மிளகு, The Novel – Saradha Teresa’s loud thinking on time space continuum – excerpts

அடுத்த ஆச்சரியகரமான அனுபவமும் இந்த அம்பலப்புழையில் தான் கிடைத்தது. அம்பலப்புழை ஸ்ரீகிருஷ்ணன் அம்பலம் தரிசித்த பகல் நேரம் பிஷாரடி வைத்தியர் வீட்டுக்கு எல்லோரோடும் நானும் போகிறேன். திடீர்னு அந்த வீட்டையும் அசுர மிளகுக் கொடி சூழ்ந்து படர்ந்து வாடை கனமாகக் கவிந்து வருதுன்னு பிஷாரடி சொல்லி அந்த மிளகுக் கொடியின் பீஜத்தை பிடுங்கிப் போடுகிறார்.

அப்புறம் சொல்றார் –  அது யார் அந்த சின்னப் பையன். மிளகு மூட்டை மூட்டையாக அடுக்கிய இடத்திலே இவன் என்ன பண்றான்? ஓ கதவு சாத்தியிருக்கு. அது எந்தக் காலத்து மிளகுக் கிடங்கு, எந்தக் காலத்துப் பையன்? அவன் யார் என்று யாருக்காவது ஒருத்தருக்கு நிச்சயம் தெரிஞ்சிருக்கும்.

மங்களூர் கடற்கரைக்கு சின்னச் சங்கரன், வசந்தி,  ஜெயம்மா ஜயகர் மேடத்தோடும் போனபோது அப்பா அப்பா என்று அழைக்கிற சிறு பிள்ளைக் குரலை வசந்தி கேட்ட ராத்திரி நினைவு வருகிறது. ஜெயம்மா வீட்டில் உறக்கத்தைப் போக்கித் தட்டி எழுப்பிய பிள்ளைக் குரல் என்னை எழுப்பியது அப்பா என்று யாரையோ அழைத்தபடி.

பிஷாரடி சொல்வது போல் அந்தக் குரல் வேறு ஒரு   காலத்தில் இருந்து வருவதாக இருக்கலாம். சோப்புநீரில் சிறு குழலிட்டு ஊதும்போது தெறிக்கும் சின்னக் குமிழிகள் போல் வேறு ஏதோ காலத்தின் குமிழிகளை காலப் பெருவெளியில் மிதக்க வைத்து அரசூர் குடும்பத்தையும், அம்பலப்புழை குடும்பத்தையும், இவற்றோடு உறவு கொண்ட மதறாஸ் குடும்பத்தையும் யாரோ கவன ஈர்ப்பு செய்ய நினைக்கிறார்கள். யாராக இருக்கக் கூடும்? அந்தப் பையன்? யார்  பையன்?

வீட்டுப் பின்னணி, தெருப் பின்னணி, மிட்டாய்க்கடை பின்புலம், அடுத்து கிடங்கு பின்னணி. அவன் காலம் உள்ளடங்கிய நாற்பரிமாண வெளியில் நகர நகர பின்னணி மாறுது. அந்தப் பையன் மட்டும் காலத்தில் நிலைச்சிருக்கான். அவன் பதைபதைப்பு நிஜமானதாக இருக்கலாம். காலக் குமிழிகள்   ஊடாக நம்மோடு,      பிரபஞ்சத்தோடு தொடர்பு கொண்டு பேச முயற்சி செய்யறான் அவன்.  சின்னச் சங்கரன் மாதிரி ப்ராணபயத்தில் இருக்கான். கிட்டத்தட்ட நம் எல்லோரையும் நேரடியாக இல்லாவிட்டாலும் ஏதோ காட்சி ரூபமாக பிரத்யட்சப்பட்டு   தொடப் பார்க்கிறான்.

எனக்கு தோணுறது தப்பாக இருக்கலாம். இப்போதைக்கு ஒன்று மட்டும் நிச்சயம். காலவெளியிலே அவன் நமக்கு வெகு பின்னால் இருக்கப்பட்டவன்.  அவன் நம்மோட காலத்துக்கு வரணும் அல்லது நாம் அவன் காலத்துக்குப் போகணும். காலக் குமிழ்கள் நம்மை பின்னால் கொண்டு போகுமாக இருக்கும். பின்னால் போக முடிந்து போனால் அப்புறம் நம்மோட இந்தக் காலத்துக்கு எப்படி திரும்ப முடியும்? இதற்கு பதில் இன்னும் கிடைக்கலே.

படம் கெளடி ராமேஸ்வரன் – வீரபத்ரன் கோவில்கள்

நன்றி wikimedia.org

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 15, 2021 20:01
No comments have been added yet.


இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.