அஞ்சலி, டி.பி.ராஜீவன்

மலையாளக் கவிஞரும், நண்பருமான டி.பி.ராஜீவன் இன்று (3-11-2022) மறைந்தார். அவருக்கு சென்ற ஓராண்டாகச் சிறுநீரகக் கோளாறு இருந்தது. பாரம்பரியமாக வந்த கடுமையான சர்க்கரைநோய் அதற்குக் காரணம். நடுவே ஒரு சிறு விபத்தில் காலில் ஏற்பட்ட  புண் ஆறுவதற்கு நீண்டநாட்களாகியது. அதற்கு நீண்டகாலம் எடுத்துக்கொண்ட மருந்துகளும் சிறுநீரகக் கோளாறுக்குக் காரணமாக இருக்கலாம். சர்க்கரைநோய்தான் தொடக்கம், ஒன்றிலிருந்து இன்னொன்று.

ராஜீவனின் உடல்நிலை மோசமாகிக்கொண்டேதான் இருந்தது. டயாலிஸிஸ் செய்துகொண்டிருந்தார். அதற்கானச் செலவுகள் மிகுதியாக இருந்தன.நண்பர்கள் உதவினோம். ஆனால் மருத்துவர்கள் அவர் தேறுவது ஐயமென்றே சொல்லிவந்தனர். சிறுநீரக மாற்று செய்யவேண்டும், ஆனால் சர்க்கரை நோய் மிகுதியாக இருந்தமையால் அதற்கு வாய்ப்பிருக்கவில்லை. இறுதியாக மஞ்சள்காமாலையும் சேர்ந்துகொண்டது.

ராஜீவனுக்கு இரண்டு மகள்கள். கோழிக்கோடு பல்கலையில் மக்கள்தொடர்பாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். மலையாளத்திலும் ஆங்கிலத்திலும் எழுதினார். கவிதைத் தொகுதிகளுடன் இருநாவல்களும் எழுதியிருக்கிறார்.பாலேரி மாணிக்யம், ஒரு பாதிரா கொலபாதகத்தின்றே கதா.  கே.பி.என் கோட்டூர், எழுத்தும் ஜீவிதமும். பாலேரி மாணிக்யம் சினிமாவாகவும் வெளிவந்துள்ளது. இருநாவல்களுமே ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.

டி.பி.ராஜீவனை எனக்கு 1988 முதல் தெரியும். ஆற்றூர் ரவிவர்மாவின் அணுக்கமான மாணவர்களில் ஒருவர். அவர் குடும்பத்துக்கும் நான் அணுக்கமானவன். 1998 முதல் குற்றாலத்திலும் ஊட்டியிலும் நான் ஒருங்கிணைத்த எல்லா தமிழ் -மலையாளக் கவிதை அரங்குகளிலும் கலந்துகொண்டிருக்கிறார்.  விஷ்ணுபுரம் விருதுவிழாவிலும், குமரகுருபரன் விருதுவிழாவிலும் கலந்துகொண்டிருக்கிறார். அவருடைய கவிதைத் தொகுதிகளையும் நாவலையும் வெளியிட்டு நான் உரையாற்றியிருக்கிறேன்.ராஜீவன் என் குடும்பத்திற்கும் அணுக்கமானவர்.

டி.பி.ராஜீவன் கவிதைகள்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 02, 2022 11:42
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.