வாசகர் கடிதங்கள்

அன்பின் ஜெ,

நலம் விரும்புகிறேன்.

இந்த வீடடங்கு காலத்தில், மிகப் பெரும்பாலான நேரத்தில் எனக்குத் துணையாயிருப்பது உங்கள் தளமும் வெண்முரசும்தான்.

வேலையை உதறி, தனியாவர்த்தனம் (freelancer) நடத்தும் என்னைப் போன்றோர் கடந்த 3 மாதங்களாக தினசரி வாழ்க்கையையே, மென்று விழுங்கிக் கொண்டுதான் தள்ளுகின்றனர்.

முன் காலைப் போதில் உறக்கம் தவிர்த்த கண்கள் உணர்த்துவது ஒன்றையே. வருமானமில்லாமல் இரு மாதங்களைக் கூட தள்ள முடியாத சூழலில்தான் இருக்கிறேன் என.

கடந்த வருட சூழலில் தங்களின் நூறு கதைகள், அந்தக் கடின காலத்தைக் கடக்க உதவின.

இந்த கடின காலத்தைக் கடக்க உங்கள் எழுத்து மட்டுமே உதவும் என்ற எண்ணத்தில், இந்த வேண்டுகோள்.

நூறு கதைகள் போன்று இந்த வீடடங்கு காலத்தை கடக்க உதவுங்கள்.

ஆர்.செந்தில்குமார்

***

அன்புள்ள செந்தில்,

கடினமான காலங்களைக் கடந்துவிட்டீர்கள் என்றும் மீண்டும் அனைத்தும் தொடங்கிவிட்டன என்றும் நினைக்கிறேன். நூறுகதைகள், மீண்டும் ஒரு இருபத்தாறு கதைகள், நகைச்சுவைக் குறிப்புகள், மூன்று நாவல்கள் என நானும் அந்தக் காலகட்டத்தை புனைவின் வழியாகவே கடந்துவந்தேன்.

ஜெ

***

அன்புள்ள ஜெ,

நேற்றிரவு ஒரு கனவு. இனியது நீங்கள் வந்த கனவு என்பதால். உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்று….

நீங்களும் நானும் ஒரு மலை ஏறிக்கொண்டிருக்கிறோம். என் ஊரின் அருகே உள்ள பறம்பு மலை (இன்றைய பிரான்மலை) என்பதாக நினைவு. இருவரும் formal shoes அணிந்திருக்கிறோம் (ஏனென்று தெரியவில்லை). ஏறும் வழியில், ஒரு ஓடையைக் கடக்கிறோம். குறைவாக நீர் சலசலத்து ஓடிக் கொண்டிருக்கிறது. ஏதோ பேசிக் கொண்டே செல்கிறோம், என்ன என்பது நினைவில் இல்லை. நமது இடது புறம், ஒரு பழைய கல் மண்டபம் இருக்கிறது. அங்கே சிறு சிறு கடைகள். விழித்துக் கொண்டபோது நினைவில் மீண்டது இவ்வளவே. அடிவயிறு உந்த, விரைவாகக் கவிந்த விழிப்பை மெனக்கெட்டு தவிர்த்து, நினைவில் எஞ்சிய கனவு இது.

உங்களைக் கனவில் காண்பது அவ்வப்போது நிகழும் ஒன்று. சமீபத்திய கனவுகளில், ஓரளவேனும் சொல்லும்படி நினைவில் நின்றது இக்கனவே. முந்தய கனவுகளில் நீங்கள் என்பதை உறுதியாக உணர்வேனே தவிர, வேறுஎதும் நினைவில் இல்லை.

முன்பு உங்களோடு பகிர்ந்து கொண்டவை:

https://www.jeyamohan.in/32982#.XWda4egzaUk (நாள் என)

https://www.jeyamohan.in/26896#.XWdbY-gzaUk (கனவும் வாசிப்பும்)

அன்புடன்,

வள்ளியப்பன்

***

அன்புள்ள வள்ளியப்பன்

வியப்பாகவே இருக்கிறது. நம்மிடையே கனவுகள் வழியாக ஓர் உரையாடல் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. நான் என்ன சொல்கிறேன் என உணர நானே கனவுகாணவேண்டும் போல.

ஜெ

***

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 02, 2021 11:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.