தேவி மொழியாக்கம்

நூல்கள் வாங்க

https://www.vishnupurampublications.com/

அன்புள்ள ஜெயமோகனுக்கு,

‘தேவி’ கதை வாசித்து எத்தனை மாதங்கள், வருடங்களானாலும் மறக்கமுடியாத கதை. நம் அன்றாடத்தை நிகழ்த்துவிப்பவளின் கதையை எப்படி மறக்க முடியும்? அவள், ஆயிரம் முகங்கள் எடுக்கக்கூடியவள். அவள் நினைத்தால் எதுவும் முடியுமெனச் சொல்லும் கதை. அவளாகப் பொறுமையாக இருந்தால் இருக்கலாம். அம்மா சரஸ்வதியாக இருப்பவள் , வட்டி ராஜம்மாவாக உருவெடுக்க அதிக நேரம் பிடிக்காது.

எழுத்தாளர் வண்ணதாசன் அவர்கள் தனித்துப் பாராட்டிய கதை. ‘மொழி’ கடந்து புரிந்துகொள்ளக்கூடிய கதை. ரெமிதா சதீஸ் அவர்கள், அந்தக் கதையை மொழி பெயர்க்க எடுத்துக்கொண்டதில் ஆச்சரியமில்லை. இந்தக் கதையில், ஒரு ஓட்டம் இருக்கும். வெண்முரசு-வில் அபிமன்யு வரும் ஒவ்வொரு அத்தியாயத்திலும், அவனது நிற்கமுடியாத பதட்டத்தையும், சுறுசுறுப்பையும் வேகத்தையும் வாசகனால் உணரமுடியும். ஆயர்குலப் பெண்களை, ‘ராதை’ என்று அவன் அழைத்துப்பேசும் குறும்பு தெரியும். அதைப் போலத்தான் இந்தக் கதை முழுதும் ஒரு ஓட்டம் இருக்கும். அனந்தன், லாரென்ஸ் இளைஞர் கூட்டம், அவர்களின் நாடகம் போடும் ஆர்வம், நடிகையைத் தேர்வு செய்யும் வேகம் எல்லாமும்.

உங்கள் எழுத்தில். இருந்த ஓட்டத்தையும் வேகத்தையும் ரெமிதா , ஆங்கில மொழிபெயர்ப்பில் அப்படியே கொண்டு வந்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். ‘Devi’ Usawa இலக்கியப் பத்திரிகையில் வெளியான டிசம்பர் 1 அன்று, காலை நேரத்தில் அலுவலகம் கிளம்பும் நேரத்தில் முதல் நான்கு வரிகள் வாசிக்கலாம், மீதியை அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்தேன். தமிழில் வாசிக்கும்பொழுது உள்ளிழுத்ததுபோல் ஆங்கிலமும் அப்படியே உள்ளிழுத்துக்கொண்டது. ரெமிதாவின் தேர்ந்தெடுத்த சொற்களும், உட்பொருளை மட்டும் உணர்த்தும்படியாக வாக்கியங்களை அமைத்த விதமும், ஆங்கிலம் மட்டும் தெரிந்த வாசகனுக்கு உறுத்தாமல் இருக்குமென தோன்றியது

சில உதாரணங்கள். அனந்தன் பெருமூச்சுவிட்டான் என்பதை, Ananthan heaved a sigh என மாற்றியுள்ளார். அவனது அதீத பதட்டத்தை anxiety grew into abject terror என்கிறார். உனக்காக ராத்திரி பகலா புல்லுபறிச்சு சாணிவழிச்சு வாழ்ந்தவ… என்பதை I toiled day and night for you and worked my fingers to a bone என மாற்றி ஈஸ்வரியம்மா மகனை படிக்கவைக்கப்பட்ட கஷ்டத்தை சிறிதும் வீர்யம் குறையாமல் ஆங்கில வாசகனுக்கு கடத்துகிறார். .

வட்டி ராஜம்மா உரக்க சிரித்தாள். “தம்பி, நம்ம பேரு வட்டி ராஜம்மை. வட்டின்னா என்ன? பணத்துக்கு குடுக்கிற லாபம்-  என்பதை Listen kid, my name is Vatti Rajammai. What do you think Vatti means? The interest on money  என மொழிபெயர்த்து வட்டி என்ற தமிழ்ச் சொல்லுக்கு interest என்று கற்பித்துவிடுகிறார்.

மற்ற கதைகள் வாசித்து நமக்கு எப்படி கிரேக்க கடவுள்கள், யார் யாருக்கு என்ன தொழில் என்று தெரியுமோ, அதைப் போலத்தான, நல்ல ஆங்கில வாசகனுக்கு, பிரம்மனின், விஷ்ணுவின், சிவனின் கடமைகள் என்ன என்று தெரியும். ஒருவளே எப்படி மூன்று வேடங்களில்  நடிக்கப்போகிறாள், என்று அனந்தன் கவலைப்படும்பொழுது, “Narayanan Potti says that she can play thousand roles. parasakthi – Shiva, Vishnu , pramm are all her “ புரிந்துகொள்வான்.

மூலக்கதையை போலவே இதையும் வாய்விட்டுச் சிரித்துக்கொண்டேதான் வாசித்தேன். உங்களின் எழுத்துக்களை, உலகளாவிய வாசகர்களுக்கு, எடுத்துச்செல்லும் ரெமிதாவை பாராட்டுகிறேன்.

அன்புடன்,

ஆஸ்டின் சௌந்தர்.

தேவி மொழியாக்கம்

https://www.usawa.in/issue-6/translation/remitha-satheesh.html

சவக்கோட்டை மர்மம்

The Mystery of The Fort of Corpses

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 09, 2021 10:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.