டாவின்சியின் கிறிஸ்து ஓவியம்.

The Lost Leonardo என்ற ஆவணப்படத்தைப் பார்த்தேன். துப்பறியும் கதைகளை விட விறுவிறுப்பாக உருவாக்கப்பட்ட ஆவணப்படமது. லியோனார்டோ டாவின்சியின் கடைசி ஓவியம் என்று விளம்பரப்படுத்தபட்டு மே 2015ல் கிறிஸ்டி நிறுவனத்தின் மூலம் 450 மில்லியன் டாலருக்கு விற்பனை செய்யப்பட்ட Salvator Mundi என்ற இயேசு கிறிஸ்து ஓவியம் எப்படிக் கண்டுபிடிக்கப்பட்டது. இது உண்மையில் டாவின்சி வரைந்த ஓவியம் தானா. இதற்கு எப்படி விலை மதிப்பு உண்டானது என்பதை இந்த ஆவணப்படம் விரிவாகப் பேசுகிறது.

இன்னொரு தளத்தில் அரிய கலைப்படைப்புகள் விற்பனை செய்யும் சந்தையில் நடக்கும் சூது, விற்பனை தந்திரங்கள். போட்டிகள் அதன் பின்னுள்ள நிழல் மனிதர்களின் உலகை நுண்மையாக ஆவணப்படுத்தியிருக்கிறது

டாவின்சியின் இந்த ஓவியம் 2005 ஆம் ஆண்டு நியூ ஆர்லியன்ஸ் ஏலத்தில் தற்செயலாகக் கண்டறியப்படுகிறது. அதை $1175 விலை கொடுத்து வாங்கிய பாரிஷ் மற்றும் ராபர்ட் சைமன் அந்த ஓவியம் யாருடையது என்ற தேடுதல் வேட்டையில் ஈடுபட ஆரம்பிக்கிறார்கள். அது டாவின்சியின் ஓவியமாக இருக்கக்கூடும். அதற்கான சான்றுகள் உள்ளன என்று ஓவிய மறுஉருவாக்கபணியில் ஈடுபடும் வல்லுநர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள். இது டாவின்சி என்றால் தன் கையில் பெரிய பொக்கிஷம் கிடைத்துள்ளது என்பதை உணர்ந்த பாரிஷ் அதை டாவின்சியின் ஓவியங்கள் குறித்து ஆழ்ந்து அறிந்துள்ள வல்லுநர் முன்பு காட்சிக்கு வைக்கிறார். அவர்கள் ஒன்றுகூடி இதனை மதிப்பிட்டு டாவின்சியின் ஓவியமே என்று முடிவு சொல்கிறார்கள். இந்த மதிப்பிடல் ஆவணப்படத்தில் விரிவாகச் சித்தரிக்கப்படுகிறது.

கலையுலகின் மறுபக்கம் என்று அந்த உலகைச் சொல்லலாம். அந்த வல்லுநர்கள் முடிவின் படி தாங்கள் டாவின்சியின் அரிய ஓவியத்தின் உரிமையாளர்கள் என்று உணர்ந்த அவர்கள் அதை விற்பதற்கு முடிவு செய்கிறார்கள்

அது ஆவணப்படத்தின் இரண்டாம் பகுதியாகச் சித்தரிக்கப்படுகிறது. அரிய கலைப்படைப்பு ஒன்றைச் சந்தையில் எப்படி விற்பனை செய்கிறார்கள். இதில் ஏலம் எப்படி நடைபெறுகிறது. விளம்பரத்திற்கான யுக்திகள் எவை. உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் எப்படி இந்தக் கலைப்படைப்புகளை வாங்கப் போட்டிப் போடுகிறார்கள். இந்த ஓவியங்கள் எங்கே எப்படி மறைந்து பாதுகாக்கப்படுகின்றன. ம்யூசியங்கள் இவற்றை எப்படி இரவல் பெற்றுக் கண்காட்சி நடத்துகின்றன என்பதை ஒரு துப்பறியும் கதையைப் போல இயக்குநர் விவரித்திருக்கிறார்

போதை மருந்து கடத்தல் உலகிற்கு அடுத்தபடியாகக் கலைப்பொருட்கள் விற்பனை உலகில் தான் யார் விற்கிறார்கள். யார் வாங்குகிறார்கள். இவ்வளவு பணம் எங்கிருந்து வருகிறது. எப்படிக் கைமாறுகிறது என்பது ரகசியமாகச் செயல்படுகிறது என்று கூறும் இயக்குநர் டாவின்சியின் ஓவியம் எப்படிக் கைமாறிக் கைமாறிச் சென்றது என்பதை முழுமையாக ஆவணப்படுத்தியிருக்கிறார்

