கோவை விழா, கடிதங்கள்

சியமந்தகம் – அழிசி பதிப்பகம்

கோவையில் ஜெ 60 விழா- ஒரு நிறைவான நாள் நன்றிகளும் வணக்கங்களும்

அன்புள்ள ஜெ,

தங்களது அறுபதாவது அகவை நிறைவு விழா மிகச் சிறப்பாக நிறைவடைந்தது. விழா ஏற்பாடுகளை மிகச் சிறப்பாக நன்னெறிக் கழகத்தினரும் நண்பர்களும் செய்திருந்தார்கள். கல்பற்றா அவர்களுடையதும் உங்களுடையதும் யுவன் அவர்களது பேச்சும் ஆத்மார்த்தமாக இருந்தது. அரங்கம் நிறைந்த விழா நீங்கள் எங்களுக்கு யார் என்பதை உலகிற்கு சந்தேகமின்றி காட்டியது.

மதியமும் இரவும் உங்களது ‘ஜமா’வில் கலந்து கொண்டேன். வெவ்வேறு தளங்களில் தன்னியல்பாக சென்ற பேச்சு சுவாரஸ்யமாக இருந்தது ‌‌ குறிப்பாக – மாபெரும் சோவியத் யூனியனின் பரப்பியக்க முயற்சிகளை முறியடித்த மூவர் என மொழிபெயர்ப்பாளர்கள் மூவரை சொன்னது தான் உச்சம். வெகுநேரம் சிரித்துக் கொண்டிருந்தோம்.

எழுத்தாளர்கள் சுரேஷ் பிரதீப், சுசித்ரா, ராதாகிருஷ்ணன் ஆகியோரையும் சந்திக்க முடிந்தது. ஏற்கனவே முகநூல் வழியாக அறிமுகமாகியிருந்த ராதாகிருஷ்ணன் அவர்களுடன் இரவு வெகுநேரம் வரையிலும் காலையிலும் பேசிக்கொண்டிருந்தேன்.

உங்களை நேரில் சந்தித்து ஆசி பெற்றது  எனது நல்லூழ்.  வாழ்வின் ஒவ்வொரு கணமும் – இடரிலும் மகிழ்விலும் – எனக்கு கற்பித்து வழிகாட்டும் ஆசிரியரிடம் முழுதாக பணிந்து ஆசி பெற்றது நம்பிக்கையையும் மனவலிமையையும் தந்தது‌. நான் செய்யக் கூடுவது ஒரு லட்சிய மாணவனுக்கு தகுதியை மேலும் வளர்த்துக் கொள்வது மட்டுமே.

நன்றி

சங்கரன்

அன்பின் ஜெ,

ஆம். சியமந்தக கல்போல் தான் நீங்கள் எங்கள் அறிய பொக்கிஷம்தான். உங்களுக்கு குரு நித்யாவை போல நீங்கள் எங்களுக்கு.

ஒரு எழுத்தாளருக்காக அரங்குநிறைந்த வாசகர்கள் கூடியதை முதல் முறையாக பார்த்தோம்.இவ்வளவு வாசகர்களின் அன்பின் உயரத்தில் ஞானபீடமும் நோபலும் எம்மாத்திரம்?

சமூக விழுமியங்களை, பண்பாடு கலாச்சாரங்களை எங்களுக்கு கையளித்து, எங்களை கரம்பிடித்து நடைபழக்கி,உங்களை வாசிக்கும் தோறும் சிரித்தும்,பல இடங்களில் அழுதும், அழுதுகொண்டே அண்ணாந்து பார்த்து முகம் துடைத்து பெருமூச்சு விட்டு படித்ததையே மீண்டும் படித்து புல்லரித்துப்போய் நண்பனுக்கு போன் செய்து இந்த இடத்தில் (உதாரணமாக பாரதிபாஸ்கர் குறிப்பிட்ட பண்ணிரு படைக்கலம் 87வது அத்தியாயம்) எப்படி எழுதியிருக்கிறார் பார்த்தாயா? என்று பேசிப்பேசி மீண்டும் மீண்டும் புலகாங்கிதம் அடைவதும் எங்களுக்கு அன்றாட நிகழ்வு.

ஜெ 60. முடிந்து அதிகாலை வீடு வீடு வந்து சேரும் வரை நிகழ்வுகளை அசைபோட்டவாறு வந்ததில் யுவன் சொன்னது போல் கண்ணுக்கெட்டிய தூரம் வரை உங்களுக்கு நிகரொப்ப யாருமில்லை என்பது உண்மை.ஆகவே வையத்தலைமை கொண்டு எங்களை வழிநடத்துங்கள்.

விசாலாட்சி அம்மாவும் உங்கள் ஆசிரியர்ளும் உங்களை என்றென்றும் ஆசிர்வதிப்பார்கள்.உங்கள் ஆசிர்வாதம் வேண்டி முழுதுடல் தரைபட வணங்குகிறோம்.

உங்கள் வெண்முரசு வரிகளில் முடிக்கிறேன்…

அளிக்கும் கை சலிக்கும்

அடையும் கை சலிப்பதில்லை.

நன்றி.

மூர்த்தி விஸ்வநாதன்

வாழப்பாடி.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 22, 2022 11:30
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.