மனமென்னும் மாய அன்னம்

கஸல் பாடல்களில் உள்ள கடும்சாயங்களில் அமைந்த காதல் பரவசமும் பிரிவுத்துயரும் விசித்திரமான ஓர் இருநிலைக்கு என்னை தள்ளுவதுண்டு. அவற்றை வரிகளாக, கவிதையாக, வாசித்தால் சல்லிசாக இருக்கின்றன. பொய்யுணர்ச்சிகள் என்று தோன்றச்செய்கின்றன. அவற்றையே பாடிக்கேட்கையில் அவ்வுணர்ச்சிகள் என்னை ஆட்கொள்கின்றன. கொந்தளிப்பும் அமைதியும் அடையச் செய்கின்றன.

கற்பனாவாதம் இசையுடன் மட்டுமே இணையக்கூடியது, இசையால் மட்டுமே நிலைகொள்ளக்கூடியது. உன்னைப் பற்றிய பரவசத்துடன் சாகும்வரை இருந்தேன் என்றால் என் வாழ்க்கை நிறைவுற்றது என்று ஒருவன் ஒரு பெண்ணிடம் சொல்வான் என்றால் அது அசட்டுத்தனம். பாடுவான் என்றால் அது கலை.

கஸல் போல அமைந்த இப்பாடல் வெறுமே பாடப்படுகிறது. தாளம் இல்லை. மெல்லிய பின்னணி இசை மட்டும்தான். பலசமயம் நல்ல குடிக்கொண்டாட்டங்களின்போது எவராவது இதைப் பாடுவார்கள். அப்போது இது வேறொன்றாக ஒலிக்கும்.

அனஹ சங்கல்ப காயிகே மானச
மணி விபஞ்சிகா வாதினீ நின்னுடே
மிருது கராங்குல ஸ்பர்சன ஆலிங்கன
மதலகரியில் என்றே கினாவுகள்

முகபடவும் முலக்கச்சையும் மாற்றி
சுகத நர்த்தனம் செய்யுந்நு சுற்றிலும்
தரள மானச மாயா மராளிக
தவ மனோஹர கான யமுனயில்

சமய தீரத்தின் பந்தனமில்லாதே
மரணசாகரம் பூகுந்ந நாள் வரே
ஒரு மதாலஸ நிர்விருதீ பிந்துவாய்
ஒழுகுமெங்கிலோ ஞான் நித்ய திருப்தனாய்.

ஜி.தேவராஜன்

 

பி பாஸ்கரன்

களங்கமற்ற கற்பனையில் எழுந்த பாடகி,
மனமென்னும் மணிவீணையை ஏந்தியவளே
உன் மென்கரத்து விரல் தொட்டு தழுவும்
காதல் மயக்கத்தில் எழுகின்றன என் கனவுகள்

முகத்திரையும் மார்புக்கச்சையும் அவிழ்த்துவைத்து
சுற்றி வந்து இனியநடனம் செய்கின்றது
நெகிழ்ந்த மனமென்னும் மாய அன்னம்
இன்னிசைப் பெருக்கெனும் யமுனையில்

காலக்கரையின் கட்டுகளை கடந்து
மரணப்பெருங் கடலை அடைவதுவரை
இக்காதல் களிப்பின் ஒரு துளியாக
ஒழுகிச்செல்வேன் எனில்
நிறைவடைந்தவன் நான்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 07, 2021 11:34
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.