விக்ரமாதித்யனுக்கு விஷ்ணுபுரம் விருது – வாழ்த்துக்கள்

இலக்கியம் ஒரு வாழ்க்கைமுறை என்பதாக வாழ்ந்த இருவருக்கு ஒரே நேரத்தில் விருதுகள் கிடைத்திருக்கின்றன. இலக்கியம் மட்டுமே தொழிலாகவும் வாழ்வாகவும் வாழ்ந்தவர்கள் இவர்கள. பாணர்களின் தொடர்ச்சி. அதே சமயம் எந்த அரசனையும் பாடாத பாணர்கள். ஒருவரின் மொழி புதுமைப்பித்தன் சொல்வது போல தரை தெளிவாகத் தெரிவதாலேயே ஆழம் பற்றிய நம் மதிப்பீடுகளை தவறாக்கிவிடும் எளிமை கொண்டது. இன்னொருவரது மொழி ஒரே நேரத்தில் ஒரு உடலின் மூலமாக முன்னோர்களின் பல ஆவிகள் பேசுவது போன்ற செறிவும் இருண்மையும் கொண்டது. இருவருக்கும்

வாழ்த்துகள்

போகன் சங்கர்

***

2009 களில்தினமும் அவரை தரிசித்திருக்கிறேன்.கவிஞனை தேடிப்போய்பார்ப்பதே சுகம்,காலத்தின் ஆசி..மகாகவி என்றாலே தந்தி போல்வந்துவிடுவதில்லை எதுவும் கவிஞர் விக்ரமாதித்தியன் அண்ணாச்சிக்குவிஷ்ணுபுரம் விருது தந்தஎழுத்தாளர் ஜெயமோகனுக்கு நன்றி.

அண்ணாச்சிக்கு வாழ்த்துகள்

சீனு ராமசாமி

***

அன்புள்ள ஜெ

விக்ரமாதித்யன் அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டிருப்பதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். அவர் நம் மரபின் அடையாளம். விருது பற்றிய செய்தியை நான் கொஞ்சம் தாமதமாகவே பார்த்தேன்.

என் ஆசிரியர் வகுப்பில் கவிதை பற்றிச் சொல்லும்போது ஆத்மாநாம் தற்கொலைசெய்துகொண்டதைப் பற்றிய பேச்சு வந்தது. அப்போது அவர் சொன்னார். கவிஞர்கள் என்பவர்கள் நாம் மின்சாரத்தில் கட்டும் ஃபியூஸ் கம்பி போல என்றார். அதுதான் அந்த மின்சாரம் ஓடுவதிலேயே மென்மையான கம்பி. அதுதான் அதிகமாகச் சூடாகும். அதுதான் எளிதாக அறுபடும். அதேபோன்றவர் ஆத்மாநாம். அவர் அறுந்துவிட்டார். விக்ரமாதித்யன் நம் சமூகத்தின் ஒட்டுமொத்தமான மின்சாரத்தையும் ஏந்தியும் சுட்டுப்பழுத்தாலும் அறுபடவில்லை. அவருடைய மரபுக்கல்வியும் பாணனின் வாழ்க்கையும் அதற்கு உதவியிருக்கலாம்.

அவருடைய கவிதைகளை நான் கல்லூரிக்காலம் முதலே வாசிக்கிறேன். பலவரிகள் பழமொழி போல ஞாபத்தில் நிற்கின்றன. பழக்கப்பட்ட ரதவீதி குறுகிப்போயிற்று. திசைமுடிவில் தெரிவதெல்லாம் ஆகாயம் நீலநிறம் போன்ற வரிகளை நான் அடிக்கடிச் சொல்லிக்கொள்வதுண்டு. விக்ரமாதித்யன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ராஜேஷ் மாணிக்கம்

***

அன்புள்ள ஜெ

விக்ரமாதித்யன் அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டது நிறைவளிக்கிறது. அவரை நான் தொடர்ந்து வாசித்து வருகிறேன். அவருடைய கவிதைகள்மேல் ஈடுபாடுண்டு. அவருடைய கருத்துக்கள் மேல் ஈடுபாடில்லை. அவர் பெண்களையும் சமூக அமைப்பையும் மதத்தையும் மிகவும் மரபார்ந்த நெல்லைப்பிள்ளைமாரின் பார்வையிலேயே பார்க்கிறார். முற்போக்கான சிந்தனைகளை அடையவில்லை. அவற்றைக் கிண்டல்செய்யவும் தயங்குவதில்லை. ஆனால் அவருடைய கவிதைகளில் நேரடியாக வாழ்க்கையிலிருந்து வரும் ஆழமான வெளிப்பாடுகள் பல உள்ளன.அவை தமிழ்மொழியின் அழகையும் கூர்மையையும் வெளிக்காட்டுபவை. அவை முக்கியமான படைப்புக்கள். விக்ரமாதித்யன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

சண்முகசுந்தரம் எம்

***

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 12, 2021 11:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.