for PS I. This is an unusual scenario for Tamil cinema’ என்னும் விஷயம் பற்றி கேட்க விரும்புகிறேன்.

இப்போது பல இலக்கியப்படைப்புகள் சினிமாவாக ஆகவிருக்கின்றன. உங்கள் கதையை ஒட்டி வெற்றிமாறன் இயக்கும் விடுதலை உடனடியாக வெளிவரவுள்ளது. இலக்கியப்படைப்புகள் சினிமாவாக ஆகும் வாய்ப்பு பெருகியிருப்பதாக நினைக்கிறீர்களா?

ஆனந்த்ராஜ்

அன்புள்ள ஆனந்த்ராஜ்,

இல்லை. எப்போதுமுள்ள ஒரு பொது ஆர்வம் மட்டுமே இப்போதும் உள்ளது. இலக்கியத்தில் இருந்து எடுக்கப்பட்ட அசுரன் ஏற்கனவே பெருவெற்றி அடைந்துள்ளது. அப்படிப்பட்ட வெற்றிப்படங்கள் இனிமேலும் வரும். அவை தனியாகவே நிகழும். மைய அலைக்கு வராது.

என்னுடைய அறம் கதைகளில் பெரும்பாலும் எல்லாமே வலுவான சினிமாவாக ஆக்கத்தக்கவை. இன்னொரு மொழியில் என்றால் எல்லாமே இதற்குள் படமாகியிருக்கும். தமிழில் அதற்கான வாய்ப்புகள் இல்லை. அவற்றை சினிமாவாக ஆக்க சிலர் முயலும்போது இங்கே சூழலில் ஏற்பு இருக்கவில்லை.

ஏனென்றால் நம் சினிமா அன்றுமின்றும் கதைநாயக மையம் கொண்டது. இலக்கியத்தில் இருந்தே எடுக்கப்பட்ட படங்களானாலும் அவை கதைநாயகத்தன்மை கொண்டவையாகவே இருப்பதைக் காணலாம். விடுதலை, வாடிவாசல் எல்லாமே…ஒரு வலுவான இளமையான கதைநாயகன், அவனுடைய பிரச்சினை – இதுதான் ‘டெம்ப்ளேட்’. வணிகப்படமோ புரட்சிப்படமோ. அதை மீறவே முடியாது. 

அந்த அம்சம் நவீன இலக்கியத்தில் பெரும்பாலும் இல்லை. அங்கே கதைமாந்தர், கதைமுடிச்சு இருக்குமே ஒழிய கதைநாயகர்கள் அனேகமாக இருக்க மாட்டார்கள். அதீதத்தன்மை கொண்ட கதைமாந்தர் உள்ள கதைகள் மட்டுமே சினிமாவுக்குள் வரமுடியும். இன்றைய தமிழ் சினிமாவின் மனநிலை அது. 

இன்னொன்று, வணிகசினிமாவுக்கு உள்ள  நிகழ்வேகம் (டெம்போ) என்பது ஏறத்தாழ இங்கே நிலைபெற்றுவிட்ட ஒன்று. அதை மாற்றமுடியாது. இலக்கியப்படைப்புகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு டெம்போ கொண்டவை. பெரும்பாலும் நிதானமாக நகர்பவை. வெக்கை நாவல் வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் சினிமாவாக ஆனபோது நாவலின் டெம்போ சினிமாவுக்காக உருமாறியிருப்பதை காணலாம். அந்நாவல் நிதானமாகச் சுருளவிழ்வது. அச்சினிமா அசுரப்பாய்ச்சல் கொண்டது. அசுரன் பார்த்துவிட்டு வெக்கையை வாங்கிய பலரும் வாசிக்கவே முடியவில்லை என சலிப்படைந்தனர். பாருங்கள், அத்தனை பெரிய வெற்றிப்படம் வெளிவந்தபின்னரும் இணையத்தில் வெக்கைக்கு எத்தனை மதிப்புரைகளோ ரசனையுரைகளோ கிடைக்கின்றன?

இன்றைய ரசிகர்கள் கூட இலக்கியப் படங்களை ஏற்கக்கூடும். நமக்கு இன்றுள்ள சில நூறு திரைவிமர்சகர்கள் கொஞ்சம்கூட ஏற்கமாட்டார்கள். அவர்கள் எளிய டெம்ப்ளேட் சினிமாக்களையே விரும்புவார்கள். வழக்கமான கதாநாயகன் – வில்லன், பரபரவென்ற ஓட்டம் எல்லாம் அவர்களுக்கு தேவை. Lag என்று கத்தியே படத்தை பார்க்கவிடாமலாக்கி விடுவார்கள். எல்லா விமர்சனங்களிலும் அவர்கள் தவறாமல் அந்த டெம்ப்ளேட்டை முன்வைப்பதைக் காணலாம். அவ்வாறன்றி அவர்கள் ஏற்கக்கூடியவை நேரடியான அரசியல்பிரச்சாரம் கொண்ட படங்கள். அரசியல்சரிநிலைகளுக்காக அவற்றை பாராட்டுகிறார்கள். சினிமா விமர்சகர்களை விட ஒரு படி குறைவான ரசனையே இங்கே சினிமா பற்றி எழுதும் எழுத்தாளர்களிடமும் உள்ளது.

படம் வந்த ஐந்தாம் நிமிடத்தில் விமர்சனம் வெளியாகவேண்டுமென்றால் அதே போன்ற மாறாத டெம்ப்ளேட்தான் உதவும். நம் விமர்சகர்கள் இலக்கிய சினிமாக்களை மூர்க்கமாக அடித்துக் காலிசெய்து விடுவார்கள். அதை வெல்ல ஒரே வழி வலுவான கதாநாயக நடிகர்களை சார்ந்து செல்வதுதான். கதைநாயகர்களின் ரசிகர்கள் அந்த திரைவிமர்சகர்களின் மூர்க்கத்தை எதிர்கொள்ளும் எதிர்வேகம் கொண்டவர்கள். எப்படியானாலும் முதலிரண்டு நாட்கள் அரங்கை நிறைப்பார்கள். படம் நன்றாக இருந்தால் அவர்களே படத்தை மேலெடுத்தும் செல்வார்கள். அவர்களை நம்பவில்லை என்றால் முதல்நாளிலேயே காலி அரங்குகளை காணவேண்டியிருக்கும். ஆகவே இலக்கியப்படைப்புகளை சினிமாவாக எடுக்கும்  முயற்சிகளை எவரும் எடுக்கத்துணிவதில்லை. கதைநாயகர்கதைகளே நமக்குத் தேவை. அவற்றை ‘உருவாக்க’வேண்டியதுதான்.

ரசிகர்களை நம்பி துணிந்து எடுக்கலாம்தான். ஆனால் அதை நாம் தயாரிப்பாளர்களிடம் வற்புறுத்த முடியாது. எவராவது ஆர்வத்துடன் முன்வந்தால் செய்யலாம். வாய்ப்பு மிகமிகக் குறைவு. எனக்கு சினிமா என்பது தொழில். ஆகவே நான் எவரிடமும் கேட்பதோ வற்புறுத்துவதோ இல்லை.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 25, 2022 10:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.