$1175 க்கு விலைக்கு வாங்கிய அந்த ஓவியத்தை வாரன் அடெல்சன் மூலம் சந்தையில் விற்பதற்கு முயற்சி செய்கிறார்கள். அவர் மூன்றாவது பங்குதாரராக இதில் இணைந்து கொள்கிறார். அவரது முயற்சியால் ஓவியம் சுவிட்சர்லாந்தைச் சார்ந்த தொழிலதிபர் . YVES BOUVIERக்கு $83 மில்லியன் டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது.

அவர் இந்த ஓவியத்தை ரஷ்யாவின் மிகப்பெரிய பணக்காரர் Dmitry Rybolovlevக்கு $127.5 மில்லியனுக்கு மறுவிற்பனை செய்து இரண்டு நாட்களுக்குள் $44.5 மில்லியன் லாபம் சம்பாதித்துவிட்டார். ஒரு கலைப்பொருளின் மூலம் எளிதாக 44 மில்லியன் டாலர் சம்பாதிக்க முடிவது என்பது வியப்பூட்டும் உண்மை

தனது கள்ளப்பணத்தை அரிய ஓவியங்கள் வாங்குவதற்காகப் பயன்படுத்தி வந்த தொழிலதிபர் டிமிட்ரி ரைபோலோவ்லேவ் அந்த ஓவியங்களை அவசரமாக விற்க முயன்றபோது .பூவியர் உதவி செய்ய மறுத்துவிடவே அவர்களுக்குள் விரோதம் ஏற்படுகிறது. நீதிமன்றம் செல்கிறார்கள். இந்த நிலையில் ரைபோலோவ்லேவ் வசமிருந்த ஓவியங்களை விற்றுத் தருவதற்குக் கிறிஸ்டி நிறுவனம் முன்வருகிறது. அவர்கள் மற்ற ஓவியங்களை எளிதாக விற்றுவிடுகிறார்கள். ஆனால் உறுதி செய்யப்படாத ஓவியம் என்பதால் டாவின்சியின் ஓவியத்தை விற்பது எளிதாகயில்லை.

ஆகவே இந்த ஓவியத்தை விளம்பரப்படுத்தப் பலகோடி ரூபாய் செலவு செய்கிறார்கள். வேறுவேறு நாடுகளில் காட்சிப்படுத்துகிறார்கள். பொய்யாக இந்த ஓவியம் பற்றிய பரபரப்பை உருவாக்குகிறார்கள். இது சந்தையில் அதன் மதிப்பைப் பல மடங்கு அதிகமாக்குகிறது.

முடிவில் கிறிஸ்டி ஏலத்தில் விடும் நாளில் போட்டி கடுமையானது. யார் ஓவியத்தை வாங்க முற்படுகிறார்கள் என்ற தகவலை ரகசியமாக வைத்துக் கொண்ட கிறிஸ்டி பலத்த போட்டிக்கு இடையில் $450 மில்லியனுக்கு ஓவியத்தை விற்றது

உலகில் அதிக விலைக்கு விற்கப்பட்ட ஓவியம் இதுவென்கிறார்கள். இதை வாங்கியிருப்பது சவுதி அரேபியாவின் ஆட்சியாளர் என்று சொல்கிறார்கள். இந்த ஓவியம் எங்கே வைக்கப்பட்டிருக்கிறது என்ற தகவல் இன்று வரை யாருக்கும் தெரியாது

இந்தநிலையில் இந்த ஓவியத்தைப் பாரீஸிலுள்ள லூவர் ம்யூசியம் காட்சிப்படுத்த முயன்றது.. இதற்காக பெரிய விளம்பரங்கள் செய்யப்பட்டன. டாவின்சியின் ஓவியங்களைக் காண மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தார்கள். ஆனால் சல்வதோர் முண்டி ஓவியம் காட்சிக்கு வைக்கப்படவில்லை. அதற்கான காரணம் மோனோலிசா ஓவியம் உள்ள அறையில் தான் இந்த ஓவியம் காட்சிக்கு வைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ம்யூசியம் நிராகரித்துவிட்டது என்பதே.

