ஆசிரியர்கள் என்னும் களப்பலிகள்

அன்புள்ள ஜெ,

வணக்கம். உங்கள் தளத்தில் ஏற்கனவே ஆசிரியர் தேர்வு முறை குறித்த கட்டுரை ஒன்றை பகிரக் கேட்டிருந்தேன், நீங்களும் செய்தீர்கள்: ஆசிரியர் தேர்வு முறை

கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் தனியார் கல்வி நிறுவனப் பணியாளர் நிலை பற்றி ஆய்வு செய்த அருண் கண்ணன் மற்றும் கிஷோர்குமார் சூர்ய பிரகாஷ் இணைந்து எழுதிய கட்டுரை, கடந்த ஜூலையில் தி இந்து ஆங்கிலப்பதிப்பில் வெளிவந்தது.

சென்னைப் பல்கலைக்கழகஉறுப்புக்கல்லூரிகளில் பணிபுரிபவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்தது என்னவென்றால் அவர்களுக்கு எந்த ஒரு அடிப்படைப் பணிப் பாதுகாப்போ, ஊதிய வரம்போ, தொழிலாளர் நலத்திட்ட உதவிகளோ இல்லை என்பதாகும். கோவிட் தொற்றுக்கு முன்பிருந்தே பத்தாயிரத்திற்குக் கீழ் ஊதியம் பெறும் அவலநிலை. கூடவே இணைய வழிப் பயிற்றுவித்தலுக்கென உருவாகும் செலவும், ஊதியக்குறைப்பும் அவர்களில் பலரை கூலித்தொழிலுக்குத் தள்ளியிருக்கிறது.

பனை ஏறும் தொழிலுக்குச் சென்ற ஆசிரியர் ஒருவர் பலியானதுதான் ஆய்வாளர்களை அவர்கள் பக்கம் திரும்பியிருக்கிறது. ஒரு மாநிலத்தின் தலை நகரிலேயே, சென்னைப் பல்கலை உறுப்புக் கல்லுரிகளிலேயே இந்நிலை என்றால் மற்ற இடங்களைப் பற்றிச் சொல்லவேண்டியதில்லை. பெரும்பாலான தனியார் பள்ளி/கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்/ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் கடும் சுரண்டலுக்கு உள்ளாகின்றனர். இதற்கு முக்கியக் காரணம் அந்நிறுவனகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் நெடுங்காலம் புதுப்பிக்கப்படவில்லை என்பதாகும்.

அரசு, தனியார் எனப் பாரபட்சமின்றி உயர் கல்வித்துறைக்கு பல சீர்திருத்தங்கள் அவசியப்படும் காலகட்டம் இது. உங்கள் தளத்தில் இது தொடர்பான விவாதம் துவங்கினால் அதற்கு வழிகோலும் என நம்புகிறேன்.

தி இந்து கட்டுரை:

Weighing down the private unaided college teacher

கட்டுரையின் தமிழ் வடிவம்: கோவிட் பெருந்தொற்றும் தனியார் கல்வி நிறுவனப் பணியாளர் நிலையும்

சத்தியம் தொலைக்காட்சியின் செய்தித்தொகுப்பு: 

நன்றி,

விஜயகுமார்.

***

அன்புள்ள விஜயகுமார்,

உண்மை. என்னுடைய வாசகர்கள், நண்பர்களில் சென்ற கோவிட் காலகட்டத்தில் நிராதரவாக விடப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் தனியார்க் கல்லூரி, பள்ளி ஆசிரியர்கள்தான். இந்திய வரலாற்றில் பொதுக்கல்வி முறை அறிமுகமான இருநூறாண்டுகளில் இன்றுபோல ஆசிரியர்கள் இத்தனை பரிதாபகரமான நிலையில் எப்போதும் இருந்ததில்லை. உலகில் எந்நாட்டிலும் ஆசிரியர்கள் இத்தனை குறைவான ஊதியத்திற்குப் பணியாற்றும் நிலை இருக்க்காதென்றே நினைக்கிறேன்.

தமிழகத்தின் பொறியியல்கல்வியின் தரவீழ்ச்சி பற்றிப் பேசுகிறார்கள். அதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று தகுதியான ஆசிரியர்கள் இல்லை என்பது. தரமான ஊதியமே தகுதியான ஆசிரியர்களை அளிக்கிறது. தனியார்க்கல்விநிறுவனங்களை அரசு கட்டுப்படுத்தவேண்டிய காலம் அணுகிவிட்டது. இல்லையேல் இங்கே கல்வி என்பதே இல்லாமலாகிவிடக்கூடும்.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 05, 2021 11:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.