இந்த ஓவியம் டாவின்சி வரைந்ததில்லை. இது சந்தையால் உருவாக்கப்பட்ட போலியான ஓவியம் என்று கலைவிமர்சகர்கள் கடுமையாக விமர்சனம் செய்கிறார்கள். ஆனால் இந்த எதிர்ப்புக்குரலை மீறி $450 மில்லியன் டாலருக்கு விற்பனை செய்யப்பட்டிருப்பது விசித்திரமானது.

இந்த ஓவியத்தை விற்பனை செய்து கொடுத்த வகையில் கிறிஸ்டி நிறுவனம் மிகப்பெரிய தொகையைத் தனது பங்காகப் பெற்றிருக்கிறது. இது போலவே இந்த ஓவியத்தை மதிப்பீடு செய்தவர்கள். அதை விற்பதற்குத் துணை செய்தவர்கள் எனப் பலரும் கோடிகளில் பணம் பெற்றிருக்கிறார்கள். 1500 ல் வரையப்பட்ட இந்த ஓவியம் இத்தனை ஆண்டுக்காலம் எங்கேயிருந்தது என்பதை இதுவரை கண்டறிய முடியவில்லை.

ஸ்டுடியோவில் மிகவும் திறமையாக மறு உருவாக்கம் செய்யப்பட்ட ஒரு கலைப்படைப்பினை சந்தையில் பெரும்விலைக்கு விற்று ஏமாற்றுகிறார்கள் என்று கலை விமர்சகர் ஜெர்ரி சால்ட்ஸ் கூறுகிறார்

இன்று வங்கிகள் இது போன்ற அரிய ஓவியங்கள் மீது பெருந்தொகையைக் கடன் கொடுக்கின்றன. ஆகவே உலகின் மிகப் பெரிய பணக்காரர்கள் தங்கள் கள்ளப்பணத்தை இப்படி முதலீடு செய்கிறார்கள் என்கிறார்கள். அரிய கலைப் படைப்புகளுக்குப் பாதுகாப்பான காப்பகத்தை வழங்க ஃப்ரீபோர்ட் முறை உருவாக்கப்பட்டிருக்கிறது. அங்கே அதிநவீன பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன. வரி மற்றும் சிவப்பு நாடா இல்லாத அப்படி ஒரு ஃப்ரீபோர்ட் பாதுகாப்பகத்தைத் தான் பூவியர் நடத்தி வந்திருக்கிறார்.

கலை மறு உருவாக்கம் செய்யும் டியான் மொடெஸ்டினி தான் இந்த ஓவியத்தை முதலில் மதிப்பீடு செய்தவர். அவர் வெளிப்படையாக இதில் தனக்கு நிறையப் பணம் கிடைத்தது என்பதை ஒத்துக் கொள்கிறார். அவர் பாரீஸில் நடக்கும் கண்காட்சியைக் காண வருவதும் அவரது இடைவிடாத தேடுதலும் படத்தில் விரிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

2011 இல் லண்டனில் உள்ள நேஷனல் கேலரி டாவின்சி கண்காட்சியினை மக்கள் மத்தியில் பிரபலமாக்குவதற்காக இந்த ஓவியத்தை முன்னிலைப் படுத்தியிருக்கிறார்கள். அது தான் இந்தச் சூதாட்டத்தின் முக்கிய நகர்வு என்கிறார்கள்.

இன்று உலகின் கண்களிலிருந்து மறைந்து போன அந்த டாவின்சியின் ஓவியத்தைத் தனது கையில் சிறிய பெட்டி ஒன்றில் வைத்து எடுத்துக் கொண்டு பாரிஷ் பயணம் செய்வது வியப்பான உண்மை

இன்று வங்கிகளின் லாக்கர்களை விடவும் ம்யூசியத்திலுள்ள ஓவியங்களுக்கு அதிகப் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. பகலும் இரவும் அதி நவீன சாதனங்களுடன் காவல்காக்கப்படும் இந்த ஓவியங்கள் மக்களை விட்டு அந்நியமாகிவிட்டன. இவை உலகின் மிகப்பெரிய பணக்காரர்களின் தனிச்சொத்தாகமாறி எங்கோ ஒரு ரகசிய அறையில் முடக்கப்படுகின்றன என்கிறார் கலை விமர்சகர் ஜான் பெர்ஜர்

கலையுலகிற்குள் இப்படி ஒரு நிழல் உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதைப் பதிவு செய்துள்ள விதத்தில் ஆண்ட்ரியாஸ் கோஃபோடின் இந்த ஆவணப்படம் மிக முக்கியமானது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 11, 2022 04:04
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.